எழுத்து

கவியின் கண்- தாய்மை

தாய்மை
– அன்னா ஸ்விர்
 
உயிரை நான் பிரசவித்தேன்..
அது என் குடல்களை விட்டு வெளியேறி
என்னை உயிர்ப்பலி கேட்கிறது-
ஓர் அஸ்தெக் தெய்வத்தைப் போல்.

(more…)

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது…

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது

”உழவாரக்குருவிகளின் கட்டிடக்கலைத் திறமையை உங்களுக்குத் தெளிவாக விளக்க, முதலில் அதனுடைய குறைபாடுகளைச் சொல்லிவிடுகிறேன். பறக்கும் பூச்சிகளைப் படிப்பதற்கு ஏதுவாக சிறிய அலகு கொண்டவை அவை. அதனுடைய அகலமான வாய், பறக்கும் போது இரையைப் பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. பூச்சிகளை நோக்கி அது பாயும்போது, வெகு சில பூச்சிகள் மட்டுமே தப்ப முடியும். உழவாரக் குருவி மிகச் சிறியதாக இருப்பதால், அதனால் அதிக எடையைத் தூக்க முடியாது. அதன் கூடு, வைக்கோல், சற்றே பெரிய ஊசியைப் போன்ற தடிமனுள்ள சுள்ளிகளைப் போன்ற இலகுவான பொருட்களால் கட்டப்பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

“முதன் முறை நான் உழவாரக் குருவியைப் பார்த்தபோது, முடங்கிப் போய் உருக்குலைந்தது போல் இருந்தது. தங்களுடைய கால்கள் மோசமானவை என்று எல்லா உழவாரக் குருவிகளுக்குமே தெரியும். சமநிலைப் படுத்திக்கொள்ளக் கூட அந்தக் கால்கள் போதாது. அதனுடைய உடம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும், மீன்பிடி கொக்கிகள் போன்ற கால்கள், இடங்களைப் பற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. சின்னச் சிறிய கொக்கிகள் போன்ற அதன் கால் நகங்கள் வளைந்து கொடுக்காதவை. அதனுடைய உடம்புக்கும் பாதங்களுக்கும் இடையே போதுமான நீளத்தில் கால்கள் இல்லை. இதனால், நீண்ட கால்கள் மற்ற பறவைகளுக்குத் தரும் குதிக்கும் திறன் உழவாரக் குருவிகளுக்கு இல்லை. இந்தக் குறைபாடு மற்றொரு சாதகத்தால் அடிபட்டுப் போகிறது. அவற்றால், கற்களால் அமைக்கப்பட்ட வேலிகளிலும், பளிங்கு இறவானங்களிலும், வீடுகளில் பளிங்குக் கல்லில் கூரைக்குக் கீழ் செதுக்கப்பட்ட அலங்காரங்களிலும், மற்ற எந்த பறவையைக் காட்டிலும் ஒட்டிக் கொள்ள முடியும். என் நண்பனான உழவாரக் குருவி, பளபளப்பான சுவர்களில் கூட ஏதோ சொறசொறப்பான மேற்பரப்ப போல தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (more…)

ஆடம்ஸ் – ஜார்ஜ் சாண்டர்ஸ்

என்னால் ஆடம்ஸை எப்போதும் சகித்துக் கொள்ள முடிந்ததே கிடையாது. ஒரு நாள் பார்த்தால் அவன் என் வீட்டு கிச்சனில் நின்றுகொண்டிருக்கிறான், அண்டர்வேர் மட்டும் போட்டுக் கொண்டு. என் குழந்தைகள் இருக்கும் அறையைப் பார்த்து நின்று கொண்டிருக்கிறான்! எனவே, அவன் மண்டையின் பின்பக்கம் ஒரு போடு போட்டேன், அவன் சரிந்து விழுகிறான். எழுந்து நிற்கும்போது, மறுபடியும் ஒரு போடு போடுகிறேன், அவன் மீண்டும் சரிந்து விழுகிறான். மறுபடியும் நீ இப்படி செய்தால், கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன், எனக்கு என்ன சொல்வதென்றுகூட தெரியவில்லை, ங்கோத்தா என்கிற மாதிரி  நான் அதன்பின் அவனை மாடிப்படிக்கட்டுகளில் உருட்டி விடுகிறேன், வெளியே, முன்வசந்தப்பருவத்தின் சேற்றில் போய் விழுகிறான்.
 
கரேன் திரும்பி வந்ததும் நான் அவளைத் தனியே அழைத்துப் போகிறேன். நான் பேசிய விஷயம் இதுதான்: கதவைப் பூட்டி வை, அவன் வீட்டுக்கு வந்திருக்கும்போது, குழந்தைகள் அறையைவிட்டு வெளியே வரக் கூடாது.

(more…)

மதுவற்றவனின் இரவுவிடுதி

சோழகக்கொண்டல் 

— கோப்பைகளின் கதை —

என்னிடம் மூன்று
காலி மதுக்கோப்பைகள் இருக்கின்றன

எப்போதுமே மதுவின் ஈரம் பட்டிராத
கருங்கல்லால் செய்த
காந்தியின் கோப்பை ஒன்று

நிரம்பி நிரம்பியே
நிறம் மங்கிப்போன
தங்கத்தால் ஆன என்
தந்தையின் கோப்பை ஒன்று

எப்பொழுதோ விழுந்து உலர்ந்த
மதுவின் கறையோடு இருக்கும்
மண்ணால் செய்த என்
சொந்தக் கோப்பை ஒன்று

என் லட்சியவாதத்தின் முதுகெலும்பில்
காந்தியின் கோப்பை இருப்பதை
யாரும் நம்புவதில்லை

தீராத வேட்கை சுழலும் இரத்தத்தில்
ஒரு தங்கக்கோப்பை
காலியாக இருக்கும் என்பதை
என் தந்தையும் நம்புவதில்லை

மது கரைபுரண்டோடும்
மணல்வெளியில் எனது
மண்கோப்பை பத்திரமாய் இருக்கிறதென்பதை
என்னாலும் நம்பமுடிவதில்லை.

