எழுத்து

அசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு”

அஜய் ஆர்

photo

துர்ச்சகுனங்கள் என்று சரளா நம்பும் சில சம்பவங்கள் காலையில் அவள் வீட்டில் நடக்கின்றன. தன் கணவனுடன் வண்டியில் அலுவலகம் செல்லும்போது அவள் அலைபேசியில் பேசவேண்டிய சூழலில், கணவன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து ஒரு கோர விபத்து நிகழ்கிறது. வண்டி ஓட்டும்போது அலைபேசியில் பேசக்கூடாது என்ற செய்தியை எடுத்துக் கொள்ளவேண்டிய கதை மட்டுமா இது? நேரடியான/ விரிவான விவரிப்புக்கள் இல்லாமல், சரளாவின் கணவன் பெயர் ‘ஜான்ஸன்’, தம்பதியர் தனியே வசிக்கிறார்கள், அலுவலகத்திற்கு அவர்கள் தயாராவது என்று நமக்கு அவர்கள் குறித்து அசோகமித்திரன் சொல்லிச் செல்வது, அவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்களா, இரு தரப்பு பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொண்டார்களா, தம்பதியரின் கனவுகள் என்னவாக இருந்திருக்கும் போன்ற கேள்விகளை எழுப்புவதால், சற்று தொலைவில் நடக்கும் விபத்தைப் பார்த்து ஒரு கணம் வருந்தி விட்டு விலகிச் செல்வதைப் போல் இல்லாமல், வாசகனை விபத்திற்கு மிக அருகில் நிறுத்தி சஞ்சலமடையச் செய்கிறது.

இப்படி, ஒன்றைத் தொட்டு ஆரம்பித்து, வேறு பல விஷயங்களைத் தொட்டுச் சென்று ஒரு சரடாக இணைப்பது அமி.யின் புனைவுலகில் புதிதில்லை. 1998ல் வெளிவந்த அ.மியின் ‘புதிய பயிற்சி’ கதையில் கணினி பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக இருக்கும் மகள் அலுவலகத்திலிருந்து திரும்புவதை எதிர்பார்த்து அவர் தந்தை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். மகளின் வரவுக்காக காத்திருக்கும் அந்தப் புள்ளியில் ஆரம்பித்து, சாலைகளின் மோசமான நிலைமை, மகளின் வேலைப்பளு, கணினி யுகம் மலர்வதைப் பற்றிய புரிந்தும்-புரியாததுமாகிய அவருடைய சிந்தனைகள் என்று கதை விரிகிறது. மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற நிலையத்திலேயே பயிற்சியாளராக வேலைக்குச் சேர்வதால்- அவர் மகளே அப்படித்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்- பயிற்சியின் தரம் எப்படி இருக்கும் என்பது போன்ற கூர்மையான அவதானிப்பும் உள்ளது. தன் மகளே தனக்கு போட்டியாளர்களை உற்பத்தி செய்கிறாளே என்ற அவரின் சிந்தனையுடன் கதை முடியும்போது (இத்தனை ஆண்டுகளில் தோன்றிய கணினி நிறுவனங்கள், அங்கு பயிற்சி பெறுபவர்கள்/ பெற்றவர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு இன்று காத்திருக்கும் வேலைவாய்ப்புகளையும் இங்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்) மீண்டும் தந்தையாகி விடுகிறார். இந்தக் கதையை இங்கு குறிப்பிடுவது இதுவும் ‘சகுனம்’ கதை போல் சமகாலத்தில் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்வைத்து ஆரம்பித்து, அதை விரித்துச் செல்கிறது என்பதால். அ.மி எப்போதும் சமூக மாற்றங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், அது குறித்த நுட்பமான அவதானிப்புக்கள் அவரிடம் உள்ளன என்பதும் தெரிகிறது.

இப்படி விரிந்து செல்லும் தன்மையை ‘இரண்டு விரல் தட்டச்சு’ தொகுப்பின் பல கதைகளில் காண்கிறோம். ‘உறுப்பு அறுவடை’, கதைசொல்லியின் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் உரிமையாளனுடன் கதைசொல்லியின் உரையாடலாக ஆரம்பிக்கும் கதை, வெகு தொலைவில் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது, சாலைகளின் மோசமான நிலை, வண்டிகளுக்கு ஏற்படும் விபத்து என்று விரியும்போது இதுவும் இன்றைய சூழல் பற்றிய விமர்சனமா என்று தோன்றலாம். ஆனால் அ.மியின் புனைவுலகு அப்படி ஒரு நேர்க்கோட்டுத் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. வேன் உரிமையாளர் சரவணனின் மனைவியை கதைசொல்லியும் நாமும் சந்திக்கிறோம். குடித்து கல்லீரல் கெட்டுக் கிடக்கும் சரவணன் பற்றி தெரிய வர, அவளுக்கு கதைசொல்லி உதவுகிறார். அந்தப் பெண்மணி கணவனுக்காக படும் இன்னல்களைப் பார்த்து “நான் நினைத்துப் பார்த்தேன். இந்த வியாதி சரவணன் மனைவிக்கு ஏற்பட்டிருந்தால் சரவணன் யாரையாவது உதவிக்குத் தேடித் போவானா” என்று கதைசொல்லி நினைப்பது. அ.மியின் புனைவுலகில் எங்கும் தென்படும் பெண்களின் துயரின் மீதுள்ள கரிசனத்திற்கு ஒரு சான்று.

சிறு பிள்ளைகளைப் பறி கொடுப்பவர்கள், இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவருக்கு மகள்களாகப் பிறந்து, வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு, படிப்பை நிறுத்தி பின் தந்தையின் உறவினர்களால் வீட்டை விட்டு துரத்தப்படும் போது விபரீத முடிவெடுப்பவர்கள் (ஒரு நண்பனைத் தேடி), என்று பல கதைகளின் பாத்திரங்கள் துயரின் நிழலில் தான் உள்ளார்கள். அதே நேரம் இவர்கள் எல்லோரும் விதியே என்று உட்கார்ந்து விடுபவர்களும் அல்ல. கணவனால் கைவிடப்பட்ட பெண் நடத்தும் தட்டச்சு நிறுவனம், அதில் படிக்க வரும் – குடிகார தந்தையினால் பாதிக்கப்பட்ட – இளம் பெண்கள், தங்கள் சூழலைத் தாண்டிச் செல்லும் உந்துதல் உள்ளவர்கள்.

ஏதோ பூஜை என்று கிளம்பிச் சென்ற கணவன் திரும்பி வராமல் போக, ஒரே ஒரு முறை தன் கணவனுடன் பார்த்த கதைசொல்லியிடம் அவனைத் தேடும்படி உதவி கேட்குமளவிற்கு -இந்தப் பெண்மணிக்கும், ‘உறுப்பு அறுவடை’ கதையின் ‘சரவணன்’ மனைவிக்கும் அதிக வித்தியாசம் இல்லை- அவர்களிடம் செயலூக்கம் உண்டு(அகோரத் தபசி).

துயர் நிறைந்த வாழ்வெனும்போது, ஜோசியம்/ ஜோசியர்கள் அவ்வப்போது தலைகாட்டுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. கண்டம் கதையில் ஜோசியம் தெரிந்த (ஆனால் ஜோசியர் அல்ல) ஒருவர் வலிய வந்து தனக்குத் தெரிந்தவர் குழந்தைகளுக்கு ஜோசியம் பார்க்கிறார். “எந்தக் குழந்தைக்கும் கண்டம் இல்லாமல் பார்த்துக்கொள்” என்ற வேண்டுதலுடன் கதை முடியும்போது, அது ஜோசியம்/ அதன் பாதிப்பு இவற்றைப் பற்றிய கதையாக இல்லாமல், மானுட நேசத்தைப் பற்றிய அ.மியின் இன்னொரு கதையாக மாறுகிறது. ‘ஜோதிடம் பற்றி ‘இன்னொரு கர்ணப் பரம்பரைக் கதை’ கதையிலும் ஜோசியம் வருகிறது, கண்டம் உள்ள கணவனை மலைப்பாம்பிடமிருந்து மனைவி காப்பாற்றுகிறார். விதியை மதியால் வெல்லும் இன்னொரு கதை என்று நினைப்பதற்குள், “ஜோதிடர்கள் கிரகங்களையும் ராசிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். எங்கோ தூரத்தில் ஒரு மலைப்பாம்பு இரையைத் தேடித் போய்க் கொண்டிருக்கிறது” என்று கதை முடிவது புன்சிரிப்பை வரவழைப்பதோடு, மலைப்பாம்பு இரையைத் தேடி (தொலைத்து) அலைவது, என்னதான் ஜோசியம்/ பிரார்த்தனை என்றிருந்தாலும், மனிதர்களும் அவரவர் இரையைத் தேடி அலைந்து அதில் வெற்றி/ தோல்வி பெறுவதை நினைவூட்டுகிறது. பள்ளி ஆண்டு விழாவில், பல இரைச்சலுக்கு இடையில் தன் அக்கா பாடியதைப் பற்றி “எங்கள்வரை அது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் யாரும் கேட்க முடியாதபடி ஒரே கூச்சல் குழப்பம்” என்று சொல்வது அ.மியின் தாழ்குரல் நகைச்சுவையுணர்விற்கு இன்னொரு சான்று.

