“அல்லது, இது அன்றாட பிரத்யட்ச உண்மையைக் காட்டிலும் செறிவார்ந்த ஒரு ஸ்டீவென்ஸிய ‘உன்னதத்தை’ நோக்கிய தேடலுக்கு இணையானதாய் இருக்கலாமல்லவா? “நாம் கட்டியெழுப்புவன, வளர்ப்பன, செய்வன, இவை எல்லாம் நாம் சுட்டுவன, நம்புவன அல்லது வேட்பனவுடன் ஒப்பிட்டால் மிகச் சிறியவை,” என்று வாலஸ் ஸ்டீவன்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார். “தட்பவெப்பம் பழகிப் போகிறது/ சூழ்நிலமும் மற்றவையும்;/ ஆன்மாவை சன்னதம் கொள்வதற்காகவே/ உன்னதம் கீழிறங்கி வருகிறது,/ ஆன்மாவும் வெட்டவெளியும், / வெறுமையான ஆன்மா/ சூன்யமான வெளியில்.” மகத்தான மனிதர்களின் பீடங்களில் பறவைகள் மலம் கழிக்குமானால், உன்னதமென்பது வேறெங்கிருந்தோதான் வந்தாக வேண்டும். உள்ளத்தின் எல்லையில் தன் கரம் நோக்கும் கற்பனைக்கே அது சாத்தியமல்லவா? நிஜமான இலையும் நிஜமான நிலவும்கூடப் போதாது, நுரைத்தெழும் முத்திரைகளையும் விட்டுச் சென்றாக வேண்டும், புலப்படும் ஒளியைப் பிரிந்தாக வேண்டும், பிம்பத்தின் மெய்ம்மை மட்டுமே கைப்பற்றத்தக்கது”.
Author: பதாகை
Yves Bonnefoy (1923–2016) – ஒரு கவிதை
(உரைநடை தமிழாக்கம் பீட்டர் பொங்கல்; கவிதை தமிழாக்கம் – நகுல்வசன்)

Image Credit: http://www.poetryfoundation.org
ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) இம்மாதத்தின் துவக்கத்தில் மறைந்தார். கடந்த அறுபது ஆண்டுகளின் மிக முக்கியமான, மிகுந்த தாக்கம் செலுத்திய பிரஞ்சு கவிஞர் என்று பலராலும் கருதப்பட்டவர் இவர். உலகோடு நாம் எவ்விதத்திலும் “பொய்க்கலப்பற்ற நெருக்கம்” (“authentic intimacy”) கொள்ளாத வகையில் மொழி நம்மை விலக்குகிறது என்று அவர் நம்பிய காரணத்தால், “நாம் அதைத் தொலைத்துவிட்டோம் என்பதை நினைவுறுத்தவும்“, “பிறரை, அல்லது மரங்களை, அல்லது எதையும் நாம் எதிர்கொள்வது சாத்தியப்படும் கணங்களின்” மதிப்பை நமக்கு நாமே மெய்ப்பித்துக் கொள்ளவும், நமக்கு கவிதை தேவைப்படுகிறது என்றார் அவர். எந்தவொரு அறிவு சார்ந்த குறுக்கீடாலும் களங்கப்படாத “le vrai lieu”- மெய்யுலகம்- ஒன்றை மீளுருவாக்கம் செய்வதற்கான அவரது முயற்சிகளும் மெய்ம்மையை நோக்கிய கோரிக்கையும் பன்ஃபுவாவின் கவிதைகளில் கண்ணுக்குத் தெரியாத இருப்பாய் சூழ்கின்றன. மெய்ம்மையின் இயல்புநிலையில் நிலவிய பூரணத்துவ எச்சங்கள் இன்னும் மண்ணில் எஞ்சியிருக்கின்றன, அவற்றைச் சேகரித்து மீண்டும் கட்டியெழுப்புவதே கவிஞனின் பணி. இருப்பை அடைய வேண்டுமெனில் அதன் இயல்புநிலையில் துலங்கும் குறியீட்டு ஆற்றலை விரயம் செய்யும் கருத்துநிலை சட்டகத்திலிருந்து மொழியை விடுவித்தாக வேண்டும். “சொல்லென்பது இனிமேலும் உள்ளதன் விவரணையுள் நுழைவதல்ல“.
கவிதை மட்டுமே, வடிவத்தில் கவனம் செலுத்தும்போது “சொற்களின் கருத்துநிலை பொருளை மௌனிப்பதால்” கிட்டத்தட்ட தெய்வீகமாயுள்ள தரிசன கணத்தை மீண்டும் உருவாக்கக்கூடியது. கவிதை மட்டுமே, “உலகின் நேரடி நோக்கு” அளிக்கக்கூடியது. La Seconde Simplicité (1961), என்ற தொகுப்பில் உள்ள “The Lights of Brindisi”, என்ற கவிதையில், கவிஞர் காண்கிறார் – மூடப்பட்ட தோட்டச் சுவற்றால் சேய்மைப்படுத்தப்பட்ட இலைகளுக்கு அப்பால், நிஜமற்ற புன்னகை கொண்ட “வெள்ளி’ நிலவுக்கு அப்பால்- தோன்றி மறையும் வேறொன்றின் முத்திரையை, கண்ணுற்ற கணமே அது காணாமற் போகிறது.
