எழுத்து

வலி

 மேகனா சுரேஷ்

“ம்மா… முடியலையே அம்மா…’’  தன் இரு தொடைகளையும் கரங்களால் இழுத்துப் பிடித்திருந்த தேவி வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

“தோ… சும்மா கத்திகிட்டே இருக்காம முக்குமா… தலை முன்னாடி தெரியுது. கத்திக்கிட்டே இருந்தா மட்டும் உனக்கு பதிலா உன் புருசனா உன் குழந்தைய முக்கி பெக்க முடியும்?’’

இடுப்பை இரண்டு துண்டாய்ப் போடும் வலியை அனுபவித்துக் கொண்டிருந்த தேவி, கீழ் உதட்டை பற்களால் கவ்விப் பிடித்துக் கொண்டு, “ஐயோ முடியலையே…’’ என அதற்கும் அலறினாள்.

“நீ எல்லாம் சரிப்பட மாட்ட. இரு இரு இப்பவே பெரிய நர்ஸ் அம்மாகிட்ட சொல்லி 108 க்கு போன் போட சொல்றேன். உங்களுக்கு எல்லாம் பெரிய ஆஸ்பத்திரிதான் லாயக்கு. நாங்க எல்லாம் பொறுமையா சொன்னா நீங்க கேக்க மாட்டீங்க… அங்க போயி பட்டாதான் உனக்கு புத்தி வரும்.’’

தன் கையுறையை அந்த வெள்ளைச் சீலைப் பெண்மணி அகற்றப் போக, “அக்கா… நீங்க சொல்றது எல்லாம் கேக்குறேன்க்கா… தயவு செஞ்சி பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடாதீங்க அக்கா…’’

அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தேவிக்கு, போன பிரசவத்தின்போது பெரிய ஆஸ்பத்திரியில் அனுபவித்த வேதனைகள் கண் முன் வந்து போனது.

அந்த நினைவுகள் தந்த வேகத்தில், மூச்சை இழுத்துப் பிடித்து, தன் வயிற்றை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை ஒரே தள்ளாக வெளியே தள்ளினாள். ஒரு நிமிடம்தான். ஒரே நிமிடம்தான்.

பத்து மாத பாரத்தை வெளியே இழுத்து எடுத்திருந்தாள் அந்த வெள்ளைச் சீலைக்காரி. அத்துணை நேரம் இடுப்பைப் பிளந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.

இடுப்பின் கீழே விரிக்கப்பட்டிருந்த துணி முழுவதும் நனைந்து போய் உடலுக்குள் குளிரைப் பரப்பிக் கொண்டிருக்க, தேவகானமாய் குழந்தையின் அழுகுரல்.

தடுப்புக்குப் பின்பக்கத்தில் இருந்து அம்மாவின் மெல்லிய குரல், “என்ன புள்ள அக்கா..’’ எனக் கேட்பது, பிரசவ கட்டிலில் படுத்திருந்த தேவிக்கு தெளிவாக கேட்டது.

“இந்தாமா மொதோ போயி பெத்து பிளச்சவளுக்கு காபி தண்ணி வாங்கி ஆத்திக் கொண்டாமா… இன்னும் சத்தை எடுக்கணும். அதுக்குள்ள வந்துடுவீங்க என்ன புள்ள யாரு புள்ளன்னு கேட்டுகிட்டு…’’

அடுத்த பத்து நிமிடத்தில் வெதுவெதுப்பாய் தொண்டைக் குழியில் காபி இறங்க, ஒட்ட வைத்த நெற்றிப் பொட்டை உரித்து எடுப்பதைப் போல, அந்த வெள்ளைச் சீலைக்காரி தேவியின் உடலில் இருந்து சத்தையை பிரித்து எடுத்து இருந்தாள்.

வெள்ளை நிற கவுன் அணிந்திருந்த செவிலி அவள் இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, “ என்ன குழந்தை சிந்தாமணி…. குழந்தை பிறந்த நேரம், வெயிட் எல்லாம் சொல்லு… நான் ரெகார்ட் எழுதணும். அப்படியே அந்தப் பொண்ணோட புருஷனை ஒரு ஐ.டி ப்ரூப் எடுத்துட்டு நம்ம ரூமுக்கு வர சொல்லு… நாளைக்கு பர்த் சர்டிபிகேட் கொடுக்கும்போது இது என் இனிசியல் இல்ல, இது எங்க வீட்டு நம்பர் இல்லைன்னு ஆயிரத்தெட்டு கரக்சன் சொல்லுவாங்க.’’

பேசி முடித்த செவிலி மீண்டும் அங்கிருந்து விலகிச் செல்ல, தேவி தன் அருகில் இருந்த வெள்ளைச் சீலைக்காரியிடம், “அக்கா… என்ன பிள்ளக்கா?’’ என ஆவலாய்க் கேட்டாள்.

குழந்தையின் உடலைச் சுற்றி வெள்ளை துணி வைத்து துடைத்துக் கொண்டிருந்த அவள், “மொதோ குழந்தை என்ன..?’’ என தேவியிடமே கேள்வியை திருப்பினாள்.

“பொட்டப் பிள்ளைக்கா…’’ தேவி சற்றே அயர்ச்சியாய் பதில் அளித்தாள். குழந்தையைத் துடைத்து முடித்தவள், பதில் ஒன்றும் பேசாமல் குழந்தையை தேவியின் அருகே வைத்து விட்டு, “பாலைக் கொடு… அப்போதான் தீட்டு போறது குறையும்..’’ என்றுவிட்டு அந்த அறையில் இருந்து விலகி நடந்தாள். சற்றே ஒருக்களித்துப் படுத்த தேவி, குழந்தையை மூடி இருந்த துணியை சற்றே விளக்கி பார்த்தாள்.

அவளையும் அறியாமல் அவள் விழிகள் நீரால் நிரம்பின.

பொது அறைக்கு மாற்றிய பிறகும், சொந்த பந்தம் என்று யாரும் பெரிதாய் பார்க்க வரவில்லை. “முதல்ல குழந்தைக்கு துணி வாங்கிப் போடுங்க..’’ என செவிலிப் பெண் பத்து முறை கத்தி விட்டு போன பின் முதல் குழந்தை நித்தியாவின் பழைய சிறிய உடை ஒன்றை, அம்மா அணிவித்திருந்தாள்.

பசி வயிற்றைக் கிள்ளியது. “பொட்டப்பிள்ள தானா…. எதை தின்னா என்ன? வீட்ல இருந்து பழைய சோறு நீரை வடிச்சி எடுத்தாந்து இருக்கேன். குடி. உம் புருஷன் பொண்ணுன்னு சொன்னதுதான், மூஞ்ச திருப்பிட்டு போயிட்டான். ஆட்டோ ஓட்ற துரைக்கு அம்பானின்னு நினைப்பு. இங்க வேற பிரசவம் பாத்தவங்களுக்கு காசு தரணுமாம். நான் வூட்டு வேலை செய்யிற தாவுல போயி அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துடுறேன். அப்படியே பழைய துணி கிடச்சாக்கூட நல்லா இருக்கும். நித்திய ஒரு கண்ணு பாத்துக்கோ.’’

அம்மா கிளம்பிச் சென்றுவிட்டாள். குழந்தை பாலுக்காய் சிணுங்கியது. அதற்கு பாலைத் தூக்கி தர எழும்போதே, நித்தியா மூக்கை உறிஞ்சிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.

“ஏய் நித்யா…. இங்க வா….’’

“வரலை போ’’

“தங்கச்சி பாப்பா பாரு வாடி…’’

“எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். தம்பி பாப்பா தான் வேணும்..’’

“ஏய் நித்யா உள்ள வா..’’

‘மாட்டேன் போ. தம்பி பொறந்தாதான் எனக்கு எல்லாம் வாங்கி தருவானாம். தங்கச்சி எனக்கு உள்ளதையும் பிடுங்கிக்குமாம்…. எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டாம். அதை நீ யாருக்காச்சும் வித்துடு போ’’

“நித்யா..’’ தேவி ஒரே நிமிடத்தில் உடைத்து அழுதாள். உயிரே இற்று வெளியே விழுந்து விடும் போல ஏங்கி ஏங்கி அழுதாள்.

“இந்தாமா இப்படி அழுதினா ரத்தப்போக்கு அதிகமாயிடும்… வாயை மூடுமா..’’ அதட்டிய வெள்ளைச் சீலைக்காரியின் வார்த்தைகள் தேவியின் செவிகளை தீண்டவே இல்லை.

சதைகளைக் கிழித்துப் போடும் வலியை விட, உணர்வுகளை கிழித்துப் போடும் வார்த்தைகள் தரும் வலிக்கு திடம் அதிகம் போல, தேவி தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே இருந்தாள்.

அம்மாவின் அழுகை நித்தியாவை தாக்க, அருகில் ஓடி வந்து தானும் அழத் தொடங்கினாள்.

 

 

 

கோபித்துக் கொண்டவர்கள்

கலைச்செல்வி

உணவகம் ஒன்று தங்கள் தெருவில் ஆரம்பிக்கப்படவிருப்பது அந்த தெருவாசிகளுக்கு தாமதமாகதான் தெரிந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் அதற்கு காரணமாக இருக்கலாம். பொதுத்துறை நிறுவனமொன்றின் கொழுத்த சம்பளத்தில் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றிருந்தார் அவர். பிரதான தெருவிலிருந்து விலகும் இந்த சிறியத் தெருவின் இரண்டாவது மனை அவருடையது. பதினைந்து அடியில் சந்துப் போன்ற தெருவென்றாலும் பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகாமை சந்து என்பதால் மாத சம்பளக்காரர்கள்.. நடுத்தர வர்க்கத்தை தாண்டிக் கொண்டிருப்பவர்கள்.. தம்பதி சமேதரமாக வேலைக்கு செல்பவர்கள் சற்று பெரிய வீடுகளாகவே கட்டி குடியேறியிருந்தனர்.

சமுதாயம் கூறும் நல்லுலகின் அத்தனைக் கூறுகளும் அந்த மனையின் உரிமையாளரிடம் இருந்தது. அரசாங்க ஓய்வூதியம்.. இரண்டே வாரிசுகள் என்றாலும் ஆண் வாரிசுகள்.. ஆண் வாரிசுகள் என்றாலும் நல்ல வேலையில் வெளி மாநிலங்களில் செட்டிலானவர்கள்.. வாரிசுகள் இரண்டே என்றாலும் ஆண்மகவுகளை மட்டுமே பெற்றவர்கள்.. தவிர வேறொரு விசாலமானத் தெருவில் சொந்தமாக இரண்டு வீடுகள்.. அடங்கி நடக்கும் மனைவி என சிடுக்குகளற்ற வாழ்க்கை அவருக்கிருந்தது. ஆனாலும் சிடுசிடுத்த சுபாவி.. பணத்தின் மீது தீராப்பற்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தெருவாசிகள் எல்லோரிடமுமே அவருக்கு தனிப்பட்ட வகையில் ஏதோ பிணக்கிருந்ததில் “முசுடு“ என பொது குறியீட்டுப் பெயருக்குள் அடையாளப்படுத்தப்பட்டார்.