அ.மியின் கதைத் தொகுப்பில் ‘லான்ஸர் பாரக்ஸ்’ இல்லாமலும், அதில் ‘மாடுகள்’ உலா வராமலும் இருந்தால் நிறைவின்மை இருக்குமல்லவா? இதில் இரண்டு கதைகளில் மாடு வருகிறது. மாடு வளர்ப்பு, அது ஓடிப்போவது என ஆரம்பித்து, பாழடைந்த கோட்டையில், அதன் வரலாறு குறித்த கதைசொல்லியின் கற்பனைகளோடு இணையும் ‘கோட்டை’ சிறுகதை, கோட்டையை மீண்டும் ஒரு முறை நன்றாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் “இனிமேல் முடியவே முடியாது என்றிருந்த நீண்ட பட்டியலில் அந்தக் கோட்டையும் சேர்ந்து கொண்டது” என்று கதைசொல்லி சொல்லும் இடத்தில்,ஆயாசமோ, வருத்தமோ இல்லாமல், எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனப்பக்குவமே தெரிவதோடு, சிறு வயது நினைவுகள் என்ற இடத்திலிருந்து தாவி, கதைசொல்லியின் நிராசைகளின் புகலிடமான, அந்தரங்கமான இன்னொரு இடத்திற்குச் செல்கிறது. ‘தோல் பை’ கதையிலும் மாடு/ மாடு வளர்ப்புப் புராணம், ‘சுந்தர்'(!!) என்ற மாடு வருகிறது. மாடுகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல் துயரத்தைத் தருவதைப் பார்க்கிறோம். (தோல் பையைப் பார்த்து “எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் மாடுகள் இப்படித்தான் முடிய வேண்டியிருக்கிறது”, என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார்)

சம்பவம் 1

தனக்கு கடன் கொடுக்கும் சரவணனுடன் கதைசொல்லிக்கு சற்றே கடுமையான உரையாடல் நடக்கிறது (வாடிக்கை). அடுத்த மாதம் சரவணனைப் பார்க்கும் கதைசொல்லி, அவன் மனைவி அவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளதை அறிந்து, ஒரு நாள் விடுமுறை எடுத்து, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வேலூர் சென்று சமாதானம் செய்கிறார்.

சம்பவம் 2

‘இரு நண்பர்கள்’ கதையில், வேலை தேடும் இருவரில் ஒருவர் தான் விண்ணப்பித்துள்ள வேலைக்கு, அது குறித்த நம்பிக்கை இல்லாத தன் நண்பனையும் விண்ணப்பிக்க வலியுறுத்துகிறான். வலியுறுத்துபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. வெகு நாட்கள் கழித்து, தன் நண்பனுக்கு அந்த வேலை கிடைத்தது என்று அறியும் போது அவனுக்கு எவ்வளவு மகிழ்சிகரமான விஷயம். ஆனால், அவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. கூச்சமாக இருந்திருக்குமோ? “அந்த நேரத்தில் இப்படித் தன்னிடம் கூட அந்த நண்பன் கூச்சப்பட்டிருக்கிறானே என்ற எண்ணந்தான் வருத்தமளித்தது”

சம்பவம் 3

தாய் இறந்த செய்தியைத் தெரிவிக்க, நள்ளிரவு தாண்டி தந்தி அலுவலகம் செல்லும் சங்கரன் (தந்தி), அலுவலர்கள் தூக்க கலக்கத்திலும் தனக்கு சில சிறு உதவிகள் செய்வதைப் பார்த்து “நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் கழித்தும் ஒரு தந்திக்காரருக்கு இவ்வளவு அனுதாபம் கொள்ளத் தோன்றுகிறது” என்று நினைக்கிறான்.

முதல் சம்பவத்தில் பண நெருக்கடியில் இருக்கும் கதைசொல்லி, தொழில் முறையில் மட்டுமே தெரிந்தவனுக்காக வலியச் சென்று உதவுகிறார். வெறும் பண பரிவர்த்தனைதான் என்று பார்க்காமல் “அவன் எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கான். அதெல்லாம் எதுக்கு. அந்தக் குழந்தைங்க படிப்பு கெடக்கூடாது” என்கிறார். இரண்டாவது சம்பவத்தில் முதல் நண்பன், வேலை கிடைத்த விஷயம் தனக்கு சொல்லப்படாதது குறித்து துணுக்குற்றாலும், அது குறித்து மொத்தத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். மூன்றாவது சம்பவத்தில் தாயை இழந்த பெரிய துக்கத்திலும், தன் வேலையின் எல்லைகளைத் சற்றேத் தாண்டி உதவி செய்யும் நபரை சங்கரனால் கவனிக்க முடிகிறது.

மூன்று சம்பவங்களிலும் உள்ள ஒற்றுமை சக மனிதரிடம் கரிசனம், மனித நேயம் வெளிப்படும் இடங்கள். இவை வாழ்வை முற்றிலும் வெளிச்சமாக்கும் ஒளி அல்ல, என்றேனும் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை தரும் கீற்றுக்கள் மட்டுமே. தந்தி அலுவலக ஊழியர், தாய் மரணம் இல்லாத இன்னொரு செய்திக்காக சங்கரன் சென்றிருந்தால், நள்ளிரவைத் தாண்டிய அந்த வேளையில் எப்படி நடந்து கொண்டிருப்பார்? ‘வாடிக்கை’ கதையில், மனைவியை சமாதானம் செய்ததற்காக நன்றி சொல்ல வரும் சரவணனிடம், கதைசொல்லி ஐநூறு ருபாய் கடன் கேட்கிறார். ஆம், அவர் அந்த ஐநூறு ரூபாய்க்காக வேலூர் செல்லவில்லைதான், அதற்கு கூலியாக அந்தப் பணத்தைக் கேட்கவும் இல்லைதான், ஆனால் பணமுடைதான் அவர் வாழ்வின் யதார்த்தம் என்பதால், அவர் அப்படிக் கேட்பது தவிர்க்க முடியாததாகிறது.

ஆகாயத் தாமரை நாவலின் நாயகன் ரகுநாதன் ஒரு இக்கட்டில் இருக்கும் போது அவன் சிறு வயது/ கல்லூரித் தோழி மாலதியைச் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கிறான். அவர்களுக்கிடையே உள்ளது நட்பா அல்லது அதைத் தாண்டிய ஈர்ப்பா என்றெல்லாம் அ.மி சொல்வதில்லை. ஆனால் மாலதி ரகுநாதனுக்கு உதவ முயல்கிறாள், தனக்குத் தெரிந்த ஓர் இடத்திற்கு வேலைக்காக அழைத்துச் செல்கிறாள். அது பலனளிப்பதில்லை. நாவலில் ஒரு சில முறை மட்டுமே சந்திக்கும் அவர்கள், மீண்டும் தொடர்பற்று போகிறார்கள், மீண்டும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ நிலைமை சீராகி ரகுநாதன் நல்ல நிலைக்கு வந்துவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறிய சந்திப்பு, அவ்வளவுதான். அவர்களுக்கிடையே இயல்பாக மீண்டும் ஏற்படும் தொடர்பும் அதே போல் இயல்பாகவே முறிகிறது. மாலதியால் உதவ முடியவில்லை. தொடர்பில் இருக்க முடியவில்லை தான், ஆனால் அவள் பொறுப்புள்ள வேலையில் இருக்கிறாள், அதை அப்படியே விட்டுவிட்டு எப்போதும் ரகுநாதனுக்காக அலையவேண்டும் என்று சொல்ல முடியாது, அப்படிச் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. மற்றவர்களுக்காக தன்னையே உருக்கிக் கொள்ளாமல், அதே நேரம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயலும் மாலதியை இந்தத் தொகுப்பில் உள்ள பாத்திரங்களோடு பொறுத்திப் பார்க்கலாம். யார் உதவ முன்வந்தாலும், இறுதியில் நமக்கு நாம்தான் உதவிக் கொண்டாக வேண்டும் என்ற புரிதலும் இதில் உள்ளது.