ப்ரின்டீசியின் விளக்குகள்
இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே,
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது;
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.
(ஆங்கில மொழிபெயர்ப்பு – அந்தோணி ருடால்ஃப், 1966)
நன்றி – Andrew McCulloch, Times Literary Supplement
934 தொடர்ச்சி
o0O0o
935
‘இப்படி மலைச்சுப் போய் உக்கார்றதுக்கு என்னாச்சு இப்ப, வர வேண்டிய இடத்துக்குதான வந்திருக்கம்’ என் முகக்குறிப்பைப் பார்த்த பவுடர் கைக்குட்டைக்காரர் முறுவலித்தார். சிரித்து முடித்ததும், அந்த தருணத்தின் அவநம்பிக்கையினை உணர்ந்தது போல அவர் முகம் வெறுமையாகியது. அந்த பிரும்மாண்ட வெண்மதிலின் இருப்பை மறுப்பது போல முகத்தை திருப்பி வந்த வழியை சற்றுப் பார்வையிட்டார். கழுத்தில் இருந்த கைக்குட்டையை எடுத்து நெற்றியை ஒற்றிக் கொண்டவர், சட்டென தளர்ந்து போய் கீழே அமர்ந்தார்.
சுருட்டுக்காரன் நீண்ட புகை விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“அவன் கெடக்கான் விடு. சுருட்டு கண்ட இடமே சொர்க்கம்னு உக்காந்திருப்பான். இப்ப என்ன விஷயம்னா” எனக்குப் பின்னால் வந்த புதியவர் ஆரம்பித்தார். “நாம இப்ப என்ன செய்யப் போறம்” என்றார்.
கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து பரபரவென தேய்த்துக் கொண்டார். குந்தி அமர்ந்திருந்தவர்கள் சற்று கால்களை மாற்றி அவரைத் திரும்பிப்பார்த்தனர். அந்த கவனயீப்பு அவருக்கு சற்று உற்சாகம் அளித்தது. முதுகை நிமிர்த்திக் கொண்டபடி பேசத் தொடங்கினார்.
“இந்த நெடிய பயணம், நாம் எதிர்கொண்ட தேர்வுகள், நம்முடைய தீர்மானங்கள், மனஉளைச்சல்கள் எல்லாவற்றுக்கும் இந்த மதில்தான் இறுதித் தீர்வு என்றால், இங்கே நாம் இருக்கவே கூடாது. புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய பயணத்தின் நோக்கம் என்ன? கிறக்கத்திலிருந்து நிமிருங்கள். கண்களைத் திறவுங்கள்” அவருடைய குரலில் சுதி கூடிக் கொண்டே போனது.
“நமக்கான வழி இங்கே எழுதி வைக்கப்படவில்லை என்பதால் அது இல்லை என்றாகி விடுமா” என்று உரக்கக் கேட்டார். சுற்றியிருந்தவர்களிடையே சற்று சலனம் உண்டானது. அச்சமும் மதிப்பும் அளிக்கும் அவருடையப் பேச்சிற்கு யார் முதல் எதிர்வினையாற்றுவது என்கிற தயக்கம், எல்லோரிடமும் அலை போல் பரவியது.
“நீங்கள்” கையை நீட்டி “உங்களைத்தான் 934′ என்று என் தோளைத் தொட்டதும் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்.
“நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?” என்றார். அவருடைய முகம் முழுவதும் நம்பிக்கை விரவியிருந்தது. திரும்பி சுருட்டுக்காரனைப் பார்த்தேன். கண்களை இடுக்கியபடி, மிதக்கும் புகைவளையங்களை சுவாரசியமாக பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.
“எழும்புங்கள். தயங்காதீர்கள். நமக்கான வாசலை நாமே கண்டெடுப்போம். மதிலை ஏறிச்சாடுவோம். நம் முயற்சிக்கான பலன் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்”
இப்பொழுது முழக்கமாகவே அவருடைய குரல் ஒலித்தது. சிறு நெருப்புப் பொறியென சுற்றியிருந்தவர்களை பற்றிக் கொண்டது. கைக்குட்டைக்கார் மீண்டும் எழுந்துவிட்டார். தோளில் போட்டிருந்த கைக்குட்டையை எடுத்து நெற்றியை சுற்றிக் கட்டிக் கொண்டு கைகைளை உயர்த்தி கூக்குரலிட்டார்.
“நமக்கான வாசல். நமக்கான வாசல்”. பற்றிக் கொண்ட நெருப்பென எல்லோரையும் அது சுற்றிக் கொண்டது. சிலர் மதிலைச் சுற்றிக் கொண்டு வழி இருக்குமென ஓட ஆரம்பித்தார்கள். சிலர் மதிலுக்கு கீழே ஏதேனும் பொந்துகள் இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்தார்கள். புதியவரின் முழக்கத்தால் உந்தப்பட்ட சிலர்ம திலின் மேல் ஏறிச்சாட முயற்சி செய்தனர். கைக்குட்டைக்காரரும் ஏதாவது வழி இருக்கிறதா என்று மதிலை உன்னிப்பாக பார்க்க ஆரம்பித்தார்.
