Author: பதாகை

கரைதல்

-காலத்துகள்-

பொதுத் தேர்வு நடந்துகொண்டிருப்பதால்   மதியம்தான் இவனுக்கு   பள்ளி.   அடுத்த வருடம் இதே நேரம் இவனும்  பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வு எழுதிக்கொண்டிருப்பான்.  எட்டு  மணி அளவில்  அம்மாவும்  அப்பாவும் வேலைக்கு கிளம்ப, தினசரி படித்து முடித்து,  விவித் பாரதியின் காலை நேர தமிழ் ஒலிபரப்பு  சேவை  பத்து மணி அளவில் நிறைவுறும்போது தெரு அடங்கி விட்டது. இனி இரவில்தான்  மீண்டும் தேன்கிண்ணம் கேட்க முடியும்.

இயற்பியல் பாடத்தை புரட்டிப் பார்க்கலாம் என்று புத்தகத்தை எடுத்தவன் வெளியே போய்   படிக்கலாம் என்று மாடிப் படிக்கட்டில் அமர்ந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து சுற்று முற்றும் பார்த்தவன் கண்ணில் பின்புறமிருந்த வீட்டின் கிணற்றடியில் இவன் வயதையொத்த பெண் அமர்ந்தபடி   குளித்துக் கொண்டிருந்தது  பட்டது.  சட்டெனப் படிக்கட்டினுள் தலையை குனிந்து, பின் மீண்டும் எட்டிப் பார்த்தவனுக்கு அவர்கள் வீட்டு குளியலறையை உபயோகிக்க முடியாதபடி வெளிய குளிக்க ஏன் நேர்ந்தது   என்பதுதான் முதலில் தோன்றியது.  அவள் செயல்களில் எந்த அவசரமோ  யாரேனும் தன்னை கவனிக்கக்கூடும் என்ற பதற்றமோ இருந்தது போல் தெரியவில்லை.   அவ்வீட்டின் புழக்கடையில்  நடப்பட்டிருந்த  பவழ மல்லி, செவ்வரளிச்  செடிகள்,  வாழை , தென்னை மரங்கள் இயல்பான நிழல் படர்ந்த மறைவை  ஏற்படுத்தி  இருந்ததும், இந்த நேரத்தில் பொதுவாக  யாரும் வெளியே வருவதில்லை என்பதும்    அவளுக்கு  வெளியே குளிக்க தைரியம் அளித்திருக்க   வேண்டும். இவனேகூட இந்த இடத்தில் அமராமல்  சில  படிக்கட்டுக்கள் மேலோ கீழோ அமர்ந்திருந்தால்  அவளைப் பார்த்திருந்திருக்க  முடியாது.  தினமும் காலை ஏழு, ஏழரை மணி அளவில் அந்த வீட்டிலிருந்து ஒருவர் பல் துலக்கியபடி கர்ண கொடூரமான குரலில் வாய்  கொப்பளிக்கும்   சப்தங்கள்  எழுப்புவதையும்  அந்த தினசரி சடங்கை  எதிர்பார்த்திருந்து இவன் வீட்டில் கிண்டலடிப்பதும் மட்டுமே  இங்கு  குடி வந்த ஒரு வருடத்தில் பின் வீட்டை பற்றி அறிந்திருந்த அவனுக்கு  அங்கு  ஒரு பெண் இருப்பதே இப்போதுதான் தெரிந்தது.

