Author: பதாகை

ஒருவகைச் சிலுவை- காஸ்மிக் தூசி (அருண் கொலாட்கர்)

  காஸ்மிக் தூசி

கால்களுக்கிடையில்
வாலை நுழைத்து
தகடு வேய்ந்த உடலின் கீழ்
காலை வைத்து
பீடத்தில் அமர்ந்திருக்கும்
காளைக்கன்று –
கோயிலின் முற்றத்தில்.

கொம்பை வருடிக்கொடுத்து
திமிலை தட்டிக்கொடுத்து
புனித காளைக்கன்றையே
மிரள வைத்த
சித்திரவதைக் கருவியின்
விசித்திரத்தை ஆராய்ந்தால்

கிறீச்சிடும் மூட்டுகள்
கட்டி இழுக்கும் குறுக்குப் பட்டைகளாக
கற்பீடத்திலிருந்து மேலெழும் அது –
ஒரு வகைச் சிலுவை.
மனதுக்குள்
அதில் ஒருமுறை
அமர்ந்து பார்த்தால்

முட்களும்
கொக்கிகளும் இருப்பதால்தான்
அதன் இடத்தில் இருக்கிறது
குறுக்குப்பட்டையின் சேணம்
இன்னொன்று
கால் முதல் கால்வரை
உங்களுடன் சுற்றி வருகிறது

மலைகளும் கோயில்களும்
ஆடுகின்றன
நந்திகளும் ஆமைகளும்
நீந்துகின்றன
பிரம்மாண்ட ராட்டினமாகி
தலைக்கு மேலே
கழுகுகளைப்போல் சுற்றுகின்றன
நட்சத்திரக் கூட்டங்கள்

சட்டவிரோதமானது
அதைப்போல
செய்வதற்கில்லை
தவிரவும்
நட்சத்திர கூட்டங்களுக்கு
தவறான நேரமும் கூட

எல்லாத் திசையிலிருந்தும்
எந்நேரமும்
உடனே உதவிக்கு வரும்
தீயணைப்பு வீரனைப்போல
அவசரகதியில் வந்தாலும்
இரத்தம் சிந்துவதற்கில்லை
விரிந்துவரும் இளிப்புடன்

உள்ளங்கையைக் குவித்து
காளையின் பின்னந் தொடையில்
அத்துமீறி நுழைந்து
தரையாணியால் ஒடுங்கிய
பித்தளையின் கீறலை
விரல் நகத்தால்
வேண்டுமானால்
சரி செய்யலாம்.

குறிப்பு – 40 வருடம் முன் கொலாட்கர் சென்றபோது வேறொரு நந்தி இருந்ததா தெரியவில்லை ஆனால் ஜெஜூரி கோயிலில் தற்போது இருக்கும் நந்தியின் படம் இதுதான்.

(அருண் கொலாட்கர் எழுதிய A Kind of Cross என்ற கவிதையின் தமிழாக்கம்).

அமேஸான் காடுகளிலிருந்து – மித்யா

மித்யா 

10- இன வெறி

கீழே விழுந்த கிறிஸ்டோவும் அந்த அற்புத ஒளியைப் பார்த்தான். காட்டுவாசிகள் அதைக் கண்டு மண்டியிட்டனர். பின்னர் எழுந்து கோஷம் எழுப்பினார்கள். எல்லோரும் இந்த நிகழ்வின் மகத்துவம் அறிந்திருந்தார்கள். அவர்கள் ஆரவாரம் செய்வதைக் கேட்கும்போதே எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரிந்துவிடும்.

ஆனால் கிறிஸ்டோ சந்தோஷமாக இல்லை. அவனுக்கு காய்ச்சல் எடுத்தது. இரண்டு நாட்களுக்கு அவனால் படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. ஆலிஸ் அவன் குடிசைக்கு வந்தாள். அங்கேயே தங்க ஆரம்பித்தாள். அவனுக்கு சேவைகள் செய்தாள். பார்த்த நாளிலிருந்து கிறிஸ்டோவுக்கு அவள் மேல் காதல் இருந்தது. இப்பொழுது அது வலுத்தது. இந்தச் சில நாட்களின் தனிமையும் நெருக்கமும் கூடி ஆலிஸ்சுக்கும் அவன் மேல் காதல் பிறந்தது. அவன் உடல்நிலை சரியான பிறகும் ஆலிஸ் அவனுடனே தங்கி இருந்தாள். இருவரும் கூடித் திளைத்திருந்தனர்.