சுருட்டுக்காரன் சுருட்டின் இறுதிப் பகுதியை ஆழமாக உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவனுடைய அசட்டையே எங்களை எல்லோரையும் இருப்புக் கொள்ளாமல் ஆக்கிவிட்டது. இந்த மதிலைத்தாண்டி ஏதாவது வழி இருக்கும் என நிச்சயம் நம்பினேன். இருந்தேயாக வேண்டும்.
அப்போதுதான் கைக்குட்டைக்காரர் அதைச் செய்தார்.
“இதோ இங்கே இருக்குப் பாருங்க வழி” என்றார் உரக்க. தன் தலையை முன்னால் சாய்த்துக் கொண்டு, ஓடிப்போய் பெரும் பாய்ச்சலென மதிலை நோக்கிப் பாய்ந்தார். ‘வழி’யென அவருடைய குரலைக் கேட்டதும்தான் தாமதம் , மடமடவென கூட்டத்தினர் பலரும் பாய ஆரம்பித்தனர் என்று சொல்லி முடிக்கும் முன்னர் நானும் பாய்ந்திருந்தேன்.
என் குனிந்த தலை மதிலை நெருங்கிய நொடியில் கண்ணோரத்தில் சுருட்டுக்காரன் புதியதொரு சுருட்டை எடுத்துப் பற்ற வைப்பது தெரிந்தது. பற்களால் சுருட்டைக் கடித்தபடி ‘935’ என்றான்.
o0O0o
936
கதவு பக்கம் வந்ததும் வரிசையில் பதட்டம் கூடியது. “இது இல்லை” என்று சிலர் விலகினர். “இது என்ன” என்று சிலர் எட்டிப் பாய்ந்து தேடினர்.
“ஒரு ரகசியம்” முன்னே சென்று கொண்டிருந்தவர், தன்னுடைய நடையை மெதுவாக்கி, இடைவெளியை குறைத்து, அருகில் வந்ததும், என் காதுக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒலியில் முணுமுணுத்தார். எதிரே இருண்டிருந்த பாதை இன்னமும் குறுகிக் கொண்டு வருவது அடர்ந்த குளிரால் தெரிந்தது. நாசியில் பவுடர் நெடி படர்வதை உணர்ந்து தலையைத் திருப்பி அவரை நோக்கினேன்.
“இந்த பாதை முடியவே முடியாது. எழுதி வச்சுக்கிடுங்க இந்த வழியெல்லாம் ரெம்ப பழக்கப்பட்டதாகத்தான் தெரியுது எனக்கு” கிசுகிசுப்பாக சொன்னார். “சுத்தி வளச்சு சுத்தி வளச்சு போயிட்டேத்தான் இருக்கும்”.
நீண்டு கிடந்திருந்த பாதையை மென் நடை மூலம் கடந்து சென்று கொண்டிருந்தோம்.
பனிபோர்த்திய வெளி போல் தோற்றமளிக்கும் இடத்தில் பல கிளைகளாக பாதை பிரிவது தெரிந்தது. தொலைவில் திரும்பும் பாதை ஒன்று. பசுமையாகவும் தடங்கள் ஏதும் இல்லாததொரு சாலை மற்றொன்று. பின்னிப் பிரிந்து செல்லும் பாதைகள் சில.
விரிந்து இறங்கும் சாலை முடிவில், கழுத்தைச் சுற்றி கைக்குட்டை கட்டிக் கொண்டிருந்தவர் தன் நடையை நிறுத்திவிட்டுச் சொன்னார். “இலக்கை தேடிச் செல்வதல்ல பயணம். இலக்கை உருவாக்கிக் கொள்வதுதான் பயணம்”.
உடன் வந்தவர் பலர் நின்றனர். கைக்குட்டைக்காரர் சுட்டிக் காட்டிய பெரும்பாறையில் இலக்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. “இதுதான் நம்முடைய இலக்கு. இதுவே நம்முடைய குறிக்கோள்” என்றார். அத்தனைக் கால அலுப்பிலும் அவர் முகம் புது பவுடர் மெருகோடு பளபளத்துக் கொண்டிருந்தது.
தன் கொடியை அங்கே நட்டவர், விரித்த கைகளுடன் விவரிக்கத் தொடங்கினார். “இந்த கொடியின் கீழ் நமது புதிய உலகம் சிறக்கும். நம்முடைய கனவுகள் எல்லாம் இங்கே ஈடேறப் போகிறது. இதுதான் நம் குறிக்கோள்” அவருடன் நின்றவர்கள் எல்லோரும் ஆர்ப்பரித்தனர்.