“முசுடு ப்ளாட்டுல ஹோட்டல் வரப்போவுதாமே..“ கிட்டங்கியின் கட்டுமானத்திற்குள் உணவகத்தை பொருத்த முடியாமல் தெரு ஆச்சர்யம் கொண்டது. இதற்கு முன் இங்கு தனியார் அரிசி கிட்டங்கி இருந்தது. தடுப்புகளற்ற பெரிய அறையும் சிறியதொரு அலுவலக அறையுமாக தானே கட்டமைத்துக் கொண்டிருந்தார் அந்த கிட்டங்கி உரிமையாளர். முசுடுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தகராறில் காலி செய்யும் நாளன்று “புல்டோசர் கொண்டாந்து கட்டடத்த இடிக்காம வுட மாட்டேன்.. பாத்துக்க..” சத்தமாக அவர் கறுவியதை தெருவே பார்த்தது.

இரண்டே நாட்கள் இடைவெளியில் அட்வான்ஸ் கை மாறி விட்டதாக கேள்விப்பட்டதில் தெருவே ஆற்றாமைக் கொண்டது. “அவவன் எழைச்சு எழைச்சு வீட்ட கட்டிட்டு ஆள் வராம திண்டாடுறான்.. முசுடுக்கு நல்ல யோகம்தான்..“ முசுடு அதே ஏரியாவிலேயே ஸ்கூட்டிசகிதம் சுற்றிக் கொண்டிருக்கும். முதல் தேதியன்றே வாடகை வசூலிக்க கடைக்குள் புகுந்து விடும். அலுவலக அறையோ கிட்டங்கி அறையோ வாடகைக்காரர் எங்கேயிருந்தால் சொந்த வீடு போல கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நுழைந்து விடும் தயக்கமேயின்றி.

”ஹோட்டல் வருதுன்னு கேள்விப்பட்டேன் தம்பி..” வலிய பேசினார் எதிர் வீட்டுக்காரர். அந்த இளைஞன்தான் அங்கு வருவதும் போவதுமாக இருந்தான். கோதுமை வண்ணமும் களையான முகமுமாக இயல்பானப் பொருத்தம். பெர்முடாசும் கையில்லா பனியனும் அவனை நவீனமாக்கியது. தனது பைக்கில் சாய்ந்தவாறே அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன் அவரின் குரல் கேட்டதும் அலைபேசியை துண்டித்து விட்டு விரைசலாக வந்தான். ”ஆமாங்க சார்.. கார்டன் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாமின்னு இருக்கோம்..” என்றான் பவ்யமும் பணிவுமாக.

மேலும் ஆச்சர்யமாக போனது எதிர் வீட்டுக்காரருக்கு. தெருவே கையகலம்தான். வீதிதான் வீட்டு வாசல். கோலங்கள் கூட வீதியைதான் நிறைத்திருக்கும். கார்டனுக்கு எங்கேப் போவது…?

”கார்டன்னா.. செடிக்கொடி மரமெல்லாம் வேணுமே தம்பி..” என்றார் அவர்.

”பின்னால எடம் இருக்கு சார்..” என்றான் அதே பணிவுடன். அவன் சொல்லிதான் பெரியச் செடிகளைக் கூட அப்படியே ரெடிமேடாக விலைக்கு வாங்கி வைக்கலாம் என்று தெரிய வந்தது அவருக்கு. ஆச்சர்யமான அவரின் கண்களைப் பார்த்தான் ”பெரிய மரமெல்லாம் கூட ரெடிமேடா வைக்கலாம் சார்..” பவ்யம் குறையவில்லை. கட்டுமானத்தை இரண்டாக தடுத்து முன்பகுதியை நாற்பது பேர் சாப்பிடத் தகுந்தளவில் மாற்றப் போவதாகச் சொன்னான். அலுவலக அறையை குழந்தைகளுக்கான விளையாட்டு அறைக்கு ஓதுக்கப் போவதாகவும் சொன்னான். பின்பக்கம் கிச்சனும் கார்டனும் கொண்ட மல்ட்டி குசைன் ரெஸ்டாரெண்ட் என்ற அவனின் திட்டம் தெரு முழுக்கப் பரவியது.

முசுடு இந்த மனையை நாலைந்து வருடங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தது. வாங்கிய சுருக்கில் சுற்றிலும் கம்பி வேலியிட்டு தடுத்தது. முதல் மனைக்காரர் பிரதானச் சாலையை நோக்கி தனது கட்டுமானத்தை திருப்பி விட்டதில் பல கடைகளுக்கு உரிமையாளரானது முசுடை உசுப்பி விட, கட்டுமானத்தில் காசைக் கொட்டாமல் சம்பாதிக்கும் ஆசை வந்தது அதற்கு. முதலில் வாடகைக்கு வந்தது குப்பை ஏஜெண்ட் ஒருவர். குப்பைகள் மூட்டையாய் வந்து இறங்குவதும் இரண்டொரு நாளில் டாடா ஏசில் காணாமல் போவதுமாக துரிதகதி வியாபாரம். இது முசுடின் கண்களில் உறுத்தலாய் விழ ஒரேயடியாய் வாடகையை உயர்த்திக் கேட்டதில் முசுடை அடிக்காதக் குறையாக காலி செய்து விட்டுப் போனார் அவர். அவருக்கு பிறகு வந்த மரக்கடைக்காரரும் “சாமர்த்தியம் இருக்கறவன் சம்பாதிக்கிறான்னா இவனுக்கு ஏன் வேவுது..?” என்ற கத்தலோடு நகர்ந்து விட அதற்கு பிறகுதான் அரிசி கிட்டங்கி வந்தது.

உணவகம் குறித்தப் பேச்சுகள் மலைபாம்பாய் மொத்தத் தெருவுக்கும் நீண்டுக் கிடந்தன. தொடர்பில்லாத ஏதேதோ கடைகள் வருவதை விட டீசண்டான ஹோட்டல் ஒன்று தெருவிற்குள் வருவதும் தெரு வளர்ச்சிப் பெறுவது குறித்தும் எல்லோருக்குமே நிறைவுதான். அதை விட மிக அருகில் ஒரு உணவகத்தை காண்பது எல்லோருக்குமே புதிய அனுபவமாக இருந்தது.

”நான்வெஜ் ஹோட்டலாம்.. தெருவுக்குள்ள கொண்டாந்து போடுறாங்க.. தெருவே நாறப்போவுது..” சைவர்களிடம் செல்ல எதிர்ப்பு இருந்தது.

”அட்ரஸ் கண்டுப்பிடிக்கறதுக்கு ஒரு நல்ல லேண்ட் மார்க்குதான்..” வயசாளிகளுக்கு பெருமையாக இருந்தது.

உணவக வேலைகள் தெருவாசிகளின் கவனத்தை ஒன்றுக் கூட்டியிருந்தன. அகன்று நீண்டிருந்த பெரிய அறை குறுக்கே சுவர் எழுப்பப்பட்டு சமையலறையாக பிரிக்கப்பட்டது. உயர்ந்திருந்த மேற்கூரைகள் குளிரூட்டுவதற்கு வசதியாக பொய்கூரைகளாக இறக்கப்பட்டன. அலுவலக அறை சிறுவர்களுக்கான விளையாட்டு அறையாக மாற்றப்பட்டது. முன்பக்க சுவர்.. இரும்பாலான கேட் என பழையவைகள் தகர்க்கப்பட ரோலிங் ஷட்டர்.. கண்ணாடிக் கதவு..என புதியவைகள் உருவாயின. பெர்முடாஸ்.. டீ ஷர்ட் சசிதம் காலையிலேயே வந்து விடுவான் அந்த இளைஞன். அங்குமிங்குமான நடமாட்டத்திலிருக்கும் தெருவாசிகளை அவன் ஏறெடுப்பதுமில்லை. பேச்சுக் கொடுப்பவர் யாராகயிருந்தாலும் யார்.. எவர்.. என்ற விசாரிப்புகளின்றி பணிவோடு பதில் சொல்லி விட்டு நகர்ந்து விடுவான். “நாகரீகம் தெரிஞ்சப் பையன்..“ என்றார் எதிர்வீட்டுக்காரர். மீதமுள்ளோருக்கும் ஆமோதிப்பாகதான் இருந்தது.

மூன்றாவது மனையும் ஆறாவது மனையும் தவிர்த்து தெரு நெடுக வீடுகள் கட்டப்பட்டு விட்டன. ஆறாவது மனை சற்றே உள்ளடக்கமாக இருந்தது. போகிறபோக்கில் குப்பைகளை துாக்கி வீச மூன்றாவது மனையே வசதியாக இருந்ததில் அது தெருவாசிகளின் குப்பைத் தொட்டியாகியிருந்தது. வாடகைக்காரருக்கு இடைஞ்சலாகி விடக் கூடாது என்பதால் முசுடுக்கு இதில் பிடித்தமிருப்பதில்லை சிறுவர்கள் என்றால் குப்பையோடு திருப்பியனுப்பி விடும். ஆண்களெனில் தனது எதிர்ப்பை கத்தி வெளிப்படுத்தும். பெண்கள் என்றால் செய்வதறியாது விழித்து விட்டு கைகள் நடுங்க நியாயம் கேட்க அங்குமிங்கும் ஓடும். “நீ யாருய்யா கேக்கறது..,? ஒன் எடமாய்யா இது..?” கூச்சல்கள் முசுடைக் கட்டுப்படுத்துவதில்லை. குப்பையோடு வரும் தெருவாசிகளுக்கு முசுடின் நடமாட்டம் தார்மீகமான தயக்கத்தை உண்டாக்குவதில் முசுடின் மீதான அவர்களின் கோபம் தீவிரப்பட்டுப் போனது.

உணவக வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கின.

“மல்ட்டி குசைன் ரெஸ்ட்டாரெண்டாம்.. சென்ரலைஸ்டு ஏசியாம்..” தகவல்கள் எதிர் வீட்டுக்காரர் மூலமாக கசிந்தது.

மார்போனைட் தரை ஒட்டப்பட்டது. துாண்கள் அலங்காரப்படுத்தப்பட்டன. ஷட்டர்களுக்கான பெயிண்ட்டுகள் தெருவின் வாசத்தை மாற்றிக் கொண்டிருந்தன. தானும் தனது அக்காவும் கூட்டு உரிமையாளர்கள் என்று அந்த இளைஞன் கூறியிருந்தான். இப்போது அக்காவும் அவளது கணவரும் காரில் வரத் தொடங்கியிருந்தனர். பணியாட்களின் எண்ணிக்கைக் கூடிப் போயிருந்தது. அலங்கார விளக்குகள், வித விதமான ஓவியங்கள்.. நீரூற்று புத்தர்.. நீண்ட நெடிய சுழற்நாற்காலிகள்.. உயிர் பூங்கொத்துக்களுக்கான இட ஏற்பாடுகள் என உள்ளலங்காரத்தினை வெளிச்சமிட்டுக் கொண்டிருந்த கண்ணாடிக் கதவை பார்த்துக் கொண்டே கடந்தனர் தெருவாசிகள். கார்பெண்டிங்.. பெயிண்டிங்.. எலக்டிரிகல் என வேகப்படுத்தப்பட்ட வேலைகள் குப்பைகளாக காலி மனையை நிரப்பத் தொடங்கியதில் முசுடின் மீது அவர்களுக்கு கோபம் கூடிப் போனது. தருணம் பார்த்து காத்திருந்தனர்.

