எழுத்து

கிரேக்க அவல நாடகங்கள் – மேரி லெஃப்கோவிச்

220px-Sophocles_pushkin

கிரேக்க நாடகங்கள் ஏன் முக்கியமாய் இருக்கின்றன?

பல காரணங்கள்.

கிரேக்க நாடகங்கள் சுவாரசியமாக இருக்கலாம்; அவை நம்மை வேறொரு, வித்தியாசமான உலகுக்குக் கொண்டு செல்லலாம். அவை, அவ்வப்போது, நம்மை நன்றாகச் சிரிக்கவும் வைக்கலாம். ஆனால் முக்கியமான காரணம், பார்வையாளர்களை அவை வாழ்க்கைக்குத் தயார் செய்கின்றன- நாம் விரும்பும் வாழ்க்கைக்கல்ல, உள்ளபடியே உள்ள வாழ்க்கைக்கு. நாம் நினைத்துப் பார்க்கவும் விரும்பாத பிரச்சினைகளை இந்த நாடகங்கள் பேசுகின்றன: நோய்மை, மரணம், குரூரம், மரணத்துக்கும் பேரழிவுக்கும் இட்டுச் செல்லக்கூடிய, தவிர்க்க முடியாத, மோசமான பிழைகளை தன்னம்பிக்கையுடன் இழைக்கும் மானுட இயல்பு. நம்மை அச்சுறுத்தக்கூடிய எந்த ஒரு சாத்தியமும் தவற விடப்படுவதில்லை: திடீர் மரணம், தற்கொலை, மரணப்பிணி, துரோகம், நேசத்துக்குரிய ஒருவர் அல்லது பலரின் இழப்பு.

ஆனால் அவல நாடகங்கள் மானுட துயரின் காரணங்களை விவரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. மானுடத்தின் மிகப்பெரிய குறைகளுடன், அதன் குறிப்பிடத்தக்க வலிமைகளையும் நாம் காண அவல நாடகங்கள் அனுமதிக்கின்றன: புரிந்துணர்வு, கருணை, உடலின் துன்பம் மற்றும் வறுமையை எதிர்த்து நிற்கும் இயல்பு. துயரிலும் தோல்வியிலும், நண்பர்கள் மட்டுமல்ல, அந்நியர்களும் ஆறுதலும் இரக்கமும் காட்ட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாடகங்கள் எடுத்துரைக்கின்றன.

பண்டைக்கால ஏதனியர்கள் தம் வாழ்வின் நிதர்சன உண்மைகளைப் புரிந்து கொள்ள இந்த நாடகங்கள் உதவின, அவை, இன்று நமக்கும் உதவக்கூடும். துயரையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த இவை நமக்கான சொற்களை அளிக்கக்கூடும், மானுட அனுபவத்தை நாம் புரிந்து கொள்ள உதவும் சொற்கள் இவை. நாடகத்தின் பின்னுள்ள தொன்மத்தின் கருப்பொருளை அறிந்து கொள்வதால் மட்டும் இதைத் தெரிந்து கொண்டுவிட முடியாது.

ஆம், ஈடிபஸ் தன் தந்தையைக் கொன்று தாயை மணந்தான். ஆனால் சோபோக்ளஸின் ‘அரசன் ஈடிபஸ்‘ தாய்களின் பால் மக்கள் கொள்ளும் காமம் பற்றிய ஃபிராய்டின் கதையல்ல. சோபோக்ளஸின் நாடகத்தில் ஈடிபஸ் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாதிருக்கிறான். டெல்ஃபியில் குறி கேட்கும் அவன் தன் விதியை அறிய வந்தபின் தன்னாலான அனைத்தையும் செய்து தனக்கு விதிக்கப்பட்ட முடிவைத் தவிர்க்க முயற்சி செய்கிறான். தான் தவிர்க்க நினைத்த குற்றங்களைத் தன்னையறியாமலே செய்து விட்டதை அவன் உணர்வதன் வியப்பையும் அதிர்ச்சியையும் நாடகம் விவரிக்கிறது. அப்பல்லோவால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட தெய்வச்சித்தம்தான் அவனுக்கு விதிக்கப்பட்ட கதி என்றாலும் அவன் தன் குற்றங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான். அவன் தன்னைக் குருடாக்கிக் கொள்கிறான் – “தான் இழைத்த, தனக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை” அவனால் கண் கொண்டு காணத் தாள முடிவதில்லை. அவனது துயர்நிலையில் தீபஸின் முதியவர்களாலான கோரஸ் அவனைத் தேற்ற முயல்கிறது- கடந்த காலத்தில் அவன் அவர்களையும் அவர்களது நகரையும் காத்திருக்கிறான் என்பதால். ஆனால் அவர்களோ, நாடகத்தில் உள்ள வேறெந்த பாத்திரமோ, ஈடிபஸ்சுக்கு மீட்சிக்கான சாத்தியத்தை அளிப்பதில்லை, எதிர்காலத்தில் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எந்த நம்பிக்கையையும் அளிப்பதில்லை.