அவர்கள் சந்தோஷமாக இருந்தபோதிலும் இருவருக்குள்ளும் காடு புகுந்துவிட்டிருந்தது. எப்படியாவது அந்தக காட்டை ஜெயித்தாக வேண்டும் என்ற தீவிர வெறி அவர்களுக்குள் குடிகொண்டது. அவர்கள் பேச்சில் ஏமாற்றம் வெளிப்பட்டது.

“நாம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டோம். ஆனால் அஞ்ஞானம் மிக்க இந்த காட்டுவாசியையும், ஆணவம் கொண்ட அந்த இந்தியனையும் வெளிகிரக மனிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர். விஞ்ஞானம் தழைத்தோங்கும் ஐரோப்யாவிலிருந்து வந்த என்னை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்து வெளியே தள்ளிவிட்டனர். அவர்கள் நம்மைவிட விஞ்ஞானத்தில் சிறந்தவர்களாக இருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள். நாம் எப்படியாவது காட்டுக்குள் சென்று அங்கிருக்கும் வெளிகிரகத்து மனிதனைச் சிறை பிடிக்க வேண்டும். நாம் யார் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,” என்று கிறிஸ்டோ ஆலிஸ்சிடம் கூறினான்.

“நானும் வேட்டைக்குச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் என்னைவிட என் குரு உயர்ந்த மனிதராகத் தெரியவில்லை. ஏதோ நான் இன்னும் தயாராகவில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றார். இவர்களுக்கு நாம் கொடுக்கும் இடம்தான் ஏதோ நம்மைவிட மேலானவர்கள் என்று இவர்களை நினைத்துக் கொள்ளச் செய்கிறது. நம் நாட்டு மனிதர்கள் இவர்களை அடக்கி ஆளுவதே சரி என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது,” என்றாள் ஆலிஸ்.

இருவரும் துப்பாக்கிகளையும், வெடிமருந்தையும், வில் மற்றும் விஷம் தோய்த்த அம்புகளையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்வது என்று முடிவு செய்தனர். அடுத்த நாள் மதியம் புறப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன.

இவர்கள் காட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்று அறிந்த காட்டுவாசிகளின் தலைவன் இவர்களைத் தடுக்க முயன்றான். “எதற்கு இந்த விளையாட்டு? இதற்கு முன் சென்ற இருவர் என்ன ஆனார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? இந்தக் காட்டை நேசியுங்கள். அங்கு சென்று அதை அழிக்கப் பார்த்து உயிர் விடாதீர்கள். உங்களை மீறிய சக்தி அது. நான் பல வருடங்களாக இங்கிருப்பவன். பல வீரர்களைப் பார்த்திருக்கிறேன். பல கோரச் சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதைப் போல் எதையும் நான் பார்த்ததில்லை. நீங்கள் அங்கே சென்று அந்த சக்தியை அழிப்பதற்கு பதிலாக உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை அவர்கள் உலகுக்கு அழைத்துச் செல்வார்கள்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

இதைக் கேட்ட கிறிஸ்டோ சிந்தனையில் ஆழ்ந்தான். “அவர் சொல்வது சரியாக இருக்கும் போல் படுகிறது. நாம் இந்த முயற்சியை கைவிட்டுவிடலாம்” என்றான்.