”என்ன சார்.. எதிர்ல ஜரூரா வேல ஆயிட்டுருக்கு போலருக்கு..” குடிக்கும் தண்ணீருக்கு கூட அவர்கள் அக்கம்பக்கத்தாரை அணுகாமலிருப்பது பேசுவதற்கு தயக்கத்தை உண்டாக்க எதிர் வீட்டுக்காரரே தகவல் கடத்தியானார். “பொம்பளைக்கு பொம்பளை பேசினாதான் என்ன..? ஆம்பளைங்களுக்குதான் புத்தியில்ல.. ஊர அனுசரிக்கணும்னு பொம்பள எடுத்துச் சொல்லுமா.. அத வுட்டுட்டு இதும் பிர்ர்ன்னு திரியுது..“  வீட்டுப் பெண்கள் அந்த இளைஞனின் அக்காவை குறி்த்து முணுமுணுக்க ஆரம்பித்தனர். துடைப்பத்திற்கு கூட யாரையும் எதிர்பார்க்காதது  குறையாகத் தோன்றியது தெருவாசிகளுக்கு “வௌக்குமாத்த கூட ஒரு மனுசி வீட்லேர்ந்து மூட்ட கட்டி கொண்டாருது பாரேன்..“ பொருமலாக விழுந்தது வார்த்தைகள்.

இரவு நேரத்தில் பிரைமர் அடித்து தெருவோரங்களில் காய வைக்கப்பட்டிருந்த மரங்களை நடைப்பயிற்சிக்கு கிளம்பிய தெருவாசியொருவர் பூட்ஸ் காலால் எத்தினார். ”என்னாத்த லேண்ட் மார்க்கு..  தெருவ நாஸ்தி பண்றானுங்க..”

எல்லோருக்குமே இந்த எண்ணம் வந்தது..

தெருவோரம் கிடந்த ஒயர் ஒன்றில் தெருவாசியொருவரின் வெற்றுக்கால் பட்டதில் சுறுசுறுவென மின்சாரம் ஏறியதாக சொல்லி காலை உதறி விட்டு கத்தி தள்ளி விட்டார் அவர். ”பணங்காசு இருந்தா அவுனுங்களோட.. உசுரு போச்சுன்னா தருவானுங்களாமா..?”” அவரின் கூச்சலில் எதிர்வீட்டுக்காரர் வெளியே ஓடி வந்தார். இரவு மணி ஒன்பதிருக்கும். “இன்னும் கனெக்ஷனே குடுக்கல சார்..“ மாறி மாறி சொல்லிக் கொண்டே மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தார் எலக்டீரிஷியன். ”எங்க ஒங்க ஓனரு.. அவரு வந்து சொல்ல மாட்டாராமா..?” எகத்தாளமாகக் கேட்டது தெரு.

”அந்த தம்பி இப்பதான் சாப்ட போயிருக்குது.. அதான் நடந்தது தப்புன்னுட்டாங்களே.. வுடுங்க சார்..” என்றார் கதவை இழைத்துக் கொண்டிருந்த ஒருவர்.

”அவர் போன் நம்பர வாங்குங்க சார்.. நான் பேசறன்..” தெருவாசிகள் கூடினர்.

எதிர் வீட்டுக்காரர் அந்த இளைஞனின் அலைபேசி எண்ணை வாங்கிப் பேசினார். தெருவே அவர் முகத்தை ஏறிட்டது. “விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்தப் பையன் அய்யய்யோன்னு பதறீடுச்சு… இப்ப வந்துடும்..” என்றார் பொது தகவலாக. அரை மணி நேரம் காத்திருந்து விட்டு நகரத் தொடங்கியது கூட்டம். மறுநாள் அந்த இளைஞன் வழக்கம்போல ஆறு மணிக்கு ஆஜராகியிருந்தான். தானே அணுகுவான் என காத்திருந்து விட்டு பிறகு நேராக அவனிடம் சென்றார் எதிர் வீட்டுக்காரர். “அய்யய்யோ..“ என்றான் மறுபடியும் புதிதாக கேட்பதுப் போல.

“சப்போஸ் ஷாக் அடிச்சு எதாவது பெருசா ஆயிருந்துச்சான்னா என்னாவறது தம்பி..?”

”ஆமா சார்.. ஆமா சார்..” என்றான்.

“ரெசிடென்ஷியல் ஏரியாவுல ஹோட்டல் நடத்துறீங்க.. கொஞ்சம் பாத்துக்கோங்கப்பா.. எல்லாரும் சொந்த வீட்டு ஆளுங்க.. வியாபாரத்துக்கு வியாபாரம்.. கார்டியாலிட்டுக்கு கார்டியாலிட்டி..” .

“ஆமா சார்..” என்றான் ஆமோதிப்பாக. பிறகு “அட்வைஸ்க்கு தேங்க்ஸ் சார்..” என்றான். சட்டென்று அவன் மீதான நெருடல் மறைந்து நெகிழ்வாக இருந்தது எதிர் வீட்டுக்காரருக்கு. “என் தம்பிக்கின்னா சொல்ல மாட்டனா.. இதுக்குப் போயீ என்னாத்துக்குப்பா தேங்க்ஸ் அதுஇதுங்கிற..” என்றார். உரையாடல் தொடர்ந்ததில் வரும் ஞாயிறன்று உணவகம் திறக்க இருப்பதாக சொன்னான்.

வியாழனன்று அதிகாலையிலேயே ஹோமம் நடந்ததற்கான அடையாளங்கள் இருந்ததை தெரு கவனிக்கத் தவறவில்லை. எதிர்வீட்டுக்காரர் ஹோமத்துக்கு தமக்கும் அழைப்பில்லை என சத்தியம் பண்ண வேண்டியிருந்தது.

“திமுரு புடிச்சவங்க போலருக்கு..” மெதுவாக மூட்டம் தெரு முழுக்கப் பரவியது..

”ஏயப்பா.. ஏசி மிஷினே ஏழெட்டு வந்து எறங்கியிருக்கு..”

”கிச்சன் சாமான் மட்டும் மூணு குட்டியானைல்ல வந்துச்சு..”

”ஆட்டமெல்லாம் பிரமாதந்தான்.. பிசினஸ் பிக்கப் ஆவுணுமில்ல..”

”பிளாக்க வொயிட் ஆக்கறதுக்கு பண்றாங்களோ..?”

”பின்ன.. சின்ன தெருவுக்குள்ள இவ்ளோ மொதலீடு பண்றதுக்கு முட்டாப்பசங்களாக்கும்..” வேடிக்கை பார்ப்பதற்கென்றே நடமாடிய தெருவாசிகளும் உண்டு. சன்னலை ஏற்றி காருக்குள்ளிருந்து கள்ளப்பார்வை பார்ப்போரும் உண்டு.

”பெரிய சுத்த சீலன் மாதிரி நம்ப குப்பக் கொட்டும்போது சண்டைக்கு நிக்குமில்ல அந்த முசுடு.. இப்ப என்ன பண்ணும்னு பாக்கலாம்.. சாப்பாடு..போக்குவரத்துன்னு இவனுங்க காலி ப்ளாட்டுல கொட்டுட்டும்.. பேசிக்கலாம்..” கருவினார்கள். முசுடு எங்கோ மகன் வீட்டுக்கு சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டதில் கத்தவியலாத வன்மம் கூடிப் போனது எல்லோருக்கும்.

கிட்டத்தட்ட ஹோட்டல் முழுமையடைந்திருந்ததில் உறவோ.. நட்போ பார்க்க வரத் தொடங்கினர். அவர்களின் கார்கள் பெரியதாக இருந்தது. தெருவாசிகள் நீண்ட நெடிய ஹாரன்களை வேண்டுமென்றே மிக அதிகமாக அடித்தனர். மறுப்பேச்சின்றி அவர்கள் கார்களை நகர்த்திக் கொண்டாலும் ஆக்சிலேட்டரை உசுப்பிக் கொண்டு சீறினர். கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த பெண்கள் இருவர் தெருவாசியொருவரின் வீட்டு வாசலில் அமரப் போக அவர் கத்தித் தீர்த்து விட்டார். வேண்டுமென்றே அதிக டெசிபலில் ஒலித்த அவரின் கத்தல் உணவகத்தின் வாசலில் நின்றபடியே ஏதோ பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனையும் அவன் தமக்கையையும் அணுகவில்லை.

உணவகமும் அதன் வேலைகளும் தெருவோரின் கூர்ந்த அவதானிப்புக்குள் வந்ததில் எதிர் வீட்டுக்காரர் பிரதிநிதியானார். ”இன்னிய நியூஸ் பேப்பர்ல உங்க ஹோட்டல் விளம்பர நோட்டிஸ் வச்சு அனுப்பியிருந்தீங்க போல.. தென்றல்நகர்ல என் .ஃபிரண்ட் ஒத்தன் இருக்கான்.. என்னடா.. உங்க ஏரியாவுல புதுசா ஹோட்டல் வரப்போவுதாமேன்னு போன் பண்ணுனான் தம்பி..”

”ஆமா சார்.. ஆமா சார்.. உங்களுக்கும் வந்துச்சில்ல சார்..” என்றான் அந்த இளைஞன்.

”ம்ம்.. அதோடதா நம்ம தெரு ஆளுங்களுக்கு ஒரு வாய் வார்த்த தகவல் சொல்லீட்டீங்கன்னா திருப்தியா போயிடும் தம்பி..”

”ஆமா சார்.. ஆமா சார்..” அதற்குள் யாரோ வந்து விட ”மிரர் ஃபிக்ஸ் பண்ண ஆள் வந்துருக்காரு சார்..” விடைப்பெற்றுக் கொண்டான். அன்று மட்டுமல்ல அடுத்த நாள் கூட அவன் யார் வீட்டுக்கும் செல்லவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் செம்மண் லோடு வந்திறங்கியது. இறக்கி வைக்கப்பட்ட ஆளுயுரச் செடிகள் தெருவை அடைத்திருந்தன.  ”தெருன்னு நெனச்சீங்களா.. ஒங்க வீடுன்னு நெனச்சீங்களா..? செரி.. போனா போவுதுன்னு பெரும்போக்கா இருந்தோம்னா ரொம்பதான் பண்றீங்க..” ஒருவர் ஆரம்பித்ததில் கதவுகள் மளமளவென திறந்து மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர்.