இப்படி ஓர் இலக்கை எதிர்பார்க்காததால் நம்பிக்கையில்லாமல் விலகிச்சென்றவர் கூட்டத்தோடு சென்றேன். சாதனை என்றால் அவ்வளவு சுலபத்தில் சித்தித்து விடுமா.
சுற்றி சுழன்று போய்க்கொண்டிருந்து முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருந்த பாதையின் நடுவே பலரும் தங்கள் இலக்கை கண்டடைந்து விட்டோமென பிரிந்து சென்றனர். அவரவர் கொடிக்கு என ஆங்காங்கே கூட்டமும் சேர்ந்து நின்றது. எதுவும் என்னுடைய தேடலை நிறுத்தவில்லை. நான் எதிர்பார்ப்பது இவற்றை எல்லாம் விட வேறான, தனித்துவமானதொன்று. அதை அடைய இன்னும் எவ்வளவு கடின பயணம் என்றாலும் மேற்கொள்ளத்தான் வேண்டும்.
தன்னந்தனியே அந்தப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த நிலையில் மொட்டைப் பாறை என அந்த இலக்கு முன்னே வந்து நின்றது. பாறையின் மேலே, சுருட்டுப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து
“நடக்க சக்தியில்லன்னா அப்படி ஓரமாப் போய் ஒக்காரு. இந்த இடத்துக்கு நம்பர் போடறேன்னு எதையாச்சு நட்டு வைக்காத போ’ என்றான் சிரித்தபடி. கையிலிருந்த கொடியை உடைத்துப் போட்டுவிட்டு ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டேன்.
o0O0o
.
.
.
1000
பிறிதொரு நாளில் எங்கோ ஒருவரிடம் என் தேடலைப் பற்றி விவரிக்க நேர்ந்தால், அப்பொழுது என்னுடைய தெரிவுகளின் தனித்துவத்தைப் பற்றி விரிவாகச் சொல்வேன். அதன் வெற்றிகளையும், மேன்மைகளையும் நீள உரைப்பேன்.
நான் விட்டு விலகிய பாதைகளின் குளிர் மரநிழல்களையும், காற்றின் சரசரப்பையும் நினைவில் சேமித்து வைத்திருக்கிறேன். அவைகளை எதிர்கொண்ட வேளைகளில், நிராகரிக்கும் எண்ணம் துளியும் இருந்தததில்லை எனக்கு. முடிந்த அளவு என் முடிவுகளை தாமதப்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறேன். நான் பயணிக்காத பாதைகளும், பயணித்தவை அளவுக்கு தனித்துவமானவையே.
இதைத்தான், இந்த பயணத்தைத்தான், இப்படித்தான், இதன் ஊடுபாவுகளுடன், இத்தனை உச்சங்களுடன், வழுக்களுடன் உருவாக்கி வந்திருக்கிறேன்.
இனி என்னால் திரும்பிப் போகவே முடியாது என்ற நிலையில் பல திருப்பங்களை கடந்து, அந்தப் பெருவெளியில் வந்து நின்றேன்.
சுற்றி அத்தனையும் புதிய பாதைகளாக தெரிந்தன. யாரும் பயணிக்காத, புதிய, மெருகேற்றப்பட்ட, நிச்சலனமான பாதைகள்.
எல்லாத் தெரிவுகளும் அங்குதான் வந்து முட்டி நின்றன. அங்கிருந்துதான் எல்லா தெரிவுகளும் தொடங்கிச் சென்றன.
பாதையில் மையத்தில் அமர்ந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவன், திரும்பிப் பார்த்து, உரக்க சிரித்தபடி சொன்னான்.
“ஆயிரம் இருக்கு வழி இங்க. அத்தனையிலும் பயணிச்சிட்டு வந்திடனும் உனக்கு…. இல்ல?’
நானும் அவன் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன். புதிய சுருட்டு ஒன்றை எடுத்து நீட்டினான் என்னிடம்.
o0O0o
லிட்மஸ்
நசி
ஹரீஷ்
இரண்டு நாட்களாகவே தொந்தரவு செய்யத் துவங்கி விட்டாள் அவள். சென்ற முறை வந்தவள் போலில்லை. இவள் புதிது. அவளை விடவும் வேகமாக இருந்தாள்.அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தன.
உள்ளுக்குள் பரபரப்பு மிகுந்திருந்தாலும் வெளியில் ஒரு ஜோம்பியைப் போல் அமர்ந்திருந்தேன். “ஏன் இப்படியே உக்காந்திருக்கே? கிளம்பேன் . வெளியில மழை பெய்யுது என்றாள் அவள்.
வாசலில் அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். “என்னவோ தெரில. நல்லாததான் இருந்தான். இப்ப கொஞ்ச நாளாததான். விட்டத்தப் பாத்துக்கிட்டு கெடக்கான். திடீர்னு சிரிக்கிறான். என்னான்னு கேட்டா கோவப்பட்றான். எப்பப்பாரு ஒரு வெள்ளைப் பேப்பர எடுத்து வெச்சுகிட்டு வெறிச்சு வெறிச்சுப் பாக்கறான். ரூம் கதவ அறஞ்சு சாத்திக்கிறான்” என்று.
