பீட்டர் பொங்கல்

வரலாற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளல் – சூசன்னா லிப்ஸ்கோம்ப்

– பீட்டர் பொங்கல் –

800px-statue_of_oliver_cromwell_outside_the_palace_of_westminster

சரித்திரப் புனைவு படைக்கும் எழுத்தாளர்கள் கையாளும் தரவுகள் துல்லியமானவை, அவர்களது வரலாற்றுப் பார்வை துல்லியமான சித்திரத்தை அளிக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சித்திரத்தை அவர்கள் அளிப்பார்கள் என்றால், அவர்களது நாவல்கள் நம் இதயத்தின் வேட்கையை நிறைவு செய்யும் என்ற நம்பிக்கைக்கு நாம் இடம் கொடுக்கலாம்: கடந்த காலத்தின் ஆவிகளுடன் ஓர் உரையாடல், வரலாற்று மாந்தரை நேருக்கு நேர் எதிர்கொள்ளல்- இப்படிப்பட்ட ஒரு வாசிப்பனுபவம் வரலாற்று நூல்களில் கிடைப்பதில்லை என்ற குறை நமக்கு இருக்கக்கூடும். சரித்திரப் புனைவுகளில் எடுத்தாளப்படும் மேற்கோள்கள் சொல்லுக்குச் சொல் மூல வரலாற்று நூல்களில் உள்ளவாறே இருப்பதன் செறிவை நாம் காண இயலுமென்றால் – நிச்சயம் மாண்டலின் நாவல்களில் இது உண்டு- (நினைவுகளைப் பதிவு செய்யும் மனிதர்களுக்கு எப்போதும் இருக்கக்கூடிய பிழை நினைவும் மனச்சாய்வும் கொண்டவர்களால் இந்த மூல நூல்கள் உருவாக்கப்பட்டவை என்ற எண்ணத்தை நாம் தள்ளி வைக்க முடியுமென்றால்), நாம் நம்மைத் தளர்த்திக் கொண்டு, வெந்நீர் குளியல் மேற்கொள்வது போல், நாவலின் சரித்திர உலகினுள் நம்பிப் புகலாம்.

அப்போது புனைவு, வரலாறு விட்டுச் சென்ற இடைவெளிகளை- கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்தவர்கள் விட்டுச் சென்ற இடைவெளிகளை- இட்டு நிரப்பும்-, ஏனெனில் இந்த இடைவெளிகள் மிகச் சாதாரணமானவையாய் இருக்கும். அந்தக் காலம் உண்மையில் எப்படி இருந்தது, அந்நாட்களில் வாழ்ந்ததன் உணர்வு உண்மையில் எப்படிப்பட்டது என்பதைப் புனைவால் சொல்ல முடியும்.  “வேவு பார்ப்பது அத்தனை இனிய கேளிக்கை” என்பதே ‘காலப்பயணத்தின் வசீகரம்’ என்று மார்கரட் அட்வுட் எதைச் சுட்டினாரோ, அந்த அனுபவத்தில் நாம் திளைக்கலாம்.

இது நிகழும்போது, கற்பனையில் திளைக்கும் நம் புலன்களை உணவின் சுவையால், ஆடைகளின் தொடுகையால், நறுமணம் என்று சொல்வதற்கில்லாத தெருக்களின் நாற்றத்தால், புனைவுகள் நிறைக்கக்கூடும். டவ்டன் போருக்குத் தயாராகும் போர் வீரர்கள் மற்றும் குதிரைகளின் பரபரப்பான அசைவை நம்மால் கேட்க முடியும், எலிசபெத்திய நிழலுலகில் யாருக்கும் தெரியாமல் நாம் மறைந்து திரிய முடியும், புரட்சிக்கால பிரான்சில் நாம் ஒட்டுக் கேட்க முடியும்- அனைத்தும் நம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கும், ஏனெனில்,  “தன் காலத்தின் உணர்வுடன் சமநிலை பேணுதல்,” “வரலாற்றின் நிறுவப்பட்ட உண்மைகளை ஒப்புக்கொள்ளுதல்”. என்ற இரண்டும், சிறந்த சரித்திரப் புனைவுக்குரிய இரு அளவைகள் என்று ஹெலன் கெர் முன்வைத்திருக்கிறார். இங்கு அவருக்கு இணக்கமாய் நாவலாசிரியர் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

ஆனால் இதில் ஒரு ரகசிய, ஒருதலைபட்சமான ஆபத்து இருக்கிறது. வரலாற்று துல்லியம் கொண்டது என்ற இலச்சினை பதிக்கப்பட்டு ஒரு நாவல் வெளிவருகிறது என்று வைத்துக் கொள்வோம்- ஆதாரநூல்கள் தரவுகளாக சுட்டப்பட்டுகின்றன, மிகச் சாதாரணமான  விவரணைகளும் சரியாக இருக்கின்றன: உள்ளாடைகள் சரியான வகையில் அணிந்து கொள்ளப்படுகின்றன, சாலைகள் சேறும் சகதியுமாக இருக்கின்றன… இது போல் எழுதுவது நாவல் முழு உண்மையைச் சொல்வதான ஒரு தோற்றத்தை அளிக்கும். “நம்ப வைக்கும் பொய் ஒரு தீச்செயல்” என்று சொல்கிறார் பரபரப்பாக விற்பனையாகும் நாவல்களை எழுதும் பிலிப்பா க்ரே. புனைவெழுத்தாளர்கள் நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறார் அட்வுட்: “தாம் எழுதுவதை பொது வாசகர்கள் முழுமையாய் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உண்மை போலிருக்கும் பொய்களை உருவாக்குகிறார்கள்“.

மிகச் சிறந்த வரலாற்றுப் புதினங்கள் இரு ஆபத்தான விஷயங்களை நாம் நம்பச் செய்யலாம். முதலாவதாக, மானுட இயல்பு மாறுவதே இல்லை என்று நாம் தீர்மானிக்கக்கூடும். இது மிக இயல்பான உண்மையாகத் தெரிகிறது, ஆனால் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணங்கள் நம் காலத்தில் வாழ்பவர்களின் எண்ணங்களிலிருந்து மிக மிக மாறுபட்டதாகவே இருந்திருக்கிறது. அவர்களது அறத் திசைகாட்டியின் வடதுருவம் வேறு திசை நோக்கி நிற்கிறது. டூடர் இங்கிலாந்தில் எருதுகளை ஆடுகளத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்காமல் கொலை செய்வது சட்டத்துக்குப் புறம்பானது. பதின்பருவப் பெண்ணான காத்தரீன் ஹவார்டை அவளது சம்மதமில்லாமல் பிரான்சில் டெர்ஹாம் புணர்ந்தபோது அவன் பாலகர்களைத் துன்புறுத்தியதாகவோ கற்பழித்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. ஹவார்ட் ஒரு விலைமகள், கவர்ந்திழுப்பவள், ஆண்களை மயக்குபவள் என்று கருதப்பட்டாள். அதே போல், பதினாறாம் நூற்றாண்டு பற்றி எழுதும் எந்த ஒரு நாவலாசிரியரும் சமய உணர்வுகளுக்கு அன்றிருந்த முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ராபர்ட்சன் டேவிஸ் சரியாகவே சொல்கிறார், “நாம் அனைவரும் நம் காலத்துக்கே உரியவர்கள். அதிலிருந்து தப்ப நாம் எதுவும் செய்ய முடியாது. கடந்த காலத்தைக் களமாய்க் கொண்ட நாவலானாலும் நாம் எழுதுவது எதுவானாலும் அது சமகாலத்துக்குரியதாகவே இருக்கும்,” என்று.

புனைவுகள் நம்மை நம்பச் செய்யும் இரண்டாவது ஆபத்தான விஷயம் கதாப்பாத்திரங்களின் அகவுலகம் சார்ந்தது: நாம் கதைசொல்லியின் காலணிகளில் நுழையும்போது அறிய வரும் அகவுலகம் யதார்த்தத்தில் நாம் எவ்வகையிலும் உண்மையென்று அறிந்து கொள்ள முடியாத ஒன்று. நிச்சயம், வரலாற்று காலத்தில் வாழ்ந்த கிராம்வெல்லைவிட மாண்டல் நாவல்களின் கிராம்வெல் விரும்பத்தக்கவராகவே இருப்பார். கதைக்களம், சூழ்நிலம், ஆடை அணிகலன்கள் துல்லியமாய் விவரிக்கப்படுகின்றன என்ற மயக்கத்தில் நாம் அவரது ‘குணாதிசயம்’ குறித்த ‘நம்ப வைக்கும் பொய்யை’ ஏற்றுக்கொள்கிறோமா? இதற்கான மாண்டலின் பதில் நியாயமானதாகவே இருக்கும்: அவர் இன்னும் முழுமையாக எழுதி முடிக்காததால், மாண்டலின் கிராம்வெல் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. அது தவிர, உண்மையான ‘கிராம்வெல்’ யார் என்பதும் நமக்குத் தெரியாது. ஏனெனில், வரலாற்றாசிரியர்களை எடுத்துக் கொண்டால், அவர்களும் தம் காலத்தில்தான் எழுதுகிறார்கள், தமக்குரிய மனச்சாய்வுகளுடன், குறைபட்ட மனிதர்களின் குறைபட்ட தரவுகளைக் கொண்டு.

அப்படியானால் அத்தனை வரலாற்றுப் புதினங்களும் ஒரு எச்சரிக்கை வாசகம் தாங்கி வர வேண்டுமா? “இது கடந்த காலம் அல்ல. அது போலிருக்கிறது, அவ்வளவுதான்“. ஆனால் வரலாற்று நூல்களுக்கும் இது பொருந்துமோ?

நன்றி – History Today
ஒளிப்பட உதவி – wikipedia

விட்டத்தைத் தொடுதல் – இலக்கிய மிகையுணர்ச்சி குறித்து: NICK RIPATRAZONE

மொழியாக்கம்: பீட்டர் பொங்கல்

nick_photo

http://nickripatrazone.com

மே 8, 2007 அன்று ஒரு கட்டுரை என்னை அழ வைத்தது. நியூ ஜெர்சியில் பெட்மின்ஸ்டரில் ஒரு பொது நூலகத்தில், என் மனைவி வேலையிலிருந்து திரும்பக் காத்திருந்தேன். அதற்கு முந்தைய ஒரு மணி நேரம் நான் சில கல்லூரி மாணவர்களுடன் கூடைப்பந்து மைதானமெங்கும் ஓடிக் களைத்திருந்தேன் (‘running full-court press’). இப்போது கூடைப்பந்துக்கு பதில் நூலகத்தின் நீண்ட மேஜைக்கும் புஷ்கார்ட் பரிசு 2006ஆம் ஆண்டு பதிப்பின் திறந்திருந்த அறுபத்து ஏழாம் பக்கத்துக்கும் வந்திருந்தேன். பிரையன் டாயில் எழுதிய “யோயாஸ் வோலாடோராஸ்”  . கட்டுரையின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போதுதான் நான் அழுதேன். அந்தக் கண்ணீர் முழுமையாகவே எதிர்பாராதது. என் வலப்புறம் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவனிடமிருந்தும் என் இடப்புறம் இருந்த சிறுவனுக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்தும் நான் அழுகையை மறைத்துக் கொண்டேன், லேஸ் அவிழ்க்கப்பட்ட, கணுக்காலைத் தாண்டி உயர்ந்திருந்த என் ஹைடாப்களை நகர்த்திக் கொண்டேன், முட்டிக்குக் கீழ் நீண்ட ஜிம் ஷார்ட்ஸ்களை இழுத்து விட்டுக் கொண்டேன். நான் இருபத்து ஆறு வயது ஆண், என்னை அழ வைப்பதற்கல்ல இலக்கியம்.