ஆனால் ஆலிஸ்சுக்குள் இனவெறி தீவிரமாக இறங்கியிருந்தது. “இந்த காட்டுமிராண்டி ஜனங்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்? நீ வருவதென்றால் என்னுடன் வா. இல்லையென்றால் நான் தனியாகச் செல்கிறேன். அந்த இந்தியன் சாதித்ததைவிட நான் அதிகம் சாதிப்பேன். வேற்று கிரக மனிதனை பிடித்துக் கொண்டு வருவதுதான் என் லட்சியம். அதை யாரும் தடுக்க முடியாது,” என்று கோபமாகச் சொன்னாள் அவள்.

அவளை இனி தடுக்க முடியாது என்று புரிந்து கொண்ட கிறிஸ்டோ, “சரி நானும் வருகிறேன்” என்றான்.

இருவரும் எல்லா ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். காட்டுவாசிகளின் தலைவன் சோகமான முகத்துடன் அவர்களைப் பார்த்தான், ஆனால் ஒன்றும் கூறவில்லை. முதியவர் ஒருவர் மட்டும் கிறிஸ்டோவைப் பார்த்து, “விதி வலியது என்று அந்த இந்தியன் சொல்லுவான். உனக்கு அது பெண் ரூபத்தில் வந்திருக்கிறது” என்றார்.

அது காதில் விழாதது போல் கிறிஸ்டோ நடந்து சென்றான். ஆலிஸ்சும் அவனும் காட்டுக்குள் நுழைந்தனர். அடர்த்தியான காடு கதிரொளியைத் தடுத்து இருட்போர்வை போர்த்திருந்தது. காடு முழுவதும் மங்கலான ஒளியே பரவியிருந்தது. எப்பொழுதும் போல் பூச்சிகள், பறவைகள், மிருகங்கள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. சிறிது தூரம் நடந்தபின் நதிக்கரைக்கு வந்தனர்.

“இங்குதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததா?” என்று ஆலிஸ் கிறிஸ்டோவைப் பார்த்து கேட்டாள்.

“இல்லை. அதற்கு இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டும். அந்த இடத்தில் விவரிக்க முடியாத நிசப்தம் குடிகொண்டிருக்கும். இங்கு நமக்கு எந்த பயமும் இல்லை” என்றான்.

நிகழப் போகும் பயங்கரம் பற்றி அவன் தெரிந்திருக்கவில்லை.

“இந்த நதிக்கரையில் சற்று இளைப்பாறலாம்” என்று சொல்லிவிட்டு நதியை நோக்கி செல்லப் போனாள் ஆலிஸ். ஆனால் அதற்குள் அவளை மரக்கிளையில் ஊஞ்சலாடிக் கொண்டு தாவித் தாவி வந்த மனிதக்குரங்கு ஒன்று அலேக்காகத் தூக்கியது.

“கிறிஸ்டோ” என்று உரக்க கத்திய ஆலிஸின் குரல் கேட்டு மேலே பார்த்தான் கிறிஸ்டோ. துப்பாக்கியை கையில் எடுத்து மனிதக்குரங்கைச் சுட குறி பார்த்தபோது அந்தக் குரங்கு ஆலிசைத் தூக்கி மேலே வீசியது.

“ஐயோ” என்று ஆலிஸ் கதறினாள். அவள் கீழே விழுந்துவிடுவாள் என்று கிறிஸ்டோ நினைத்திருந்தபோது வேறொரு மனிதக்குரங்கு இன்னொரு கிளையிலிருந்து தொங்கிக்கொண்டு வந்து அவளைப் பிடித்தது. அவள் பிடித்த குரங்கு கையில் வைத்திருக்கவில்லை, மறுபடியும் அவளைத் தூக்கி வீசியது. இப்படி நான்கு குரங்குகள் செய்தன. என்ன செய்வது என்று தெரியாத கிறிஸ்டோ குருட்டாம்போக்கில் சுட ஆரம்பித்தான். ஐந்தாவது குரங்கு ஆலிசை நதிக்குள் வீசியது.