ஆனால், ஒரு போதும் நம்மை விட்டு நீங்காத துயரங்களை சுமந்தலையும் வாழ்வில், அடுத்த அடி எடுத்து வைத்து பயணத்தைத் தொடரும் ஊக்கத்தை இந்த நம்பிக்கை கீற்றுக்கள்தான் தருகின்றன. அவையே இந்தக் கதைகள் உள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ முழு தொகுப்பையுமே மானுட நேயத்தை எப்போதுமே வலியுறுத்தி வரும் அ.மியின் புனைவுலகின் மற்றுமொரு காத்திரமான பிரதிநிதியாகப் பார்க்கச் செய்கின்றன.

000

ஒளிப்பட உதவி – We Can Shopping

ஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே

 காஸ்மிக் தூசி

photo

சிறிய கோயில் நகரம்
அதன் மலை அடிவாரத்தில்
நெருக்கியடித்துக் கொண்டிருக்கும்
அறுபத்து மூன்று பூசாரிகள் உள்ள
அறுபத்து மூன்று வீடுகள்
அதன் முந்நூறு தூண்கள்
ஐந்நூறு படிகள் மற்றும்
பதினெட்டு வளைவுகள் விட்டு

பூசாரியின் மகன்
ஒருபோதும் சொல்லத்துணியாத
திறமையின் வழிபணம் சேர்த்த
ஒருபோதும் உள்ளே கால் வைக்க மாட்டேன்
என அவன் நம்பும்
கோயில் நாட்டியக்காரியின்
அறுபத்து நான்காவது வீட்டை கடந்து
இடிந்த கோயிலைத் தாண்டிச் சென்றாலும்

காணவில்லை கோயில்நாயை
கோரக்‌ஷநாத் முடிவெட்டும் சலூன்
மகாலஷ்கந்த கபே
மற்றும் மாவு மில் தாண்டிவிட்டால்
அவ்வளவு தான்.
முடிந்தது.

வந்தாயிற்று நகரம் விட்டு
கையில் ஒரு தேங்காயோடு.
பாக்கெட்டில் ஒரு பூசாரியின் முகவரி அட்டை
மற்றும் தலைக்குள் சில கேள்விகள்.
ஜெஜூரி ஒருபுறம்
ரயில் நிலையம் மறுபுறம்
வழியில் இரண்டுக்கும் நடுவே வந்தபின்
கனவில் இருப்பது போல.
செய்வதறியாது
நிற்க வேண்டியதுதான்.
இருபுறமும் தட்டுகள் சமநிலைப்பட்டபின்
ஏற்கவும் இழக்கவும் முடியாமல்
அசையாமல் நிற்கும் முள்ளாகி.

தடத்தில் செல்லாமல் திகைப்பூட்டி
நிறுத்தி வைக்கும் காட்சி
சோளக்கொல்லையில்
ஒரு டஜன் சேவல்களும் கோழிகளும் .
ஒரு வகை அறுவடை நடனம் போல.
இதுவரை பார்த்தவற்றிலேயே
விநோதமானது
ஏழு பறவைகள்
தன் நான்கு மடங்கு உயரத்திற்கு குதிக்க
குறுக்கே பாய்கின்றன
ஐந்து பறவைகள் தானியம் எடுத்த அலகுடன்

Untitled

என்னைப்பார்க்க எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்கும்
என்பதை மறந்துவிட்டு நிற்கிறேன்
உண்மையில் இருப்பதைப்போலவே
இடப்புறம் பூசாரி
வலப்புறமாக
ஒரு ஸ்டேஷன் மாஸ்டர்.
000

(அருண் கொலாட்கரின் Between Jejuri and The Railway Station என்ற கவிதையின் தமிழாக்கம்)

ஒளிப்பட உதவி- http://banmilleronbusiness.com/

முடிவுகள் – பதாகை சிறுகதைப் போட்டி 2015

இவ்வருடத்திற்கான சிறுகதைப் போட்டியை நண்பர்களின் ஒத்துழைப்பும், அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களான நடுவர்கள் திரு பாவண்ணன் மற்றும் திரு க மோகனரங்கன் அவர்களின் தனித்துவமிக்க மதிப்பீடுகளும் சிறப்பித்திருக்கின்றன.

story_competition_prizes

வெற்றி பெற்றச் சிலரைத் தவிர பங்கேற்ற பிறர் அனைவருக்கும் ஏமாற்றம் ஏற்படுவதை இது போன்ற போட்டிகளில் தவிர்க்க முடியாது. ஆனால் வெற்றி தோல்விகள் தனி நபர் படைப்பூக்கத்தின் விசையையோ அது வெளிப்படும் திசையையோ தீர்மானிப்பதாக இருக்க முடியாது. முடிவுகளுக்கு அப்பால் என்னவென்று யோசித்தால், புனைவு எழுதும் ஊக்கமும் புனைவிலக்கியம் குறித்த விமரிசனமும் இன்று மிகவும் அவசியப்படுகிறது. வெற்றி தோல்விகள் அல்ல, தொடர்ந்த இலக்கியச் செயல்பாடே அர்த்தமுள்ளதாக இருக்கும்.

போட்டிக்கு வந்த சிறுகதைகளை தங்களுக்கேயுரிய அளவீடுகளால் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் தேர்வை அறிவித்த நடுவர்களான திரு பாவண்ணன் அவர்களுக்கும், திரு க மோகனரங்கன் அவர்களுக்கும் பதாகை தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. பரிசுக்குரிய சிறுகதைகளை எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.

judges_panel_2015

பரிசுப்பெற்ற கதைகளின் விவரம் பின்வருமாறு.

முதல் பரிசு (தலா ரூ3000/- பரிசு)

  • மாசாவின் கரங்கள் – தனா
  • யுகசந்தி – முகம்மது ஐஷ்வர்யன்

(வரும் 4-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

இரண்டாம் பரிசு (தலா ரூ1500/- பரிசு)

  • விடுப்பு – கிஷோர் ஸ்ரீராம்
  • இரண்டு தோசைகள் – ராஜா (எ) இளமுருகு

(வரும் 11-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

மூன்றாம் பரிசு (தலா ரூ750/-)

  • வண்ணத்துப்பூச்சிகளின் கோவில் – ஆ. ஜீவானந்தம்
  • தாலாட்டு – ரபீக் ராஜா

(18-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

வெற்றிப் பெற்ற படைப்பாளிகளுக்கு பதாகையின் வாழ்த்துகள்.

துயரமும் இலக்கியமும்

 – மாயக்கூத்தன்

Capture

ட்விட்டர் உலகில் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதென்பது ஒருவிதமான மிரட்டல். எனக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. ஒரு ட்விட்டிற்கு வந்த பதில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, அவ்வளவுதான்.. மேலே படியுங்கள், நான் நினைப்பதை எழுத முடிகிறதா பார்க்கிறேன்.