நான் எழுதும் அறையின் வாசல் கதவின்மேல் உயரத்தில் என் தாத்தாவின் சிலுவை தொங்கிக் கொண்டிருக்கிறது. பெல்ட் ஒன்றால் செலுத்தப்பட்ட மோட்டாரின் ஆற்றலைப் பயன்படுத்தி என் பெற்றோருக்கு அவர் ட்ரை சிங்க்  செய்து கொடுத்தார். திடுக்கிட்ட இதயம் போல் அந்த மோட்டார் அடிக்கடி துள்ளும். இப்போது அந்த ட்ரை சிங்க் எங்கள் வீட்டு வாசல் அறையில் இருக்கிறது. நான் பதினெட்டு மாத குழந்தையாக இருந்தபோது தாத்தா இறந்தார். ஆனால் நான் இன்னும் அவரைச் சுமந்து கொண்டிருக்கிறேன். நான் அவரது தோல், அவரது ரத்தம், அவர் மகனின் மகன். நாங்கள் இருவரும் வாழ்வைப் பகிர்ந்து கொண்ட குறுகிய காலத்தில், அவர் என் பெற்றோர் வசித்துக் கொண்டிருந்த வீட்டுக்கு ஒரு அறை செய்து தந்தார். ட்ரைவ்வேயில் இருக்கும் உடைந்த மரத்துண்டங்களுடனும் மரத்தூள்களுடனும் நான் நின்று, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எப்போதும் அவருடன்தான் இருப்பேன் என்பதால் அம்மா வந்து என்னை வீட்டுக்குள் தூக்கிப் போவாள். “அவன் பெரிய பையன் ஆயிட்டான்,” என்று அவர் என்னைப் பற்றிச் சொல்வார், இப்போது அந்தச் சொற்களில் என் அப்பாவின் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கேட்க முடிகிறது.

நியூ ஜெர்சியில் உள்ள லேக் மோஹாக்கில் என் தாத்தா வீடு கட்டும் தொழில் செய்தார். அவர் ஊர் திரும்பியதும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டார். அது கட்டி முடிக்கப்படும்வரை அதுவரை செய்து முடித்திருந்த அறைகளில் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்தனர். அவர் எப்போதும் இரவில்தான், ரெஸ்டாரண்டுகள் மூடப்பட்டபின், கடைகள் கதவடைக்கப்பட்டபின் வேலை செய்வார். அவரது கெட்டித்து போன கைகள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக அரை இருளில் ஓர் உலகம் படைத்துக் கொண்டிருக்கும். இப்போதும் என் அப்பா தாத்தாவின் கருவிகளைப் பயன்படுத்துகிறார்: க்ராஸ்-கட் ஸா, ரிப் ஸா, உளி, குத்தூசி. அவற்றின் உலோகம் இன்றளவும் கூர்மையாய் இருக்கிறது.

நான் ஒருமுறைதான் என் அப்பா அழுது பார்த்திருக்கிறேன். அவரது உள்ளங்கைகள் டைனிங் ரூம் டேபிளில் அழுந்தியிருந்தன, என் தாத்தாவின் மறைவுக்குப்பின் அவரது அபார்ட்மெண்ட்டை ஒழிப்பது குறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தார். நான் அறிந்த அனைவரையும் விட அதிக உடல் பலம் கொண்டவர் அவர், தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். அப்பா தன் குழந்தைகளில் எவரையும் அழ வைத்ததில்லை.

ஆண்கள் ஏன் அழுகையை அடக்கிக் கொள்கிறார்கள்? எழுத்தாளர்கள் ஏன் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை?

நான் எப்போதும் உணர்ச்சியற்றவனாக இருந்ததில்லை. ஆனால் ஒரு எழுத்தாளனாகவும் வாசகனாகவும் இருந்ததில் பெரும்பாலும் எழுத்தில் உணர்ச்சியைத் தவிர்த்திருக்கிறேன். இதற்கு ஒரு காரணம், ஜான் கார்ட்னரின் “எழுத்துக் கலை”யாக இருக்கலாம் . “பொதுப் பிழைகள்” என்ற அத்தியாயத்தில் அவர், புனைவில் மிகையுணர்ச்சி வெளிப்படுவதை “உத்திப்” பிழை என்று குறிப்பிடுவதில்லை. அவர் அதை “ஆன்ம” குற்றம் என்றே அழைக்கிறார். புனைவுகளில் மெய்யுணர்ச்சியும் மிகையுணர்ச்சியும் வேறு என்று பிரித்துப் பார்க்கிறார் அவர். தக்க அளவில் வெளிப்படும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் மெய்யானவை. எழுத்தாளன் “பொதுவாக ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுவதால் அல்லது மிகைப்படுத்துவதால் அடையப்பட்டு, போலித்தனமாய் ஒலிக்கும்” உணர்ச்சி அல்லது உணர்வு மிகையுணர்ச்சி என்கிறார் அவர். நான் கார்ட்னரை சிறிது பிழைவாசிப்பு செய்திருக்கிறேன் என்பது இப்போது தெரிகிறது. “உணர்ச்சி இல்லாத புனைவு எதற்கும் உதவாதது”, என்பதில் அவர் தெளிவாக இருப்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மிகையுணர்ச்சியை விமரிசித்ததைதான் நான் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறேன், அதை ஒரு மன்னிக்கப்படக்கூடிய குற்றமாய் கருதாமல் பெரும்பாபம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.

கார்ட்னர் ஒரு விமரிசகராக அல்ல, உத்தியைக் கற்றுத் தருபவராக நமக்கு பயன்படுகிறார். ஆனால் இந்த விவாதம் நிகழ்ந்த சூழ்நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும். 1970களின் பிற்பகுதியில் அவர் எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வில்லியம் ஹெச். காஸ்உடன் தொடர்ந்து சில விவாதங்களை பொது மேடைகளில் நிகழ்த்தினார். இவற்றில் மிகவும் முழுமையான விவாதம், சின்சினாட்டி பல்கலை புனைவுத் திருவிழாவில் அக்டோபர் 24, 1978 அன்று நிகழ்ந்தது. அன்றைய நிகழ்ச்சியில் “பொறி பறக்க வேண்டும்” என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் விரும்பினார்கள் என்கிறார் தாமஸ் லெக்ளேயர். அதைச் செய்யக்கூடியவர்களாக இருந்த ஜான் பார்த்தும் ஜான் ஹாக்ஸ்சும் “பரஸ்பரம் பாராட்டிக் கொண்டார்கள்”. அன்று நிகழ்ந்த விவாதம் போன்ற பல நீண்ட, பசையுள்ள விவாதங்களை கார்ட்னருடன் அவரது கார்பன்டேல் இல்லினாயிஸ் பண்ணை சமையற்கூடத்திலும் வேறு இடங்களிலும் செய்திருப்பதாக காஸ் 2003ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சலில் விளக்கம் அளித்தார். இருவரும் தம் “வேறுபாடுகளை” விவாதிக்க விரும்பினார்கள், அது குறித்து “அச்சமோ அச்சுறுத்தலோ” இருக்கவில்லை. கார்ட்னர் :”அற விழுமியங்கள் குறித்து நம்பிக்கை கொண்டவராக” இருந்தார். காஸ், “என் அழகியல் விழுமியங்களில் உறுதியாக இருந்தேன். அவர் மானுடத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டார். எனக்கு அதன் புட்டத்தில் உதைப்பதுதான் திருப்தியாக இருக்கிறது”.

“உயிர்ப்பு” கொண்ட, “அறுபடலற்ற” புனைவெனும் கனவு, என்ற கார்ட்னரின் ஆதர்ச நம்பிக்கையை காஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அது கல்விப்புலத்தைவிட, உத்தி குறித்த புத்தகத்துக்கு மட்டுமே ஏற்ற சிந்தனை. இதனால்தான் காஸ், அத்தனை நீண்ட, பசையுள்ள விவாதங்களில் ஈடுபட்டார் என்று நினைக்கிறேன்; கார்ட்னருக்கு புனைவில் உள்ள பெருவிருப்பம் தெளிவாகப் புலப்படுவது. அது பிறருக்கும் தொற்றிக் கொள்வது. ஆனால், கலைக்கென்று ஒரு காலம் இருப்பது போலவே கோட்பாட்டுக்கும் ஒரு காலம் உண்டு என்பதை காஸ் உணர்ந்திருந்தார்.

மிகையுணர்ச்சி குறித்து கார்ட்னர் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவும் செய்தார். “நிகழ்வுகளே மாபெரும் புனைவுகளில் நம்மை நெகிழச் செய்கின்றன, நிகழ்வுகளைச் சித்தரிக்கும் எழுத்தாளரின் கேவல்களும் ஓலங்களும் அல்ல” என்று பிரகடனம் செய்கிறார். ஆனால் எப்போதும் போலவே இப்போதும் அவர் நிதானப்படுத்திக் கொள்கிறார்: “கதைக்கு முடிவு காணும் இறுதிப் பகுதிகளை மிகவும் வலுவாக அமைத்துவிடக்கூடாது. கதையை அர்த்தமுள்ளதாகச் செய்ய தீவிரமாக முயற்சி செய்வதில், மிகுந்த கவனத்துடன், செயற்கையாக, “பயிலரங்கில் எழுதப்பட்டது போன்ற” உணர்வு ஏற்பட்டு, வாசகர் கவனம் புனைவெனும் கனவிலிருந்து தடுமாறக்கூடும். அதே சமயம், மிகையுணர்ச்சி வந்துவிடக் கூடாது என்றோ எளிய விஷயத்தைச் சொல்வதாக இருக்கக் கூடாது என்றோ மிக நுட்பமாகவும், துணிவில்லாமலும் எழுதிவிடவும் கூடாது- அப்படிச் செய்தால், யாருக்கும், ஆம், விட்டத்தில் சிறகடித்துக் கொண்டிருக்கும் தேவதைகளுக்கும் உன் கதை எதிரொலிக்காது”

கார்ட்னரின் முன்னுதாரணத்தையொட்டி, பிற எவற்றையும் விட, கலவியின் இலக்கிய விவரிப்புகள் உட்பட எல்லாவற்றையும் விட, மிகையுணர்ச்சியை, உயர்வுநவிற்சியுடன்  விவரிக்கப்படும் விசாரத்துடன்/சோகத்துடன்  தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இங்கே தி மில்லியன்ஸில் “A Sentimental Education: Sex and the Literary Writer ” என்ற கட்டுரையை ஜூலியா ஃபியரோ எழுதியிருந்தார். “உணர்ச்சிகள் உட்பட எல்லாவற்றையும்விட நுண்மையே உயர்ந்தது” என்ற நம்பிக்கை “படைப்பிலக்கிய பயிலரங்குகளில்” போதிக்கப்பட்டதை அவர் இங்கு பதிவு செய்கிறார். மிகையுணர்ச்சி குறித்த விமரிசனங்கள், வெளிப்படையாகவும் உட்கிடையாகவும், அவர் ஒரு பெண்ணாய் எழுதுவதன் மீதான விமரிசனங்களாக உள்ளது என்று தொடர்புபடுத்திக் கொள்கிறார்.