கோரஸ் போலவே, பார்வையாளர்களாய் உள்ள நாமும் சாட்சிகள்- கண்டு நிற்கும் நாம் இரக்கப்பட முடியும், ஆனால் நிகழ்வுகளின் பயங்கர போக்கை மாற்றும் ஆற்றல் இல்லாதவர்கள். கோரஸ் போல், நாடகத்தின் நிகழ்வுகளைக் கொண்டு நாம் எவ்வளவு குறைவாய் அறிந்திருக்கிறோம் என்பதையும் நம் கட்டுக்குள் எவ்வளவு குறைவான விஷயங்கள் இருக்கின்றன என்பதையும் கற்றுக்கொள்ளவே இயலும். எனினும், மானுட அறிவு மற்றும் சக்தியின் எல்லைகளைக் கண்டுகொள்வதில் ஒரு இன்பம் கிட்டலாம், அந்த இன்பம் உரைக்கப்படும் சொற்களில் பிறப்பதுதான் என்றாலும்.

மிகவும் மாறுபட்ட நம் மொழியிலும், பண்டைக்கால கிரேக்க மூலமொழியின் கவித்துவத்தையும் ஆற்றலையும் நாம் ஓரளவு உணர்த்துவது சாத்தியமாகவே இருக்கிறது. இதோ, ஏஸ்ஷிலஸின் ‘அகாமெம்னோன்‘ நாடகத்தின் கோரஸ், ட்ரோஜன் போர் பற்றி பேசிக் கொள்கிறார்கள் (‘கிரேக்க நாடகங்கள்‘ என்ற நூலில் சாரா ருடன் செய்த மொழியாக்கத்தையொட்டி)

ஜ்யூஸ் நம்மை அழைத்துச் செல்கிறான்,
விழிப்புணர்வுக்கான பாதையில்;
துன்பங்களே நம் படிப்பினைகள்
என்று ஆணையிட்டான் ஜ்யூஸ்.
இதயத்துக்கு இல்லை உறக்கம், மாறாய்
காயங்களை நினைவுறுத்தும் வலி
துளித்துளியாய் இறங்கிக் கொண்டிருக்கிறது.
விருப்பமில்லா உள்ளங்களும்
எச்சரிக்கையுணர்வை அடைகின்றன.

காயங்களை நினைவுகூர்கின்ற வலி பற்றிய வரிகளை மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலையானது பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது ராபர்ட் கென்னடி மேற்கோள் காட்டினார்.

தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வலியையும் இழப்பையும் உணர்கிறான், அதிலும் குறிப்பாக மிக மோசமான அநீதியின் முன். ஆனால் ஏஸ்ஷிலஸ் அளவுக்குச் சிறப்பாய் வேறு யாரும் அதை விவரித்ததாய்த் தெரியவில்லை. அவர் வலிக்கு நினைவாற்றலை அளிக்கிறார். அதற்கு ஒரு பௌதீக இருப்பையும் அளிக்கிறார்- அதன் வாதை துளித்துளியாய், நமக்கு அவ்வாறு உணரவும் அறியவும் விருப்பம் இல்லாதபோதும், புரிதலை மெல்ல மெல்ல கற்பித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி – Why Are Greek Plays Important? They Prepare You For Life, Mary Lefkowitz, Signature 