இவன் பார்வையில் படும் போது குளித்து முடித்திருந்தவள்  மார் வரைச் சுற்றியிருந்த பாவாடையை கீழிறக்கியபடி எழுந்தாள்.  இறுதியாக  ஒரு கையால் தலையில் நீரை ஊற்றி , மற்றொரு கையால் முகத்தில் வழியும் நீரை நளினமாக  துடைத்துக்கொள்ள, நீர் அவள்  உடலில் வழுக்கிச் சென்றது. மரங்களில் இலைகளின் நடுவே ஊடுருவிய ஒளியில் அவளுடலில் நீர்த் துளிகள்  துல்லியமாக தெரிந்தன  ஒல்லியான உடல், முதிரா மார்பகங்கள், இன்னும் வடிவம் கொள்ளாத இடை  சராசரி நீளத்திலான கேசம் முதுகிலும், கன்னங்களிலும் ஒட்டியிருந்தது. (  பெரியவனாக ஆனபின்   இந்த சம்பவத்தை  அவன்  நினைவு கூரும்போதெல்லாம்  மரங்கள் சூழ்ந்த அமைதியான அந்த  இடமும், அவளின் உடலசைவுகளும்  அவளை   வனயட்சியுடன் தொடர்புபடுத்தச் செய்தன. இயல்பான சம்பவமொன்றை பால்ய கால பூதக்கண்ணாடியின்  மூலம் பார்ப்பதால் உருவாகும்  மிகையுணர்ச்சி அது என்று அவன் உணர்ந்தாலும் ,  அப்படி     உருவகிப்பதே  அன்று மட்டுமே பார்த்த, முகம் மறந்துப் போன அந்தப் பெண்ணின்  நினைவுக்கு  தான்   செய்யும் நியாயமாக  இருக்கும் என்றும் நினைத்தான).

அவள் உடலை துவட்டிக் கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தவன்  வேறு யாரேனும் பார்க்கிறார்களா  என்று அருகிலிருந்த வீடுகளை பார்த்தான்.  யாரும் இருப்பது போல் தெரியவில்லை.   கூடப் படிக்கும்   பெண்களின்  காதோர,  கணுக்கால்  மென்  முடிகள், ஜடையை முன்னால்   தழைய விட்டு நீவியபடி பேசுவது ,  தோழியுடன் பேசத் திரும்பும் போதான கழுத்துச் சொடுக்கல்,   சைக்கிளில்  பயணிக்கும்போதும், இறங்கும்போதும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்கு  மேலேறும் அவர்களுடைய  சீருடை  ஸ்கர்ட்,  அவனை  இன்னும் சிறுவன் என்றே நினைத்து தங்களின்  ஆடை விலகல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத அவனை விட   மூத்தப் பெண்கள்   எனச் சில வருடங்களாகவே அவனுள் பெண்ணுடல், அதன் அசைவுகள்  குறித்த குறுகுறுப்பும், அலைக்கழிப்பும் ஏற்பட்டிருந்தாலும் ஆடையின்றி ஒரு பெண்ணை இப்போது தான்  பார்க்கிறான். உள்ளே சென்று விடலாமா என்று யோசித்தவனுக்கு  இனி தன்னால் படிக்க முடியாது என்பது மட்டும் தெரிந்தது.

வீட்டு வாசலில் சைக்கிள் நிறுத்தப்பட்டு கேட் திறக்கப்படும் ஓசை கேட்டது.  “என்னடா படிக்கற” என்று கேட்டபடி சுந்தர் வர  “பிசிக்ஸ்டா” என்றபடி எழுந்து  சுந்தரை  உள்ளே அழைத்தான். ” படிக்கட்டிலேயே  கொஞ்ச நேரம் ஒக்காரலாமேடா ” என்ற சுந்தரிடம், “இல்லடா வெயில் அதிகமாறது, உள்ளயே போலாம்” என்றான். சுந்தர் வந்தது ஒரு விதத்தில் எரிச்சலாக இருந்தாலும், இக்கட்டிலிருந்து மீட்ட  உணர்வையும் தந்தது. உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தார்கள்.

“இன்னிக்கும் கம்ப்யூட்டர் ஸார் வர மாட்டார்டா, எங்களுக்கு  ஒரு பீரியட் ப்ரீ ” என்றான் சுந்தர்.