கிறிஸ்டோ நதியை நோக்கி ஓடினான். ஆலிஸ் மேலே பறந்து நதியை நோக்கி விழுந்து கொண்டிருந்தாள். அவள் குரல் இப்பொழுது உச்ச ஸ்தாயியில் கதறியது. அவள் நதிக்குள் விழ இருக்கும்பொழுது நான்கு முதலைகள் வாயைத் திறந்து வைத்தபடி தண்ணீருக்குள்ளிருந்து வெளிவருவதை கிறிஸ்டோ பார்த்தான். கீழே விழுந்த ஆலிஸ்சை நான்கு முதலைகளும் கவ்விக்கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இழுத்தன. காட்டைத் தாண்டி நாட்டைத் தாண்டி விண்வெளி மனிதர்களுக்கும் கேட்கும் அளவு பெரிய ஓலம் ஆலிஸ்சிடமிருந்து எழுந்தது.

துப்பாக்கியை எடுத்து முதலைகளைப் பார்த்துச் சுட ஆரம்பித்தான் கிறிஸ்டோ. ஆனால் அதற்குள் முதலைகள் தண்ணீரில் மூழ்கிவிட்டிருந்தன. சற்று நேரத்தில் நதியில் ஒரு இடம் மட்டும் சிவப்பானது. ஓடும் நதி மெதுவாக அதை அடித்துச் சென்றது. சற்று நேரத்துக்குப் பிறகு நதி சுத்தமாகக் காணப்பட்டது. அலறல் நின்றபிறகு காடு நிசப்தமானது.

காட்டுவாசிகள், ஒரு கையால் மரக்கிளையைப் பற்றிக்கொண்டு, இன்னொரு கையால் கிறிஸ்டோவை தங்கள் பக்கம் வீசிய மனிதக்குரங்கைக் கண்டு திடுக்கிட்டனர்.

(தொடரும்)

தீர்வு- செந்தில் நாதன் (பெர்டோல்ட் பிரெக்ட்)

செந்தில் நாதன்

ஜூன் 17 கிளர்ச்சிக்குப் பின்னர்
அரசாங்கத்தின் நம்பிக்கையை
மக்கள் இழந்து விட்டதாகவும்
மேலதிக முயற்சிகளின் மூலமே
இழந்த நம்பிக்கையை மீட்க முடியும் என்றும்
ஸ்டாலின்பாதையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்
எழுத்தாளர் சங்கச் செயலர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அரசாங்கம்
மக்களைக் கலைத்துவிட்டு வேறொரு
மக்களைத் தேர்ந்தெடுப்பது எளிதல்லவா?

(பெர்டோல்ட் பிரெக்ட் எழுதிய The Solution என்ற கவிதையின் தமிழாக்கம்)

“கலாசார மரணம் குறித்து” – மரியோ வர்காஸ் லோஸா நூல் விமரிசனம்

(அண்மையில் Irish Times என்ற தளத்தில் “Book review: ‘Notes on the Death of Culture’ by Mario Vargas Llosa” என்ற தலைப்பில் Anne Haverty எழுதியுள்ள நூல் மதிப்பீடு )

இது மிக மோசமான காலம் என்று வாதிட முடியும். ஆனால், நம் காலம் வரலாற்றின் மிக மோசமான காலமாக இல்லாதிருக்கலாம். எனினும்கூட, சிந்திக்கத் தெரிந்த அனைவருமே நாம் வாழும் காலம் மிக மூடத்தனமான காலம் என்று சொல்ல இடமுண்டு. நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் மரியோ வர்காஸ் லோஸா அதை உறுதியாக நம்புகிறார். நாம் ஒரு பெருங்கூட்டமாய் அறிவின்மைக்கு அடிபணிந்து விட்டோம் என்று கலாசார நிலை குறித்த உணர்ச்சி மிகுந்த, ஒளிரும், இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அவர் வலியுறுத்துகிறார்.