ஒளிப்பட உதவி – Wikipedia

யாரோ கலைத்துப் போட்ட அமைதி

ஜிஃப்ரி ஹாசன்

மெண்ணுணர்வுகளோடு
ஒரு பூவையும், சில பறவைகளையும்,
கொஞ்சம் நட்சத்திரங்களையும்
இரசித்தபடி
ஒரு மெளனத் தவத்துள்
புதையுண்டு போகிறான்
“என்னை விட்டு விடு
மௌனத் தவத்துள் நான் இன்னும் சில யுகங்கள்
கனவுகள் காண வேண்டும்”
எனப் புலம்புகிறான்
எதையோ வெற்றிகொள்ளும்
உக்கிர வேட்கையோடும்
தீயின் கனலோடும்
இதோ ஒரு சந்நியாசி இருக்கிறான்
வாழ்க்கை பரிசளிக்கும் தண்டனைகளை
பூக்களை இரசிப்பது போல் இரசிக்கும்படி
கடவுள் அவனுக்கு கட்டளை இட்டார்
எந்த ஆரவாரங்களுக்கும்
அவன் தவம் கலைதல் கூடாதென்று
கடவுள் அவனை ஏவினார்
எனினும்
கறைபடிந்த காலத்தில்
அடையாளமற்ற சில அருவருப்பான
குரல்கள் அவன் அமைதியைக் குலைத்தன
எந்த அர்த்தமுமற்ற பொய்யான சொற்களால்
பகடிகளால் நிறைந்த அர்த்தமற்ற
ஆரவாரங்களால்
அவன் தவம் சிதைந்திற்று
வாழ்க்கை, நேசிப்பிலிருந்து
உன்னதங்களிலிருந்து
தவத்திலிருந்து
புனிதங்களிலிருந்து
மனிதனைத் தள்ளிவைக்கும் தண்டனைகளால் நிறைந்தது
என இறுதியில் அதே கடவுளிடம் முறையிட்டபடி
மீண்டும் வாழ்வின் சாளரங்களை
எதையோ வெற்றி கொள்வதற்கான
உக்கிரத்தோடு திறக்கத் தொடங்கினான்.

இராகப் பெண்கள் – 6: அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

பானுமதி. ந

6. அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

அமிர்த தாரை. வானம் கொடுக்கும் உயிர். நீரின்றி அமையாத உலகின் அச்சாணி. இத்தனை சிறப்பு— “ஆழியில் புக்கு முகர்ந்து கொடார்த்தேரி” வரும் வருணனுக்கு. ஆனால், அவன் நினைக்கையில் மட்டும்தான் வருவான். அளவின் கட்டுப்பாடுகள் அவனுக்கு இல்லை. குறைவாய், அதிகமாய், சரியாய், விளைநிலத்தில், காடுகளில், கடலில் பெய்யும் பெருமழை. வருவது போல் தோன்றி, போக்குக் காட்டி பின்னர் எதிர்பாராது  வந்து… மகேசன் அறியா மாமழை.

ஆழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து” லா. ச. ரா.வின் “அபூர்வ இராகம்” நாயகி பெய்யும் பெரு மழை. முழங்காலுக்கும் கீழே தொங்கும் கூந்தல், இயல்பாக இருத்தல் அவள் வழி. பெண் பார்க்கையிலேயே “பஜ்ஜிக்கு உப்பு போதுமா?” என்று கேட்க வைத்து அவள் தன்மையை உணர்த்தி விடுகிறார் லா. ச. ரா. தீயில் இருக்கும் குளிராக, குளிரில் உறையும் நெருப்பாக அவனும், அவளும். அவர்களின் ஆழம் காணும் போக்கு அவர்களை சிறிது காலம் பிரிக்கிறது. ஒருவரை ஒருவர் வரவழைக்க பொய்யான செய்தி சொல்லி தந்திகள் பறக்கின்றன. ஊர் பார்க்கும் கவலையின்றி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, கண்ணீரில் கரைந்து அந்தப் புகை வண்டி நிலையத்தில் ஒன்றேயான இரண்டாக நிற்கின்றனர்.