”நாலு பேர நம்பி செய்ற தொழிலா.. இல்ல நாலு செவத்துக்குள்ள கமுக்கமா நடக்கற வியாபாரமா.. வாடகைக்கு வாரவங்களுக்கே இவ்ளோ இருந்தா சொந்த வீட்டு ஆளுங்களுக்கு எவ்ளோ இருக்கும்…?”

இரவு வேலைக்கு வந்திருப்பவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்து பிறகு மளமளவென்று செடிகளையும் மண்ணையும் பின்புறத்திற்கு கடத்தினர்.

“அழுத்தக்கார ஆளுங்க.. ஹோட்டலுக்கு வர்றவங்க வண்டி.வாசின்னு தெருவுல கொண்டாந்து நிறுத்தட்டும்.. அப்றமில்ல இருக்கு அவனுங்களுக்கு..”

”குப்பைய கொட்டி நாறடிக்கிறான்னு பெட்டிசன் தட்டிட மாட்டேன்..?” என்றார் ஒருவர்.

”வீம்பு பண்ணுன ஆட்டோக்காரன் ஒருத்தன் துண்டக்காணாம்.. துணியக் காணாம்னு ஓடுல..?” வீரமாகப் பேசினார் ஒருவர்.

மளமளத்த வேலைகள் சனிக்கிழமைக்கு கொண்டு வந்து நிறுத்தின. அலங்கார பலுான்கள் வாயிலில் வரவேற்பு வளையமாக கட்டப்பட்டன. குலைத் தள்ளிய வாழை மரங்கள் வந்திறங்கின. தோரணங்கள் கட்டப்பட்டன. ஷார்ட்லீ ஓபன்ஸ் என்ற வாக்கியம் கவனமாக நீக்கப்பட்டு “ஓபன்“ என்ற வார்த்தை நேர்த்தியாக தொங்க விடப்பட்டது. அன்றிரவே காலிமனை வாகனங்களால் நிரம்பியிருந்தது.  “நடக்கட்டும்.. நடக்கட்டும்..“ கவனித்தப்படியே இருந்தனர் தெருவாசிகள்.

ஞாயிற்றுக்கிழமை பொழுது விடியும்போதே எல்லோரும் மங்கல இசைக் கேட்டனர். அல்லது மங்கல இசைக் கேட்டதால் விடிவதற்குள் விழித்துக் கொண்டனர். எதிர்பார்த்தப்படி ஆட்களுக்கு குறைவில்லை. காலிமனையில் நிரம்பியிருந்த கார்களில் ஆறேழு காவல் துறைக்கு சொந்தமானவையாக இருந்தன. வண்டிவாசிகளின் நடமாட்டத்தால் தெருவாசிகள் ஓரமாக நடந்துச் சென்று ஆறாவது மனையில் குப்பைகளை வீசினர். உண்டு முடித்த காலி இலைகள் மூன்றாவது மனையில் விழுவதும் நாய்கள் அதை குறி வைத்து ஓடுவதுமாக தெரு அந்த ஞாயிறை உள் வாங்கியிருந்தது. காய்கறி.. மட்டன் கறி என பையும் கையுமாக சென்ற தெருவாசிகள் வண்டியை நெளித்தும் ஒடித்துமாக ஓட்டிச் சென்று அமைதியாக வீடு திரும்பினர்.

 

 

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்

ஜிஃப்ரி ஹாஸன்

பின்-நவீன அரசியல் கவிதை வெளி

பின்-நவீன அரசியலானது ‘வித்தியாசங்கள்“, “கேள்விக்குள்ளாக்குதல்” என்பவற்றை முதன்மைப்படுத்துகிறது. அடக்கும் அல்லது மற்றமையை விளிம்பு நோக்கித் தள்ளும் குழுவுடன் ஒன்றிப் போகாமல் முரண்படுதல் என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிஞர்கள் தங்களை விளிம்பு நோக்கித் தள்ளும் தேசங்களுடன்/ குழுக்களுடன்  ஒன்றித்துப் போகாமல் அவற்றிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தலை தம் கவிதைகளில் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கினர். விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட தமது மக்களுக்கான சிறுகதையாடல்களை உருவாக்குவதற்கும் அவற்றை மீள மீள வலியுறுத்துவதற்குமான கருவியாகவும் அவர்கள் கவிதையை பயன்படுத்தத் தொடங்கினர். எனவே, அவர்கள் தமிழ் மொழிச் சமூகங்கள் எனும் பொது அடையாளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலைப்பாட்டை எடுத்தனர்.

தமக்கான அடையாள அரசியலை தமது கவிதைப்புனைவுகளில் தாமே உருவாக்கிக் கொள்ளும் செயற்பாட்டில் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர். அடையாளம் என்பது ஒரு புனைவைப் போல கட்டமைக்கப்படுகிறது என்ற பின்-நவீனக் கருத்தியலை இந்த அடையாள உருவாக்கம் அனுசரித்துச் செல்வதாக இருந்தது. ஏனெனில் அவை பேசும் அரசியல் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட சிறுபான்மை மக்கள் பற்றியது. இதனால் ஈழத்து முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளியில் பின்-நவீன அரசியல் கவிதைகளே அதிகம்.

அந்தவகையில் பார்க்கும் போது முஸ்லிம் கவிஞர்களால் எழுதப்பட்ட அனைத்து எதிர்ப்புக் கவிதைகளும் பின்-நவீன அரசியல் கவிதைகளுக்குள் உள்ளடக்க முடியும். அதேபோன்று சிங்களப் பெருந்தேசியவாத அடக்குமுறைக்குள்ளான மற்றொரு சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் எதிர்ப்புக் கவிதைக் குரல்களையும் பின்-நவீனக் கவிதைக் குரலாக பார்க்கப்பட முடியும். ஆனால் இந்தக் கட்டுரை ஈழத்தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளி பற்றி மட்டுமே பேசுகிறது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைகளில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில கவிஞர்களால் சொல்லப்பட்ட கவிதைகள் பின்-நவீனக் கவிதைகள் என இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளி

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு விரிபரப்பையுடையது. சிறுகதை, நாவல் வெளியை விட இது மிகவும் பரந்துபட்டது. இன்று அதிகமான இளைஞர்கள் முஸ்லிம் கவிதைவெளியில் வினைத்திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். விடுபடல்கள் ஏதுமின்றி இந்தத் தலைப்பில் ஒரு முழுமையான ஆய்வை செய்வதற்கு நீண்ட காலமும் ஒரு பாரிய உழைப்பும் அவசியமாகிறது. ஆனால், இந்தக் கட்டுரை குறிப்பிட்ட சில ஈழத்து நவீன முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளை மட்டுமே அதுவும் மிக மிகச் சுருக்கமாக முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

பின்-நவீனக் கவிதைவெளியில் நாம் இலகுவில் பயணிப்பதற்காக முதலில் பின்-நவீனக் கதையாடல் பற்றிய ஒரு சிறு புரிதல் அவசியமாகும். பின்-நவீனத்துவம், அதிகாரமானது பெருந் தளங்களிலோ- நுண்தளங்களிலோ எந்த வடிவத்தில் தொழிற்பட்டாலும் அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் கலகத்தன்மை மிக்க ஒரு கோட்பாடகும். அதிகாரங்களால் புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட மக்கள்  மீதும் கவனஞ் செலுத்துவதுடன் விளிம்புநிலை மக்கள் மீதும் சிறு கதையாடல்கள் மீதும் கவனங்கொள்ளும் அதேநேரம் விளிம்புநிலை மக்களுக்கான சிறு கதையாடல்களை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது.  சிறுபான்மை இனங்கள், பெண்கள், சிறுவர்கள் போன்ற விளிம்பு நோக்கித் தள்ளப்பட்டவர்களின் குரல்களைக் கவிதைகளில் பதிவு செய்வதையே இங்கு பின்-நவீனக் கவிதைவெளி குறித்து நிற்கிறது.

ஈழத் தமிழ் இலக்கிய சூழலில் பின்-நவீனத்துவத்தை ஒரு கோட்பாடாக விளங்கி, வரித்துக் கொண்டு அதன் மீது ஈடுபாடு கொண்டு எழுதுவதற்கு முன்னமே இலங்கையின் இனப்பெருந் தேசியவாதங்களாலும், அவர்களின் செயற்பாடுகளாலும் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம்களின் குரலை முஸ்லிம் கவிதைச் செயற்பாட்டாளர்கள், அவற்றின் அதிகாரங்களை நோக்கி உண்மையை உரத்துப் பேசும் கலகக் கவிதைப் பிரதிகளில் ஒலிக்க விட்டனர். இந்த எதிர்ப்புக் குரல் ஒரு தனிக் கவிதை இயக்கமாகவே எழுச்சியுறுமளவிற்கு 90-களில் முனைப்புப் பெற்றது. இந்த எதிர்ப்புக் கவிதை இயக்கத்தை சோலைக்கிளி, ஓட்டமாவடி அறபாத், என். ஆத்மா, ஏ.ஜீ.எம். ஸதக்கா, அஷ்ரஃப் சிஹாப்தீன், றஷ்மி, அனார், அலறி, இளைய அப்துல்லாஹ், முல்லை முஸ்ரிபா, நவாஸ் சௌபி, றியாஸ் குரானா, எஸ். நளீம், பஹீமா ஜஹான், ஜிஃப்ரி ஹாஸன், மருதமுனை விஜிலி, ஏ.எம். குர்ஷித், கிண்ணியா ஏ.நஸ்புள்ளாஹ், கிண்ணியா சபருள்ளாஹ் மற்றும் பலர் முன்னெடுத்தனர்.

எனினும் அந்த கவிதை இயக்கம் பின்நவீனக் கோட்பாடு பற்றிய அறிமுகத்தினாலோ, புரிதலினாலோ அல்லது அதன் மீதான ஈடுபாட்டினாலோ வந்ததல்ல. அது தனது சமூகத்துக்கெதிராக புறத்திலிருந்து பிரயோகிக்கப்பட்ட அதிகாரங்களை எதிர்த்து நிற்கும் ஒருவித இனப்பற்றுடன் கூடிய செயற்பாடாகவே மேற்கிளம்பியது. இவர்கள் பெருந் தேசியவாத அரசியல் அடக்குமுறைகளை எதிர்க்கும் கலகக் கவிதைகளை புனைந்ததோடு மிகவும் பிளவுபட்ட, பன்மைத்தன்மை வாய்ந்த, அடையாள அரசியலுக்கான பாதையையும் அமைத்தனர். மேலாதிக்கச் சொல்லாடலுக்கெதிராக விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட அடையாளத்தின் சுயபிரக்ஞையை வலியுறுத்துவதையே இந்த முஸ்லிம் கவிதைச் செயற்பாட்டாளர்கள் இக்காலப்பகுதியில் முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த கட்டுரை அளவுப் பொருத்தம் கருதி இவர்களில் ஒரு சில கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி மட்டுமே அதுவும் மிகச் சுருக்கமாக கவனத்திற்கொள்கிறது.