எதிர்க்குரல் கிசுகிசுப்பாகப் பேசியது. விஷயம் சரியாகக் காதில் விழவில்லை. என்ன சொல்லியிருக்கக்கூடும், மேலத்தெரு தர்காவுக்குக் கூட்டிச் சென்று சாகிப் மஸ்தானிடம் மந்திரிக்கச் சொல்லியிருக்கக்கூடும். மழைக்குத் திண்ணையில் ஒதுங்கியவர்களுக்கெல்லாம் வம்புக் கதை கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது இந்த வீட்டில்.
அலமாரியைத் திறந்து இருப்பதிலேயே பழைய சட்டையாய்ப் பார்த்து எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தேன். மழை நசநசத்துக் கொண்டிருந்தது. அம்மா “ எங்க கண்ணு போற” என்றாள். அதற்குள் இவள் “ அங்கென்ன பதில் சொல்லிகிட்டு? வா போலாம். க்விக்” என்றாள். பாவம் அம்மா. எப்போதும் என்னை டா போட்டுக்கூட அழைத்ததில்லை. அவளைப் பரிதாபகரமாய்ப் பார்த்து விட்டு வெளியேறினேன். “சந்தேகமே இல்ல. அதான். நீங்க நான் சொன்னத முதல்ல செய்ங்க” என்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த எதிர்க்குரல் முதுகின் பின் தேய்ந்து மறைந்தது.
இவள் யட்சி. போட்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். அங்கும் இங்கும் கடற்காற்றில் தள்ளாடும் தோணி போல் மனசும் மூளையும் வெவ்வேறு திசைகளில் பிய்த்துக் கொண்டிருந்தன. சொற்கள் அகப்படவில்லை. எவ்வளவு வேகமாக நடந்தேன் என்பது சட்டென்று நின்று சுற்றிலும் பார்த்தபின்தான் தெரிந்தது. வீட்டிலிருந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் வரை வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட நாலரை கிலோமீட்டர். அவளுடன் பேசிக் கொண்டே வந்ததில் தெரியவில்லை. வரும் வழியில் ரயில் பாதையை வேறு கடந்து வந்திருக்கிறேன் எதுவுமே கவனத்தில் இல்லை.
சட்டை நனைந்திருந்தது. வேகமாக நடந்து வந்ததில் வியர்வையிலா அல்லது நச நசவெனத் தூறியபடியிருக்கும் மழையினாலா என்று தெரியவில்லை. மைதானத்தைப் பார்த்தேன். ஒருத்தரையும் காணோம். ஆங்காங்கே சிறு சேற்றுக் குட்டைகள் உருவாகிக் கிடந்தன. நட்டு வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான கோல் போஸ்ட் கம்பிகளிலிருந்தும் பூப்பந்துக்கான வலையமைக்கப்பட்டிருந்த கம்பிகளிலிருந்தும் இடைவிடாமல் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
காம்பவுண்டு சுவரின் மீது கைவைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவனை உள்ளே போ என நெட்டித் தள்ளினாள் யட்சி. சற்றே தள்ளியிருந்த வாயில் கேட்டைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. சுவற்றின் மேல் கால் வைத்து சரியாக எகிறும் தருணத்தில் சாலையில் தலை முதல் முழங்கால் வரை நெகிழிப்பை போர்த்தியிருந்த ஒருவர் என்னைப் பார்த்தபடியே கடந்து போனார். நெகிழியால் தலை மறைக்கப்பட்டிருந்ததால் அவர் வயதைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.
உள்ளே போலாம் என்றாள். அடுத்த நிமிஷம் குட்டைச் சுவர் எகிறி உள்ளே குதித்திருந்தேன். மூலை வேப்ப மரத்தடியை நோக்கி நடந்தேன். நேராகப் போகாமல் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் செய்வது போல் மைதானத்தை ஒரு சுற்று சுற்றி நடந்தேன்.
“இந்த சேத்துல கால் நுழைச்சா எப்படி இருக்கும் தெரியுமா. ஐ ஜஸ்ட் லவ் இட். நீயும் நடந்து தான் பாரேன்” என்றாள். கேட்கவில்லையென்றால் விட மாட்டாள். போன முறை வந்தவள் இவ்வளவு ஆதிக்கமில்லை. அவள் பூப்போல் மென்மையானவள். இவள் பயங்கர ராட்சசியாக இருக்கிறாள்.
ஆங்காங்கே உருவாகியிருந்த சேற்றுப் பொதிகளில் கால்களை உள்நுழைத்து அளையச் சொல்லிப் படுத்தினாள். அவள் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் சேற்றில் கால்களை உழல விட்டு நடந்தேன். வேப்ப மரத்தடியை அடைந்தபோது மழையின் வேகம் குறைந்திருந்தது. கால்கள் கரும்பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. மழை தரும் புத்துணர்ச்சியையும் மீறி உடல் மிகவும் சோர்ந்திருந்தது.