 “ஏன்டா நான் என் கம்ப்யூட்டர்லேந்து பேங்க்ல இருக்கற இன்போர்மேஷலாம்  பாக்க  முடியுமாடா?” எத்தனாவது முறை இதை அவன் கேட்கிறான் என்பது அவனுக்கும் சரி  சுந்தருக்கும் தெரியாது. மருத்துவம் படிக்க வேண்டுமென்றெல்லாம் பெரிய ஆசை இல்லாதிருந்தாலும், பெரும்பாலானோரைப் போல உயிரியல் க்ரூப்பையே இவன்  தேர்ந்தெடுத்திருந்தான். கம்ப்யூட்டர் பற்றியும் கூட பெரிய ஆர்வமில்லாவிட்டாலும், அது குறித்த அதீத கற்பனைகள் அவனுக்கு இருந்ததால் அந்த  க்ரூப்பை தேர்வு செய்திருந்த சுந்தரிடம் அது குறித்து கேட்டுக் கொண்டிருப்பான்.

“எல்லாம் முடியும்” என்று சுந்தரும் வழக்கம் போல் சலிக்காமல் பதில் சொன்னான்.

“அப்போ ஈஸியா பேங்க் பணத்த லவுட்டலாம்ல”

“அதாண்டா கம்ப்யூட்டர், ஆனா ஒழுங்கா கத்துக்கணும்”

“உங்க சிலபஸ் வேற ரொம்ப கம்மியா இருக்குடா , நூறு பக்கம் கூட இல்ல, பேசாம இந்த க்ரூப்ப எடுத்துருக்கலாம்”

“எல்லாம் ஏழெட்டு  ப்ரோக்ராம்தான்”

“என்னடா பேரு வெச்சிருக்காங்க  பேசிக், இன்னொன்னு என்ன  கோபால்னு நம்ம ஊர் பேரு மாதிரி”

“அத்த வுட்றா, இத்த கேளு  சூப்பர் மேட்டர், நம்ம மணி இருக்கான்ல அவன் சுஜாதாவ பாக்கறான்”.

“என்னடா சொல்ற”.

“ஆமாண்டா நேத்து கம்ப்யூட்டர் ஸார் வரலல, இவன் கம்ப்யூட்டர் ரூம்ல ஏதோ சீரிஸா எழுதிட்டிருந்தான், என்னடான்னு பாத்தா அவ பேரையும், இவன் பேரையும் வெச்சு ‘ப்ளேம்ஸ்’  ஆடிட்டிருக்கான்”

தன் பெயர் மற்றும்  பிடித்தமான பெண்ணின் பெயரை எழுதி   இரண்டிலும் உள்ள ஒரே அட்சரத்தை நீக்கிக் கொண்டே வந்து இறுதியில் மிஞ்சியிருப்பதை வைத்து அப்பெண்ணுடன் தனக்கு  எந்த வகையான உறவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளும்  – ஏழாவது, எட்டாவது படிக்கும் போது பிரபலமாக இருந்த – விளையாட்டை   இப்போதும் மணி ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சரியம் தான்.  (மீரா  மற்றும்  உமாவுடன்) சுஜாதா மேலும் இவனுக்கும்  – தான் அவர்களை பார்க்கிறோம் என்பது யாருக்கும் தெரியப்படுத்தாமல், பெண்கள் குறித்து அலட்டிக் கொள்ளாதவன்  என்ற பிம்பத்தை இவன்  காப்பாற்றி வந்திருக்கிறான்  – ஈர்ப்பு உண்டு  என்பதால் மணி மீது கொஞ்சம் எரிச்சலும் ஏற்பட்டது. சுஜாதாவுடன் ப்ளேம்ஸ் விளையாட்டில் தனக்கு  என்ன உறவு வந்தது என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை, சுந்தர் சென்றவுடன் அதை ஆடிப்பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

“அவ பயாலஜி க்ரூப் ஆச்சேடா”

” மத்த பீரியட்லாம்  க்ளாஸ்ல ஒண்ணாதானேடா இருக்கோம்,  அவ ஒண்ணும்  இவனல்லாம்  எதுவும் கண்டுக்க மாட்டா’ என்று சுந்தர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும்  ஒருவேளை சுந்தரும் அவளை பார்க்கிறானோ என்றும் தோன்றியது. சுந்தரென்றால் பரவாயில்லை விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்துகொண்டான். உமா  மற்றும் மீரா  இருக்கிறார்களே.