வாழ்க்கை கொள்ள முடியாத அளவிற்கான துயரம் என்று ஒன்று இல்லை, அப்படி ஒரு துயரம் நேரும் போது நாம் நம்முடைய முடிவைச் சந்தித்திருப்போம் என்று வாதாட வேண்டும் என்ற நினைப்பிலேயே ‘வாழ்வு கொள்ளாத துயரம்’ என்ற தலைப்பை வைத்தேன். பிறகு, அப்படியொரு வாதம் செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் வலுக்க, அந்த வாதத்தை விட்டுவிட தலைப்பு மட்டும் நிலைத்தது. சிறப்பிதழில் வந்திருந்த மற்ற கட்டுரைகளின் தலைப்போடும் (நிர்க்கதியின் நிழலில், மானுடத்துயர், கரை சேர்ந்தார் காணும் கடல், நிறைவின்மையின் வழியே) பொருந்திப்போனது. ஆனாலும், துயரங்கள் எழுத்தில் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட வேண்டும் என்ற கேள்வி இல்லாமல் இல்லை.

சு.வே சிறப்பிதழில் ஒரு கதையில் வரும் ஒரே இடம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. தன் மகனுடைய ஆடம்பரத்திற்காக அம்மா தன்னுடைய ஆட்டுக்குட்டியை விற்பது, தான் வளர்த்த நாய்க்குட்டியை தன்னிடமிருந்து பிரிக்கும் போது வெள்ளந்தியாய், ஆனால் அர்த்தத்தோடு கேள்வி கேட்கும் பெண் குழந்தை, இந்த இடங்கள் படிக்கும் எவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். இவை எல்லாவற்றையும் விட சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையில் அவர் இரண்டாவதாக குறிப்பிடும் பத்திகள்- அவர் ஏன் அந்தப் பத்திகளைத் தேர்வு செய்தார் என்பது எனக்கு விளங்கவே இல்லை. ஒருவருக்கு நடக்கும் வன்முறையை இத்தனை விரிவாகச் சொல்லியாக வேண்டியதன் அவசியம் தான் என்ன? நான் இங்கே சு.வேயின் படைப்புகளைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. சுஜாதாவின் ‘நகரம்’ கதையையும்கூட இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம். என்னைச் சில நாட்கள் தூக்கமில்லாமல் செய்த சில ஸ்ரீரங்கத்துக் கதைகளும் கூட.

இசை, ஓவியம், இலக்கியம் என்று ஒவ்வொரு கலையும் நம்மை சமநிலையில் வைத்திருந்து ஒரு உயர்வான சிந்தனை நிலைக்கு இட்டுச் செல்பவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத்து என்னுடைய நம்பிக்கைகளை கேள்வி கேட்கலாம், முன்முடிவுகளை உடைத்துப் போடலாம். ஆனால், வாழ்வு வலி மிகுந்தது என்று உரைப்பது எழுத்தின் நோக்கமாக இருக்கமுடியுமா? வாழ்வில் வலியே இல்லையா என்றால், வலி மட்டுமே இல்லையே. நாம் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்றோம். பெருமகிழ்ச்சியும் துன்பமும் நம்மை எப்போதும் ஆட்கொண்டிருப்பதில்லை. இன்பமோ துன்பமோ, அவரவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து நாம் நம்முடைய சமநிலைக்கு மறுபடியும் வந்துவிடுகிறோம்.

வலியும் துன்பமும் நிறைந்த படைப்புகளின் மீது தேவைக்கதிகமாக ஒரு பிரியம் இருப்பதாகத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகரும் திரைப்படம், பதறச் செய்யும் முடிவோடு அதிகம் பேசப்படும் ஒன்றாகிவிடுகிறது. புனைவுகளுக்கும் இது பொருந்தும். துயரம் மிகுந்த படைப்புகளை, அதுவும் விளிம்புநிலை மனிதர்களின் துயரை விவரிப்பதாகச் சொல்லப்படும் படைப்புகளைக் கேள்வி கேட்க ஒரு தயக்கம் இருப்பது போல் இல்லையா?

கல்கியின் சிறுகதையை விமர்சனம் செய்த ஒருவர், அவை நம்மை உலுக்குவதாய் இல்லை என்று எழுதியிருந்தார். கல்கியின் கதைகளை நான் வாசித்ததில்லை. ஆனால், ஒரு கதை நம்மை உலுக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? ஒருவேளை நம் வாழ்வை விட மோசமாக ஒன்று இருக்கிறது என்று ஒரு ஆறுதலா? சில சமயம் உலுக்குவது மாதிரி எழுதுவதில்லை என்றால், ஒரு மாதிரி ஒதுக்கிவிடுவார்கள் என்று கூட தோன்றுகிறது. துயரக் கதைகள் எழுதப்படுவது கூட, ஒருவருக்காவது நேர்ந்திருக்கலாம் அதனால் பிழை சொல்ல முடியாது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், இது மாதிரி கதைகள் அதிகம் அங்கீகரிக்கப்படுவதைப் பற்றி என்ன சொல்ல?

ஏன் நகரத்தில் நல்ல வேலையில் இருப்பவர்களின் வாழ்க்கை இது போல எழுதப்படுவதில்லை. பெங்களூரூவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லோருமே பணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள் என்று நினைப்பது போல, குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் நினைப்பதைப் போல, இதுவும் ஒரு பொதுமைப்படுத்தல் தானா?. ஒருவேளை மேல்நிலையில் இருப்பவர்கள் வருடத்தில் நூறு நாட்கள் சமநிலையில் இருக்க, விளிம்பு நிலையில் இருப்பவர்கள் வருட்த்தில் இருநூறு நாட்கள் சமநிலையில் இருந்தால்? இதைப் பற்றிய ஆராய்ச்சி எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இன்னொன்று, எது சவாலாக இருக்கும்- ஒருவனுடைய அவநம்பிக்கையை உடைத்து வாழ்வின் மேல் நம்பிக்கை எழச் செய்வது எளிதா அல்லது துளிபோல இருந்தாலும் அந்த அவநம்பிக்கையை ஊதிப் பெரிதாக்குவது எளிதா? கதைமாந்தர்களின் மீதெழும் அனுதாபம் நம்மை மேலானவர்களாக, மனிதர்களாக உணரச் செய்கிறதா? அதற்காகவாவது துயரக் கதைகள் அவசியம் வேண்டுமா? நான் எத்தனை கருணையோடும் அக்கறையோடும் இருக்கிறேன் என்று எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் காண்பித்துக் கொள்ள துயரக் கதைகள் அவசியமா?

எத்தனையோ கேள்விகள் இருந்தாலும் இந்தக் கதைகளின் இருப்பிற்கு என்னவோ அவசியம் இருக்கிறது. அது என்ன என்பது தான் விளங்கவில்லை. எழுத்தாளர் பேயோன், திசை காட்டிப் பறவைகள் புத்தகத்தில் ‘ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன்’ என்ற கட்டுரையை இப்படி முடித்திருப்பார். ”மனித வாழ்க்கை அர்த்தமற்றது, துயரமானது, எதுவும் நிலைக்காது என்று எழுத இத்தனை பேர்.”

நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்? – இடாலோ கால்வினோ

துவக்கத்தில் நாம் சில வரையறைகளை முன்வைத்துக் கொள்ளலாம்-

1. கிளாசிக்குகள் என்று அழைக்கப்படும் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது, “….ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்வதுதான் வழக்கம், :”… படித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று ஒருபோதும் சொல்வதில்லை.

யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நல்ல வாசிப்பு உள்ளவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விஷயத்திலாவது இது பொருந்தும்; இளைஞர்களுக்கு இது பொருந்தாது. ஏனெனில், இந்த வயதில் முதல் அறிமுகம் என்ற காரணத்தால்தான் அவர்களுக்கு இவ்வுலகின் தொடுகையும் இவ்வுலகின் அங்கங்களாய் உள்ள கிளாசிக்குகளின் தொடுகையும் முக்கியமாகின்றன.

புகழ்பெற்ற ஒரு புத்தகத்தை வாசித்ததில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வெட்கப்படுபவர்கள் விஷயத்தில், வாசித்தல் என்ற வினைச்சொல்லுக்கு முன் மீள் என்ற அடைமொழி சேர்த்துக் கொள்வது, ஒரு சிறிய போலித்தனமாக இருக்கக்கூடும். ஆனால் வாசிப்பின் இயல்பு தீர்மானிக்கப்படும் இளமைப்பருவத்தில் ஒருவன் எவ்வளவு விரிவாக வாசித்திருந்தாலும், அவன் வாசித்திராத அவசியப் படைப்புகளின் எண்ணிக்கை எப்போதுமே மிகப்பெரிதாகத்தான் இருக்கும். கிளாசிக்குகள் அனைத்தையும் வாசிக்கவில்லை என்று வெட்கப்படுபவர்களுக்கு இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுவது ஆறுதல் அளிக்கக்கூடும்.