இது எப்போது வரை நீளுமென்று தெரியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விடுபட வேண்டும். சொற்களைத் தேடிக் கொண்டே இருந்தேன். எதைப் பார்த்தாலும் அதிலிருந்து ஏதேனும் சொற்கள் கிட்டக் கூடுமா என்று உற்றுப் பார்த்தபடி இருந்தேன்.
தேடலைக் கலைத்தாள். “ஹேய்.. இந்த மரத்தடியிலதானே நீ முதல் முதல்ல தமிழ் செக்ஸ் புக் படிச்சே? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்றாள். அவள் தொனியில் கிண்டலில்லை. பால்ய கால நினைவுகளை அசைபோட வாய்ப்பு கிடைத்த ஒரு வயசாளியின் குதூகலம் மட்டுமே தெரிந்தது. தொடர்ந்தாள். “ புக் பேர் கூட ஞாபகம் இருக்கு. “பாப்பாத்தியின் காம லீலைகள்” கரெக்டா?” என்று சிரித்தாள்.
சிரிக்க முயன்று தோற்றேன். மண்டைக் குடைச்சல் பலமாக இருந்தது. கைகளின் நடுக்கமும் லேசாகத் துவங்கி விட்டிருந்தது. “உங்க சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளான மாதிரி ஒரு பீல். இல்ல?” என்றாள் காரணமேயின்றி திடீரென்று. அவள் சொன்னதும் எனக்கும் அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது. இடையே சொற்களைச் சேமித்து வைத்தபடியிருந்தேன்.
அவள் கேள்விக்கு ஆமா என்பது போல் தலையாட்டினேன். “அப்ப வா போலாம் “ என்றாள். திடுக்கிட்டேன். அவள் பேச்சை வேறு தட்ட முடியாது. எழுந்து நடப்பதே சிரமமாக இருந்தது. திரும்ப வீடு நோக்கி நடக்கும் போது ரயில்வே குவார்ட்டர்ஸ் மிகப் பெரும் அமைதியைப் போர்த்திக் கொண்டிருந்தது. மழைக்குப் பின்னான ரம்மியம் காற்றில் இல்லை. தனிமையின் ஓலம் நிறைந்திருந்தது. தனிமையின் ராட்சசம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிப்பது போலிருந்தது.
முடிந்தவரை சீக்கிரமாக அங்கிருந்து அகல முயன்று வேகமாக நடந்தேன். அந்தச் சாலையின் முனையில் இருக்கும் ரயில் நிலையமும் கோவிலும்கூட சூழலின் இறுக்கத்தை மாற்ற முடியவில்லை.
ஓரிரு வினாடிகள் நின்று ரயில் நிலைய முகப்பைப் பார்த்தேன். மனித சஞ்சாரம் ஏதுமில்லை. உள்ளே யாரும் இருக்கக்கூடும். ரயில் நிலைய முகப்புக் கட்டிடம் எந்த நேரமும் நிமிர்ந்து நின்று தன் உடல் மீது படர்ந்த ஈரத்தை உதறிக் கொள்ளக்கூடும் என்பது போல் ஒரு தோற்றம் மனசில் ஏற்பட்டது. அது அச்சமூட்டுவதாக இருந்தது.
மீண்டும் நடக்கத் துவங்கினேன். சாலை வழி செல்லாமல் ரயில் பாதையை ஒட்டியே நடக்கத் துவங்கினேன்.. மழை நீரில் கரைந்த மலத்தின் வாடை முகம் சுளிக்கச் செய்வதாய் இருந்தது. அவளும் முகம் சுளித்தாள்.
தொப்பலாக நனைந்து வீட்டுக்குள் நுழையும்போது முதுகின் பின் அம்மாவின் பார்வை துரத்துவதை உணர முடிந்தது. எதுவும் கேட்கவில்லை. உள்ளே சென்று ஒரே ஒரு சட்டையையும் வேட்டியையும் ஒரு பழைய பையில் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினேன். அறை வாசலுக்கு வந்தவன் மீண்டும் உள்ளே போய் ஒரு நெகிழிப் பையை எடுத்து ஓரிரு வெள்ளைக் காகிதங்களை எடுத்து கவனமாய் அதில் போட்டுக் கொண்டேன். உபயோகப்படும். பேனாவை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.
அறையை விட்டு வெளியே வரவும் இதை எதிர்பார்த்தேயிருந்த அம்மா பதற்றமாய் அருகில் வந்தாள். “ என்ன கண்ணு எங்க கெளம்பிட்ட” என்றாள்.மெல்லப் புன்னகைத்தேன். “ஒண்ணுமில்லம்மா பயப்படாத. சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. திடீர்னு பாக்கணும்னு தோணிச்சு. அதான் போறேன். நாளைக்கி வந்துருவேன்” என்றேன்.
என்னைத் தனியாக அனுப்புவதில் அவளுக்கு நிறைய யோசனைகள் இருந்தன. என்ன செய்வது, போய்த்தானாக வேண்டும். ஏதோ கேட்க நினைத்தவள் கடைசி நொடியில் கேள்வியை மாற்றி “ இந்த மழையிலயா?” என்றாள். சிரித்தேன். அதற்கு மேல் ஏதும் பதில் கிடைக்காது என்று அவளுக்குத் தெரியும். இயலாமையுடன் “பத்திரமா போய்ட்டு வாப்பா” என்றாள்.
