எழுத்து

அகத்துக்கு நெருக்கமான வடிவம் – டோர்தா நோர்ஸ்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் டேனிஷ் சகா ஒருவர், நான் நல்ல சிறுகதை எழுத்தாளராக வருவேன் என்று தான் நினைப்பதாகச் சொன்னபோது, அதை மறுத்து தலையசைத்தேன்- அதெல்லாம் இல்லை. ஆனால் அவர் தான் சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார். நான் பேசும் விதத்தில் ஒரு துல்லியம் இருக்கிறது, ஆணித்தரமாகப் பேசுகிறேன், இவை சிறுகதை வடிவத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடும். நான் திரும்பவும் சொன்னேன்: அதெல்லாம் இல்லை.
 
அச்சமும் அனுபவமின்மையும்தான் என் மறுப்புக்கான காரணங்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எழுத்துத் திறமை போதாது என்று அஞ்சினேன், எல்லாவற்றையும்விட சிறுகதை வடிவம்தான் மிகக் கடினமானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன்? சிறுகதையில் பிழை செய்ய இடமில்லை. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்ற விஷயத்தில் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாக்கியமும் பாத்திரப்படைப்புக்கு உதவக்கூடிய, ஒரு கிராமத்தைக் கொளுத்தக்கூடிய, ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்- இதை எல்லாம் சிரமம் தெரியாத வகையில் செய்ய வேண்டும். துல்லியமாய் எழுதக்கூடிய திறமை வாய்க்கப்பெற்ற ஒரு சில எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது, இதில் தோற்றுப் போவது குறித்து எனக்கு அச்சம் இருந்தது.

(more…)

“இன்று எழுதப்படுவது இலக்கியம் அல்ல, பொழுதுபோக்கு மட்டும்தான் இருக்கிறது”” – மரியோ வர்காஸ் லோசா நேர்முகம் – டிம் மார்டின்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பெருவிய எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா தன் 78வது வயதில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். நடிகர் லோசா? “இல்லை, இல்லை, இல்லை”, என்று சந்தோஷமாகச் சிரிக்கிறார் அவர். நைட்ஸ்பிரிட்ஜில் வாடகைக்கு எடுத்துள்ள அபார்ட்மெண்டில் உள்ள சோபாவில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார் லோசா. “எனது நடிப்புத் தொழில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் என்னவொரு அருமையான, செறிவான அனுபவம்- வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு பயந்ததே கிடையாது,” என்று சிரிக்கிறார்.
 
அவரது சிரிப்புதான் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது: ஆனந்தம் நிறைந்த, அடக்க மாட்டாத, அறையை நிறைக்கும் ஓசை, மூட்டம் போட்டிருந்த வசந்த கால மதியத்தில் அவரைச் சந்தித்து பல நாட்கள் சென்றபின் இந்த நேர்முகத்தின் பதிவைக் கேட்கும்போது அடக்கமாட்டாமல் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். 

(more…)

கலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள்

கார்டியன் இதழில் முன்னோடிச் சிறுகதைகள் குறித்து ஒரு தொடர் வெளியிடுகிறார்கள். அந்த வரிசையில் வர்லாம்  சிறுகதைகள் குறித்து கிரிஸ் பவர் எழுதிய பகுதி இது.
“நான் இலக்கியத்தை வெறுக்கிறேன்,” என்று 1965ஆம் ஆண்டு கடிதம் ஒன்றில் எழுதினார் வர்லாம் ஷாலமோவ். “நான் என் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதில்லை; நான் சிறுகதைகளும் எழுதுவதில்லை. நான் சிறுகதை எழுதுவதை, இலக்கியமாய் இருக்கக்கூடியதை எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்”. ஷாலமோவ்வின் தயக்கங்கள் இவ்வாறு இருப்பினும், கொலிமா கதைகள் (Kolyma Tales) என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு, குலாக் அனுபவத்தில் உருவான மிகச் சிறந்த எழுத்துகளில் சிலவற்றைக் கொண்டிருக்கிறது.

(more…)

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 3

பீட்டர் பொங்கல்

(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய  Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் | 1 | 2 |

இத்தனை ஆண்டுகாலமாக பராக்கு பார்ப்பவர் என்று பம்பாயில் அருண் கொலாட்கர் ஒருவர்தான் இருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவர் கால கோடாவை நமக்காகக் கவிதையாக்கினார். அதன் கட்டிடங்கள், தெருக்கள், மக்கள், ரெஸ்டாரண்ட்டுகள், கலைக்கூடங்கள், தெரு நாய்கள், பூனைகள், காகங்களை மறக்க முடியாத உயிர்ப்புடன் சித்தரித்தார். மேப்ஸ் பார் எ மார்டல் மூனின் ஆச்சரியங்களில் ஒன்று, ஜுஸ்ஸாவாலாவில் பம்பாய் இன்னொரு சோம்பேறியைப பெற்றிருக்கிறது என்பதுதான், இந்நகரத்தின் தெருக்கள் அளிக்கக்கூடியது எதுவாயிருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளக்கூடிய இன்னொருத்தர் இங்கு இருந்திருக்கிறார். சில சமயம், மழைக்காலப் பருவம் போன்றவொன்றில், அது தரக்கூடிய அனைத்தும் மகிழ்விப்பதாக இருக்காது. ஜுஸ்ஸாவாலாவின் பராக்கு பார்வை கொலாட்கரின் பார்வையைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது; மேலும், இங்கே உள்ளது போல், அவரது ஊடகமான உரைநடையும், மாறுபட்ட ஒன்றே. இந்த இரண்டும்- பராக்கு பார்வையும் ஊடகமும், ஒன்றோடொன்று தொடர்புடையவை. (more…)

முகங்கள்

சிகந்தர்வாசி 

அந்த முகம் என் முன் தெரிகிறது,
அதை வருட கை நீட்டும்பொழுது மறைகிறது.
வேறொரு முகம் மெதுவாகத் தோன்ற,
நான் அதை உற்றுப் பார்க்கிறேன்.
தெரிந்த முகம்தான், ஆனால் யாரென்று தெரியவில்லை.
கண்மூடி திறப்பதற்குள் மறைகிறது.
அடுத்து தோன்றும் முகம், பரிச்சயப்பட்ட முகம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறது.
நான் கை நீட்டி அதைத் தொடுகிறேன்.
எனக்குள் சந்தோஷம்.
லேசாகப் புன்னைகைக்கிறேன். (more…)