இது துக்கத்தை வெளிப்படுத்தும் புத்தகம். அரசியல் முதல் ஆன்மிகம் வரை இதுவரை உலகம் எப்படி இருந்தது என்றும் இப்போது எப்படி இருக்கிறது என்றும் ஒப்பிட்டு தன் துயரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வர்காஸ் லோஸா. “கலாசாரத்தை வரையறை செய்வது முன்னிட்ட குறிப்புகள்,” என்ற கட்டுரையில் டி. எஸ். எலியட் 1948ஆம் ஆண்டில் எழுதியது போலவே இவரும் கலாசாரத்தைப் பொதுப்பொருளில் எடுத்துக் கொள்கிறார்- அது பகிர்ந்து அறியப்படும் நுண்ணுணர்வு, வாழ்வு முறை.

எலியட்டும் தன்னைச் சுற்றி கலாசாரச் சீரழிவைக் கண்டார், கலாசாரம் இல்லாத ஒரு காலம் வரப்போவதை அனுமானித்தார். அந்தக் காலம் இதுவே, என்று வாதிடுகிறார் வர்காஸ் லோஸா. எலியட்டின் பார்வையை மேட்டுக்குடி மனப்பான்மை என்றும் இன்னும் பலவாறாகவும் விவரிக்கும் விமரிசகர்கள் அன்று முதல் அவரைக் கண்டித்து வருகின்றனர். லோஸா எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்காக அவருக்கும் அதே சாயம் பூசப்படலாம்.

ஆனால் அவர், உலகமயமாக்கப்பட்ட நம் கலாசாரம் தற்போது போலித்தனத்திலும் வெறுமையிலும் வீழ்ந்திருப்பதையும், அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்;லை என்பதையும் ஒப்பீட்டளவில் சீரான வகையில் விவரிக்கிறார். இதற்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

ஆனால் நாம் இப்போது வாழும் வாழ்வைப் போன்ற நுட்பமான, அனைத்தையும் உள்ளடக்கிய விஷயத்தை சீரான வகையில் விவரிப்பது என்பது சுலபமல்ல. கலைப் பொருள் வர்த்தகம் போன்ற விஷயங்களில் வர்காஸ் லோஸா ஏறத்தாழ வாயில் நுரை பொங்கச் சினக்கிறார். “அடிமட்டம் வரை அழுகிப் போனது,” என்று கலையுலகைக் கண்டனம் செய்கிறார், அந்த உலகின் கலைஞர்கள் மலிவான உத்திகளைத் தெரிந்தே மேற்கொள்கின்றனர். டாமியன் ஹிர்ஸ்ட் போன்ற நட்சத்திரங்கள், “மோசடி-வித்தை” பயில்பவர்கள், அவர்களது, “அலுப்பூட்டும் வெற்றுக் கேளிக்கையாய் அமைந்த ஒளியற்ற” படைப்புகளுக்கு “அரை வேக்காட்டு விமரிசகர்கள்” துணை போகிறார்கள்.

சிறுபான்மை அளவினான மக்களுக்கு உரியதாய் இருந்த கலாசாரத்தை நாம் கைவிட்டுவிட்டோம். அது உண்மைத் தேடலில் ஈடுபட்டிருந்தது, ஆழ்ந்த சிந்தனைகள் கொண்டிருந்தது, அமைதியாய் இருந்தது, நுண்மைகள் பொருந்தியதாய் இருந்தது. அதைக் கைவிட்டு மையநீரோட்டம் அல்லது பெரும்பான்மை மக்களின் பொழுதுபோக்குக்குரிய விஷயங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இது உணர்ச்சி விழைவு கொண்டதாகவும் ஆழமற்றதாகவும் அனைவருக்கும் எட்டக்கூடியதாக்வும் இருந்தாக வேண்டும்.- அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற விஷயத்தை விமரிசிப்பவர்கள் இந்நாட்களில் முரட்டுத் துணிச்சல் கொண்டவர்களாகதான் இருக்க முடியும்.

மதிப்பீடுகளற்ற இத்தகைய கலாசாரம் அடிப்படை மதிப்பில்லாதது.