ஹெரோடோடஸ் மற்றும் தூசிடைடஸ் எழுதிய அத்தனையையும் படித்துவிட்டேன் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் கை தூக்குங்கள். அப்படியானால் செயிண்ட்-சைமனைப் படித்தவர்கள்? கார்டினல் ரெட்ஸ்? பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்களின் மகத்தான தொகுப்புகள் வாசிக்கப்படுவதைவிட குறிப்பிடப்படுவதே அதிகம். பிரான்சில் பள்ளிப்பருவத்தில் பால்ஸாக் வாசிக்கத் துவங்குகிறார்கள்; புழக்கத்தில் உள்ள பதிப்புகளைக் கணக்கில் கொண்டால், பள்ளிப்படிப்பு முடிந்தபின்னும் வெகுகாலம் அவரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாகிறது. ஆனால் இத்தாலியில் பால்ஸாக் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்று ஒரு அதிகாரப்பூர்வ ஆய்வு நடத்தினால், அவரது இடம் பட்டியலில் மிகக்கீழே எங்கோ இருக்கும் என்றுதான் வருத்தத்துடன் சொல்ல வேண்டும். இத்தாலியில் உள்ள டிக்கன்ஸ் வாசகர்கள், மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள எலீட்டுகள், அவர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, தாம் நிஜமாகவே பேசிப் பழகியவர்களைப் பற்றி பேசுவதுபோல் டிக்கன்ஸ் நாவலின் பாத்திரங்களையும் சம்பவங்களையும் விசாரித்துக் கொள்கிறார்கள். பல ஆண்டுகளுக்குமுன் மிஷேல் பூதோ அமெரிக்காவில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, எமிலி ஜோலா பற்றி விசாரித்தவர்களின் எண்ணிக்கை அவருக்கு அலுப்பூட்டுவதாக இருந்தது. அதனாலும் அவர் ஜோலாவைப் படித்ததே இல்லை என்பதாலும் Rougon-Macquart நாவல்களின் தொகையை முழுமையாக படித்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார். ஆனால் அவர் நினைத்துக் கொண்டிருந்ததைவிட அந்த நாவல் முற்றிலும் மாறுபட்டிருப்பதை நேரடியாகப் படித்துப் பார்க்கும்போதுதான் கண்டுணர்ந்தார்- உலகின் துவக்கத்தையும் அதன் வம்சாவளியினரையும் விவரிக்கும் அற்புதமான, தொன்மைத்தன்மை கொண்ட படைப்பு அது என்று உணர்ந்து அருமையான கட்டுரையொன்றில் அதன் சிறப்பை விவரித்தார்..

இது நமக்கு உணர்த்தும் உண்மை- மகத்தான ஒரு புத்தகத்தை நம் வளர்ச்சி முழுமையடைந்தபின் நாம் முதன்முறை வாசிப்பது என்பது அசாதாரண இன்பம் தரும் அனுபவமாக இருக்கக்கூடும். அதே புத்தகத்தை இளமையில் வாசிப்பதைவிட இது மிகவும் வேறுபட்ட அனுபவமாக அமையலாம் (ஆனால் இதனால் கிட்டக்கூடிய இன்பம் அதிகரிக்கிறதா குறைகிறதா என்பதைச் சொல்வது சாத்தியமில்லை). இளமைப்பருவம் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒவ்வொரு அனுபவத்துக்கும் தனித்தன்மை கொண்ட சுவையும் முக்கியத்துவமும் அளிக்கிறது; ஆனால், மனம் முதிர்ந்த வயதில் ஒருவன் இன்னும் பல நுண்விபரங்களையும், உள்ளடுக்குகளையும், பல்பொருள் விரிவுகளையும் சுவைத்து மகிழ்கிறான் (அல்லது, சுவைத்து மகிழ வேண்டும்). எனவே மேற்கூறிய வரையறையை நாம் இவ்வாறு மாற்றி எழுதிப் பார்க்கலாம்-

2. கிளாசிக்குகள் அவற்றை வாசித்து நேசித்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களின் தொகை நூல்களாக விளங்குகின்றன; ஆனால், அவற்றுக்குத் தக்க ஆகச்சிறந்த மனநிலை உருவாகும்போது வாசித்துக் கொள்ளலாம் என்று எடுத்து வைத்திருப்பவர்களுக்கும் அதே அளவு செறிவான அனுபவம் காத்திருக்கிறது.

ஏனெனில் இது உண்மை- இளமையில் செய்யும் வாசிப்பின் மதிப்பைப் பெரிதாய் பொருட்படுத்துவதற்கில்லை- அது பொறுமையற்ற பருவம், நம் கவனம் குவியாத வயது, நாம் தேர்ந்த வாசிப்பை நிகழ்த்தப் பழகியிருக்க மாட்டோம், அல்லது, நமக்கு வாழ்வனுபவம் போதாது என்ற காரணமும் உண்டு. நம் இளமைப்பருவ வாசிப்பு (அது நிகழும்போதும்கூட) நம் பிற்கால வாசிப்பின் தன்மையை உருவாக்குவதாக இருக்கலாம்- நம் எதிர்கால அனுபவங்களுக்கு அது உருவமும் வடிவமும் கொடுக்கிறது; அவற்றைப் உள்வாங்கிக் கொள்வதற்கான முன்மாதிரிகள் அளிக்கிறது, அவற்றை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்பிக்கிறது, அவற்றை ஒப்பிட அளவைகள் தருகிறது, நம் அனுபவங்களை வெவ்வேறு பகுப்புகளில் சேர்த்துக்கொள்வதற்கான வரைவுகளை உருவாக்குகிறது, நம் மதிப்பீட்டு விழுமியங்களை அமைக்கிறது, நம் அழகனுபவத்தின் முன்னுதாரணப் படிவங்களைத் தகவமைக்கிறது: நாம் நம் இளமைப்பருவத்தில் வாசித்த புத்தகத்தைப் பற்றி அனைத்தும் மறந்தபின்னும் அல்லது மிகக் குறைவாகவே நினைவில் வைத்திருக்கும்போதும் அவற்றின் படிப்பினைகள் நம்மை இயக்குகின்றன. புத்தகம் ஒன்றை அகம் முதிர்ந்த பருவத்தில் மீண்டும் வாசிக்கும்போது, இப்போது நம் அக இயக்கத்தின் உறுப்புகளாய், அவை எங்கிருந்து வந்தன என்பதை மறந்து விட்டிருந்தபோதும். நிலைத்து நிற்பனவற்றை மீண்டும் கண்டறிகிறோம், தன்னளவில் மறக்கப்பட்ட போதும் தன் வித்தினை நம்மில் விட்டுச் செல்லும் படைப்புக்கு குறிப்பிடத்தக்க ஒரு வீரியம் உண்டு. எனவே, இனி நாம் இப்படி வரையறை செய்து கொள்ளலாம்-.

3. கிளாசிக்குகள் குறிப்பிட்ட ஒரு தாக்கத்தை விட்டுச் செல்லும் நூல்கள், அவை மறக்க முடியாது என்று சொல்லத்தக்க தடத்தை நம் உள்ளத்தில் பதிக்கும்போதும் தனிமனித அல்லது பொது நனவிலி மனதின் நினைவு அடுக்குகளில் ஒளிந்து கொள்ளும்போதும்..

இக்காரணத்தால்தான் நம் இளம்பருவத்தின் மிக முக்கியமான வாசிப்புகளை மீண்டும் கண்டறிய ஆடவப் பருவத்தில் சிலகாலம் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்கிறேன். புத்தகங்கள் மாறாதிருப்பினும் (மாறுதலுக்குட்பட்ட நம் வரலாற்று நோக்கின் வெளிச்சத்தில் அவையும் மாறுகின்றன என்றாலும்), நாம் நிச்சயம் மாறியிருக்கிறோம், எனவே இந்தப் பிந்தைய எதிர்கொள்ளல் முழுமையாகவே புதிய அறிமுகமாகிறது.