அவளின் கூந்தல் அவனின் பிரமிப்பு. அவளின் அலாதியான மௌனமும், சிறு பேச்சுக்களும் அவனின் வியப்பு. மாமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும் ஒரு மாலையில் இருவரும் கடற்கரைக்குச் சென்று பேரழகின் அச்சத்தை, ஆழத்தை, இயற்கையின் விளையாட்டை, காட்சி தெளிவாக இல்லாத ஒளிமயக்கை, அனுபவிக்கிறார்கள். அதிலும் அவள் கொள்ளும் உற்சாகம் மிகுதி. உள்ளம் அனுபவித்ததற்கு உடல் விலை கொடுக்கிறது. அவள் நோயுற்று சாகப் பிழைக்கக் கடந்து தேறுகிறாள்.

அவன் அன்னையின் வேண்டுதல்படி அவள் தன் கூந்தலை காணிக்கையாக ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டும். இருவருக்குமே இது தாள இயலாத அதிர்ச்சி. ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு வேண்டாம். அந்தந்த நிமிட வாழ்வில்தான் இருவருக்குமே அக்கறை.

அபூர்வ இராகத்தின் உயிர் நாடி அந்த அளகபாரம்தான். ”பின்னாது வெறுமனே முடிந்தால் ஒரு பெரும் இளனீர் கனத்துக்கு கழுத்தை அழுத்திக் கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக் கட்டினால், கூடை திராஷையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும்.” தன் நிலை தாழ அது விரும்பவில்லை. உயிர் ஸ்வரம் இல்லாமல் இராகம் என்ன, தாளம் என்ன? பாவ பூர்வமாக, ஸ்ருதி சேர்ந்ததாக, அந்த ஸ்வ்ரத்தில் மட்டும் நின்று கார்வை கொடுக்கையில் வீணையின் தந்தி அறுந்துவிடுகிறது.

“அபூர்வ இராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை படாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப் பழக எல்லையேயற்றது போல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம் போல் பயந்த ஒரு முரட்டுத்தனம் சிலிர்சிலிப்பு”

“இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்துவிட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? இராகத்திற்கும், பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே?”

இவள் வர்ஷிப்பவள். பொழிந்து ஆள்பவள். ஆனால் கட்டுக்குள் அடங்காதவள், அதுதான் அவளது இயல்பு. அந்தந்த நொடியில் வாழ்பவள். தன் இயற்கையில்  இருப்பவள். இவள் அம்ருத வர்ஷினி

அவுடத இராகம். பிறப்பெடுத்து தோன்றும் உருக் கொள்பவள்

ச க ம ப நி ச     ச நி ப ம க ச

அமிர்தம்

நிறைகுடம். தெவிட்டாதது. காலம் தோறும் வெல்லும் உண்மைகளின் உரைகல். அழகும், அறிவும், ஆற்றலும் திரண்ட அமுது. சேற்றிடை செந்தாமரையென மலர்ந்தவள். அழுக்கு அண்டாமல் வாழத் துடித்தவள். தன் தாயை மீற இயலவில்லை. தன்னை ஊர் அறியாத் துணையாக வைத்துக் கொள்ளத் துடிக்கும் முதலியாரிடம் காதலில்லை. அவர் பால் கழிவிரக்கம்தான். தன்னைக் கொடுக்காமல் அவரிடமிருந்தே தவணை பெறுகிறாள். முதலியாரின் பெரும் போக்கான மேம் குணங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார் தி. ஜா. கெட்டவன் நல்லவன் என்ற இரு கூறான பிரிவு இல்லை. அனைத்து  மனிதர்களிடத்திலும் இருக்கும் கலவை. அமிர்தமும் அதனை நினைக்கிறாள். ஆனால், காதலாகிக் கசிந்துருக அவளால் இயலவில்லை. இச் சூழ்நிலையில் தாயும் இறந்து விடவே, அவள் தனியாகிறாள். முதலியார் துக்கம் கேட்க வராதது அவளை  வாட்டுகிறது. ஊரறிய சொல்லிக் கொள்ள விரும்பாத உறவாக  தன்னை முதலியார் கருதுவது அவளது தன்மானத்தைப் பாதிக்கிறது. ஆனாலும், ஒரு சக மனிதனாக அவர் நடந்து கொள்ளாதது அவளை வருத்துகிறதே தவிர அவர் பால் அவள் உள்ளம் ஈடுபடவில்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை தி. ஜா. கதைப் போக்கிலேயே சொல்லிவிடுகிறார்.