ரொட்டியும் சர்க்கஸ்களும்

நம் காலத்தை விவரிப்பதற்குரிய அடைமொழியை பிரஞ்சு மார்க்சிய கோட்பாட்டாளர் கை டிபோர்டிடம் இரவல் பெற்றுக் கொள்கிறார் வர்காஸ் லோஸா. நாம் கேளிக்கைக் காட்சிச் சமூகத்தில் வாழ்கிறோம் (Society of the Spectacle). அழிந்து கொண்டிருந்த ரோமானிய பேரரசின் சீரழிந்த மக்கள் கூட்டத்துக்கு அளிக்கப்பட்ட ரொட்டிகளையும் சர்க்கஸ்களையும் நினைவுறுத்தும் அடைமொழி இது. கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாசாரத்தின் குருட்டு விசைகளால் சுரண்டப்பட்டு, நாமே நம் வாழ்வின் பார்வையாளர்கள் ஆகிவிட்டோம், நம் வாழ்வு நம்மால் வாழப்படுவதல்ல.,

நம் நுண்ணுணர்வுகளின் மரபார்ந்த பாதுகாவலர்களாக இயங்குவது தம் பணி என்று எண்ணியிருந்தவர்களே இப்போது நம் நுண்ணுணர்வுகளை, ஏன், நம் மானுடத்தின் கூர்முனையையும் மழுங்கச் செய்து விட்டார்கள்.

புத்திஜீவிகள், முதுகெலும்பற்ற ஊடகங்கள், அரசியல் வர்க்கம்- அனைவரும் உள்ளீட்டையும் ரசனையையும் தமக்கே தீங்கிழைத்துக் கொள்ளும் பேரார்வத்துடன் கைவிட்டு பிம்பமே உண்மை என்ற சிந்தனையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 1960களின் லிபரல் புரட்சி, குறிப்பாக 1968ஆம் ஆண்டின் பிரஞ்சு நிகழ்வுகள், மிசேல் பூக்கோ மற்றும் ழான் பாட்ரில்லார்ட் போன்ற பிரஞ்சு கோட்பாட்டியலாளர்கள் மீது கணிசமான அளவு வசைபாடப்படுகின்றது. கலாசாரத்தை அவர்கள், “சமூகத்தை விட்டு முகம் திருப்பிக்கொண்ட, சுயமோகம் கொண்ட கல்விப்புலத்தாருக்கும் புத்திஜீவிகளுக்கும் மட்டுமே உரிய கண்கட்டு விளையாட்டாய்” மாற்றிவிட்டனர்.

ஆனாலும்கூட முனைப்பற்றவர்களாக, அடிமைகளாக, தோற்றங்களின் உலகின் பார்வையாளர்களாக பெருந்திறள் மக்கள் இருக்கவே செய்கின்றனர். முரட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட நம் அலுத்துப் போன கண்களின் முன் அற்ப பகட்டு நாடகத்தின் காட்சிகள் வன்முறையும் அர்த்தமின்மையுமாய் மாறுகின்றன. நட்சத்திர இசைக்கலைஞர்கள் அரசியல்வாதிகளைவிட நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கின்றனர், நகைச்சுவை வேடம் தரிப்பவர்கள்தான் புதிய தத்துவ மேதைகள். ஒரு காலத்தில் எழுத்தாளர்களுக்கு இருந்த மதிப்பு சமையல்காரர்கள், தோட்டவேலை செய்பவர்கள் போன்ற வாழ்க்கை முறையின் வர்த்தகர்களுக்கே உள்ளது. முன்னிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இது சோகமான, நம்பிக்கைக்கு இடமற்ற வீழ்ச்சி நிலையாகிறது..

இலக்கியத்தின் தொடர்ந்த முக்கியத்துவம் குறித்து வர்காஸ் லோஸா நம்பிக்கையற்றவராக உள்ளார். அதாவது, பொழுதுபோக்காகவோ பயன்மதிப்பு கொண்டதாகவோ இல்லாத புத்தகங்களின் முக்கியத்துவம் நீடிக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. அவரால் தெய்வ நம்பிக்கை இல்லாமல் வாழ முடிகிறது என்றாலும், சமய நம்பிக்கையற்ற சமூகம் ஊக்கம் குன்றாமல் நீடிக்க முடியுமா அந்தரங்கத்தைக் கைவிடாமல் தொடர முடியுமா என்று அவர் சந்தேகிக்கிறார். இன்று அக உணர்வுகளை நாம் எப்போதும் பொதுவெளியில் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று அவர் நினைக்கிறார்.