Sarah Vap என்ற கவிஞர், மிக அருமையான ஒரு கட்டுரையில் மிகையுணர்ச்சி குறித்த குற்றச்சாட்டுகளும் பெண்களின் எழுத்து குறித்த குற்றச்சாட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதை விவாதிக்கிறார். Pleiades இதழின் ஒரு பதிப்பில் நிகழ்ந்த கலந்துரையாடலில், “Poetry, Belligerence, and Shame (PDF)” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தப் பதிப்பில் உள்ள கட்டுரைகள் ஜே கட்ஸ்சால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. கட்ஸ், 2010 ஆண்டு நிகழ்ந்த AWP கான்பரன்சில் மிகையுணர்ச்சி குறித்த ஒரு கலந்துரையாடலில் தலைமை தாங்கியவர்களில் ஒருவர். நவீனத்துவம், “கவிதையின் இதயத்தைக் குளிர்வித்தது;  வாக்குமூலம் அதை உயிர்ப்பித்தது; பின்-அமைப்பியல் அதன் மீது ஒரு பக்கெட் குளிர்நீர் ஊற்றியது” என்று முன்னுரையில் எழுதுகிறார் கட்ஸ்.

குறிப்பிட்ட ஒன்றை மட்டும் வாசகன் உணரும்படி,  அவனை  “செலுத்த” முற்படும் படைப்பு  என்று அவர் மிகையுணர்ச்சி கவிதையை வரையறை செய்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மிகையுணர்ச்சி மட்டும் கொண்ட படைப்புகளை அவர் விரும்புவதில்லை என்றாலும், இதயத்தைப் பற்றியிழுக்க முயற்சி செய்யும் கவிதைகளை வெறுக்கும் சிலர் போல் மிகையுணர்ச்சி கொண்ட கவிதைகள் “ஆபத்தானவை” என்று அவர் நினைப்பதில்லை. உணர்ச்சிகளைத் தொட்டெழுப்பும் முயற்சிகளே சிறந்த கவிதைகள் உருவாகக் காரணமாகின்றன என்று அவர் கருதுகிறார். இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு பரிசளிக்க வேண்டுமே தவிர மௌனத்தை நோக்கி மழுங்கடிக்கக் கூடாது என்கிறார் அவர். மிகையுணர்ச்சி குறித்த கவனத்துடன் கவிதை வாசித்து, அத்தகைய தருணங்களைச் சுட்டிக் காட்டுவதை அவர் வெறுக்கிறார்- “ஒரு சில வாழ்வனுபவங்களும் படிப்பினைகளும் சிறுமைப்படுத்தப்படுவதற்கும், சில கலாசாரங்களும் அவை உலகை உணரும் வகைப்பாடுகளும் முக்கியத்துவம் இழப்பதற்கும், ஒரு சில பேசுபொருட்களும் குரல்களும் கவிதை வகைமைகளும் “மிகையுணர்ச்சி” என்ற பதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு மலினப்படுத்தப்படுவதற்கும், ஊமையாக்கப்படுவதற்கும், அமைதிப்படுத்தப்படுவதற்கும், மதிப்பிழப்பதற்கும் இப்படிப்பட்ட தணிக்கைக்கும் உள்ள தொடர்பை” அவர் வெறுக்கிறார்.

வாப் சொல்வது உண்மைதான். மிகையுணர்ச்சியின் மிகப்பெரும் குற்றம், “அத்தனையையும் மழுங்கடிக்கச் செய்தல், அத்தனையையும் ஒரு மையத்தை நோக்கி இழுத்துச் செல்லுதல்”- இந்த மையம் இதயத்தை விட்டு வெகு தொலையில் உள்ள இடமாக இருக்கலாம். தன் இலக்கிய நுண்ணுணர்வுகளை கத்தோலிக்க சமயம் கட்டமைத்ததை அவர் உதாரணம் சொல்கிறார்: “என் அத்தனை வழிபாட்டு உணர்வுகளும், ஆனந்தங்களும், தொடர்புறுதல்களும் மிக அதிக சடங்குகள் கொண்ட கத்தோலிக்கம் வாயிலாய் வெளிப்பாடு கண்டன”. ஆனால், அதன் மொழியை அவர் கவிதையில் பயன்படுத்தினால், மிகையுணர்ச்சியுடன் எழுதுகிறார் என்று அடையாளப்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது. மேலும், ஒரு பெண்ணாய், அவர் பேறுகாலம் குறித்தோ தன் குழந்தைகள் குறித்தோ எழுதினாலும், இத்தகைய விமரிசனத்துக்கு ஆளாகலாம். மிகையுணர்ச்சி இலக்கியத்தில் ஒரு குற்றமாக இருக்கலாம், ஆனால் அது பெயர் சுட்டவும் பாலறுக்கவும் உதவும் வழியுமாகிறது.

மேலும் வாசிக்க – http://www.themillions.com/2014/05/reach-the-rafters-on-literary-sentiment.html

Juxtaposition/ பக்க அணிமை

 

அமில ஆவி பறக்கிறது
கடையைச் சுற்றிலும்

ரசாயனப் பொடியின் வெண்மை நெடி
கடை முழுவதும்

கருத்துக் கொண்டிருக்கின்றன
பித்தளை வெண்கலப்
பாத்திரங்கள்

அரித்துச் செல்கிறது அனைத்தையும்
திருகல் காமம்

ந.ஜயபாஸ்கரன்
(சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் தொகுப்பு)

நாம் எதையும் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால், வாசிப்பின் பயன் என்ன என்ற கேள்வி ஒரு சில வாசிப்புகளுக்கு இடமில்லாமல் செய்கிறது: மாறாய், குறிப்பிட்ட ஒரு வாசிப்பின் விளைவு என்ன என்ற கேள்வி நம் கற்பனையை இது போல் குறுக்குவதில்லை. அங்கிருந்து வேண்டுமானால், எந்த வாசிப்பில் என்ன பயன், எந்த வாசிப்பு பொருத்தமாக இருக்கும் என்ற இடத்துக்குப் போவது சரியாக இருக்கலாம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் சரியா, தப்பா, தேவையா, இல்லையா என்றெல்லாம் கவலைப்படாமல் பக்க அணிமை (Juxtaposition) என்ற இலக்கிய கருதுகோள் இந்த வாசிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “The arrangement of two or more ideas, characters, actions, settings, phrases, or words side-by-side or in similar narrative moments for the purpose of comparison, contrast, rhetorical effect, suspense, or character development,” என்று ஒரு தளத்தில் இந்தப் பதம் வரையறை செய்யப்படுகிறது. தமிழில் இதற்கு இணையான யாப்பிலக்கணச் சொல் நிச்சயம் இருக்கும், எனக்குத் தெரியவில்லை.

தூஷன் மகவேவ் எனும் மனோவசியக்காரன்”” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையொன்றில் “Man is not a Bird” என்ற கிழக்கு ஐரோப்பிய திரைப்படம் ஒன்றைப் பேச இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை முதலில் படித்துப் பார்க்கலாம்.

ந. ஜயபாஸ்கரன் கவிதை, “அரித்துச் செல்கிறது அனைத்தையும்/ திருகல் காமம்“ என்று ஆச்சரியமாய் முடிகிறது. பொதுவாக, காமம் வெம்மையுடன் தொடர்புபடுத்தப்படுவது, கொந்தளிப்பு, தகிப்பு, தழல், உருக்குதல் போன்றவை காமத்துக்கு உரியவை. அரித்தல் நீரின் இயல்பு. எரிமலைக் குழம்பு, கொதிநீர் போன்றவற்றைத் தவிர நீர் குளிர்விப்பது அல்லது ஆற்றுவது- காமம் எதையும் அரித்துச் செல்லும் என்று நாம் எதிர்பார்க்க மாட்டோம்.

போதாக்குறைக்கு திருகல் காமம் என்று வேறு எழுதுகிறார் ஜயபாஸ்கரன். இதை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கு கவிதையில் குறிப்புகள் இல்லை. இதற்கு முன் உள்ள எதுவும் காமத்தைப் பேசுவதில்லை. இந்த இரு வரிகள் தனித்து நிற்கின்றன, எப்படி வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம் என்பது போல். அரித்துச் செல்கிறது என்பதால் இந்தக் காமத்தை, அதன் அழகற்ற பொருளில்தான் புரிந்து கொள்ள முற்படுவோம், உதாரணத்துக்கு, வக்கிரம் என்ற அர்த்தத்தில் perverted என்று. ஆனால் அப்படி எதுவும் இருந்தால் வக்கிரம் என்றே அவர் எழுதியிருக்கலாம், நிற்க.

கவிதை, ‘அமில ஆவி பறக்கிறது’, என்று துவங்குகிறது. அமிலம் ஒரு கரைப்பான், வெம்மை கூடிய, ஆவி பறக்கும் கரைப்பான். இப்போது மிக எளிதாக நாம் காமத்தையும் அமிலத்தையும் இணைத்துப் பார்க்க முடிகிறது. ஜெயபாஸ்கரன் அமிலத்தை துவக்கத்திலும் காமத்தை முடிவிலும் வைத்திருப்பதால் இந்த இரண்டுக்கும் இடையில் தொலைவு அதிகம் என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. துவக்கம்- முடிவு என்ற உறவில் அமிலமும் காமமும் மிகவும் நெருங்கி நிற்கின்றன.

கடையைச் சுற்றிலும் அமில ஆவி பறப்பது அவ்வளவு சந்தோஷமான விஷயமல்ல. அமிலம் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்பட்டாலும், கரைப்பது அதன் குணம், காரம் அதன் மணம் என்று நினைக்கிறேன். இது கடைக்கு வெளியே- நாம் அடுத்து கடைக்குள் நுழைகிறோம்.

‘ரசாயனப் பொடியின் வெண்மை நெடி/ கடை முழுவதும்’ என்று அடுத்த வரிகள் வந்து விழுகின்றன. இப்போது நம் சித்திரம் இன்னும் தெளிவடைகிறது- அமில ஆவி வெளி வஸ்து அல்ல, உள்ளே கடையை நிறைத்திருக்கிறது. வெளியே நாம் காண்பது கசிவு, உள்ளேதான் ரசாயனப்பொடியின் காட்டமான வெண்மை நெடி.