“அவன்  ரேவதிய பாக்கறான்னு நெனச்சேன் ” என்றான் சுந்தர்.

ரேவதி குறித்து அவனுக்கு அபிப்ராயம்  எதுவும் இல்லையென்றாலும் ‘பெண்’ குறித்து அவனுக்கு அப்போதிருந்த மனநிலையில் அவளின்   உருவம்  முதல் முறையாக அவனை கிளர்த்தினாலும்,   அசௌகர்யமாகவும்  இருந்தது.  ‘பெண்கள்’ தவிர  வேறெதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்  என்று நினைத்தவன்  “ஒங்க வீட்ல கேபிள் போடறது என்னடா ஆச்சு” என்று சுந்தரிடம்  கேட்டான்.

” அடுத்த மாசத்துலேந்து கேபிள் போடறங்கடா,  மாசம் அம்பது ரூபா, சாங்காலம் ஆறரைலேந்து சன் டி.வி, ராஜ் டிவி  உண்டு, அப்பறம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். “

“பரவாயில்ல அடுத்த  வருஷம் ஒனக்கு  பப்ளிக் எக்ஸாம்னாலும் போட்டுட்டாங்க”

“தினமும்  காத்தால ரெண்டு  தமிழ்  படங்க போடறாங்களாம், புதுப் படங்க கூட போடுவாங்களாம் அதனாலத்தான்னு  நெனக்கறேன். எப்படியோ  வீட்ல அப்பாம்மா  இருந்தாங்கன்னா நான் பாக்க சான்ஸ் கெடையாது, யாரும் இல்லேனா ஸ்போர்ட்ஸ் சேனல் பாக்கலாம் “

“இங்க கொஞ்சம் ட்யூன் பண்ணா அடுத்த  போர்ஷன்  கேபிள் ரொம்ப பொறி பொறியா தெரியுது, அதுக்கு பாக்காமையே  இருக்கலாம் கண் வலியாவது இல்லாம இருக்கும்”. அடுத்த போர்ஷன் என்றதுமே இன்று முதல் முறையாக பார்த்த  பின்  வீட்டுப் பெண் மீண்டும் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்த  கால்களை மடித்து உட்கார்ந்தவன், “கருத்தம்மா பாட்டு கேக்கலாம்டா ” என்றான்.

 பாடல்களைக் கேட்டுக்கொண்டே, ஆட ஆரம்பித்த  ஐந்து ஆறு  வருடங்களில் கவாஸ்கரின் இடத்தை  நிரப்பிய   சச்சின்   சமீபத்திய தொடரில் நிகழ்த்திய  சாகசங்கள், அடுத்த வருட பாடங்களை எப்போதிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் போன்றவற்றை பேசித் தீர்த்து  பள்ளிக்கு தயாராக சுந்தர் கிளம்பிச் சென்றவுடன் மீண்டும் படிக்கட்டு அருகே சென்று  பின் வீட்டின் கிணற்றடியை பார்த்தான். யாருமில்லை. அவள்  குளித்ததற்கு தடயங்களாக  கிணற்றடியின் ஈரமும், சோப்பின் நுரை கலந்த   கழிவு நீரும் இருந்தன. அங்கேயே  பார்த்துக்கொண்டிருந்தால் அவள் உருவம்  மீண்டும் அங்கு தோன்றக் கூடும்  என்ற   எண்ணம் ஏற்பட்டது.  இத்தகைய நேரங்களில்  இடுப்புக்குக் கீழ் உருவாகும் இறுக்கம்  இப்போதும் ஏற்பட உடல் எடை கொண்டது போல் தோன்றியது. மெல்ல நடந்து வீட்டிற்குள்  சென்றான். இம்மாதிரியான மனநிலையில்  என்ன, எப்படிச் செய்தோம் என்றெல்லாம் பள்ளியில்   நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறான் என்றாலும்  அவர்கள் அந்த செயலுக்கு சூட்டிய  பெயரை உச்சரிப்பதுகூட அவனுக்கு தவறொன்றை செய்கிறோம் என்ற   கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. வீட்டில் அங்குமிங்கும் நடப்பது , மனதில் உள்ளதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறொன்றைக் குறித்து யோசிப்பது என   வழக்கமாக அவனுக்கு உதவும்  உத்திகள் இன்று உதவவில்லை.    கட்டிலில் சென்று அமர்ந்தவன்  தன்னிச்சையாக குப்புறப்படுத்து  தன் உடலின் மீது கட்டுப்பாட்டை  இழந்தான்.