இதில் பண்பாட்டில் முன்னேறிய தேசங்களே பெரும் குற்றவாளிகள். நமக்கு முந்தைய பல நாகரீகங்களைப் போலவே கையளிக்கப்பட்ட அனைத்தையும் வீணாக்கி நாமும் அழிவோம், பல்லாயிரம் ஆண்டுகால தொடர்ச்சியில் உருவாக்கப்பட்ட, நம் வாழ்வுக்கு பொருளும், உள்ளடக்கமும் ஒழுங்கும் அளிக்கும் இந்த நுண்பொருளை இழப்போம். வர்காஸ் லோஸாவின் கதையாடலில் “அர்த்தமின்மை” “மூடத்தனம்”, “சுவாரசியமின்மை” போன்ற பதங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன. இணையத்தின் அசாதாரண, அதிசய வளங்கள் நம்மில் பலராலும் சமூக ஊடகத்தின் அர்த்தமற்ற உரையாடல்கள் வழியாக மட்டும் அறியப்படும் நிலையில், யாரால் அவர் கூறுவதை மறுக்க முடியும்?

ஆனால் இணையம் ஆழமற்ற அறிவு சேகரத்தின் கருவி மட்டுமே. அறிவு நம்மைக் கவர்கிறது என்றாலும், அதுவே கலாசாரமாகாது. சிந்தனைக்குத் துணை செய்யும் அளவில்தான் அறிவுக்கு இடமுண்டு. இதைச் சொல்லும்போது வேறொரு கேள்வி தோன்றுகிறது- பாலுணர்வின் இடத்தைச் சிந்தனை கைப்பற்றிவிட்டதா- ரகசிய, மீறலாக அது இன்றும் இருக்கிறதா?

பாலுணர்வைப் பெருமைப்படுத்துதல்

பாலுணர்வு குறித்து எழுதும்போது வர்காஸ் லோஸாவிடம் பெரும் அவநம்பிக்கையும் தீவிர உணர்ச்சியும் வெளிப்படுகிறது. கலைகள், எழுத்து மற்றும் அறிவுப்புலத்தில் என்ன நடந்ததோ அதுவே நாகரீகத்தின் மிக உன்னத வெளிப்பாடுகளையும் சாதனைகளையும் அழித்துவிட்டது என்று அவர் துக்கப்படுகிறார்- ஆம், காமம் மலினப்படுகிறது என்று வருந்துகிறார்.

பாலுணர்வைப் பெருமைப்படுத்தி உன்னத காமம் என்ற நிலைக்குக் கொண்டு சென்றதால்தான் நாம் மிருகத்தனத்திலிருந்து மானுடம் தொட்டோம் என்கிறார் அவர். ஆளுமை உருவாக்கத்தில் பாலுணர்வுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்த சிக்மண்ட் பிராய்ட் மற்றும் ஜார்ஜ் படெயில் இருவரையும் மேற்கோள் காட்டுகிறார் அவர். பாலுணர்வில் ஒரு மீறலும் ரகசிய பரிமாணமும் இருப்பது என்பது காமத்தின் தேவையாகிறது. பாலுணர்வைப் பொதுவெளிக்குக் கொண்டு வருவதென்பது, அதை ஒரு பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு அல்லது மருத்துவ நிலைக்குக் குறைத்து காதலிலிருந்தும் வழிபாட்டு உணர்வுகளிலிருந்தும் துண்டித்து நம்மை ஆர்வமற்ற நிலைக்கே கொண்டு செல்லும்.