இரு மாதங்களாகக் கோயிலில் பார்க்கும் ஒரு இளைஞனின் உருவமும், பருவமும், அவன் நடத்தையும் அவளை இயல்பான வெட்கத்தை மீறி அவனுடன் பேசவைக்கின்றன. அவன் இந்த ஊரைச் சேர்ந்த ரங்கூன்வாசி. ஊரில் அவனுக்கு நண்பர்கள் இல்லை. எப்பொழுதாவது இங்கே வரும் அவனுக்கு நெருக்கமானவர்களில்லை. அவளுடைய ஆற்றலும், அழகும், அறிவும் அவனைக் கொள்ளை கொள்கின்றன. சட்டம் படித்த அவன் அவளைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான். அவளுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் சமுதாயத்தின் நீதி குறித்து அவனைச் சினமடைய வைக்கின்றன.

அவளை அவன் அவள் வீட்டில் சந்தித்து தங்கள் மணம் குறித்து பேசுகையில் அவனது தந்தையான முதலியார் அங்கே வருகிறார். தன் தந்தைதான் அவளை அடைய ஆவல் கொண்டவர் என அறிகையில் தவிக்கிறான், திகைக்கிறான், வெறுக்கிறான். தந்தைக்கும் அதிர்ச்சி. பூங்காவில் சந்திக்கும் முதியவர் அவன் அமிர்தத்தை  மணம் செய்யவேண்டுமென்றும், இதில் அவன் மற்றும் அவளது விருப்பம் தான் முதன்மையானதென்றும், தந்தை மகன் நன்றிக் கடன் எல்லாம் அவனை கட்டுப்படுத்தினால் கூட அமிர்தத்தின் காதல் வலிமையானது என்றும் உணர்த்துகிறார்.

முதலியார் அவன் காஃபியில் நஞ்சு கலந்து அதை அவன் குடிக்கப் போகையில் தானே தட்டியும் விடுகிறார். சொத்தில் பங்கில்லை என்கிறார். அமிர்தத்தின் மீது அவதூறும் சொல்கிறார். கடிதத்திலும் சேற்றை வாரி இறைக்கிறார். அவன் துணிவாக நிற்கிறான். அன்று மாலை கோயிலில் சந்தித்து விரைவில் மணம் முடித்து ஊரை விட்டுப் போகத் தீர்மானிக்கிறான். அவன் ஆலயத்தில் காத்திருக்கையில் கடிதம் அவளிடமிருந்து வருகிறது. சில சிக்கல்களுக்கு மிகச் சரியான விடை கிடைத்தாலும், அந்த விடைகளே முடிச்சுக்களாக மாறி இறுக்கி விடும் என்று சொல்லி தான் ஊரை விட்டு நீங்குவதாகவும், மேலே படித்து தன் வாழ்வை அமைத்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியில் அவர்கள் நிச்சயமாக இணைவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிறப்பால் தொடரும் ஒரு கறை. அதைப் போக்கி தூயதான வாழ்வு தேடும் ஒரு சிறு பெண். அவளை வென்று விடத் துடிக்கும் பணம், உறவு. அதை வெற்றி கொள்ளும் அவள் சாமர்த்தியம், தன் கணவனாக அவனை நினக்கும் பாங்கு, எதையுமே மறைக்காத உண்மை, பணத்தை முதலியாரிடமே சேர்க்க நினைக்கும் நேர்மை, தகப்பன், மைந்தன் இருவரையுமே விட்டுச் செல்லும் தீர்மானம்…. இந்த சிறு பெண்தான் தூய அமுதம். மென்மை, கம்பீரம், தெளிவு, புத்தி கூர்மை, இனிமை, இளமை, துயரங்களைக் கடக்கும் திண்மை, பாலைவனத்து நிலாவானால் என்ன? நிலவின் இயல்பு ஒளிர்வது தானே?