கிணற்றடியில் பார்த்தவள்,  பள்ளி சீருடையில் சுஜாதா, மீரா , உமா , அடுத்த போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்கா  – அக்கா  எப்படி, ஏன் என்று குற்றவுணர்ச்சி கொள்ளக் கூட  அவகாசம் இல்லாமல்   –    என பலர் மனதில் உருக்கொண்டு கரைந்தார்கள்.   சில நிமிடங்கள் கழிந்தபின்  வாயிலிருந்து எச்சில் தலையணையை நனைத்திருக்க  தொடைகளின் இடுக்கில் கொழ கொழவென  ஒட்டிக்கொண்டிருந்தது. சற்றே மூச்சிரைக்க, உடலில் இன்னும் சிறு அதிர்வு  இருந்தது.  அனிச்சையாக  மூடியிருந்த கண்களை திறக்க முதலில் எதுவும் விழிகளில்  தங்கவில்லை.  கையை உள்ளே நுழைத்து பிசுபிசுப்பை தொட்டு முகர  இதுவரை அறிந்திராத மணம்.  திரும்பிப்  படுக்க முயன்றபோது  கால்கள்  தொளதொளவென வலுவிழந்து இருக்க  உடனடியாக எழ முடியாது என்று புரிந்தது.

அச்செயல்    அவன்   கற்பனை செய்திருந்தது  போல  அவனை  அருவருப்பானவனாக  உணரவைக்கவில்லை. மாறாக  இடுப்பின் இறுக்கம்  தளர்ந்திருக்க  மனதில்    முற்றிலும் புதிய பரவசமும், பூரண நிறைவும் பரவியிருந்தது.    விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு  ஆபத்தான எல்லையொன்றை  வெற்றிகரமாக கடந்து     பெரிய மனிதனானது போன்ற உணர்வு.    இப்போது   நடந்தது அவனுக்கே மட்டும் உரியதான அந்தரங்கமான அனுபவமாகவும் அதே நேரம்  இதை குறித்து  யாரிடமாவது  பகிர்ந்து கொள்ள வேண்டியதாகவும்  தோன்றியது. மதியம் பள்ளியில்   சுந்தரிடம் இதை பற்றி  சொல்லலாமா, அவன் என்ன நினைப்பான்  என்று யோசித்துக்கொண்டிருந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து எழுந்து முகம் கழுவி  பள்ளிக்குச் செல்ல தயாராக சீருடையை அணியும் போது உள்ளாடையில்  கெட்டி தட்டி படிந்திருந்த கறையை  பார்த்தவனுக்கு  அதுவரை இருந்த உற்சாகமனைத்தும் வடிந்து  வீட்டிற்கு தெரியாமல் அதை எப்படி அகற்றுவது என்ற கவலை ஏற்பட்டது.