இது ஏதோ பழைய காலத்தில் சொன்னது போலிருக்கிறது. அடக்கம், சடங்கு, மர்மம், அழகு போன்ற கருத்தாக்கங்களில் வர்காஸ் லோஸா இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவர் இந்த வயதில் வாழ்கிறார் என்பது சோகமான ஒரு விஷயம் என்று நான் சொல்லும்போது- அவருக்கு வயது கிட்டத்தட்ட எண்பது ஆகிவிட்டது- நான் அவரது வயதைச் சுட்டவில்லை. உலகம் போகும் போக்கு சரியில்லை என்ற அருசி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் வயதில் அவர் வாழ்வதைச் சொல்கிறேன். “உனக்கு எங்களைப் புரிந்து கொள்ள முடியாது,” என்று இளைஞர்கள் அலட்சியப்படுத்தும் வயதில் வாழ்கிறார் அவர்.

தன் தரப்பு வாதங்களை உருவாக்குவதில் அவருக்கு அத்தனை திறமை போதாது என்றுதான் சொல்ல வேண்டும்- கருத்து, எதிர்கருத்து என்பதன் நுண்மைகளைவிட அவர் கருத்துகளை ஒன்றுதிரட்டுவதையே விரும்புகிறார். சில சமயம் தீவிரமான முன்முடிவுகளைக் கொண்ட சாமியாரிணி அல்லது ஜெபமேடை பிரசாரகர் போலிருக்கிறார்.

ஆனால் அவர் சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்பது நல்ல விஷயம்- இதைச் சொல்லுவது அவசியமில்லை, அவர் மிகத் தெளிவாகவும் எழுதுகிறார். இளமையோ முதுமையோ சிந்திப்பவர்கள் ஒவ்வொருவரும் இவரைப் படிப்பார்கள், படிக்க வேண்டும்.

இவர் தீர்வுகள் எதுவும் அளிக்கிறார் என்று சொல்ல முடியாது. கடந்த காலத்துக்குரிய நம் ஆதார வளங்கள் இல்லாதபோது நம் எதிர்கால சந்தோஷம் வறண்டதாய் தெரிகிறது. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்- நம்மால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. மானுடம் எவ்வளவு முட்டாள்தனத்தைச் சகித்துக் கொள்ளும்? சீக்கிரமே இந்தப் பொழுதுபோக்கு கேளிக்கைக் காட்சிகளுக்கு எதிராக நம் சமூகம் கிளர்ந்து எழுந்து போராடாது என்பது நிச்சயமில்லை.

நன்றி – The Irish Times http://www.irishtimes.com/culture/books/book-review-notes-on-the-death-of-culture-by-mario-vargas-llosa-1.2308929…

நான்காண்டுகளுக்குப்பின் – சிகந்தர்வாசி

  சிகந்தர்வாசி

அவர் கைத்தடி ஊன்றியபடி
மெல்ல நடக்கிறார்

கடை வாசலின் விரிசல் விழுந்த கண்ணாடியில்
அவர் பிம்பத்தைப் பார்க்கிறேன்

எனக்காக உழைத்த மனிதர்
என்னை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும்
என்று துடித்தமனிதர்
முதல் முறை நான் திரும்பியபொழுது
என்னைப் பெருமிதத்துடன் பார்த்த மனிதர்

இப்பொழுது தளர்நடை, வெள்ளை மயிர்
இளைத்துப் போன தேகம், தடித்த மூக்\குக் கண்ணாடி
வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து விட்ட மனிதன்
சுகதுக்கங்களைத் தாண்டி, வெறுப்பைக் கடந்து,
சுயநலத்தை என்றோ விலக்கி
உலகை அமைதியான கண்களுடன் நோக்குபவர்
என்று நினைத்துக் கொள்கிறேன்.
நானும் ஒரு நாள் இந்தச் சமநிலையை அடைவேனா?

“பக்கத்து வீட்டு நரசிம்ஹன் சட்டுன்னு ஹார்ட் அட்டாக்ல போயிட்டான்.
இன்னும் கொஞ்சம் தவிச்சு செத்திருக்கலாம் அந்த தேவடியா மகன்”

என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை
பார்த்துக் கொள்கிறார் பெரியவர்..