என் உளைச்சலை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென்று ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் புரிவது கஷ்டம். “சீக்கிரம். நேரமாச்சு” என்று இவள் வேறு உந்தித் தள்ளினாள். பேருந்து நிலையத்தை நடந்தே அடைந்தேன். எல்லாப் பேருந்துகளும் கழுவி விடப்பட்டவை போல் சுத்தமாக இருந்தன. சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்து பயணச் சீட்டை வாங்கிக் கொண்டேன். ஜன்னலை முழுக்கத் திறந்து விட்டுக் கொண்டேன்.
அரசுப் பேருந்தாதலால் கூட்டமில்லை. கூட்டமாயிருந்திருந்தால் ஜன்னலை இப்படி முழுக்கத் திறந்து விட்டுக்கொள்ள எதிர்ப்பி\ருந்திருக்கும். பேருந்தில் எந்தக் காலத்திலோ பொருத்தப்பட்ட ஆடியோ செட் இயங்காமல் போய் வயர்கள் அறுந்து தொங்கும் நிலையிலிருந்தது.
பேருந்து கிளம்பவும் சிலர் ஓடி வந்து ஏறினார்கள். அவர்கள் யாரும் என் அருகிலோ அதற்கருகிலிருக்கும் இருக்கையிலோ வந்து அமர்ந்து விடக்கூடாதென்று வேண்டிக் கொண்டேன். சற்று நேரமாய் இல்லாமலிருந்த மழை இப்போதுதான் மீண்டும் சிறு தூறல் தெளிக்கத் துவங்கியிருந்தது. ஜன்னல் திறப்பு தடைபடக்கூடாதென்றே அப்படி ஒர் வேண்டுதல். வழியெங்கும் மழை சிலுசிலுத்தபடியே வந்தது. ஆங்காங்கே சொற்ப கூட்டம் பேருந்தில் ஏறுவதும் பேருந்தை விட்டு இறங்குவதுமாய் இருந்தது. இவள் பேசிக்கொண்டே இருந்தாள். அதை கவனியாமல் இருக்க முடியாது. இருந்தும் அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மனசு லேசாக சமனப்படத் துவங்கியிருந்தது.
இந்த நிலைதான் வேண்டும். இன்னும் கொஞ்சம் .இன்னும் கொஞ்சம். முயற்சித்தபடியே இருந்தேன். அவள் குரல்கூட மெல்லத் தேய்ந்து ஒரு கட்டத்தில் மெலிதாய் ஒலிக்கத் துவங்கியிருந்தது. ஆனால் அவள் போகவில்லை. அவளின் இருப்பு சர்வ நிச்சயமாய் இருந்தது. என்ன, முன்பு போல் மூளையைப் பிடித்து உலுக்குவதாய் உளைச்சல் தருவதாய் இல்லை. மென்மையாய் இருந்தது.
நாமக்கல் வந்து இறங்கினேன். இரண்டு ஊர்களிலும் பெய்தது ஒரே மழைதான் என்றாலும் மழையில் நனைந்தபின் இரு ஊர்களும் முற்றிலும் வேறாக இருந்தன. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டேன் போல் தோன்றியது. சித்தப்பா வீட்டின் கதவைத் தட்டியதும் சித்திதான் வந்து திறந்தாள். மெல்லிய புன்னகையுடன். நெற்றி சுருக்கவில்லை. அம்மா போன் செய்திருப்பாள் என்று புரிந்தது.
“வா உக்காரு. எப்படி இருக்க?” என்றாள். அவஸ்தையாய்ச் சிரித்தேன். “சித்தப்பா இப்ப சாப்புட வர நேரம்தான். அவர் வர வரை காத்திருக்கறியா இல்ல இப்ப சாப்பிடறியா” என்றாள். அவள் கண்களில் தெரிந்தது சிறு பயமா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ”வரட்டும் “ என்றேன் ஒற்றை வார்த்தையில். “அதானே. அவரைப் பாக்கதான் இத்தனை தூரம் வந்தது. அவரைப் பாக்காம என்ன சாப்பாடு?” என்றாள் இடையில் இவள்.
உள்ளங்கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சித்தி குறுகுறுவெனப் பார்ப்பதைக் குனிந்திருந்தாலும் உணர முடிந்தது. அசூயையாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் சிரமமாக இருந்தது. சித்தப்பா வந்து விட்டார். வழக்கமான விசாரிப்புகளைப் பெரும் ஆயாசத்துடன் கடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரத்திலிருந்து அவரைப் பார்க்கவென்று வந்துவிட்டு அவர் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் தட்டில் போட்ட சோற்றை அளைந்து கொண்டிருப்பது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.