இக்காரணத்தால், நாம் வாசிப்பு என்ற வினைச்சொல்லையோ மீள்வாசிப்பு என்ற வினைச்சொல்லையோ, இரண்டில் எதைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமற்றுப் போகிறது. உண்மையில் நாம் இப்படிச் சொல்லலாம்:

4. முதல் முறை வாசித்தபோது அனுபவப்படும் புதிய உணர்வை ஒவ்வொரு மீள்வாசிப்பிலும் அதே அளவு அளிக்கும் புத்தகம்தான் கிளாசிக் எனப்படுகிறது.

5. முதல் முறை வாசிக்கும்போதும்கூட முன்னரே வாசித்துவிட்ட ஏதோவொன்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்துகிறோம் என்ற உணர்வை அளிக்கும் புத்தகம்தான் கிளாசிக் எனப்படுகிறது.

மேற்கண்ட நான்காம் வரையறையை இதன் கிளைத்தேற்றமாகக் கொள்ளலாம்..

ஆனால் ஐந்தாம் வரையறை இன்னும் விரிவான வடிவமைப்பைக் கோருகிறது, இதுபோல்-

6. தான் வாசகர்களுக்குச் சொல்ல இருப்பதை எத்தனை சொல்லியும் தீராத் தன்மை கொண்ட புத்தகம்தான் கிளாசிக்.

7. முந்தைய பொழிப்புரைகளை ஆலவட்டமாய்த் தாங்கி வரும் புத்தகங்களே கிளாசிக்குகள்; அவை கடந்து வந்த பண்பாடு அல்லது பண்பாடுகளில் (அல்லது மொழிகளிலும் பழக்கவழக்கங்களிலும்) விட்டுச் சென்ற தடங்கள் அவற்றைத் தொடர்கின்றன.

இது பண்டைய கிளாசிக்குகளுக்கும் நவீன கிளாசிக்குகளுக்கும் ஒருசேரப் பொருந்தும். நான் ஒடிஸி வாசிக்கிறேன் என்றால், ஹோமரின் பிரதியை வாசிக்கிறேன். ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளில் யூலிசிஸின் சாகசங்களுக்கு எப்படிப்பட்ட புரிதல்கள் கூடியிருக்கின்றன என்பதை நான் மறக்க முடியாது. மூலப்பிரதியிலேயே இத்தனை அர்த்தங்களும் உள்ளுறை பொருளாய் இருந்தனவா அல்லது அவை பிற்காலத்தைய சேகரங்களாகவோ திரிதல்களாகவோ விரிதல்களாகவோ இருக்கக்கூடுமா என்று நான் வியக்காதிருக்க இயலாது. நான் காப்காவை வாசிக்கிறேன் என்றால், ஏறத்தாழ எல்லாவற்றையும் விவரிக்கப் பயன்படுத்தப்படும் ‘காப்காத்தனம்’, என்ற அடைமொழி முறையானதுதானா என்று தொடர்ந்து விசாரித்து ஏற்றுக்கொண்டும் நிராகரித்துக் கொண்டுமிருக்கிறேன். .நான் துர்ஜனீவின் “ஃபாதர்ஸ் அண்ட் சன்ஸ்” என்ற புத்தகத்தையோ தாஸ்தாவெஸ்கியின் “தி டெவில்ஸ்” என்ற புத்தகத்தையோ வாசிக்கிறேன் என்றால், இந்தப் புத்தகங்களிலுள்ள பாத்திரங்கள் நம் காலம் வரை தொடர்ந்து மறுபிறப்பு எடுத்து வந்திருப்பது குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது.

ஒரு கிளாசிக்கை வாசிப்பது என்றால் அது குறித்து நமக்கு முன்னிருந்த பிம்பத்தோடு ஒப்புநோக்கையில் நம் வாசிப்பு ஆச்சரியப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதனால்தான் நாம் பிரதியின் நேரடி வாசிப்பை எத்தனை பரிந்துரைத்தாலும் தகும், இயன்றவரை இரண்டாம்நிலை புத்தகங்களையும், விளக்கங்களையும் பிற வாசிப்புகளையும் தவிர்க்க வேண்டும். விவாதிக்கப்படும் புத்தகத்தைப் பேசும் வேறு எந்தவொரு புத்தகமும் மூலநூலைக் காட்டிலும் அதிகம் சொல்லிவிட முடியாது என்ற எண்ணத்தை பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். ஆனால் கல்வி அமைப்புகளோ, மாணவர்கள் இதற்கு நேர் எதிர் கருத்தை நம்பும் வகையில் அனைத்தும் செய்கின்றன. வாசிப்பு குறித்த மதிப்பீடுகளின் இவ்வாறான தலைகீழாக்கம் பரவலாக நிலவுகிறது. இதனால் பிரதி என்ன சொல்ல வருகிறதோ, பிரதியைக் காட்டிலும் தனக்கு அதிகம் தெரியும் என்று கோரும் இடையூட்டாளர்கள் இல்லாமல் தனித்து விடப்படும்போது மட்டுமே ஒரு பிரதி சொல்லக்கூடியது எதுவோ, அதை மறைக்கும் புகைமூட்டமாய்த்தான் அறிமுகம், விமரிசனக் கருவிகள் மற்றும் பிறநூல் வரிசைகள் பயன்படுகின்றன. எனவே நாம் இந்த முடிவுக்கு வர இயலும்:

8. கிளாசிக் என்பது எப்போதும் தன்னைச் சுற்றிலும் ஒரு மேகமாய் விமரிசனச் சொல்லாடலை உருவாக்கிக் கொள்வதாக இருக்கும், ஆனால் அது எப்போதும் அத்துகள்களைத் துடைத்தெறியும் வல்லமை கொண்டதாகவும் இருக்கும்.

நமக்கு ஏற்கனவே தெரியாத ஏதோ ஒன்றைக் கற்பிப்பதாக கிளாசிக்குகள் எப்போதும் இருக்க வேண்டியதில்லை; சில சமயம் நாம், எப்போதும் அறிந்திருந்த ஒன்றை (அல்லது அறிந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை), அந்தச் செந்நூல்தான் முதலில் வெளிப்படுத்தியது (அதையோ அல்லது குறிப்பிட்ட அந்த வகையில் அது அப்பிரதியோடுதான் தொடர்பு கொண்டிருக்கிறது) என்பதை இதுவரை அறியாதிருந்து இப்போதுதான் நம் வாசிப்பில் கண்டறிகிறோம், இவ்வாறு கண்டறிதல் எப்போதும் மிகுந்த மனநிறைவு அளிக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது- எந்த ஒரு கருத்தின் மூலத்தையும் அல்லது அதனுடன் ஒரு பிரதி\யில் உள்ள தொடர்பை அல்லது அதை முதலில் கூறியது யார் என்பதையும் கண்டறியும்போது எப்போதும் நாம் அடையும் ஆச்சரியம்தான் இது. இவை அனைத்தையும் கொண்டு நாம் இத்தகைய ஒரு வரைமுறையை உருவாக்கிக் கொள்ளலாம்:

9. கிளாசிக்குகள் எனும் புததகங்களை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கேள்வி ஞானத்தால் அறிந்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்த அளவுக்கு மூலத்தன்மை கொண்டதாகவும் எதிர்பாராததாகவும் புதிய நுட்பங்கள் அமைந்ததாகவும் அவை உள்ளதை நாம் நம் நேரடி வாசிப்பில் அறிகிறோம்

ஆம், ஒரு கிளாசிக் பிரதி கிளாசிக்காக உயிர்ப்பிக்கும்போதுதான் இது நிகழ்கிறது, அதாவது, அது வாசகனுடன் அந்தரங்க உறவை நிறுவிக்கொள்ளும்போதுதான் இது நிகழ்கிறது. அவ்வாறாகிய பொறி தெறிக்கவில்லை என்றால் இந்த முயற்சி அர்த்தமற்றுப் போகிறது. கடமைக்காகவோ மரியாதை நிமித்தமாகவோ ஒரு கிளாசிக்கை வாசிப்பதில் பயனில்லை. நாம் நம் நேசத்தை முன்னிட்டே கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும். இதற்கு பள்ளிப்பருவம் மட்டுமே விலக்கு: பள்ளிக் கல்வி அறிவு புகட்ட வேண்டும், நீ விரும்புகிறாயோ இல்லையோ, குறிப்பிட்ட சில கிளாசிக்குகளை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றினிடையே (அல்லது அவற்றை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தி) நீ பின்னர் உனக்கான கிளாசிக்குகளை அடையாளம் கண்டு கொள்வாய். நீயே உனக்கான தேர்வுகளைச் செய்து கொள்ளத் தேவையான கருவிகளை உனக்கு அளிப்பது பள்ளியின் கடமை. ஆனால் உன் தேர்வுகளில் கணக்கில் கொள்ளத்தக்கவை பள்ளிக்கல்விக்குப் பின்னர் அல்லது பள்ளிக்கல்விக்கு வெளியே நீ மேற்கொள்பவை மட்டுமே.