ஒரு காலத்தில் போருக்குள் சிக்கிக் கிடந்த ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதை இன்று அதன் பரப்பை குறுகிய கால எல்லைக்குள் மிக வேகமாக விரிவுபடுத்திக்கொண்டு விட்டது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைகள் இந்த வளர்ச்சித் தன்மையை வெளிப்படுத்துவதற்கு ஒரு சில கவிஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினர். இவர்களில் அனார், மஜீத், றியாஸ் குரானா, ஜமீல், றஸ்மி போன்ற கவிஞர்கள் இந்தப் புதிய மாற்றங்களின் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.

இந்த மாற்றம் கவிதையின் எடுத்துரைப்பு முறையிலும் உள்ளடக்கத்திலும் நிகழ்ந்து ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைவெளியை ஒரு புதிய தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியை பின்-நவீனக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வகைப்பாட்டினை நாம் செய்து கொள்ள முடியும்.

  1. பின்-நவீன அரசியல் கவிதைகள்
  2. பின்-நவீன அழகியல் கவிதைகள்
  3. பின்-நவீனப் பெண் மற்றும் சிறுவர் வெளி

.

  1. பின்-நவீன அரசியல் கவிதைகள்

புற அதிகாரத்தினால் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினர் குறித்த சிறுபான்மைக் கதையாடலுக்கான தேவையை கோரும் வகையில் சோலைக்கிளியின் கவிதைக் குரல் ஒலித்தது. இவர் அதிகாரத்துக்கெதிரான தன் எதிர்ப்புக் குரலை குறியீடுகளாலும், படிமங்களாலும் வெளிப்படுத்தினார்.

“அந்தக் கிராமத்தின் குழந்தைகளை
பேய்கள் சப்பியதாக நட்சத்திரங்கள் சொல்லிச் சொல்லி விழுந்தன”

சோலைக்கிளியின் இந்த எதிர்ப்புக் குரலுடன் மேலும் பல எதிர்ப்புக் குரல்கள் முஸ்லிம் கவிஞர்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கின.

தொழிலுக்காக சென்று காடுகளில் வைத்துக் கொல்லப்பட்ட தந்தைமாரின் மக்கள், சமூகத்தில் மேலும் மேலும் எவ்வாறு விளிம்புக்குச் செலுத்தப்பட்டார்கள் என்பதை ஓட்டமாவடி அறபாத்

‘மையிருட்டில் நீ புத்தகத்தில் மயிலிறகைப் பத்திரப்படுத்துகிறாய்
உன் வாப்பாவைக் கேட்டுச் சவுத்து’

என பதிவு செய்தார்.

எஸ்.நளீம் முஸ்லிம்களின் விளிம்புநிலைக் குரலை இப்படிப் பதிவு செய்தார்-

‘நண்பர்களே! நீங்கள் நாடு கேட்கிறீர்கள் அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள் ஆனால் நான் என்ன கேட்டேன்
இறக்கவும் இழக்கவும்..’

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீன அரசியல் கவிதைவெளியில் புலிகள் இயக்கத்தில் அப்போது இணைந்து செயற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கவனங் கொள்ளப்படும் ஒரு சாராராக விளங்குகின்றனர். முல்லை முஸ்ரிபாவின் ‘மயூரா என்றாகிவிட்ட நிஸ்மியாவுக்கு’ என்ற கவிதையிலும், தீரன் ஆர்.எம். நௌசாத்தின் ‘மாவீரர் மேஜர் அன்பு என்கிற முஹம்மது அன்வர் ஞாபகமாக’ என்ற கவிதையிலும் மேலும் சில கவிதைகளிலும் அவர்கள் கவனங் கொள்ளப்படுகின்றனர்.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின் நவீனக் கவிதைவெளியின்  அரசியல் குரல் 90-களில் ஒலிக்கத் தொடங்கியபோதும் அவை ஈழத் தமிழ் பொதுக் கவிதைப் போக்கிலிருந்து வித்தியாசங்களைக் காண்பிக்கவில்லை. இதில் 80-களில் சோலைக்கிளியைப் போன்று 90-களில்  வித்தியாசங்களைப் பதிவு செய்தவர் றஷ்மி. ஈழத் தமிழ்க் கவிதையின் வடிவ அமைப்பில் ஒரு தளமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர் ஈழத் தமிழ்க் கவிதையின் பொதுப்போக்கிலிருந்து விலகிச் செல்லலானார். அவரது வித்தியாசம் கவிதைத் தலைப்பிடலிலிருந்து தொடங்கியது. ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வு‘ முதலாய கவிதைகளில் இந்த வடிவ மாற்றம் தென்பட்டது. கவிதைகளில் சொற்களை இடம் மாற்றிக் கையாளும் முறையை முதன் முதலில் றஷ்மியின் கவிதைகளில் தான் காண முடிந்தது.

நிகழ்த்திக் காட்டியது” என்பதை ‘காட்டிற்று நிகழ்த்திக்” என கருத்துச் சிதைவின்றி சொற்களை இடமாற்றிக் கையாளும் முறை நமது ஈழத் தமிழ்க் கவிதைகளில் தொடர்ச்சியான ஒன்றா அல்லது புதுமையானதா என்பது ஆய்வுக்குரியது. றஷ்மியின் கவிதைப் புனைவானது பெரும்பாலும் அரசியலைப் பேசுபவையாகவே இருந்தது. அது 2004-ல் சுனாமி ஏற்படும்வரை தனது பரப்பெல்லையை விரிவுபடுத்த தவறியிருந்தது.

ஆயினும் இந்த முஸ்லிம் கவிஞர்களின் பின்-நவீன அரசியல் கவிதைகள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் பற்றிப் பேசியனவே ஒழிய ஒடுக்கும் குழுக்களிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தும் சிறுபான்மைக் கதையாடலை வலுவாகப் பதிவு செய்யத் தவறியிருந்தன. அதற்குக் காரணம் அப்போது இந்தக் கவிஞர்களுக்கு பின்-நவீனத்துவம் பற்றிய கோட்பாட்டுப் புரிதல் அல்லது ஈடுபாடு இல்லாமல் இருந்ததுதான்.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியின் அரசியல் குரலை பின்-நவீனக் கோட்பாட்டோடு கொண்ட ஈடுபாட்டினூடாக வெளிப்படுத்தியவர் கவிஞர் மஜீத். கவிதையின் வடிவ அமைப்பில் றஷ்மி ஏற்படுத்திய தளமாற்றத்ததை மஜீத் இன்னொரு வடிவில் அல்லது இன்னொரு தளத்தில் நிகழ்த்திக் காட்டினார் ஈழத்து பின்-நவீன அரசியல்வெளியைப் பதிவு செய்த கவிதைகளில் கவித்துவம் மிக்கதும், பின்-நவீன அழகியல் உள்ளதுமான கவிதைச் செயற்பாட்டாளன் என்ற வகையில் மஜீத் முன்னோடியாக நிற்கிறார். அவரைத் தொடர்ந்த பங்களிப்பாளராக நவாஸ் சௌபி, ஜிஃப்ரி ஹாஸன் போன்றவர்கள் வருகின்றனர். மஜீதின்  ‘புலிகள் பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ எனும் கவிதைப் பிரதி இரு பெரும்பான்மைத் தேசியங்களாலும் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரின் அரசியல் தன்னிலையை நுட்பமாகப் பதிவு செய்தது. இங்கு மஜீதின் கவிதைக் குரல் சொல்வதைப் போன்று,

“கோடையை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகிறாள்”

வெளியற்று அலையும் ஒரு மக்கள் திரளின் துயரச் சித்திரத்தை மஜீத் இப்படி வரைந்தார்;-

“எனது வெளியை பங்கு போட்டு
சிங்கங்களும், புலிகளும் பகிர்ந்து கொண்டன”

இங்கு தமது அடையாளங்களை, சுதந்திர இருப்பை, தீர்மானிக்கும் அதிகாரத்தை மையங்களுக்கு கொடுக்காமல் தனக்கான அடையாளத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளக் கோரும் விளிம்புகளின் கதையாடலை மஜீத் இப்படிப் பதிவு செய்கிறார்-

“உங்கள் கற்பனையை வரைவதற்கு எங்கள் சுவர்கள்
பொருத்தமற்றது எமது நிறங்களையும் எமது சித்திரங்களையும் எமது குழந்தைகள்
வரைவர்”

அதேநேரம் தங்களை ஒடுக்கும் குழுவிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதன் மூலம் தனி அடையாளங்களை வலியுறுத்துவதன் மூலம் தமது வித்தியாசங்களை இவர்கள் வெளிக்குக் கொண்டு வந்தனர். இந்த அடையாளத்தை வலியுறுத்துவதில் தயவு தாட்சண்யமற்ற ஒரு கடும் தொனி நவாஸ் சௌபியிடமிருந்து வெளிப்பட்டது. விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினருக்கான அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதில் மஜீதைப் போன்ற தீவிரம் நவாஸ் சௌபியிடமும் இருந்தது. நவாஸ் சௌபியின் கவிதைக் குரலில் மிகத் தீவிரமானதொரு கலகத்தன்மை எப்போதும் இருந்தது.

ஆயினும் நவாஸ் சௌபியின் கவிதைக் குரலின் சீற்றம் அவரது இரண்டாவது தொகுதியான ‘எனது நிலத்தின் பயங்கரம்’ என்ற தொகுதிக்குள் சற்றுத் தணிந்திருந்தது. அதற்குள் ஓர் அழகியல் தன்மையும் சேர்ந்து கொண்டது.

ஆக ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீன அரசியல் கவிதைவெளியானது பின்-நவீனக் கூறுகளை முழுமையாக உள்வாங்கி எழுதப்பட்டவையாக அன்றி தங்கள் இனத்தின் மீதான அடக்குமுறையை எதிர்க்கும் ஒருவித எதிர்ப்பரசியலின் கவிதை வடிவமாக மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

பின்-நவீன பெண் வெளி

பெண்ணின் தனித்தன்மையையும், சிறப்புத் தன்மையையும் உடைய கதையாடலை உருவாக்குவதன் மூலம் பெண்ணின் சுய அடையாளத்தை பின்-நவீனக் கவிதைச் செயற்பாட்டாளர்கள் பேசினர். இவர்களில் அனார், பஹீமா ஜஹான், பெண்ணியா போன்றவர்கள் முக்கியமானவர்களாக விளங்குகின்றனர். ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனப் பெண்வெளியின் முன்னோடியாகவும், அதிக பங்களிப்பாளராகவும் அனார் விளங்குகிறார். ஆனால் இங்கு அளவுப் பொருத்தம் கருதி அனாரின் கவிதைகள் பற்றி மட்டுமே மிகச் சுருக்கமாக பேசப்படுகிறது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கவிதைகளும் காணப்படுகின்றன. பெண்களில் சிலர் விளிம்புகளை உருவாக்குகின்ற மையங்களாக மேற்கிளம்பி வரும் இன்றைய சூழலில் விளிம்புகளாக வாழும் பெண்கள்தான் இன்று சமூகத்தில் அதிகமாகவுள்ளனர்.