கை கழுவியவுடன் “கிளம்பறேன் சித்தப்பா. பசங்க வந்தா சொல்லுங்க” என்றேன். என்னப்பா அவசரம் என்றோ… இரேன் போகலாம் என்றோ சித்தப்பா ஏதும் சொல்லவில்லை. அம்மா என் நிலைமை பற்றி விவரித்திருக்கக் கூடும். மெலிதாய்த் தலையசைத்து “போய்ட்டு வாப்பா… ஒடம்பப் பாத்துக்க” என்றார். அவர் கண்கள் பச்சாதாபத்திலும் நம்பிக்கையின்மையிலும் நிரம்பியிருந்தன.
கிளம்பி விட்டேன். மழை முற்றாக நின்று விட்டிருந்தது. வெயில்கூட அடிக்கத் துவங்கியது. ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் கடந்து பெண்கள் கல்லூரி தாண்டி வேக வேகமாக நடந்தேன். கல்லூரியிலிருந்து பெண்கள் வெளி வரத்துவங்கியிருந்தனர். கல்லூரி முடியும் நேரமாகியிருக்க வேண்டும்.
கூட்டத்தை வேகமாய்க் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்து வரும்போதிருந்தது போலவே காலியான அரசுப் பேருந்தாய் பார்த்து ஏறி அமர்ந்தேன். ஜன்னல் வழி வெயில் ஊர்ந்து தேகமெங்கும் வழியத் துவங்கியிருந்தது. வண்டி கிளம்பியது. இவள் இடைவிடாமல் பேசியபடியே வந்தாள். பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.
ஜன்னல் வழியே விரையும் மரங்கள் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்க மிகச் சிறியவையாகத் தெரிந்தன. அவற்றை ஆள்காட்டி விரல் கொண்டு தொட முயன்றபடியே இருந்தேன். என் செய்கையைப் பார்த்து அவள் சிரித்தாள். சட்டென்று ஏதோ தோன்றியது. இதுதான் தருணம். நான் தயாராயிருப்பதாய் ஏதோ சொன்னது. ராசிபுரம் பிரிவருகே வரும் போது எழுந்து வண்டியின் கதவருகே சென்றேன்.
நடத்துனர் என்ன என்பது போல் பார்த்தார். கண்களால் கெஞ்சலாக “இறங்கணும் “ என்றேன். முறைத்தவர் விசிலை ஊதினார். பேருந்திலிருந்து என்னை உதிர்த்துக் கொண்டேன். மனம் நிச்சலனமாக இருந்தது. மண்டைக்குள் குடைச்சலும் உளைச்சலும் ஓய்ந்திருந்தது.
மெதுவாக நடந்தேன். நடக்கப் போவதை அறிந்தோ என்னவோ அவள் ஏதும் பேசாமலிருந்தாள். அந்த அமைதி எனக்குத் தேவையாயிருந்தது. சற்று தூரம் நடந்த பின் ஆளரவமற்ற சாலையோரம் ஒரு டீக்கடை தென்பட்டது. உள்ளே நுழைந்தேன். யாரையும் காணவில்லை. நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் கடந்தபின் வயதான பெரியவர் ஒருவர் கையில் பெரிய பாத்திரத்துடன் வந்தார்.” என்னா” என்றார். “டீ வேணும்” என்றேன்.
“இனிமேதான் பால் காச்சணும். லேட்டாவும்,” என்றார். பரவால்ல போடுங்க என்றபடி உடைந்திருந்த நாற்காலியில் அமர்ந்த என்னை வினோதமாகப் பார்த்தார். சுற்று முற்றும் பார்த்தேன். லாபம் என்று எழுதப்பட்டு ஓரங்கள் கிழிந்து போயிருந்த பிள்ளையார் படம் போட்ட காலண்டர் அட்டை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டேன்.
கவனமாய்ப் பைக்குள் கைவிட்டு நெகிழிக்குள் பொதிந்து வைத்திருந்த வெள்ளைக் காகிதங்களை எடுத்தேன். நடக்கப் போவதை அறிந்த அவள் பதறினாள். கண்ணீர் வரத் துவங்கி விட்டது அவளுக்கு. “ இதை நீ கண்டிப்பா செஞ்சாகணுமா. ப்ளீஸ் வேண்டாமே” என்றாள். வெற்றுக் கண்களுடன் அவளை ஏறிட்ட நான், “ வேற வழியில்ல” என்றேன். தெளிவாக இருந்தேன்.
கண்களை மூடி ஒரு முறை மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தேன். பின் கண்களைத் திறந்தேன். நடக்கப் போகும் விஷயத்தை ஏற்றுக் கொண்டவள் போல் எந்த விதமான உணர்ச்சிகளும் காட்டாமல் அவளிருந்தாள்.
“நசி” என்று தலைப்பிட்டேன். மெல்ல அவளை ஒவ்வொரு சொல்லாய் எழுதத் துவங்கினேன். அவள் பார்வை என் மேல் நிலைகுத்தியிருந்தது. எழுத எழுத எதிரிலிருந்தவள் மையில் மெல்லக் கரைந்து காகிதத்தில் பரவத் துவங்கினாள்.