மடத்து வீடு- ராம் செந்திலிடம் சில கேள்விகள்

  1. விடலை ஜிலுஜிலுப்புகள் மட்டுமே கொண்ட சிறுகதைகள் தமிழில் மலிந்து இருக்கின்றன. முதற்பார்வைக்கு இந்த “மடத்து வீடு”ம் அப்படித்தான் தோன்றுகிறது. கதையின் மையம் அதையும் தாண்டி வாசக பார்வைக்கு வேறு எதுவும் வைக்கிறதா?

‘முதற்பார்வைக்கு’, என்று தெளிவாக வரையறுத்ததற்க்கு நன்றி. கதையின் மையத்தை படிப்பவர்கள் கண்டடைவார்கள் என்று நம்புகிறேன். அவர்களே சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன். இந்தக் கதையை படித்த என் நண்பர் ஒருவர் இப்படி சொன்னார். காமம் மனிதர்களை வேட்டையாடுகிறது. முற்றா இளம்புல்லை, முதிய பசு நாவால் தடவி இன்புறுவதைபோல், முடிவதாயில்லை காமம். பெண்ணுடலை காமத்துய்ப்புக்கான விளைபொருளாய் மட்டும் காணும் கண்களில், உணர்வுகளும், காயங்களும் படும் தருணங்களும் உண்டல்லவா? அப்படி ஒரு தருணமே இந்த கதையின் மையம் என்றார், இருக்கலாம்.

  1. இந்த மையக்கருத்துக்கான inspiration, உத்வேகம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

நான் பார்த்த மனிதர்களிடமிருந்தே இந்த கதை உருவாகியது. திருமண வயதைத் தாண்டிய பின்னரும், தமது கனவுகளை உண்டு செரித்தபடி தனித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு கிடைக்கும் வெளி, அந்த வெளியை பயன்படுத்திக்கொள்ளதான் எத்தனை வேடங்கள், சாதனங்கள். தீராப்பசியுடன் தனித்திருக்கும் மிருகமென காமம் என் மனதில் படிமம் கொள்கிறது. அந்த மிருகத்தின் நுட்பங்களும் தந்திரங்களும் சொல்லித் தீராதவை. அவையே இந்த கதை எழுவதற்க்கான உத்வேகமாக அமைந்தது.

  1. சிங்கப்பூர் இலக்கியம் பற்றி அண்மையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் கவனிக்கத்தக்கவை. அந்தக் கட்டுரைகளில் அவர் எழுதியவற்றில் எது உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது, ஏன்?- ஒன்றே ஒன்று மட்டும் சொன்னால் போதும்.

ஜெயமோகன், இலக்கியம் குறித்து எழுதிய எல்லா கட்டுரைகளுமே ஒரு துவக்க நிலை எழுத்தாளனுக்கு, இலக்கிய வாசகனுக்கு முக்கியமானவை. ஜெயமோகனின் சிங்கப்பூர் பயணத்தில் விளைந்த மிக முக்கிய நன்மை என்று இந்த கட்டுரைகளை கூறுவேன். அந்த கட்டுரைகளில் எனக்கு முக்கியமாக தெரிந்த ஒன்றை மட்டும் சொல்வதென்றால், ஏன் ஒரு கதை எழுதப்படவேண்டும் என்கிற நோக்கம் பற்றி அவர் கூறும் கருத்து. உணர்வு ரீதியாக, அறிதல் ரீதியாக முன்பில்லாத ஒன்றைச் சொல்வதே நல்ல சிறுகதை என்று சொல்கிறார். வெற்று கிண்டல்களையும், அன்றாட நிகழ்ச்சிகளையும், பொது உண்மைகளையும் சொல்லி முடிவது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.  மிகச்சிறந்த சிறுகதையாளர்கள் எழுதிச்சென்ற மொழியில் நாம் எழுதுகிறோம் என்கிற கவனம் எழுத வருபவர்களுக்கு தேவை என்று நினைக்கிறேன். எழுதும் கதைகள் கலையாக அடையப்போகும் வெற்றி/தோல்வி பற்றி பதட்டம் தேவையில்லை. ஆனால், நேர்மையான நோக்கம் முக்கியம் என்று கருதுகிறேன்.