கட்டாயமாய் வாசிக்கப்பட்டாக வேண்டிய தேவையால் அல்லாத வாசிப்பால் மட்டுமே உனக்குரிய புத்தகத்தை நீ எதிர்கொள்ள நேரிடும். சிறந்த கலை வரலாற்றாய்வாளர் ஒருவரை நான் அறிவேன், மிகப் பிரமாதமான வாசிப்புக்குரியவர். அவர் வாசித்த அத்தனை புத்தகங்களில் தி பிக்விக் பேப்பர்ஸ்தான் அவருக்கு மிகவும் பிடித்தமான புத்தகமாக இருக்கிறது. எந்த உரையாடலிலும் டிக்கன்ஸின் அந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவார், தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் பிக்விக்கில் உள்ள சம்பவங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார். சுயத்தை முழுமையாய்ப் பிறிதொன்றுடன் உருவகித்துக் கொள்ளும் போக்கில் மெல்ல மெல்ல அவரும், அவரது உலகும் அதன் உண்மையான தத்துவமும் தி பிக்விக் பேப்பர்ஸின் வடிவம் பெற்றிருக்கின்றன. நாம் இந்தப் பாதையில் செல்வோமானால் கிளாசிக் பற்றிய, மிக உயரிய, கடும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட கருத்தொன்றுக்கு வந்து சேர்கிறோம்.

10. உலகம் முழுமைக்கும் பிரதிநிதியாய் விளங்கக்கூடிய, பண்டைய தாயத்துகளுக்கு இணையான எந்த ஒரு புத்தகத்துக்கும் கிளாசிக் என்ற பதம் வழங்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வரையறை முழுநூல் என்ற கருத்தாக்கத்துக்கு, மல்லார்மின் கனவுக்கு நெருக்கமாய் நம்மைக் கொண்டு செல்கிறது, ஆனால் சுய அடையாளத்தைப் போன்ற அதே அளவு சக்திவாய்ந்த உறவொன்றை எதிர் அல்லது மாற்றுநிலையிலும் நிறுவ இயலும். ரூஸோவின் அத்தனை சிந்தனைகளும் செயல்களும் எனக்கு மிகவும் நெருக்கமானவை, ஆனால் அவை ஒவ்வொன்றும் மறுக்கவும் விமரிசிக்கவும் அவரோடு வாதாடவும் என்னைச் செலுத்தும் வகையில், அடக்க முடியாத உத்வேகத்தை என்னில் உருவாக்குகின்றன. என் இயல்புக்குப் பொருந்தாத ஆளுமை கொண்டவராக அவர் இருப்பதாய் நான் உணர்வதற்கும் இதற்கும் தொடர்புண்டு என்பதும் உண்மைதான், ஆனால் அத்தோடு முடிந்து போகிறது என்றால், நான் அவரை வாசிப்பதைத் தவிர்த்தால் போதும்; உண்மையில் அவரை எனக்குரிய எழுத்தாளராய் நான் கருதுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை. எனில், நான் இப்படிச் சொல்வேன்:

11. உன் கிளாசிக் நீ கண்டுகொள்ளாமல் இருக்க விடாத புத்தகம், அதனோடான உறவில், ஏன், அதனோடான எதிர்ப்பிலும் உன்னை வரையறை செய்து கொள்ள உனக்கு அது உதவுகிறது.

தொன்மை, நடை, அதிகாரம் என்ற வகைகளில் எதையும் சீர்தூக்கிப் பாராமல் கிளாசிக் என்ற பதத்தை நான் பயன்படுத்துவதை நியாயப்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் (இந்தப் பதத்தின் இப்படிப்பட்ட அத்தனை அர்த்தங்களின் வரலாற்றையும் அறிய, Enciclopedia Einaudiன் மூன்றாம் தொகுதியில் பிராங்கோ போர்டினி, கிளாசிகோ என்ற தலைப்பில் மிக விரிவாக எழுதியிருப்பதை வாசிக்கலாம்). ஆனால் என் வாதத்துக்கு உதவும் வகையில் இப்படிச் சொல்லலாம்- ஒரு கிளாசிக்கைப் பிறவற்றிலிருந்து எது பிரித்துக் காட்டுகிறது என்றால், தொல்நூலோ நவீன படைப்போ, அதில் எழுவதாய் நாம் உணரும் ஒருவகை ஒத்திசைவுதான் அது. எனினும், கலாசாரத் தொடர்ச்சியில் தனக்கென்று ஒரு இடம் கொண்டதாய் அது இருக்கிறது. இப்படிச் சொல்லலாம்-

12. எந்தப் படைப்பு பிற கிளாசிக்குகளுக்கு முனனர் வருகிறதோ, அதுவே கிளாசிக்; ஆனால் பிற கிளாசிக்குகளை முதலில் வாசித்து விட்டவர்கள் செவ்வியல் ஆக்கங்களின் வரிசையில் அதன் இடம் என்ன என்பதை உடனடியாக அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

அவ்வப்போது முரசாகியையும் ஐஸ்லாண்டிய சாகசங்களையும் தொட்டுத் திரும்புவதுவன்றி எப்போதும் லுக்ரீஷியஸ், லூசியன், மான்டைன், இராஸ்மஸ், க்விவீடோ, மார்லோ, Discourse on Method, கதேவின் வில்ஹெம் மெய்ஸ்டர், கூல்ரிட்ஜ், ரஸ்கின், ப்ரூஸ்ட், வலேரி முதலியவர்களை மட்டும் வாசிக்க தன் வாசிப்பு நேரத்தை அர்ப்பணிக்கக்கூடிய அதிர்ஷசாலி வாசகர் இருக்கக்கூடும் என்று வைத்துக் கொள்வோம். சமீபத்திய மறுபதிப்பு குறித்த மதிப்புரையோ, பல்கலைக்கழக பதவி நியமனத்துக்கான தேடலில் கட்டுரைகள் எழுதியனுப்பவோ, கழுத்தை நெரிக்கும் கடைசி கணத்தின் அவசரத்தில் பதிப்பகத்துக்கு எழுதி அனுப்ப வேண்டிய அவசியமோ இல்லாமல் இது அத்தனையையும் அந்த அதிர்ஷ்டசாலி வாசகர் செய்ய முடியும் என்றும் வைத்துக் கொள்வோம். எந்தக் களங்கமுமின்றி இந்தச் நடைமுறை தொடர வேண்டுமென்றால் அந்த அதிர்ஷ்டசாலி வாசகர் செய்தித்தாள்கள் வாசிப்பதைத் தவிர்க்க வேண்டும், மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட நாவல் அல்லது சமூகவியல் ஆய்வை வாசிக்கும் உந்துதலை எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட கட்டுப்பாடு எந்த அளவு நியாயப்படுத்தத்தக்கது என்பது மட்டுமல்ல, எவ்வளவு பயனுள்ளது என்பதும்கூட கேள்விக்குரியதுதான். சமகால உலகம் சுவாரசியமற்றதாகவும் மூச்சு திணற வைப்பதாகவும் இருக்கலாம், ஆனால் அதன் சூழமைவில் நம்மை இருத்திக்கொண்டே நாம் பின்னோக்கியோ முன்னோக்கியோ பார்த்தாக வேண்டும். கிளாசிக்குகளை வாசிப்பதானால் நீ எங்கிருந்து அவற்றை வாசிக்கிறாய் என்ற உன் ‘இடத்தை’ துல்லியமாக நிறுவிக் கொண்டாக வேண்டும். இதைச் செய்யத் தவறும்போது வாசகனும் பிரதியும் காலப்பிரக்ஞையற்ற மூட்டத்தில் திசையற்று கொண்டு செல்லப்படுகின்றனர். எனவே, சரியான விகிதத்தில் சமகால விஷயங்களையும் கிளாசிக் வாசிப்பையும் மாறி மாறி நிகழ்த்தக்கூடிய திறன் வாய்க்கப் பெற்றவன்தான் கிளாசிக்குகளின் வாசிப்பில் மிக அதிக அளவில் பயன்பெருவான் என்று நாம் சொல்ல முடியும். அதற்காக, அவனது அகம் அமைதியில் இயைந்திருக்க வேண்டும் என்ற முன்முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை: இத்தகைய வாசிப்பு பொறுமையற்ற, படபடப்பான இயல்பின் விளைவாகவும் இருக்கலாம், எப்போதும் எரிச்சலும் அதிருப்தியும் உள்ளவனின் இயல்பிலும் இது சாத்தியப்படக்கூடும்.