இவளும் அமிர்த வர்ஷினிதான். மாதம் மும்மாரி பெய்பவள். உலகோர்க்கு உயிரானவள். தன் இயல்பை மீறாதவள். கண்ணனுடன் கலந்து தீப ஒளியாய்த் திகழும் ஆண்டாள், கண்ணனுடன் ஆயர்பாடியில் சிறிது காலமே இருந்த இராதை . இருவர் காதலும் உவப்பானதே.

அவள் “ஆனந்தாமிருகர்ஷினி

இவள்”சுதாமயீ

ஏழு ஸ்வ்ரங்களும் வரவில்லை என்றாலும் அழகான இராகங்கள்.

oOo

 

 

 

வண்ணக்கழுத்து 16ஆ: வெறுப்பும் பயமும்

gay_neck_the_story_of_a_pigeon

நான் கோண்டின் அறிவுரையை ஏற்று, வண்ணக்கழுத்தை ஒரு கூண்டிலும் அவன் பெடையை மற்றொரு கூண்டிலும் போட்டுக் கொண்டு வடக்கு நோக்கி பயணித்தேன்.

முந்தைய இலையுதிர்காலத்தை விட இந்த வசந்தகாலத்தில் மலைகள் எத்தனை வித்தியாசமாய் இருக்கின்றன! திடீர்த் தேவையை முன்னிட்டு என் பெற்றோர்கள் டெண்டாமில் உள்ள அவர்களுடைய வீட்டை வழக்கத்திற்கு மாறாக பல மாதங்கள் முன்பாகவே திறந்திருந்தனர். அங்கே எல்லாம் சீரான பிறகு, ஏப்ரல் மாத கடைசியில் வண்ணக்கழுத்தை எடுத்துக் கொண்டு குதிரைகளில் பயணித்த ஒரு திபெத்திய நாடோடிக் கூட்டத்தின் துணையோடு சிங்காலிலா நோக்கிப் புறப்பட்டேன். அவனுடைய பெடையை வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஒருவேளை அவனால் மீண்டும் பறக்க முடிந்தால் பெடையைத் தேடி வருவானே என்பதற்காக. அவனை குணமாக்கச் சரியான யுத்தி, அந்தப் பெடையை ஒரு ஈர்ப்பு சக்தியாக பயன்படுத்துவது. அவன், புதிதாக இடப்பட்ட முட்டைகளை அடைகாத்து பொறிக்க தனது துணைக்கு உதவிகரமாக இருக்க திரும்புவான் என்று கோண்ட் நினைத்தார். ஆனால், நாங்கள் கிளம்பிய மறுநாளே என் பெற்றோர் அந்த முட்டைகளை அழித்துவிட்டனர். வண்ணக்கழுத்தின் பெயருக்கு பங்கம் செய்யும் விதமாக சீக்கான, குறைபாடுடைய குஞ்சுகள் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை.

என் பறவையை என் தோளிலே தூக்கிச் சென்றேன். அவன் நாள் முழுக்க அங்குதான் உட்கார்ந்து கொண்டு வந்தான். இரவில் அவனை பாதுகாப்பாக அவனுடைய கூண்டில் அடைத்து வைத்தோம். அது அவனுக்கு நன்மை செய்தது. பன்னிரெண்டு மணிநேர மலைக்காற்றும் அதன் வெளிச்சமும் அவனை உடலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், அவன் என் தோளிலிருந்து தன் பெடையைத் தேடி, அவள் முட்டையைப் பொறிக்க உதவி செய்ய, பறந்து செல்ல ஒருமுறை கூட முயற்சி செய்யவில்லை.