இங்கு பின்நவீன பெண்வெளி எனும்போது ஆணாதிக்க தந்தைவழி அமைப்பிலிருந்து அல்லது மேலாதிக்கம் கொண்ட ஆண் சொல்லாடலிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டிருக்கிறார்கள், அத்துடன் அவர்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டவர்களாக வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அதன் வாதமாக இருந்தாலும் அதன் கருத்துநிலைக்குள் முழுiமையாக அள்ளுண்டு போய் அதற்கான கவிதைப் பிரதிகளை அனாரோ, பஹீமா ஜஹானோ செய்யவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால், இந்த விடயங்களை பின்-நவீனக் கோட்பாடாகப் புரிவதற்கு முன்னரே அனார் இந்த நிலமைக்கெதிரான கலகக் கவிதைப் பிரதிகளைப் படைக்கலானார். முஸ்லிம் சமூகவெளியில் இஸ்லாமியக் கருத்துநிலைகள் வலுவாகக் கடைபிடிக்கப்படும் சூழலில் அனாரோ, பஹிமா ஜஹானோ தங்களது கவிதைப் பிரதிகளில், சமய சமூக வரையறைகளைத் தாண்டாது, ஏற்றுக்கொள்ளத்தக்க எல்லைகளுக்குள் நின்று கொண்டனர். இப்படி ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு அனார் அதில் உச்சத்தையும் தொட்டார். வரம்பு மீறும் பிரதிகளை அவர்கள் படைக்கவில்லை என்பதை அவர்களது கவிதைகளைப் பற்றி செவிவழியாக கேள்விப்பட்டவர்களன்றி உண்மையில் வாசித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம் பண்பாட்டின் பெண் குறித்த பொதுக்கூறுகளை மீறாமல் அனார் உருவாக்கும் பெண்வெளி ஒரே சமயத்தில் பெண் படைப்பாளியாகவும், அதன் பாத்திரமாகவும் இருப்பதன் சிக்கல்களையும் பேசுகிறது. அனார் உருவாக்கும் பெண்கள் தீவிர மேலைத்தேயப் பெண்ணிலைவாதிகளின் குரலிலன்றி தமக்குச் சொந்தமான குரலில் பேசுபவர்கள்.

கனவுகள் காண ஏங்கும் கனவு’ (சுலைஹா கவிதை) என தனக்குள்ளும் தனக்கு வெளியேயுமிருக்கும் பெண்ணை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அனார். இன்னுமொரு கவிதையில், ‘தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை’ ஆண் குரலின் முன்னால் மௌனித்துக்கிடந்த பெண்வெளியில் சீற்றத்துடன் பேசத் தொடங்குகிறார். பெண்ணின் உலகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான கிட்டத்தட்ட எல்லா வகையான சாத்தியப்பாடுகளையும் அனார் தனது கவிதைகளில் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பெண் என்றால் யார் என்பதை அறிமுகப்படுத்தும் அனாரின் கவிதை ஒரு அறிவிப்பு போல் வெளியாகிறது. பெண்ணின் வாழ்வைச் சுற்றியுள்ள மாயக் கட்டுகளை அவிழ்த்து விடும் மர்மச் சொற்கள் சுதந்திரமாய் தெறித்து வருகின்றன.

“நீளமான நூலாய்த் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு சிறுகச்சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வௌ்ளை நூல் தெரியும் வரை”
– (‘மண்புழுவின் இரவு‘)

இந்தக் கவிதை ஒரே நேரத்தில் மண்புழு பற்றியதாகவும் மண்புழுவான பெண் பற்றியதாகவுமிருக்கிறது. இந்தக் குரல் ஒரு எதிர்பார்ப்பை, ஒரு மாற்றத்தை எதிரொலிக்கிறது. இருள் என்ற விளிம்புக்குள் தள்ளப்பட்ட பெண்களுக்கான வெளிச்சத்தைக் கோரும் கவிதை அது.

உன்னுடைய சொற்கள் அறுவடைக் காலத்தின்
நெற்கதிர்கள்

என இன்னொரு கவிதையில் குரல் தாழ்த்தப்பட்ட பெண்களின் சொற்களுக்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.

பொதுவான பார்வையில் கவிதைகளில் விபரிக்கப்படுவது போன்ற நெருக்கடிகளை பெண்கள் உண்மையில் அனுபவிப்பதில்லை என்ற பார்வை நமக்குள் இருக்கலாம். அது ஒருவகையில் உண்மையாக இருந்தாலும், பிரச்சினை என்பதை வெறுமனே உடல் சார்ந்த வன்முறையாக மட்டும் பார்க்காமல் பெண்ணின் அக உலகம் சார்ந்ததாகவும் பார்க்கப்பட வேண்டும் என்ற பார்வையையும் அனார் ஏற்படுத்துகிறார்.

அனாரை ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்நவீனக் கவிதைவெளியின் பெண் குரலாக மட்டுமே பார்ப்பதும் அவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ஈழத்து தமிழ் முஸ்லிம் பெண்வெளியானது அவரது முதன்மையான பங்களிப்பும் முன்னோடி நிகழ்ச்சியுமாகும் என்றளவில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றபடி அவரது கவிதைகள் பன்முகப் பார்வை கொண்டவையாகவும் தமிழின் விரிந்த பரப்புக்குரியனவாகவும் விளங்குகின்றன.

உலகக் கவிதைகளோடு எனக்குள்ள பரிச்சயத்தின்படி அனாரின் கவிதைகள் அந்தத் தரத்தில்தான் இருக்கின்றன என்பதை உறுதியாக கூற முடியும்.

விளிம்புக்குள்ளான பெண்கள் பற்றிய ஒரு ஆண் கவிதைக் குரல் ஏ.எம். குர்ஷிதினுடையது. பின்-நவீனத்துவம் கூறும் ‘மற்றமை’ மீது கவனங்கொள்ளுதல் என்ற வகையில் சமூகத்தில் அவஸ்த்தையுறும் பெண்கள் பற்றிய அவரது கவனங்கொள்ளலைக் குறிப்பிடலாம்.

‘முப்பது வயதில் கணவனை இழப்பதும்
தீக்கங்குகளில் உழல்வதும் ஒரே வேதனைதான்’

என விதவைப் பெண்களின் அவஸ்த்தையை சொல்லத் தொடங்கும் குர்ஷித் அந்தக் கவிதைக்குள் விபரிக்கும் விதவைகளின் உலகம் நம்மை சுட்டெரிக்கிறது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் சிறுவர் வெளியை அதிகம் கவனத்திற்குட்படுத்தியவர் கவிஞர் ஜமீல். சமூக தளத்தில் விளிம்புக்குள்ளான சிறுவர்களின் வெளியை அதன் எல்லா பரிமாணங்களோடும் சித்திரித்தவர் ஜமீல். இதற்கு எடுத்துக்காட்டாக நிறைய கவிதைகளைச் சொல்லலாம். விளிம்பு நிலையிலிருக்கும் சிறுவர்களின் உலகம் ஜமீலின் கவிதைகளில்  கதைகளைப் போல் மையங்கொள்கிறது.

பெரியவர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களின் அகவுலகம் பற்றிய ஜமீலின் கவிதைப் புனைவானது, சிறுவர் வெளி பற்றி நாம் கண்டுகொள்ளத் தவறிய பக்கங்களுக்குள் நம்மை ஒரு குழந்தையைப் போல் அழைத்துச் செல்கின்றன.

காற்றைப் போல் தலைதெறித்து விளையாடும்
தங்களது பிரமாண்டமான கனவுகளை
மனம் விட்டுச் சொல்ல முடியாமல்
தினமும் போர்வைக்குள் மடித்து வைக்கிறது

புறக்கணிக்கப்பட்ட சிறுவர் வெளியை, அந்த விளிம்புகளின் கனவை ஜமீலின் இந்த வரிகள் மிக நுட்பான கவிதைப் புனைவாக ஆக்கியுள்ளன.

ஜமீல் தனது கவிதைப் புனைவுக்கான சொற்களை சிறுவர்களின் உலகத்துக்கு மிக நெருக்கமாக அமைத்திருப்பதும், கவிதைகளில் கடுமையான பாசாங்குத் தன்மையற்றிருப்பதும் அவரின் தனித்துவமான போக்குகளாக உள்ளன. அவரது கவிதைகளில் பின்-நவீன மொழியின் அதீத அழகியலை விடவும்,  விளிம்புகளான சிறுவர்வெளியை பற்றிய ஒரு எளிமையான கதை சொல்லும்  முறைமைக்காகவே ஜமீல் இந்த வெளியில் பேசப்படுபவராகிறார்.

பின்-நவீன அழகியல் கவிதைகள்

பின்-நவீன அழகியல் வெளியில் றியாஸ் குரானா, அனார், நபீல், நவாஸ் சௌபி, ஜிஃப்ரி ஹாஸன், ஏ.நஸ்புள்ளா, ஜெம்சித் ஸமான், றபியுஸ், ஜே.பெறோஸ்கான், சாஜித் அஹமட், ஏ.கே. முஜாரத் போன்றவர்களின் கவிதைகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியின் மற்றுமொரு முக்கிய குரல் றியாஸ் குரானாவினுடையது. பின்-நவீனக் கோட்பாட்டு ரீதியான புரிதலோடும் அதன் மீதான ஈடுபாட்டோடும் தனது கவிதைகளில் புதிய பரிசோதனைகளோடு களமிறங்கியவர் றியாஸ் குரானா. பிரதியை கற்பனையின் சுதந்திரமான விளையாட்டாகக் கண்ட அவர் பின்-நவீன அரசியல் வெளியிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு பின்-நவீன அழகியலின் கவிதைக் குரலாய் ஒலிக்கலானார். கவிதையை வெறும் கவிதைச் செயற்பாடு எனும் தளத்திலிருந்து அதனை ஒரு புனைவுச் செயற்பாடாகவும் ஈழத்துப் பின்-நவீனக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக நிகழ்த்திக்கொண்டு வருகிறார் றியாஸ் குரானா.

பின்-நவீன அரசியல் கவிதைகளின் குரலாய் ஒலித்துக் கொண்டிருந்த றியாஸ் குரானா அரசியலைத் தவிர்த்து வேறொரு தளத்துக்கு நகர்ந்தபோது இலக்கிய வெளியில் அவர் மீது விழுந்த கவனம் பற்றி அவரது கவிதை வரிகளில் சொல்வதானால்,

‘முன் பின் அறியாத ஒருவனைப் போல் பரபரப்பாக
கவனிக்கப்படுகிறேன்’

என்கிறார். பின்-நவீனத்துவத்தின் அதிகமான கூறுகளை தனது கவிதைகளில் பரிசோதனையாக செய்து பார்த்தவரும் றியாஸ் குரானாதான். அதற்கு காரணம் பின்-நவீனத்துவக் கோட்பாடு மீது அவருக்கிருந்த பரிச்சயமும், ஈடுபாடும்தான்.