13. கிளாசிக் என்றறியப்படும் ஒரு படைப்பு சமகால சப்தங்களை பின்னணி ஒலியாய் மட்டுப்படுத்தும், அதே சமயம் அதுவன்றி கிளாசிக்குகளும் இருக்க முடியாது..

14. கிளாசிக் என்றறியப்படும் ஒரு படைப்பு எப்போதும் ஒரு பின்னணி ஒலியாய் தொடர்ந்திருக்கும்- அதனோடு கொஞ்சமும் பொருந்தாத சமகாலம் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கும்போதும்.

உண்மையைச் சொன்னால், கிளாசிக்குகளை வாசிப்பது என்பது நம் வாழ்வின் வேகத்துக்கு ஒத்து வராத செயலாக இருக்கிறது. வாழ்க்கையின் துரித கதியில் காலப்பாதையின் நீள்வெளிகளுக்கு இடமில்லை, மானுட தர்மத்துக்குத் தேவையான ஒழிவுக்கு அவகாசமுமில்லை; நம் கலாசாரம் கலவைத்தன்மை கொண்டிருப்பதால் நம் காலத்துக்குத் தக்க செவ்வியல் ஆக்கங்கள் இவை என்றொரு பட்டியல் தொகுப்பதை அது என்றும் சாத்தியப்படுத்தாது.

ஆனால் தன் தந்தையின் கோட்டையில் வாழ்ந்த லெபார்டியின் சூழ்நிலை இதுவாக இருந்தது- அவன் தன் தந்தை மொனால்டோவின் மாபெரும் நூலகத்தைக் கொண்டு கிரேக்க, லத்தின் மொழிகளின் தொல்நூல்களை அறிவது என்ற குறுவழிபாட்டை நிகழ்த்த முடிந்தது. அங்கு அவன் அதுவரை பதிக்கப்பட்ட இத்தாலிய இலக்கியம் முழுமையையும் சேர்த்துக் கொள்கிறான், தன் சகோதரி வசதியாய்ப் படிக்க விளிம்பில் ஒதுக்கப்படும் மிகச் சமீபத்தைய படைப்புகளையும் நாவல்களையும் தவிர (“உன் ஸ்டென்தால்” என்று அந்தப் பிரெஞ்சு நாவலாசிரியர் குறித்து பவோலினாவிடம் சொல்கிறான்) பிற பிரெஞ்சு இலக்கியம் அனைத்தையும் சேர்த்துக் கொள்கிறான். கியாகொமோ தன் மிகக்கூர்மையான அறிவியல் மற்றும் வரலாற்று ஆர்வங்களைக் காலாவதியாகிவிட்ட பிரதிகளின் வாசிப்பில் நிறைவு செய்து கொள்கிறான் புஃப்போனில் குறிப்பிடப்படும் பறவைகளின் பழக்க வழக்கங்கள், ஃபோன்டநெல்லில் பிரடரிக் ரூய்ஷின் மம்மிக்கள், ராபர்ட்சனில் கொலம்பஸின் பயணங்கள்.

இளம் லேபாரடிக்கு வாய்த்தது போன்ற கிளாசிக் கல்வி இன்று கற்பனை செய்ய முடியாதது, அதிலும் குறிப்பாக, அவனது தந்தை கவுண்ட் மொனால்டோவின் நூலகம் தூர்ந்து போய்விட்டது. தூர்ந்து போய் விட்டது என்று சொல்லும்போது, பழைய வரத்துகள் சிதைந்து விட்டன என்று மட்டுமல்லாமல் நவீன இலக்கியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் அனைத்திலும் புதியவை புகுந்து நிறைக்கின்றன என்றும் பொருள் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமக்கான கிளாசிக்குகளைக் கொண்ட ஆதர்ச நூலகத்தை நாமே கண்டறிவது மட்டும்தான் நமக்குச் சாத்தியப்படக்கூடிய ஒன்று. அதில் ஒரு பாதி நாம் வாசித்து நமக்கு ஏதோ ஒருவகையில் முக்கியமாக இருக்கும் நூல்களைக் கொண்டிருக்க வேண்டும்; மறு பாதி, நாம் வாசிக்கப்போகும், நமக்கு முக்கியமாக இருக்கக்கூடிய புத்தகங்களைக் கொண்டிருக்க வேண்டும். இது தவிர சந்தர்ப்பவசமாய் எதிர்ப்படக்கூடிய கண்டுகொள்ளல்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் வெற்றிடங்கள் கொண்ட ஒரு பிரிவும் இந்த நூலகத்தில் விட்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தாலிய இலக்கியத்தில் நான் சுட்டிக்காட்டியிருக்கும் ஒரே பெயர் லெபார்டிதான் என்பதை இங்கு கவனிக்கிறேன். நூலகம் தூர்ந்து போனதன் விளைவு இது. இப்போது நான் இந்தக் கட்டுரை முழுமையையும் திருத்தி எழுதி நம்மை நாம் புரிந்து கொள்ளவும் நாம் வந்தடைந்திருக்கும் இடத்தைப் புரிந்து கொள்ளவும் கிளாசிக்குகள் உதவுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தி, பிற மொழி கிளாசிக்குகளுடன் ஒப்பிட இத்தாலியர்களான நமக்கு இத்தாலிய கிளாசிக்குகள் இன்றியமையாதவை என்றும் இத்தாலிய கிளாசிக்குகளுக்கு நிகராய் ஒப்பிட்டறிய அந்நிய கிளாசிக்குகளும் அதே அளவு இன்றியமையாதவை என்றும் கூறியாக வேண்டும்.

அதன்பின் நான் இந்தக் கட்டுரையை மூன்றாம் முறை திருத்தி எழுதியாக வேண்டும். ஏதோ ஒரு தேவையை நிறைவு செய்வதால்தான் கிளாசிக்குகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையைப் போக்கும் வகையில் நான் எழுத வேண்டும். கிளாசிக்குகளை வாசிப்பதற்கு ஆதரவான ஒரே பரிந்துரை, கிளாசிக்குகளை வாசியாதிருப்பதைக் காட்டிலும், வாசித்தல் எப்போதும் நன்று என்பதாக இருக்கும்.

கிளாசிக் வாசிப்புக்காக இத்தனை சிரமப்பட வேண்டியதில்லை என்று யாரேனும் ஆட்சேபம் தெரிவிப்பதானால் நான் சியோரன் கூறுவதை மேற்கோள் காட்டுவேன் (இவர் இன்னும் கிளாசிக் என்ற நிலையை எட்டவில்லை, இந்தச் சிந்தனையாளர் இப்போதுதான் இத்தாலிய மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகிறார்): “ஹெம்லாக் அரைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது சாக்ரடிஸ் தன் குழலில் ஒரு பாடல் வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தார். “இதனால் உனக்கு என்ன பிரயோசனம்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. “சாவதற்குள் நான் இந்தப் பாடலாவது கற்றுக் கொள்வேன்“.
[1981]
(“நம்பி கிருஷ்ணனுக்கும் அர்விந்த் கருணாகரனுக்கும்” – மொழிபெயர்ப்பு- பீட்டர் பொங்கல்)