வசந்தகால இமாலயம் தனித்துவம் வாய்ந்தது. பூமி முழுக்க வெள்ளை வயலட் மலர்களால் ஒளிர்ந்தது. சூடான ஈரப்பதம் நிரம்பிய பள்ளத்தாக்குகளில் இருந்த ஃபெர்ன்கள்(ferns), கருநீல வானத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற கல்லைப் போல இருந்த வெள்ளை மலைகளை, தங்கள் பெரிய கரங்களைக் கொண்டு எட்டிப் பிடிக்க முயற்சி செய்வது போல படர்ந்து கொண்டிருந்தன, இடையிடையே அதற்குள் பழுக்கத் தொடங்கியிருந்த ராஸ்பெர்ரி பழ மரங்கள். சில சமயங்களில், வளர்ச்சி தடைப்பட்டிருந்த ஓக், மிகப்பெரிய இலம், தேவதாரு மற்றும் கஷ்கொட்டை மரங்கள் இருந்த அடந்த காடுகளைக் கடந்து சென்றோம். சூரிய ஒளியை முழுவதும் மறைக்கும்படியான எண்ணிக்கையில் அவை வளர்ந்திருந்தன. மரங்களோடு மரமும், கொம்புகளோடு கொம்பும், வேர்களோடு போராடும் வேர்களும், வெளிச்சத்திற்காகவும் உயிருக்காகவும் போராடின. அவற்றுக்கு கீழே இந்த மரங்களினால் உண்டான இருட்டில், தம் பங்குக்கு புலிகளாலும், சிறுத்தைகளாலும் கருஞ்சிறுத்தைகளாலும் வேட்டையாடப்படுவதற்காகவே, நிறைய மான்கள் செழித்து வளர்ந்திருந்த புற்களையும் செடிகளையும் மேய்ந்து கொண்டிருந்தன. எங்கெங்கு உயிர் செழிப்பாக வளர்ந்திருந்ததோ, அங்கெல்லாம் பறவைகள், விலங்குகள் மற்றும் செடிகளுக்கு இடையில் இருத்தலுக்கான போராட்டம் இன்னும் உக்கிரமாக இருந்தது. இத்தகைய தன்முரண் வாழ்வின் இயல்புகளுள் ஒன்று. பூச்சிகளுக்கு கூட இதிலிருந்து விடுதலை கிடையாது.

நாங்கள், காட்டின் இருளிலிருந்து வெளிவந்து வெட்ட வெளியை நோக்கிய போது, சூடான வெப்பமண்டல சூரிய ஒளி, திடீரென்று தன்னுடைய வைர நெருப்பு முனைகளால் எங்கள் கண்களைப் பறித்தது. தட்டான்களின் பொன்னிற அசைவு காற்றுவெளியை நிரப்பியது. வண்ணத்துப்பூச்சிகள், குருவிகள், ராபின்கள், ஜேக்கள் மற்றும் மயில்கள் சப்தங்கள் எழுப்பி, மரத்திலிருந்து மரத்திற்கும், சிகரங்களிலிருந்து உயர்ந்த சிகரங்களுக்கும் தாவிக் காதல் செய்தன.

ஒருபக்கம் தேயிலைத் தோட்டங்களும் வலது பக்கம் பைன் காடுகளும் கொண்ட திறந்த வெளியில், கத்தி முனைகளைப் போன்று நேரான சரிவுகளில் நாங்கள் கஷ்டப்பட்டு தடுமாறி முன்னேறினோம். அங்கே காற்று அடர்த்தியை இழந்திருந்ததால், சுவாசிப்பது சிரமமாக இருந்தது. சப்தங்களும் எதிரொலிகளும் வெகு தூரம் பயணித்தன. கிசுகிசுப்புகள் கூட சில மையில் தூரம் தாண்டியும் கேட்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை. மனிதர்களும் விலங்குகளும் ஒருசேர அமைதியானார்கள். கால் குளம்புகளின் தடதடக்கும் சப்தங்களைத் தவிர குதிரைகளும் மனிதர்களும், எங்கள் மீது கவிந்திருக்கும் தனிமைக்கும் அமைதிக்கும் களங்கம் ஏற்படாதவாறே முன்னேறினோம்.

கருநீல வெட்டவெளிவானம் மேகங்கள் அற்று தூய்மையாகவும், வடக்கே ஒரு பெருமூச்செரிந்தாற்போல் செல்லும் நாரைக் கூட்டங்களையும், சரிவுகளில் ஒரு அடிநாதமாய் விரைந்து இறங்கும் கழுகுகளையும் தவிர எந்தச் சலனமும் அற்று இருந்தது. எல்லாமுமே குளிர்ந்து, கூர்மையாகவும் விரைவாகவும் நடந்தன. ஒரே இரவில் ஆர்கிட்கள் வெடித்து, தங்களுடைய ஊதா நிறக் கண்களை எங்களை நோக்கித் திறந்திருந்தன. சாமந்திப் பூக்கள் காலைப் பனியினால் நிறைந்திருந்தன. கீழே இருந்த ஏரிகளில் நீலத்தாமரையும் வெள்ளைத் தாமரையும் தேனிக்களுக்காக தங்கள் இதழ்களை விரித்தன.