பொதுவாக றி. குரானாவின் கவிதை மொழி அதீத புனைவுத் தன்மை கொண்டதாகவும், அதீத கற்பனையுடனும் பயணிப்பவை. அவரது கவிதைகளில் எதுவும் மையமாக அமைவதில்லை. பின்-நவீனத்துவம் கூறும் சிதைவாக்கம் என்பதை இவரது கவிதைகளில் முழு அர்த்தத்தோடு காண முடிகிறது. கவிதையை fiction ஆகச் செய்யும் பணியை வேறு சில கவிஞர்களும் முயற்சித்திருக்கிற போதிலும் அந்தச் செயற்பாட்டில் குரானாவின் கவிதைகள் தனித்துவமிக்கதாய்த் தெரிகின்றன.

அதேநேரம் றியாஸ் குரானாவின் கவிதைகளில் மனிதர்களின் உடல்களைவிடவும், உணர்வுகள்தான் அதிகமும் கொண்டாடப்படுகின்றன. குரானாவின் கவிதைகளிலுள்ள சொற்களை நாம் வேறு வேறு இடங்களுக்கு இடம் மாற்றிப் போட்டாலும் அது இன்னுமொரு கவிதையாய் மாறி விடும் அதிசயம் அவரது கவிதைக்குள் திரும்பத் திரும்ப நிகழ்ந்த படியே இருக்கிறது.

கவிதை வாசகர்களுக்கு முன்வைக்கப்படும் முறைமையில் சில குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உடைப்புகளை பின்-நவீனக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக பதிவு செய்தபடி இருக்கிறார். அவரது ‘மாற்றுப் பிரதி’ தொகுப்பிலுள்ள ‘காதலின் தோல்வியுற்ற குறுக்கெழுத்துப் புதிர்”  கவிதை சொல்லும் முறையில் மிக அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது என் அபிப்ராயம்.

உலகத் தமிழ்க் கவிதைவெளியைப் பொறுத்தவரை றி. குரானா இந்த வெளியில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தொலைவுக்குச் சென்றிருப்பதாகவே எனக்குப்படுகிறது. ஆங்கிலக் கவிதை உலகிலும் அவருக்கென ஒரு கவனயீர்ப்பு நிகழ்வது மிக அண்மையத் தோற்றப்பாடாகும். அவரைப் பின்தொடர்ந்து ஒரு இளைஞர் கூட்டம் பயணிப்பது போன்ற ஒரு தோற்றப்பாடும் இன்று தென்படத் தொடங்கியுள்ளது.

அதே நேரம் தற்போதைய குரானாவின் கவிதைகள் முழுமையாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதீத புனைவுத்தன்மை கொண்டதாகவும் மாறி வருகிறது. தொடர்பறு எழுத்து நிலையின் அதீதப் பயன்பாடும் றியாஸ் குரானாவின் கவிதைகளின் இன்றைய சில போக்குகளாக உள்ளன.

பின்-நவீனக் கவிதைவெளியில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க கவிதைக் குரல் அலறியினுடையது. அலறி பின்-நவீன அரசியல், அழகியல் மற்றும் விளிம்புகள் மீதான கவனம் எனப்பல பின்-நவீனக் கூறுகளை உள்வாங்கிப் புனையும் கவிஞன். அவரது ‘மழையைப் பொழிதல்’ தொகுப்பின் கவிதைகளுக்குள் பின்-நவீனத்துவத்தின் இத்தகைய பன்முகக்கூறுகளை காண முடிகிறது.

அதிகாரத் தரப்புகளால் கொல்லப்படும் அப்பாவிகள் விளிம்புகளாக அலறியின் சில கவிதைகளில் வருகின்றனர். அவரது ‘ஒருவன் கொல்லப்படும் போது’ கவிதையில் விளிம்புகளின் வாழ்வு எப்படி கணக்கெடுக்கப்படாததாக மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது எனும் நிகழ்காலத் துயரை அலறி அந்தக் கவிதையில் பேசுகிறார். அவரது இந்தக் கவிதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ‘In our Translated World’ எனும் தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அலறியின் கவிதைகளை வாசிக்கும் போது எளிமையான சொற்களால் வாசக இன்பத்தை பெருக்கெடுக்கச் செய்யும் கவிதைப் பிரதிகளை புனையும் நுட்பத்தை காண முடிகிறது. அதுவே அவரை பின்-நவீனக் கவிதைவெளிக்குள் இழுத்து வருகிறது.

பின்-நவீன அழகியலை மொழியின் கூடுதல் இறுக்கங்களோடும் சூட்சுமங்களோடும் வெளிப்படுத்திய கவிஞர் நவாஸ் சௌபி. அவரது பின்-நவீன அரசியல் கவிதைகளைத் தாண்டி இவை வேறொரு தளத்தில் பயணிக்கின்றன. பெருவெளியில் வெளிவந்த அவரது ‘திருமணத்தின் பின்னரான முதல் கவிதை’ அவரது கவிதை புனைவில் ஒரு அதிரடி மாற்றத்தை அறிவிப்பது போல் இருந்தது. அது நமது பண்பாட்டுப் புனிதங்களிலும் ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தக் கூடிய உக்கிரத்தைக் கொண்டிருந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து புறப்பட்ட வேகத்துடன்
எனது ஆண்மை அவளது வெட்கம் நிறைந்த அந்தரங்கங்களை
சரி செய்து வியர்த்துப் போகிறது

என்ற வரிகளை வாசிக்கும்போது ஒரு வாசகனின் நெஞ்சு படபட என்று அடித்துக் கொள்வதோடு, வியர்த்தும் கொட்டுகிறது. இப்படி வெடித்துச் சிதறுவதுதான் அவரது கவிதைக் குணம். அது ஒரு மூர்க்கக் குணம்தான். இருந்தாலும் அதுதான் பின்-நவீனக் கவிதைகளின் குணம்.

பின்-நவீன அரசியல் வெளியிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ள கவிதைகளை எழுதும் கவிஞர் நபீலிடமும் பின்-நவீன அழகியல் கூறுகள் வெளிப்படுகின்றன. நபீலின் கவிதைகளில் தொன்மமும், மரபும் பின்-நவீன அழகியலோடு சில கவிதைகளில் பேசப்படுகின்றன. அவரது கவிதைகள் காலவோட்டத்தில் ஒரு கவிஞன் அடையும் மாறுதல்கள் எதுவுமின்றி ஒரு நேர்க்கோட்டிலேயே இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கிண்ணியா சபருள்ளாஹ்வின் கவிதைகளும் அகவுணர்வைப் பேசும் கவிதைகளாகவும், பின்நவீன அரசியல், அழகியல் உள்ளவையாகவும் விளங்குகின்றன.

கிண்ணியா ஏ. நஸ்புள்ளாஹ்வின் அண்மைக்காலக் கவிதைகள் ஒரு புனைவின் பண்புகளுடனும் பின்-நவீன அழகியலோடும் பயணிக்கின்றன. அவரது ‘விண்மீன்கள் குறித்த உரையாடல்” என்ற கவிதையில் பின்-நவீனப் புனைவும் அழகியலும் கலந்திருக்கிறது. அவரது ‘இங்கே சைத்தான் இல்லை” தொகுதியின் கவிதைகளும் அண்மைய முகநூல் கவிதைகளும், பின்-நவீன அழகியலுடனும் புனைவின் அதீதத்தன்மையுடனும் பயணிக்கின்றன.

ஆனால் இங்கு முன்வைக்கப்பட்ட கவிஞர்களுக்கப்பாலும் இன்று பலர் பின்-நவீன முஸ்லிம் கவிதைவெளியில் வினைபுரிந்தபடி இருக்கின்றனர். அவர்களையும் உள்வாங்கும்போது இக்கட்டுரை இன்னும் விரிவானதாக அமையும்.

(கடந்த நவம்பர் மாதம் 26, 27 ஆகிய தினங்களில் இலங்கையின் மருதமுனையில் இடம்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொன் விழாவில்  வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கித் திருத்தப்பட்ட வடிவம்).

ஒளி வெள்ளத்தின் மறைவில்: ஆதவனின் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

Alvin Toffler அவரது ‘Future Shock’ புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் மனிதனைக் குறித்து Modular Man என்று ஒரு கருத்தை முன்வைப்பார். தொழிற்புரட்சிக்குப் பின் உருவாகி வந்த, நவீன நகர்ப்புற உலகில் வாழும் ஒரு தனி மனிதன் எப்படி பல்வேறு வேஷங்களில் தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் சமூக உறவுகளில் ஒருவன் யாருடனும் தன்னுடைய முழுமையான ‘நான்’ ஐ வெளிப்படுத்திக் கொள்ளும் தேவை இல்லாத, அல்லது முடியாத, ஒரு சூழல் உருவாகி இருப்பதையும் விவரித்திருப்பார்.

நவீனத்துவத்துக்கு முன் இருந்த சமூகங்களில் இது மாதிரியான ஒரு அவசியம் தனி மனிதனுக்கு ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப உறவுகளில் பல்வேறு பாத்திரங்களை ஒரு ஆண் ஏற்றிருக்கலாம். மகன், கணவன், அப்பா,  தாத்தா என்று. ஆனால் தன்னைச் சுற்றியிருந்த எளிய பொருளாதார அமைப்பு கொண்ட ஒரு கிராமிய சமூகத்தில் அவன் என்ன தொழில் செயது வாழ்கிறானோ, அதுவே அவன். தான் யாரோ அதிலிருந்து பிறிதொருவனாக அவன் மற்ற சமூக மனிதர்களிடம் அவன் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமோ போட வேண்டிய வேஷங்களோ இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கான சாத்தியங்களும் குறைவு.

நவீன காலத்தில் நகர்ப்புறத்தில் வாழக்கூடிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு ஆண் பல்வேறு வேஷங்களை ஏற்று நடிக்க வேண்டியிருப்பதன் சிக்கல்களை ஆதவன் அவரது கதைகளில் பேசிய வண்ணமே இருந்தார். அம்மாதிரியான கதைகளில் மிகச் சிறந்த ஒன்றுதான் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ என்ற  சிறுகதை.

அலுவலகம் முடிந்து, ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நேரம்தான் இந்தக் கதை நிகழும்  நேரம். தன்னுணர்வு கொண்ட  ஒரு மனிதன் அதற்குள் எத்தனை முகமூடிகளை அணிகிறான் என்பதை மிக அழகாகவும் நகைச்சுவை கொப்பளிக்கவும் சொல்லியிருக்கிறார் ஆதவன்.