வெண்மை நெடி என்பது ஒரு சுவாரசியமான பயன்பாடு. நீல நெடி, சிவப்பு நெடி, வெண்மை நெடி என்றெல்லாம் ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒவ்வொரு நெடி உண்டா? இருக்காது என்றுதான் நினைப்போம். ஆனால் சூடுபடுத்துபவர்கள் இடுபொருள் வெவ்வேறு வண்ணங்களில் எரியும்போது அது வெவ்வேறு மணம் கொள்வதை அறிவார்கள் என்று நினைக்கிறேன். அதாவது ரசாயனப் பொடி நெருப்பில் இடப்பட்டு எரியும்போது அந்த நெருப்பு செந்தழல் என்ற நிலையில் ஒரு மணம் வீசும், வெண்ணிறச் சுவாலையாய் வேறு மணம் வீசும் என்று நினைக்கிறேன் – இந்த வெண்சுவாலையின் ரசாயன நெடியை கவிஞர் வெண்மை நெடி என்று சொல்வதாக ஊகிக்கிறேன். இந்த உஷ்ணத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லும் சுவாரசியமானது – white heat:

இதற்கு அகராதியில்,

1. (General Physics) intense heat or a very high temperature, characterized by emission of white light
2. (informal) a state of intense excitement or activity

என்று அர்த்தம் போட்டிருக்கிறது.

ரசாயனப்பொடியை உயர் வெப்பத்தில் சூடுபடுத்தும்போது எழும் அமில நெடி கடைக்குள் நிறைந்திருக்கிறது. கடைக்கு வெளியே அதன் ஆவி கசிகிறது, ஒரு வெண் புகை வருகிறது என்று நினைக்கிறேன், இப்படி எல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட காட்சிதான் மனதில் தோன்றுகிறது.

இதற்கு அடுத்து, “கருத்துக் கொண்டிருக்கின்றன/ பித்தளை வெண்கலப்/ பாத்திரங்கள்” என்று வந்து விடுகிறது, நாம் ஏதோ ஒரு பாத்திரக்கடையில் இருக்கிறோம் என்பதை இப்போது புரிந்து கொள்கிறோம். ஆனால் உடனே ஒரு சந்தேகம், இந்த ரசாயனப் புகையால்தான் பாத்திரங்கள் கருக்கின்றனவா, ஆக்சிடேஷன் ஆவது மாதிரி? இருக்காது என்று நினைக்கிறேன், கடை மாதிரியான இடத்தில் அந்த மாதிரி வேலையைச் செய்ய மாட்டார்கள். பாத்திரங்களுக்கு முலாம் போடத்தான் இதைச் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு பாத்திரம் பிரகாசிக்கும்போதே கடையிலுள்ள மற்ற பாத்திரங்கள் சோபையிழந்து கருத்துப் போகுமே, எந்தக் கடைக்காரன் இப்படி ஒரு வேலையைச் செய்வான், இதில் லாபத்தைவிட நஷ்டம்தானே அதிகம்?

இரண்டு சாத்தியங்கள் – இது போல் எத்தனைதான் மறுபடியும் மறுபடியும் முலாம் பூசிக் கொண்டிருந்தாலும் பாத்திரங்கள் கருத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பது ஒன்று. இரண்டாவது சாத்தியம், முலாம் பூசும்போது பாத்திரம் பளபளப்பது கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் இன்னது நடக்கிறது என்பது வெளியே தெரியாமல்தானே மெல்ல மெல்ல மற்ற பாத்திரங்கள் கருக்கின்றன? அதாவது, இதன் சாதக விளைவுகள் உடனே கிடைக்கின்றன, பாதக விளைவுகள் தாமதமாக ஏற்படுகின்றன (அதற்குள் பாத்திரங்கள் விற்றுப் போகலாம் என்பதால் இது கடைக்காரர் கையைக் கடிக்கும் வேலையல்ல).

இந்த இரண்டில் எதை எடுத்துக் கொள்வது? முதலில் முன்னதை எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அரித்துச் செல்கிறது என்றும் இந்தக் கவிதையில் வருவதால், அமிலத்தின் corrosive தன்மையைக் கணக்கில் கொண்டு, இரண்டாம் பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

சரி, இங்கு என்னதான் நடக்கிறது? ஒரு சாதாரண, அன்றாட கடைத்தெரு காட்சி, “அரித்துச் செல்கிறது அனைத்தையும்/ திருகல் காமம்” என்று முடிக்கும்போது கவிதை வேறொரு இடத்துக்குப் போய்விடுகிறது. திருகல் காமம் என்று வேறு சொல்கிறார்- திருகல் காலம் என்று சொன்னாலாவது புரிந்து கொள்ளலாம், entropy பற்றி ஏதோ சொல்கிறார் என்று.

இத்தனை நேரம் அமில ஆவி, வெண்மை நெடி என்று எல்லாவற்றையும் ஒரு ரசாயன வினையாக வாசித்துக் கொண்டிருந்தோம், இப்போது white heat என்பதன் இரண்டாம் பொருளையும் பார்க்கலாம் – (informal) a state of intense excitement or activity.

Merriam Webster அகராதியில் passion என்ற சொல், 5. depth of feeling என்ற பொருளுக்கு, white heat என்பதை ஒரு synonymஆகக் கொடுத்திருக்கிறார்கள்.

பொதுவாக வெப்பம் உருக வைப்பது, அரிக்கும் செயல் நீருக்கு உரியது (அமிலத்துக்கும் உரியது). காமம் அரித்துச் செல்கிறது என்பதால்தான் அதை திருகல் காமம் என்று சொல்கிறார் போலிருக்கிறது என்று இதை எல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லியாகி விட்டது.

இப்போது பக்க அணிமை என்ற விஷயத்துக்கு வரலாம் – காமத்தை அமிலத்துடன் இணைத்துப் பேச வைப்பதுதான் இந்தக் கவிதையில் ஜயபாஸ்கரனின் ஸ்ட்ரோக் ஆப் ஜீனியஸ். எந்த ரசாயனம் வெண்மை நெடியாகவும் அமில ஆவியாகவும் இருக்கிறதோ அதேதான் கருத்துப் போவதற்கும், அரித்து அழிப்பதற்கும் காரணமாகிறது (இதை அவர் நேரடியாகச் சொல்லவில்லை, மறைமுகமாகவும்கூட உணர்த்தவில்லை, அவர் அமிலத்தையும் காமத்தையும் பக்கத்தில் வைத்து வாசிக்கச் செய்வதால், நாம் அந்த மாதிரி நினைக்க முற்படுகிறோம்). காமம்தான் அந்த ரசாயனம் என்ற சுட்டலும் கவிதையில் சொல்லாத, ஆனால் நாமே மேற்கொள்ளும் ஒரு எளிய தாவல்.

கடைசி இரு வரிகள் இதற்கு முன் வந்த, அதுவரை ஒரு காட்சியாய் இருந்த, அத்தனையையும் ஒரு படிமம் ஆக்கி விடுகின்றன.

இனி ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது- திருகல் காமம் என்பதில் திருகலை என்னவென்று புரிந்து கொள்வது? இந்தக் கேள்வி மொழிபெயர்ப்பாளனின் கவலை. நம்மைப் பொறுத்தவரை. எது சோபை சேர்க்கிறதோ அதுவே மாசும் சேர்க்கிறது என்பதே திருகல் காமம் என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கிறது. அந்தக் காமம், passion, நேரானதாக இருக்கலாம், வக்கிரப்பட்டதாக இருக்கலாம், மொழிபெயர்ப்பவனைத் தவிர நமக்கு எதுவானால் என்ன, எல்லாம் ஒன்றுதான்.

இங்கு ஷேக்ஸ்பியரின் 129ஆம் சானட், “The expense of spirit in a waste of shame” என்று துவங்கும் கவிதையை ஒப்பிடலாம். அவர் காமத்தைப் பேசுகிறார் , அவ்வளவுதான். எந்த வகை காமமாய் இருந்தாலும் அத்தனைக்கும் அது பொருந்தும். இந்தக் கவிதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இது என்ன சொல்கிறது, எதைச் சொல்கிறது என்று பேசுவதைவிட, எப்படிச் சொல்கிறது என்று பேசுவதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

பின்குறிப்பு:

1. அரிக்கும் காமம் குறித்து நண்பர் ஒருவர் எழுதியது:

“‘அனைத்தையும் அரிக்கும்’ என்பது எதையெல்லாம் குறிக்கக்கூடும் என்று யோசித்தேன். தன்மதிப்பு, வெட்கம், சமூகத்திற்காக ஏற்றிருக்கும் பாத்திரம் அனைத்தையும் காமம் அரிக்ககூடும். எந்த கீழ்மைக்கும் காமம் நம்மைத் துணியச் செய்யும். ஒரு பக்கம் காமத்தால் உள்ளம் பொலிவுறும்போது, இன்னொரு பக்கம் மனம் கருத்துக் கொண்டிருக்கிறது, காமம் அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இவ்வாறாக புரிந்து கொண்டேன்.

2. ரசவாதம்

Part One: Life, XXXIII

DARE you see a soul at the white heat?
Then crouch within the door.
Red is the fire’s common tint;
But when the vivid ore

Has sated flame’s conditions,
Its quivering substance plays
Without a color but the light
Of unanointed blaze.

Least village boasts its blacksmith,
Whose anvil’s even din
Stands symbol for the finer forge
That soundless tugs within,

Refining these impatient ores
With hammer and with blaze,
Until the designated light
Repudiate the forge.

Emily Dickinson

. ஒளிப்பட உதவி – ‘Emily Dickinson’, Maira Kalman, Venetian Red

விமரிசனம் என்றால் என்ன? – தன்னையே கேட்டுக் கொள்கிறார் ஏ.ஓ. ஸ்காட்

nonfiction_a-o-_scott_cover_2

கே – விமரிசனத்தின் நோக்கம் என்ன? விமரிசகர்களால் என்ன பிரயோசனம் இருக்கிறது?

ப – இவை பெரிய கேள்விகள்! இருந்தாலும், யாரும் கேட்கக்கூடிய கேள்விகள்தான். ஆனால் இரண்டும் ஒரே கேள்வியல்ல.

கே: ஆனால் விமரிசகர்கள் செய்வதெல்லாம் விமரிசனம்தானே?

ப: நிச்சயமாக, விமரிசகர்கள் செய்வது விமரிசனம்தான். அதே போல், விமரிசனம் செய்பவர்கள் எல்லாரும் விமரிசகர்கள்தான். இப்படிச் சொல்வதில் உள்ள பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.

நாம் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறோம், ஆனால் அதற்குள் சொன்னதையே சொல்லத் தொடங்கிவிட்டோம். விமரிசனம் செய்வதைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு வேலையைப் பேசுகிறோமா?- எழுத்து வகையொன்று, பாண்டித்தியம் அல்லது பத்திரிக்கைத் துறையின் வகையினம், ஏதோ ஒரு அறிவுத்துறை- இதில் வேலை செய்து பிழைப்பவர்கள் விமரிசகர்கள் என்று சொல்லலாமா? அல்லது, விமரிசனத்தைப் பேசும்போது நாம், அந்த அளவுக்கு அதிக நிபுணத்துவம் அல்லாத ஒரு செயல்பாட்டைப் பேசுகிறோமா? விமரிசனம் செய்வது என்பது சீட்டு விளையாடுவது, சமையல் செய்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது மாதிரி யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயமா? அல்லது விமரிசிப்பது என்பது அதைவிட அடிப்படையான, அதைவிட தன்னிச்சையான செயலாக இருக்குமா, கனவு காண்பது அல்லது மூச்சு விடுவது அல்லது அழுவது போன்ற விஷயமா?