இப்போது நாங்கள் சிங்காலிலாவுக்கு அருகே வந்திருந்தோம். மலை உச்சியிலிருந்து மடாலயம் தன் தலையை உயர்த்தி எங்களை அழைத்தது. இறக்கை வடிவிலமைந்த அதன் கூரையும் பழமையான சுவர்களும் தொடுவானத்தில் ஒரு பதாகையைப் போல மிதந்தன. நான் விரைந்து நடக்க அறிவுறுத்தப்பட்டேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் மடாலயத்தின் செங்குத்தான பாதையில் நான் ஏறிக் கொண்டிருந்தேன்.

நமது அன்றாட வாழ்வின் போராட்டங்களில் இருந்து உயர்ந்து மேலே வாழும் மனிதர்களுக்கு இடையே இருப்பதுதான் என்னவொரு நிம்மதி! அது மதியப் பொழுது. நான் கோண்டுடன் ஒரு பால்சம் காட்டின் வழியே கீழே இறங்கி ஒரு நீரூற்றுக்குச் சென்றேன். அங்கே நாங்கள் குளித்ததுடன் வண்ணக்கழுத்தையும் சுத்தமாக கழுவினோம். வண்ணக்கழுத்து தன்னுடைய கூண்டில் மதிய உணவை உண்டு முடித்த பின்னர், நானும் கோண்டும் சாப்பாட்டு அறைக்குச் சென்றோம். அங்கே லாமாக்கள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அறை கருங்காலி மரத் தூண் மண்டபம் போல இருந்தது. தூண்களின் உச்சி தங்கத்தினால் ஆன டிராகன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக கருத்து வளர்ந்திருந்த தேக்கு உத்திரங்களில் பெரிய தாமரை வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவை மல்லிகையைப் போல மென்மையாகவும் உலோகத்தைப் போல உறுதியாகவும் இருந்தன. தரையில் செம்பாறைகளில், காவி நிற உடையணிந்த துறவிகள் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். உணவுக்கு நன்றி கூறும் பிரார்த்தனை அது. அனைவரும் ஒன்றாக, க்ரிகோரியன் ஸ்லோகம் போன்ற ஒன்றைச் சொல்லி தங்கள் பிரார்த்தனையை முடிக்கும் வரை நானும் கோண்டும் சாப்பாட்டு அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தோம்.

“புத்தம் மே சரணம்

தர்மம் மே சரணம்

ஓம் மணி மதமே ஓம்”

புத்தர் என்னும் அறிவே எங்கள் புகல்

மதமே எங்கள் புகல்

வாழ்வு என்னும் தாமரையில் ஒளிரும்

உண்மை மணிவிளக்கே எங்கள் புகல்

 

விழைவின் ஆதர்சம்

ஸ்ரீதர் நாராயணன் 

உக்கிரமாக எறியும் பந்தை
உருளை மட்டையால் ஓங்கியடிக்கிறார்
சிவப்பு காலுறைக்கார வீரர்.

பார்வையாளர் மாடத்தில்
தோல் கையுறையுடன்
எம்பிக் குதிக்கிறான் சிறுவன்.

முதுவழுக்கையை மறைத்து
தொப்பியணிந்த கிழவர்களுக்கும்,
கூர்முனை குதிகால் செருப்பணிந்த
இளநங்கையருக்கும்,
பியர் ஏப்பம் விட்டபடி
தொடையாட்டிக் கொண்டிருக்கும்
பெருமகனாருக்கும்
அவனொரு வேடிக்கை.

மைதானத்தின் மத்தியிலிருந்து
அத்திசைக்கு பந்து ஒன்று
பறந்து வந்தால்
பிடிக்க பாயும் பல கைகளிடையே
அவனுடைய தோல் கையுறை
காணாமல் போய்விடும்.

அதுவரை அவர்களுடைய விழைவின்
ஆதர்சமாக
எம்பிக் குதித்துக் கொண்டிருக்கிறான்
அவன்.