முதலில் அங்கே சந்திக்க நேரும் தன் கல்லூரி காலத் தோழியிடம் தன் நிகழ்கால, நடுத்தர வர்க்க, சீரியஸ் வாழ்க்கையை மறைத்துக்கொண்டு, ஆவலுடன் பழகிய கல்லூரிக் காலத்தின் விடலை வேடம், அதன்கூடவே அவளது உயர்வர்க்க, குழந்தைத்தனமான வேடமும் அந்த வேடத்தை ரசித்து, பின் அதில்  சலிப்புற்று வெளியே வந்து  அங்கே மழைக்கு ஒதுங்கி நிற்கும், கல்லூரிப் பெண்களை ரசிக்கும்போது அவர்களால் கண்ணும் களவுமாகப் பிடிபட்டு, அவர்களைப் பெருந்தன்மையுடன் மன்னிக்கும் விட்டேத்தியான கல்லூரிப் பேராசிரியர் போன்ற வேடம், பேருந்து நிலையத்தில் எதிர்ப்படும் அலுவலக நண்பன் தன்னை ஒற்றைப்படையானவனாக, வெறும் அரசு ஊழியராக மட்டுமே பார்ப்பதால் ஏற்படும் சங்கடத்தில் தன்னை நிர்வாணமாக உணரும் தருணம்- அதிலிருந்து அவனைக் காப்பாற்றுவது, அங்கு வரும், அவனது வீட்டருகே வசிக்கும் இருவர். அதில் ஒருவர் வயதானவர், அவரிடம் இவன் என்றோ ஒரு முறை தன்னை இந்தக்கால பொறுப்பற்ற, மரபுகளை மதிக்காத வாலிபனாக காட்டிக் கொள்ளாமல், புதிய இளைய தலைமுறையின் (அவர்களில் ஒருவன் என்றாலும்), போக்கினை விரும்பாதவனாகக் காட்டிக் கொண்டதால், தொடர்ந்து அந்த வேடத்திலேயே அவர் முன் நிற்க வேண்டிய அவசியம்.

கையில் டாம் மொரேசின் கவிதைத் தொகுப்புடன் வரும் அவன் பேட்டையில் உள்ள கல்லூரி மாணவன்தான் மற்றொருவர். அவன் முன், ஆபீஸ் விஷயங்களைத் தவிர இதர விஷயங்களிலும் நாட்டமுள்ள ஒரு அறிவுஜீவி வேடத்தை, முகமூடியை அணிய வேண்டிய நிர்ப்பந்தம். நம் நாயகனை இப்படி மாறி மாறி வேடங்களை அணிந்து நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து காப்பாற்றுவது அப்போது அங்கு வரும், அவனது இருப்பிடம் போகும் பேருந்துதான். பேருந்தின் முன் அனைவரும் தங்கள் வேஷங்கள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதர்களாகி ஓடுவதுடன் கதையை முடிக்கிறார் ஆதவன்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில், நகர வாழ்வில் இயல்பாகவே ஒருவர் இப்படி இருக்க முடியாதா என்றும் ஏன் அவற்றை வேஷங்கள் என்றும் நினைக்க வேண்டும் என்றும் ஒரு கேள்வி எழலாம். அவை இந்த நாயகனின் வேஷங்கள்தாம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது,  இந்த நடவடிக்கைகளிலிருந்து தனித்து நிற்கும் அவனது தன்னுணர்வும் இத்தகைய நடவடிக்கைகளின்மேல் அவனுக்கு உருவாகும் சலிப்பும்தான். அவற்றின் கூடவே மிக முக்கியமாக, இந்த நிகழ்கவுளின் ஊடாக, அவன் மனம் அந்நேரம் வீட்டில் தன் மனைவி எந்தவித வேஷங்களும் அணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் இன்றி இயல்பாக சமைத்துக் கொண்டோ, ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டோ, குழந்தையிடம் சண்டை பிடித்துக் கொண்டோ இருப்பாள் என்பதை பொறாமையுடன் அவன் நினைத்துக் கொள்வதை ஆதவன் சித்தரிப்பதுதான்.

தன்மை ஒருமையில்  விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது. நம்மை நாமே அடையாளம் காண்பதிலும், பிறருக்கு நம்மை வெளிப்படுத்துவதில், நாம் அணியும் வேஷங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது.மேலும், நம்மை பிறர் எளிதில் வகுத்துவிட முடியாதபடிக்கு நம்மை நாம் வேறு வேறு அடையாளங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதிலும் ஒரு இயல்பான ஆர்வம் இருப்பதையும் இது வெளிக்கொணர்கிறது.

இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பின் முன்னுரையில் ஆதவன், தான் எழுதுவது குறித்து, “நானென்ன என்னிடமிருந்து தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னை கண்டுபிடிக்கவா?” என்று கேட்டுக் கொள்கிறார். எழுதுவதற்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வில் நாம் நடந்து கொள்ளும் முறைக்கும், அணிந்து கொள்ளும் முகமூடிகளுக்குமேகூட இது பொருந்தும். நாம் என்னவாக இருந்தோம் என்பதைக் கடந்தே நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. அதே சமயம், நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டு கொள்வதால் நாம் என்னவாக இருந்தோம் என்பதும் இல்லாமல் போவதில்லை. தன்னுணர்வின் திரைக்குப்பின் களைவதும் புனைவதும் வேடங்களாகவே எப்போதும் இருக்கின்றன, அவை உறவுகளில் ஒரு சுவையான நாடகத்தன்மை சேர்ப்பதையும் இந்தக் கதையைப் படிக்கும்போது உணரலாம்.

அன்றாடத்தின் வினோதங்கள் – மாயக்கூத்தனின் ‘பாராமுகம்’

பீட்டர் பொங்கல்

செகாவ் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு நல்ல சிறுகதையின் ஆறு இயல்புககளாய் இவற்றைச் சொல்கிறார்:

1. அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து நீண்ட விவரணைகள் இல்லாமை

2. முழுமையான புறவயப்பட்ட பார்வை

3. மனிதர்கள் மற்றும் பொருட்களின் மெய்ம்மைச் சித்தரிப்பு

4. மிகக் கச்சிதமான வடிவம்

5. துணிச்சலும் புதுமையும்: ஸ்டீரியோடைப்புகளைத் தவிர்ப்பது

6. கருணை

செகாவ் கதைகள் குறித்த நீண்ட ஒரு விவாதம் இங்கிருக்கிறது. இதில் மேற்கண்டவிஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. தன் கதைகளில் அன்றாட வாழ்வை விவரிப்பதில் தீர்மானமாயிருந்தார் செகாவ் என்று எழுதும் கட்டுரையாளர் கிறிஸ்டினா வார்ட்-நிவென், செகாவ் உண்மையாகவும் புதுமையாகவும் எழுத விரும்பியதால் அவரது புனைவில் உள்ள அன்றாடக் காட்சிகள் வினோதத்தன்மை கொண்டிருக்கின்றன என்கிறார்- “நமக்குப் பழக்கப்பட்டசூழ்நிலத்தில் வினோதத்தன்மையை அனுமதிப்பதால், நாம் வாசகர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்கள் சற்று தாமதித்து, கவனம் செலுத்தச் செய்யலாம் – அப்போது ஒருவேளை அவர்கள் தமக்குப் பழக்கப்பட்ட ஒரு மானுட உண்மையை புதிய வெளிச்சத்தில் கண்டு கொள்ளக்கூடும்“.

oOo
மாயக்கூத்தனின் ‘பாராமுகம்‘ நானூற்றுக்கும் குறைவான சொற்கள் கொண்ட குறுங்கதை. அதன் மையம், கதையின் மத்தியில் வருகிறது – “போன வாரம், தெருவில் கசிந்த நீரை உறிஞ்ச, அப்பனும் மகனும் மண்ணைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மகாதேவன் இவர்களை ஒரு சிரிப்போடு கடந்து சென்றார். கொஞ்சமும் இளப்பம் இல்லாத சிரிப்பு. கருணையும் அன்பும் நிறைந்த புன்னகை. சீனு ஆச்சரியப்பட்டான்; இவன் உதட்டை விரிப்பதற்குள் அவர் போய்விட்டார்.

சீனிவாசன் கட்டிய வீட்டிலிருந்து கழிவு நீர் வெளியேற வழியில்லை- இவர்கள் இருந்த குறுக்குத் தெரு அரசு வரைபடத்தில் விட்டுப் போயிருந்ததால் இவர்களுக்குச் சாக்கடை இணைப்பு கிடைக்கவில்லை. கழிவு நீர் வெளியேறினால் மகாதேவன்கள் சண்டைக்கு வருகிறார்கள் – “ஊரில் இதுவரை கொசுவே இல்லாதது போலவும், இனி கொசு வந்து தன்னைக் கொத்திக் கொண்டு போய்விடும் என்பது போலவும் கத்தினார்“. அக்கம் பக்கத்தில் எல்லாரும் பகை. மகாதேவன் வீட்டு அம்மா சொன்னது போல் வீட்டுக்குள்ளேயே கழிவு நீர் சுற்றி வந்து ஒரு குழிக்குள் வடியும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள், ஆனாலும் அவ்வப்போது குழி நிறைந்து நீர் தெருவில் கசிகிறது.

அப்படியான ஒரு சமயம்தான் மகாதேவன் இவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைக்கிறார்- நடக்காத ஒன்று நடக்கும்போது பேச்சு வழக்கில் சொல்வது போல், மழை பெய்வது மட்டுமல்லமட்டுமல்ல, உலகமே அழிந்து விடுகிறது. அப்போது பிடித்துக் கொள்ளும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது, வீட்டுக்குள் வெள்ளம் வந்து விடும் போலிருக்கிறது. சீனிவாசன்,

மெதுவாக ஒரு படியிறங்கி, கால் கட்டை விரலைத் தண்ணீரில் ஆழ்த்தினான். குளிர்ந்தது.

“காலை எடுத்துவிட்டான். நீர் பட்ட இடம் என்னவோ போல் இருந்தது. குனிந்து பார்த்தான்; கட்டைவிரலைக் காணவில்லை. தண்ணீரில் கரைந்துவிட்டது. வலியே இல்லை.”

இதற்கப்புறம் சீனிவாசன் செய்வது இந்த உலக வாழ்க்கையின் உக்கிரத்தை மிக எளிமையாக, ஒரு சொல் இல்லாமல் உணர்த்துகிறது. கதை கச்சிதமான முடிவுக்கு வருகிறது.

ஆனால் அதற்கப்புறம் ‘யுகசந்தி‘ என்று ஒரு வார்த்தை, அதன் உறுத்தலுடன் நெருடுகிறது. அது இல்லாமல் கதையின் உலகம் முடிவுக்கு வருவதில்லை என்பதால் தவிர்க்க முடியாத வார்த்தைதான். ஆனால், அது நம்மைக் கதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. இது சரியா தவறா என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாராமுகம், மாயக்கூத்தன்.