கே- இங்கு கேள்விகளை நான் கேட்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு என்று நினைக்கிறேன்

ப- மன்னித்துக் கொள்.

கே- சரி, மறுபடியும் முதலிலிருந்து துவங்குவோம். உன்னிடமிருந்தே துவங்குவோம். உன் தொழில் விமரிசனம், அது தவிர நீ, விமரிசனம் என்றால் என்ன என்றும், அதன் நோக்கம் என்ன என்றும் அதிகம் சிந்திக்கிறாய்.

ப- நான் செய்வதை இந்த வரிசையில்தான் பேச வேண்டும் என்றில்லை. தவிரவும் இதை மட்டும்தான் செய்கிறேன் என்றும் சொல்ல முடியாது.

கே- சரி. ஆனால் நான் கேட்க வந்தது…

ப- என்னால் என்ன பிரயோசனம்? நான் செய்வதன் நோக்கம் என்ன?

கே- சரி, உன் விருப்பப்படி அப்படியும் கேட்கலாம். ஆனால் நான் இந்த அளவு விரோத பாவனையில் கேட்க மாட்டேன்.

ப- அதெல்லாம் ஒன்றுமில்லை. வில்லியம் பிளேக் சொன்னது போல், எதிர்ப்பே உண்மையான நட்பு. ஒவ்வொரு விமரிசகனும் அவநம்பிக்கை, சந்தேகம், சில சமயம் முழுமையான காழ்ப்பு என்று அத்தனையையும் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறான். உனக்கு என்ன ஒரு துணிச்சல்! யார் உனக்கு இந்த உரிமை கொடுத்தது? நீ சொல்வதை ஏன் நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு வாடிக்கையான விஷயங்கள். எங்கள் தகுதி குறித்து, எங்கள் அறிவு குறித்து, எங்கள் இருப்புக்கான உரிமை குறித்தே கேள்வி எழுப்பத் தூண்டுவது- விமரிசகனாக இருப்பதில் மிகப் பெரிய வேலை இது என்று தோன்றுகிறது.

கேள்வி- சரி, நீ இப்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறாய். உன் கருத்துகளின் நியாயத்தைச் சொல்ல விரும்புகிறாய். சாமுவேல் எல் ஜாக்சனுக்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம்  நீ எழுதினாய் என்று சொல்வது சரியாக இருக்குமா?

பதில்- முழுக்க அப்படி இருக்கும் என்று ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் நீ இந்தப் பேச்சை எடுத்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். இதன் பின்னணி பற்றி கொஞ்சம்: மே 2012ல், அன்றைக்கு The Avengers- நீ அந்தப் படம் பார்த்தாய்தானே? எல்லாரும் பார்த்தார்கள்- அந்தப் படம் வட அமெரிக்கா எங்கும் 3500 இடங்களில் திரையிடப்பட்டது. நான் அந்தப் படத்தில் உள்ள சில விஷயங்களைப் பாராட்டி ஒரு விமரிசனம் எழுதினேன்- புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நடிப்பு-, வேறு சில விஷயங்கள் பற்றி குறை சொன்னேன், அதிலும் குறிப்பாக மகத்தான வெற்றி பார்முலா எனும் பீடத்தில் ஒரிஜினாலிட்டியை பலி கொடுத்ததைக் குற்றம் சொன்னேன். நானே என்னை மேற்கோள் காட்டலாம் என்றால்: “தி அவஞ்சர்ஸ்”சின் வெற்றி ரகசியம் இதுதான்- இது விறுவிறுப்பாய் நகரும் ஒரு சிறிய டயலாக் காமெடி. ஆனால் இந்த திரைக்கதை வேறொன்றாக, மார்வலுக்கும் அதன் புதிய ஸ்டூடியோ முதலாளிகள் மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனிக்கும் ஒரு மாபெரும் ஏடிஎம் மெஷினாக, மாறுவேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறது”. இப்போது பார்க்கும்போது இந்த மதிப்பீடு நியாயமாகத்தான் தெரிகிறது, நானே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம், இல்லையா? அதன்பின் சில ஆண்டுகள் கழித்து “அவஞ்சர்ஸ்- ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வந்தபோது ஏறத்தாழ எல்லாருமே இதே மாதிரிதான் சொன்னார்கள்- அதன் வசீகரங்களும் திரில்களும் உயிரற்ற கார்ப்பரேட் ஸ்பெக்டகில் ஆனதில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது என்றார்கள். மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுபவர்களின் முன்வரிசையில் நானும் ஒருவனாய் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

இருந்தாலும் அந்த சமயத்தில், நான் சொன்னதற்கு அவசரப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்னை பாதித்தார்கள். நியூ யார்க் டைம்ஸ் தளத்தில் என் விமரிசனம் பதிப்பிக்கப்பட்டவுடன், அவஞ்சர்ஸ் படத்திலும் மார்வல் யூனிவர்ஸ் பிரான்சைஸ் வெளியீடுகளிலும் நிக் ஃபியூரியாக நடிக்கும் ஜாக்சன், டிவிட்டரில் ஒரு நிலைத்தகவல் பகிர்ந்து கொண்டார்- “ஏ.ஓ. ஸ்காட்டுக்கு வேறொரு புதிய வேலை தேவைப்படுகிறது! அவருக்கு வேலை கிடைக்க உதவுவோம்! அவரால் செய்யக்கூடிய வேலை கிடைக்கட்டும்!” என்று தன்னைத் தொடர்பவர்களைத் தூண்டும் விதமாக எழுதினார். அவரைத் தொடர்பவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அவரது அழைப்பை ஏற்றனர்- என் எடிட்டர்கள் என்னை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாய், டிவிட்டரின் சிறந்த மரபுகளுக்கு ஏற்ப, நான் என்னைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற அவர்களது கற்பனையை விரிவாகச் சித்தரித்து  ஜாக்சன் கோபத்தில் சொன்னதை ரீட்வீட் செய்து பரிந்துரைத்தனர். இவற்றில் அர்த்தமுள்ள டிவீட்டுகள் பழகிப்போன, ஏன், கானனிக்கல் என்றும்கூட சொல்லக்கூடிய எதிர்-விமரிசன உணர்வுகளை வெளிப்படுத்தின: எனக்கு சந்தோஷப்படத் தெரியாது; நான் எல்லாருடைய மகிழ்ச்சியையும் கெடுக்கப் பார்க்கிறேன்; நான் வெறுப்பவன், மரபானவன், மேல்தட்டுப் பார்வை கொண்டவன். இதில் எனக்கு மிகப் புதிதாய் இருந்தது- காமிக் புக்ஸ் படிக்கப் பிடிக்காதவனாக இருந்ததால் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாரிடமும் உதை வாங்கிய நெர்ட்டாக இருந்த நான் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இப்போது வளர்ந்திருக்கிறேன் என்பதுதான் (என் காலத்தில் எல்லாரிடமும் அடி வாங்கிய நெர்டுகளில் சிலர் காமிக் புக்ஸ் வாசிப்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது என்று நினைக்கிறேன், எல்லாவற்றிலும் சூப்பர் ஹீரோக்களும் ஃபேன்பாய்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நான் அடி வாங்கிய எதற்கும் காமிக் புக்ஸ்கள் காரணமாக இருந்திருக்கவில்லை).

இன்றைக்கு நம் கலாசார வாழ்வின் மாற்ற முடியாத அங்கமாக இருக்கும் அபத்தமான, ஹைப்பர்ஆக்டிவ் இன்டர்நெட் சச்சரவுகளில் ஒன்றாய் அவஞ்சர்ஸ் சம்பவமும் வளர்ந்து வெடித்தது. மேஸ் விண்டு என் வேடத்தைக் கலைத்து விட்டார்! ஜூல்ஸ் வின்ஃபீல்டின் அறச்சீற்றத்துக்கு நான் காரணமாகி விட்டேன்! பொழுதுபோக்கு விஷயங்களை விவாதிக்கும் தளங்களில் ஜாக்சனும் நானும் போட்டோஷாப் செய்யப்பட்ட ஆக்சன் மூவி சண்டைப் போஸ்களில் நின்றோம். மழைக்குப்பின் முளைக்கும் காளான்கள் போல் மினியேச்சர் கருத்துக் கட்டுரைகள் முளைத்தன. நாங்கள் டிவிட்டரில் சண்டை போட்டது பிரேசில், ஜப்பான், ஜெர்மனியில் செய்தியானது. பலமான தாக்குதலுக்கு உள்ளான எனக்கு ஆதரவாகப் பேச  என் சகாக்களில் சிலர் முன்வந்தார்கள்- எந்த வேலையைச் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது என்று ஜாக்சன் நினைத்தாரோ அந்தப் பொறுப்பின் நேர்மையையும் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பது தங்கள் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள்.

 கேள்வி- நீ பயப்படவில்லையா?

பதில் – அதற்கு மாறாய், எனக்கு  நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது. என் உயிருக்கோ பிழைப்புக்கோ எந்த ஒரு ஆபத்தும் இருக்கவில்லை. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையின் ஒரு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை விரைவில் தொட்ட படங்களில் இன்றும் இரண்டாவது இடத்தில் உள்ள படம் தி அவஞ்சர்ஸ். டிவிட்டரில் எனக்கு சில நூறு ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். குறுகிய ஒரு சில நிமிடங்கள் நான் காரித் துப்பப்பட வேண்டிய வில்லனாகவும் மேன்மையான, மிகவும் வசை பாடப்பட்ட லட்சியத்தின் தியாக பிம்பமாகவும் ஒரே சமயத்தில் இருக்க முடிந்தது. அனைவருக்கும் இது வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அளித்தது, அதன்பின் எல்லாரும் அடுத்த வேலை பார்க்கப் போய் விட்டார்கள்.

ஆனால் தேநீர்க்கோப்பையில் வீசும் புயலும் வானிலையை பாதிப்பதாக இருக்கக்கூடும். ஜாக்சன் ஒரு முக்கியமான, நியாயமான கேள்வி எழுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தி அவஞ்சர்ஸ் பற்றியோ வேறெந்த படத்தைப் பற்றியோ நான் எழுதியதில் உள்ள நியாய அநியாயங்களை ஒருபுறம் விலக்கி வைப்போம்- விமரிசகனின் வேலை என்ன என்றும் அதை ஆக்சுவலாகவே எப்படி செய்ய முடியும் என்றும் கேட்பதில் எப்போதும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

கேள்வி- ஆக, உன் தொழிலை உணர்ச்சிவசப்படும் திரை நட்சத்திரங்களையும் அவர்களது ரசிகர்களையும் தாக்குதல்களிலிருந்து- விமரிசனத்திலிருந்து- பாதுகாத்துக் கொள்வதற்கான காரணங்களை இதில் நீ எழுதியிருக்கிறாய். இது கொஞ்சம் இரட்டை வேடம் போடுவது போலில்லையா? நீ என்ன வேண்டுமானாலும் சொல்வாய், ஆனால் உன்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதா?