— இலட்சியவாதப் பூனை —

கோடைத் தொடங்குகிறது
குளிர்மதுப் புட்டிகள் குவிகின்றன
‘வாப்பு’ வை வரவேற்று
கோப்பைகள் நிறைகின்றன

நனையாத கோப்பைகள் கொண்டதால்
இந்தியனுக்கும் அன்னியனாய் நான்
வீதிகள்தோறும் உலரும் கோப்பைகள்
விடுதிகள் தேடி உருள்கின்றன வாரக்கடைசியில்

மூன்று கோப்பைகளை
முதுகின்மேல் தாங்கியபடி
கண்களைக் கட்டிக்கொண்டு
கம்பிமேல் நடக்கும் பூனைபோல் இருக்கிறேன்
என்று நண்பன் வந்து சொல்லிவிட்டுப் போனான்

நீ பழிக்கும் இந்த கடலின் மீது
மிதப்பதற்காகவே செய்யப்பட்டது
நீச்சலுக்கு பயந்து நீ நிற்கும்
அந்த இலட்சியவாதப் படகு

கடலின் சுழியும்
கவிழ்க்கும் காற்றும்
உறையும் குளிரும் உணராமல்
ஒருபோதும் அடைய முடியாது
கரைசேரும் உத்தியை உறுதியை.
என்றான்.

நான் குதிக்க விரும்பாத
கடலின் குளிர் சுழன்றடிக்கிறது
என் கோப்பைகள் இருக்கும் அலமாரியில்.

கதவுகளை அறைந்து சாத்திவிட்டு நடக்கிறேன்
அவனோடு இரவு விடுதிக்கு.

— இரவு விடுதி —

இரவின் திரையில்
எழுந்து நெளிகின்றன
நினைவழிக்கும் பாம்புகள்

தலைதொங்கி தவழும் மழலையென
நிறைந்து சரிகின்றன கோப்பைகள்
விஷமேறிய நாக்குகளில்
குழைந்து உடைகின்றன மொழிகள்

வீதியில் எங்கும் செயலற்று கிடக்கும் குளிர்
எனக்கு மட்டுமே எஞ்சி ஏறுகிறது
விடுதிகள்தோறும் காவல்புரியும் துவாரபாலகர்களிடம்
யாசித்து வரிசையில் நிற்கின்றன
இன்னும் இடமிருக்கும் கோப்பைகள்

நியாயத்தீர்ப்பு கிட்டிவிட்டது
நீந்திப்பாய்கிறோம் இருளுக்குள்
இடி இடியெனும் இசையில்
நெடிதுளைக்கும் புகையில்
குடிகுடியென கூவியழைக்கிறது
ஒரு விஷத்தீ வெடித்தெரியும் யாகம்

நான் அஞ்சியஞ்சி கால்நனைக்கும் கடலில்
தாவிவிழுந்து நீந்துகிறான் நண்பன்
நடன அரங்கில் நடப்பதைப்போல் அவமானமிது என்று
பிடித்துத் தள்ளுகிறான் பின்னாலிருந்து அவனே

உடைகள் தளர்கின்றன
உன்மத்தம் கொள்கின்றன கண்கள்
உலர்ந்து வலிக்கிறது நாக்கு
மோதி மீள்கின்றன மென்மார்புகள்
இழுத்து இடைகோர்க்கும் கைகள்
பிண்ணிப் பின்வாங்கும் கால்கள்

நான் வலிந்து நீந்தினாலும்
வழுக்கி உள்வாங்குகிறது கடல்
என்னைவிட்டு

உலர்ந்த கோப்பை இதில்
ஒருபோதும் நீந்த முடியாது
என்று தெரிந்தபின்
வெளியேறி நடக்கிறேன்
விடுதியைவிட்டு.

ஒளிப்பட உதவி- etsy.com

நீரடி

காஸ்மிக் தூசி –

water supply

நீறேற்றும் குழாயொன்று
நீண்டு செல்கிறது
பீடத்தின் மேல்

ஒருவீட்டின் மூலையை
இடவலமாய் மாற்றிச்சென்று
தன் தடத்தில்
அசையாமல் நின்றபின்

விருட்டென
ஏறிச்செல்கிறது
மேல்நோக்கி.

சுவரோடு ஒட்டிநின்று
இரட்டித்து
மீண்டும் முறுக்கித் திரும்பி
நிறுத்தத்திற்கு வருகிறது
திடீரென.

எம்மாதிரியான
சூழலில் இருக்கிறோம்
என்ற அறிதல் இல்லாமல்
கழுத்தில்லா எலிபோல
சாவியற்று நிற்கும்
பித்தளையின்
திறப்பு ஒன்று

நெடுந்தூர உறுதியை
கொண்டுவந்து சேர்க்கிறது
முக்கியமான தொரு
முடிவுக்கு

வாழ்நாள் முழுதையும்
வறண்டு போன
நீரடியில்
கழிக்க வேண்டி.

***

(அருண் கொலாட்கர் எழுதிய Water Supply என்ற கவிதையின் தமிழாக்கம்)