பதில் – உண்மையில் அப்படியில்லை. அதாவது, ஆமாம் நாம் யாருடைய படைப்புகளைப் பற்றி எழுதுகிறோமோ அவர்கள், ஏன், நம் வாசகர்கள், நாம் செய்வதில் சிறிது குறை சொல்லும்போது நாம் எல்லாரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படத்தான் செய்கிறோம். அது மனித சுபாவம்தான். ஆனால் எனக்கு அதைவிட இதுதான் முக்கியமாக இருக்கிறது- நாம் ஒருவரையொருவர் விமரிசித்துக் கொள்கிறோம் என்பதில் ஒரு பொதுப்பண்பை என்னால் பார்க்க முடிகிறது- மனித இனத்துக்கே பொதுவான சுபாவம் இது என்றுகூட சொல்லுவேன்- நாம் எல்லாரும் குறை கண்டுபிடிக்கிறோம். நாம் போற்றவும் செய்கிறோம். தீர்ப்பும் சொல்கிறோம். இதுதான் விமரிசனத்தின் அடித்தளம். நல்லது கெட்டது, எதைக் கண்டனம் செய்ய வேண்டும், எதை ஊக்குவிக்க வேண்டும், எதைப் பற்றி நம் நண்பர்களிடம் சொல்ல வேண்டும் என்பதை நாம் எப்படி அறிகிறோம், அல்லது இது நமக்குத் தெரியும் என்று நாம் எப்படி நினைத்துக் கொள்கிறோம்? தி அவஞ்சர்ஸ் அல்லது எதுவாகவும் இருக்கட்டும், அதன் வெற்றி தோல்வியை நாம் எப்படி மதிப்பிடுகிறோம்? உண்மையைச் சொன்னால், அது நம் வேலையோ இல்லையோ, நாம் ஒரு முடிவுக்கு வரத்தான் செய்கிறோம். நம்மால் இதைச் செய்யாமல் இருக்க முடியாது.

கேள்வி : சரி, நாம் எப்படி தீர்மானம் செய்கிறோம்? அல்லது, கேள்வி இப்படி இருக்க வேண்டுமோ, “நாம் ஏன் ஒரு தீர்மானத்துக்கு வருகிறோம்?”

பதில் – நிஜமாகவே சொல்கிறேன், நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆர்மபித்தபோது என் கேள்விகளுக்கான பதில்கள் சுலபமாகக் கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அப்படியெல்லாம் இல்லை. தெளிவாகவும் ஆணித்தரமாகவும் நான் சொல்லக்கூடிய பதில்கள் இருக்கும் என்று நினைத்தேன். எது அழகாக இருக்கிறது, எது பொருள் பொதிந்ததாக இருக்கிறது, எது சந்தோஷப்படுத்துகிறது என்பதை நான் இதை எழுதும்போது கண்டுகொள்வேன் என்று நினைத்தேன்- ஒரு வேளை மானுட இனத்தின் துவக்கக் காலத்தில் நாம் நம்மை வேட்டையாடும் மிருகங்களைத் தவிர்க்கவும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் நியூரல் சுவிட்சுகள் அல்லது ஹார்மோனல் எதிர்வினைகளை பரிணாம வளர்ச்சியின் போக்கில் வளர்த்துக் கொண்டோம் என்ற முடிவுக்கு வரலாம். அல்லது இதன் மதிப்பு இவ்வளவு என்று பகுத்து உணரவும் தீர்மானங்களுக்கு வரவும் தேவையான உள்ளார்ந்த, காலத்துக்கப்பாற்பட்ட  தர அளவைகள் நமக்குள் இருக்கும்; அவை நூற்றாண்டு கால மாற்றங்களில் உருவம் மாறி இடத்துக்கு இடம் வெவ்வேறு வகைகளில் வெளிப்பட்டாலும், அவை நம்மை உண்மையும் அழகும் நிறைந்த பாதையில் எப்போதும் கொண்டு செல்லும் என்ற முடிவுக்கு வரலாம் என்று நினைத்தேன்.

மனித படைப்பூக்கத்தின் வரலாற்றைப பார்க்கும்போது உன்னால் பாட்டர்ன்களைப் பார்க்க முடிகிறது- வடிவங்கள், ஒலிகள், கதைகள்- அவை மிக ஆழ்ந்த ஒரு தளத்தில் பரம்பரை பரம்பரையாக ஒரு தொடர்ச்சி கொண்டதாய் இருந்து வந்திருப்பதை உணர்த்துகின்றன. மனிதனின் படைப்புகள் எண்ணிறந்த அளவில் பரந்துபட்டிருப்பதை நீ பார்க்க முடியும். அது அத்தனையையும் ஒரு பகுப்பில் அல்லது குறிப்பிட்ட சில அளவைகளுள் தொகுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கும் நீ வரலாம். ஒவ்வொரு கலாசாரமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு நட்புக்குழுவும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான கலைகள் மற்றும் புத்தாக்கங்களுக்குப் பொருந்தும் வகையில் தனக்கேயுரிய கானன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை நம் நவீன, காஸ்மோபாலிட்டன் கூருணர்வுகள் முகர்ந்து பார்க்கின்றன, வகைமாதிரிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பகுத்துப் பிரித்து நாம் கண்டறிந்ததை ஏற்றுக் கொள்ளும் இனிய செயலைச் செய்கின்றன. இவற்றுக்கிடையே, புதிய புதிய விஷயங்கள் தோன்றி நம்மைத் தமக்குள் மூழ்கடிக்கின்றன – இந்த வெள்ளம் நம்மை அசைய விடாமல் ஆட்கொண்டு நம்மில் வெறுமை நிறைத்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எத்தனை எத்தனை என்று வியக்கிறோம், அல்லது இவ்வளவு இருக்கிறதே என்று கவலைப்படுகிறோம். நம் கவனத்தை அத்தனை அத்தனை விஷயங்களும் கோருகின்றன, நம்மை வசீகரிக்கத்தான் எத்தனை எத்தனை கவனக்குலைவுகள், நம் மேஜை மீதுதான் எத்தனை எத்தனை தரிசனங்கள்- இவற்றிலிருந்து ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஒரு பெரும்பாடு போலிருக்கிறது.

கேள்வி- அந்த வேலை- தேர்ந்தெடுப்பது, வேறுபடுத்திப் பார்ப்பது, மதிப்பிடுவது, புதிய விளக்கம் அளிப்பது- இதைத்தான் நீ விமரிசனம் என்று சொல்கிறாய்.

பதில் – ஆமாம். ஆனால் இது அதைவிட அடிப்படையான, அவசரமான விஷயமும்கூட. இது சிக்கலான விஷயம். சாமுவேல் எல். ஜாக்சன் விஷயத்துக்குப் போகலாம். அவஞ்சர்ஸ் நிகழ்வு முடிந்து ஆறு மாதங்களுக்குப்பின் அவர் ஹப்பிங்டன் போஸ்ட் நேர்முகம் ஒன்றில் எங்கள் டிவிட்டர் சண்டையைப் பேசினார். அதில் விமரிசனம் பற்றி, அதிலும் குறிப்பாக பாபுலர் கலாசாரத்தை விமரிசனம் செய்வது பற்றி, பொதுவாகவே பரவலாகப் பேசப்படும் ஒரு குற்றச்சாட்டை அவரும் சொன்னார். “உலகத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்கள் சினிமாவை சினிமாவாகதான் பார்க்கிறார்கள்,” என்று சொன்னார் அவர். “அறிவுத்தளத்துக்கு கொண்டு போகக்கூடிய அறிவார்ந்த விவாதத்துக்கு உரியது அல்ல பாபுலர் சினிமா”.  இது வெகு காலமாகச் சொல்லப்படுவது, இது விமரிசனத்துக்கு எதிரான சக்திவாய்ந்த வாதம்- ஒரு சில வகைகளில் பார்த்தால் இதற்கு பதிலே கிடையாது. ஒரு படைப்பை அதன் அளவைகளைக் கொண்டே அணுக வேண்டும், அனுபவிக்க வேண்டுமே தவிர ஆராயக் கூடாது என்பன போன்ற கருத்துகளில் வேரூன்றிய பார்வை இது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் விமரிசகனின் வேலை. எது ஒன்றையும் அது எப்படி இருக்கிறதோ அப்படி மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளக் கூடாது, அதை அறிவார்ந்த வகையில் கூர்நோக்க வேண்டும் என்று அவன் வலியுறுத்தியாக வேண்டும்.

 “அறிவுஜீவித்தனம்” என்பது வேண்டுமென்றே அழகற்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல், ஒருவரை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்துவதே குற்றம் சாட்டும் செயல். ஆனால் உண்மையில் அறிவுஜீவித்தனம் என்பது, “யோசித்துப் பார்” என்பதற்கு இணையான சொல்தான். யோசித்துப் பார்த்து எடுக்கப்பட்ட படம், யோசித்துப் பார்க்கும் சாத்தியங்கள் கொண்டது என்ற இரண்டும் தி அவஞ்சர்ஸ் படத்துக்கு பொருந்தக்கூடும் என்பதை ஏன் இத்தனை தீவிரமாக மறுக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஜாக்சன் உட்பட, அதன் படைப்பாளிகள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, அவர்கள் அறிந்தே மேற்கொண்ட சில நோக்கங்களின் காரணமாக உருவான படம் என்ற பொதுப் பார்வையில் தி அவஞ்சர்ஸ் நிச்சயம் ஒரு “அறிவார்ந்த விவரணை”தான். மேலும், அது பிற கேளிக்கை காமிக் புத்தகங்கள் பலவற்றைப் போல், பெரும்பொருட்களைப் பேசுகிறது- கௌரவம், நட்பு, பழிவாங்குதல், சட்டத்துக்கு உட்பட்ட உலகில் தீமை இருப்பதன் சிக்கல், இப்படி பல சொல்லலாம். இந்த வகைமையின் ரசிகர்களும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பயின்றவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான் இது. இறுதியாக, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு ஹாலிவுட் தயாரிப்புகளைச் செலுத்தும் உலகளாவிய வணிகத்தின் கட்டளைகளுக்கு எதிராய் விளையாட்டாய் கதைசொல்லும் உந்துதல் முட்டிக்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை தி அவஞ்சர்ஸ் காட்டுகிறது (என் கோணத்தில் இதுதான் என்னை ஆத்திரப்படுத்துகிறது).

இத்தனையும் சொல்வதானால் தி அவஞ்சர்ஸ் மிகவும் சுவாரசியமான, சிக்கலான படைப்பு என்றும் அதன் வெற்றிகளும் குறைபாடுகளும் சிந்திக்கத்தக்கன என்றும் சொல்வதாகும். ஆனாலும்கூட நல்லது கெட்டது பிரித்துப் பார்த்து, இதற்குரிய பின்புலத்தைக் கண்டு இதன் இடத்தை நிறுவுவதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதேகூட நாம் முக்கியமான விஷயத்தைத் தவற விடுவதாக அமையலாம். அல்லது, ஜாக்சன் சொல்வது போல், “…if you say something that’s fucked-up about a piece of bullshit pop culture that really is good—‘The Avengers’ is a fucking great movie; Joss [Whedon] did an awesome job—if you don’t get it, then just say, ‘I don’t get it’”, என்று விட்டுவிடலாம்.

ஆனால், தி அவஞ்சர்ஸ் எப்படிப்பட்ட படம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக, அவஞ்சர்ஸ் படத்துக்கு விமரிசிக்கப்படும் தகுதியில்லை (“a piece of bullshit pop culture”)  என்று சொல்லிக்கொண்டே அது விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது (“a fucking great movie”) என்றும் ஜாக்சன் இரட்டை அளவுகோல்களைப் பிரயோகிப்பதை என்னால் ரசிக்க முடிகிறது. முன்னொரு காலத்தில் திரைப்படங்கள், ரசமற்ற மற்றும் நடுவாந்தர பொழுதுபோக்குகள் குறித்து அறிவுஜீவிகள் மிகச் சுலபமாகக் கொண்டிருந்த யோசனையற்ற எள்ளலை அவர் எதிரொலிக்கிறார். அதே சமயம், மிகவும் புராதானமான, மிகுந்த உயர் விமரிசனப் பார்வையில், கலைப்படைப்பு என்பது களங்கப்படுத்தப்பட முடியாதது, அது தன்னளவிலேயே பூரணமானது என்ற கருத்தையும் அவர் இங்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படிப்பட்ட கருத்துச்சூழலில் ஒரு விமரிசகன், எந்த வகையிலும் அச்சுறுத்தாத, விளையாட்டாகச் செய்யப்பட்ட கேளிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் குற்றம் செய்தவன் ஆகிறான். அல்லது, மிகவும் உன்னதமான ஒன்றை தன்னுடைய அபத்த மட்டத்துக்குக் கீழே தள்ளிய குற்றம் புரிந்தவன் ஆகிறான். எப்படிப் பார்த்தாலும் விமரிசகன் குற்றம் செய்தவன்தான்.

ஆனால் இங்கே இதுதான் முக்கியம்: இதைச் செய்யும் விமரிசகன், தான் அவஞ்சர்ஸ் பார்த்த அனுபவம் பற்றியோ (அல்லது ஒரு நாவல் வாசித்தது பற்றியோ ஓவியத்தை ரசித்தது பற்றியோ இசை கேட்டது பற்றியோ) பேசும்போது, நின்று நிதானித்து யோசிக்கும் யாரையும்விட வித்தியாசமாய் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால், சிந்திக்கும்போதுதான் விமரிசனம் துவங்குகிறது. நாம் அத்தனை பேரும் அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிறோம். இல்லையென்றால், ஒரு படைப்பை எதிர்கொள்கையில் நாம் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும்.

கேள்வி : ஆக, சிந்தனைக்கு ஆதரவாக இப்போது புத்தகம் எழுதியிருக்கிறாயா? உன் வாதம் என்ன? உண்மையில் யாரும் சிந்திக்கக்கூடாது என்று சொல்வதில்லை.

பதில் – சீரியசாகவா சொல்கிறாய்? சிந்தனாவாதத்தை எதிர்ப்பது ஏறத்தாழ நம் குடிமைச் சமயமாகவே ஆகிவிட்டது. “விமரிசனச் சிந்தனை (Critical thinking)” என்பது எங்கும் காணக்கிடைக்கும் கல்விக் கோஷமாக இருக்கலாம்- தெளிவாக வரையறை செய்யப்படாத இந்த ஆற்றலை வளர்பருவத்தில் நம் குழந்தைகள் போகிற போக்கில் எங்காவது கண்டெடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்- ஆனால் உலகில் நீ உன் அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பலன் அபரிதமான அளவில், கைமேல் கிடைக்கிறது.

கலாசார நுகர்வோர்கள் என்ற வகையில் நாம் எதுவும் செய்யாமலிருக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்படுகிறோம். அல்லது, எல்லாம் நல்லபடியாக வேலை செய்யும்போது, ஒரு பொய்யான அரைகுறை விழிப்பு நிலை அடையும் வகையில் தூண்டப்பட்டு, ரசிகமனம் என்ற ஒரு தற்காப்புத்தன்மை கொண்ட குழு அடையாளத்தை நோக்கியோ, ஆழமற்ற, அரைகுறை நகைமுரண்தன்மை கொண்ட ‘எல்லாவற்றிலும் நல்லது உண்டு’ என்ற பாவனையை நோக்கியோ செல்ல  ஊக்குவிக்கப்படுகிறோம். இத்தனைக்கும் இடையில், அரசியல் பொதுச்சமூகத்தின் குடிகள் என்ற வகையில் நாமும், வாதத்தின் இடத்தை விதண்டாவாதம் கைப்பற்றிக் கொள்ளும் , கோட்பாடுப் பகைமைகள் நிறைந்த, அதிதீவிர விருப்பு – வெறுப்புச் சூழலில், போராளிகளாக அணிதிரள வேண்டியதாகிறது.

நம்மைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும் உணர்வுகளால் தடுமாறுகிறோம், கருத்து வெள்ளத்தில் தத்தளிக்கிறோம் என்ற நிலையில் நமக்கு எதையும் சந்தேகிக்க இடமில்லை, எதையும் யோசிக்க அவகாசமில்லை. இதை விட்டு வெளியேறலாம் என்றெல்லாம் பகல்கனவு காண முடியுமே தவிர அதெல்லாம் நடக்காது. நாமிருக்கும் உலகில் உள்ளபடியே தெளிவாகக் கண்டறிந்து வாழக் கற்றுக் கொண்டாக வேண்டும், வேறு வழியில்லை. ஆனால், இது எளிய விஷயம் அல்ல. கூட்டமாய்ச் சிந்திப்பது, முன்னனுமானங்களில் சரண் புகுவது, அறியாமையில் ஆழ்ந்திருப்பது போன்ற சுகங்களைத் தேடிச் செல்வது இதைப் பார்க்கும்போது மிக எளிது. இந்த  வசீகரங்களை எதிர்த்து நிற்க நமக்கு விழிப்புணர்வும், சுய கட்டுப்பாடும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  தேவைப்படுகிறது.

கேள்வி- அப்படியானால் நீ எழுதியிருப்பது சோம்பலுக்கும் மடமைக்கும் எதிரான பிரகடனமா?

பதில் – அப்படியும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு எதிர்மறை பொருள் கொள்ள வேண்டிய அவசியமென்ன? இந்தப் புத்தகம் கலையையும் கற்பனையையும் கொண்டாடுகிறது என்றும் மகிழ்ச்சிக்கான நம் உள்ளார்ந்த தேடலை விசாரிக்கிறது என்றும் தேடலுக்கான உந்துசக்தியை நாம் பல்வேறு வகைகளில் நுண்மையாக்கிக் கொள்வதைப் பேசுகிறது என்றும் கொள்ளலாம்.

கேள்வி – இத்தனையும்தான் விமரிசகனின் வேலையா?

பதில் – ஒவ்வொருவரின் வேலையும் இதுதான், இந்த வேலையை நாம் அத்தனை பேரும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன். அர்த்தம் காணவும் மகிழ்ச்சியடையவும் எல்லையில்லா தவிப்பு கொண்டவர்கள் நாம், அந்தத் தவிப்பை நிறைவு செய்யும் படைப்புகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை யோசித்துப் பார்ப்பதில் இந்த முயற்சி துவங்கலாம் என்று சொல்லுவேன். அதே சமயம், இந்த அழகிய, புதிரான விஷயங்களை எதிர்கொள்ளும்போது நாம் அடையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுவேன்.

நாம் கலையை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதுகிறோம். அது ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு குறுகிய பாதை என்றும் அதில் நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாகவோ ஒத்த மனம் கொண்ட கூட்டத்தினருடனோ, பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நம்புகிறோம். அல்லது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியளிக்கும், படைப்பூக்கம் மிகுந்த கூறுகளை அதைவிட முக்கியமான விஷயங்கள் என்று நாம் நம்புவனவற்றுக்கு அடுத்த நிலையில் இறக்கி வைக்கிறோம். நம் இருப்பின் அழகியல் பரிமாணங்களை நம் மத நம்பிக்கைகள், அரசியல் கோட்பாடுகள், அறச் சார்புகள் போன்ற பெட்டிகளுக்குள் அடைத்து வைக்கிறோம். நாம் கலையை அற்பப்படுத்துகிறோம். அர்த்தமற்ற விஷயங்களை வழிபடுகிறோம். நம் உளறலுக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிவதில்லை.

எல்லாம் போதும்! நம் உள்ளங்களுக்கு விடுதலை அளிப்பதே கலையின் பணி; விமரிசகனின் கடமை, அந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதைக் கண்டறிவது. எல்லாரும் விமரிசகர்கள்தான் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் நம் மனச்சாய்வுகளைக் கடந்து சிந்திக்க முடியும், நம் சந்தேகத்தையும் திறந்த மனத்தையும் சமநிலையில் பேண முடியும், களித்துக் கொழுத்து மொண்ணையாகிப் போன நம் உணர்வுகளைக் கூர் தீட்ட முடியும், நம்மைச் சூழ்ந்திருக்கும் அறிவுத்தள மந்தநிலையை எதிர்த்துப் போராட முடியும்  என்று பொருள்படுகிறது. அல்லது அப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஆச்சரியமான நம் அறிவுக்கு நாம் வேலை தர வேண்டும். நம் அனுபவங்களுக்கு உரிய மரியாதை அளித்து அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி : மிகச் சரி. ஆனால் ஒரு விமரிசகன் இத்தனையும் செய்வது எப்படி?

பதில் – நல்ல கேள்வி!

நன்றி- A. O. SCOTT ASKS HIMSELF: WHAT IS CRITICISM?, A.O. SCOTT, LITHUB http://lithub.com/what-is-criticism/

image credit – https://www.kirkusreviews.com/features/o-scott/

கொண்டாட்டமும் கேளிக்கையும்

இந்த வாரம் இடுகையிடப்பட்டுள்ள “கைகால்களை நீட்டி” என்று துவங்கும் அமலன் ஸ்டான்லி கவிதையின் துவக்கம் தெளிவில்லாதது. குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே பெய்யும் மழையில் கைகளையும் கால்களையும் நீட்டி ஈரமாக்கிக் கொள்கின்றன என்பது மழைக் கவிதை என்று தெரிந்தபின்தான் புரிகிறது. மேலும் கள்ளத்தனம் என்ற சொல் குற்றம் என்பதை நினைவுபடுத்தாமல் போனாலும், மறைக்கப்படும் செயலைச் சுட்டுகிறது.

அடுத்து வராண்டாவில் கேட்கும் கூக்குரல்கள் டீச்சரின் பிரம்பு வீச்சில் அடங்குகின்றன- டீச்சரின் பிரம்புவீச்சு எங்கே நடக்கிறது? வராண்டாவில் இருக்கும் மாணவர்களை அடிக்கிறாரா? ஆம் என்றால் கூக்குரல்கள் வலியின் அலறல்கள். அல்லது வகுப்பறைக்குள் அவர் பிரம்பைக் கொண்டு மேஜையில் அடித்து, அதனால் வராண்டாவில் நிற்கும் மாணவர்களின் சத்தம் நிற்கிறதா? அப்படி என்றால் கூக்குரல்கள் அதுவரை சந்தோஷமாக ஒலித்த சத்தங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு ஏன் யோசிக்க வேண்டும் என்று கேட்டால், ஒட்டுமொத்தமாக தொகுத்து வாசிக்கும்போது இது மிகவும் மகிழ்ச்சியான கவிதையாகவே இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையாக வரி வரியாகப் பிரித்து படிக்கும்போதுதான் இது போன்ற முரண்பொருள் புலப்படுகிறது.

To decipher what Tolstoy wanted to say, the translator has to devise an interpretation of Tolstoy’s narrative voice in “Anna Karenina” என்கிறது ஒரு NYT கட்டுரை . ஒன்று, நாம் முதல் பத்தியில் உள்ள கள்ளத்தனம் என்பதைத் தொடர்ந்து கூக்குரல்கள் என்று வருவதால் இது மழையின் அழகை ரசிக்கும் கவிதை மட்டுமல்ல, வகுப்பறைக்குள் அடைந்து கிடக்கும், ஆசிரியர்களுக்கு பயப்படும் மாணவர்களையும் பற்றிய கவிதை என்று புரிந்து கொண்டால், மழை பெய்வதைப் பார்க்கவும் அதில் நனையவும் வகுப்பறையை விட்டு வெளியே வரும் மாணவர்களை வராண்டாவில் பிரம்பால் அடித்து ஆசிரியர் உள்ளே போகச் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போது கூக்குரல்கள் அவலக் குரல்கள் என்று அர்த்தப்படும். அப்படியில்லாமல், கள்ளத்தனம் என்பது பிஞ்சுகளைச் செல்லம் கொஞ்சுவது என்று புரிந்து கொண்டால், வராண்டாவில் மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆசிரியர் மேஜையை பிரம்பால் அடிக்கிறார் அல்லது காற்றில் பிரம்பைச் சுழற்றிக் கொண்டு வருகிறார், அதுவரைக்கும் சந்தோஷமாக சத்தம் போட்டுக் கொண்டிற்கும் மாணவர்கள் இப்போது அடங்குகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட இரண்டு அர்த்தங்கள் எப்படி இருந்தாலும், முதல் பத்தியில் பிஞ்சுகள் அறைக்குள் இருக்கிறார்கள், கைகால்களை நனைத்துக் கொள்கிறார்கள் இப்போது இன்னும் கொஞ்சம் வெளியே, வராண்டாவுக்கு வந்து விட்டார்கள் என்பது தெரிகிறது. அதற்கு அடுத்தபடியாக விடலைகள்.

கவிதையில் பாழ் கழிவறை என்று வருகிறது, அவசியம்தானா? எதுகை மோனையாக எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அல்லது பாழடைந்த இடங்கள் குற்றச்செயல்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் பள்ளியின் பாழ் கழிவறையில் சீட்டாடிக்கொண்டு பதுங்கியிருக்கும் விடலை மாணவர்கள் சிலர் என்று இருக்கலாம். இவர்கள், மழை பெய்வதைப் பார்த்ததும் வெளியே வருகிறார்கள் – கொடிமரத் திடலில் நன்றாக நனைந்து ஆடுகிறார்கள். அவர்கள் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாய் மறைத்து வைத்திருக்கும் சீட்டுக் கட்டுகள் அவர்களுடைய ரகசியப் பைகளில் இருந்து பிதுங்கி விழுகின்றன.

இதெல்லாம் எப்படியானாலும் முதலில் மாணவர்கள் அறையில் இருந்தார்கள், கள்ளத்தனமாய் ரசித்தார்கள். அடுத்து வராந்தாவுக்கு வந்தார்கள், அடி வாங்கி அழுதார்கள் அல்லது மிரட்டலுக்கு பயந்தார்கள். இப்போது துணிச்சலாக வெளியே வந்து மழையில் ஆடுவது மட்டுமல்ல, அவர்களின் திருட்டு புத்தியும் வெளிப்பட்டு விடுகிறது – பதிவர் மொழியில் சொன்னால், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

அடுத்து- “மெலிந்து சிரித்து பார்வை மாற்றாது நோக்கும்/ மழலையரின் கலவர ஆர்வம்.”

-இதோ இங்கே சில பூனைக்குட்டிகள். கள்ளம் கபடமில்லாத மழலைகள்தான், ஆனால் இந்தச் சீட்டுக்கட்டு விடலைகளுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு தூரம்? அச்சம் அணை போடுமளவே கலவர உணர்வு, அச்சம் நீங்கினால் ஆர்வம் இவர்களை கொடிக்கம்பத்துக்குக் கொண்டு சென்று விடும்.

எதிர்பாராத குறுமழைக்கு
யாரோ தவறவிட்ட சரித்திர நூல்
மண்பட்டு நனைகிறது
மரத்தடியில் கவனிப்பாரற்று.

-இறுதியில் ஒரு காட்சி. யாராலோ தவறவிடப்பட்ட சரித்திரப் புத்தகம் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது- இது எப்போது தவறவிடப்பட்டது? ஏன், எப்போது கைக்கொள்ளப்பட்டது என்றும்கூட கேட்கலாம். இங்கு கல்வியைச் சரித்திர நூல் பிரதிநிதிப்படுத்துகிறது- சரித்திரம் என்பது இறந்த காலம் (வாழும் வரலாறு என்றும் உண்டு, ஆனால் இந்தக் கவிதையின் கான்டக்ஸ்ட் அந்த மாதிரி அர்த்தப்படுவதில்லை), மழை நிகழ்காலம், எதிர்பாராதது, அனைத்தையும் நனைப்பது, கல்வி தொகுக்கப்பட்டது, நாலு சுவர்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் நெறிப்பிரதி. அறைக்கு வெளியே பெய்யும் மழை அது அளிக்கும் களிப்பால் அமைப்புக்கு வெளியே வரச் சொல்லும் அழைப்பு. மேலும், சரித்திர நூல் மண்பட்டு நனைவதில் ஒரு கவித்துவம் இருக்கிறது- மண்ணோடு பிறந்தது மண்மூடி மறைந்ததம்மா.. என்று பாடினால் அதில் ஒரு நியாயம்கூட இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கவிதையில் ஓர் உணர்வு முரண்பாடு உள்ளது. இது மாணவர்களுக்கும் மழைக்கும் ஆதரவான கவிதையாக வெளிப்பார்வையில் தெரிகிறது என்றாலும் இதன் உள்ளடக்கம் ஒரு அடக்குமுறையைக் கண்டிக்காமல் சித்தரிக்கிறது. ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும், அடக்குமுறை அது இது என்று எந்த கோஷமும் இல்லாமல் மழைநாளின் களிப்பைக் கொண்டாடவே செய்கிறது.

oOo

கொண்டாட்டம் களியாட்டமாய் மாறாமல் எப்போது கேளிக்கையாய் நின்று விடுகிறது? பார்வையாளர்கள் பங்கேற்க முடியாத தொலைவில் கடைசி வரை நின்று விலகும்போது கொண்டாட்டத்துக்கு உரிய உருமாற்றம் நிகழ்வதில்லை, யார் யார் எங்கிருந்தார்களோ அங்கேயே இருந்து பிரிகிறார்கள், அப்போதிருந்த நிகழ் கணத்தின் சாட்சிகளாய் ஒரு சில தடயங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன- இந்தக் கவிதையில் சரித்திரப் புத்தகம், மற்றொரு கவிதையில்  குழிபறித்துக் கிடக்கும் தெரு. சிவசக்தி சரவணன் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த இரு கவிதைகளிலும் கடக்கப்படாத தொலைவைப் பார்க்க முடிகிறது.

“நான் உண்மையில் ஓரளவு ஞாபகம் இருந்த தேவதச்சனின் ஒரு கவிதையை மொழிபெயர்க்க விரும்பி, அதை எடுத்துப் பார்த்தபோது அதில் குறிப்பாக அதன் கடைசி வரிகளை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் இருந்தது. சரி, வேறு ஏதாவது எளிமையாக இருக்கிறதா என்று சில புத்தகங்களைப் புரட்டியபோதுதான் அமலன் ஸ்டான்லியின் மக்கள் கூடுமிடம் என்று துவங்கும் கவிதையும் இன்னொன்றும் அகப்பட்டன,” என்று எழுதுகிறார் சரவணன். எந்த திட்டமிடலும் இல்லாத தன்விருப்பத் தேர்வுகளிலும் ஒருமை இனங்காணப்படக்கூடும் என்பதற்கான உதாரணங்கள் இந்தக் கவிதைகள். உள்ளடக்கம் ஒரு சந்தோஷ நிகழ்வு, ஆனால் விவரிக்கப்படும் பின்னணியில் ஒரு ஏமாற்றம் நிழலாடுகிறது, களிப்பைச் சித்தரிக்கும்போதே உள்ளடங்கி நிற்கும் தடுமாற்றங்களையும் இந்தக் கவிதைகள் நிகழ்த்துகின்றன.

‘”…but paging back through the novel, I realized that I never had to worry about coming upon some disturbing sensibility, original metaphor, syntactical oddity, evidence of an intricate pattern, mysterious allusion, or alien setting. No, The Nest is formed from familiar twigs to hold in fledgling readers who cheep for their next helping of plot from the pre-digesting mother/author,” என்று ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. ஒரு இலக்கியப் படைப்பில் நாம் எதிர்பார்க்கக்கூடியவை எவை என்பதில் சிலவற்றை இது வசதியாக பட்டியலிட்டுத் தருகிறது- ஒரு உறுத்தலைத் தோற்றுவிக்கும் நுண்ணுணர்வு (disturbing sensibility), புதிய படிமங்கள் (original metaphor), தனித்துவம் கொண்ட மொழி (syntactical odditity). நுட்பமான கட்டமைப்பு (intricate pattern), புதிர்த்தன்மை கொண்ட சுட்டல்கள் (Mysterious allusion), அந்நிய களம் (alien setting). வெ. அமலன் ஸ்டான்லியின் இவ்விரு கவிதைகளும் ஒரு டிஸ்டர்பிங் சென்சிபிலிட்டியை உணர இடம் கொடுக்கின்றன என்று நினைக்கிறேன்.

அண்மைய பதாகை இதழ்களில் நகுல் வசன் ந. ஜெயபாஸ்கரன் கவிதைகளையும் இப்போது சரவணன் வெ. அமலன் ஸ்டான்லி கவிதைகளையும் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது நம் வாசிப்பைச் சிறிதளவேனும் விரிவுபடுத்துகிறது.

  • ஜெயபாஸ்கரன் கவிதைகள்-

இந்தக் கணம்
ஐந்தேகால் ரூபாய்க்கு

  • வெ. அமலன் ஸ்டான்லி கவிதைகள்-

மக்கள் கூடுமிடம் 
கைகால்களை நீட்டி