  1. நீங்கள் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்கள், விரும்பி வாசித்த படைப்புகள் சில?

ஜெயமோகன், அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி, எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களை தொடர்ந்து படிக்கிறேன். இளம் எழுத்தாளர்களில், கே.என். செந்தில், இசை, போகன் சங்கர் போன்றவர்கள் விருப்பமானவர்களாக இருக்கிறார்கள்.

டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, தாஸ்தோவெஸ்கியின் ‘கரம்சோவ் சகோதரர்கள்’, ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, ‘கொற்றவை’, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ முதலிய நாவல்கள் என்னுள் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியவை.

ஏதுமற்று – சில குறிப்புகள்

ஏதுமற்று- சரவணன் அபி

‘மத்திய ஜாவாவின்’ என்று துவங்கும்போதே கவிதையில் ஒரு புதிய குரல் வந்து விடுகிறது. அங்கு சிறிது இடைவெளி கொடுத்து, ‘யோக்யகர்த்தா நகரில்’ என்று அடுத்த வரியைப் படிக்கும்போது, முந்தைய வரிக்கு இணையானதாகவே இதையும் படிக்கிறோம். ஆனால் அடுத்த வரியும், ‘விரைந்து சாயும்’ என்று இரு சொற்கள் மட்டும் கொண்டிருந்தாலும், அதற்கும் ‘முன்மாலைப் பொழுது’ என்ற வரிக்கும் இடையே ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது நம் வாசிப்பில் ஒரு தடை ஏற்படுகிறது. ‘விரைந்து சாயும் முன்மாலைப் பொழுது’ என்ற இயல்பான சொற்களுக்கு நடுவில் ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது அது தனித்து நிற்கிறது. நம் மனம் மழை பெய்யும் அந்திப் பொழுதுகளை நினைத்துப் பார்க்க கட்டாயப்படுத்தப்படுகிறது.

அடுத்து, ‘தொலைவில் எரிந்தடங்கும் ஒளியின் முன்’ என்பது இயல்பாக உள்ள வாக்கிய அமைப்பு. ஆனால் ‘தொலைவில் எரிந்தடங்கும்/ ஒளியின் முன்’ என்ற என்ஜாம்ப்மெண்ட், தொலைவில் எரிந்தடங்கும்’ என்ற இடத்தில் நாம் தயங்கி அடுத்த வரிக்கு விரைந்து ‘ஒளியின் முன்’ என்று பொருள் சேர்த்து நிறைவு செய்து கொள்ளச் செய்கிறது. நான்கு சொற்களும் தொடர்ந்து வந்திருந்தால், ஒளியின் மீது அழுத்தம் விழுந்திருக்கும். ஆனால் இரண்டாய் பிரியும்போது ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெற்று ஒளியால் துலக்கம் பெருகிறது.

இப்படி ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெருவதால்தான், ‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்/ மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘எரிகலன்களில்’ நம் கவனம் செல்கிறது. பிரம்பனான் கோவிற் சிகரங்கள் நிலையானவை, அதன் கோபுரங்கள் வானுயர்ந்து நிற்பவை என்ற எண்ணத்துக்கு மாறாய், அவை எரிகலன்கள் போல் உயர்ந்து வீழக்கூடியவை என்ற தோற்றம் காண்கிறோம்.

‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்’ என்பதில் ‘கிளம்பும்’ என்ற இடத்தின் அழுத்தம், ‘ஒளியின் முன்’ என்று தாமதித்துத் தொடர்ந்து, ‘மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘நிற்கும்’ என்ற இடத்தில் அழுத்தம் பெற்று, ‘பிரம்பனான் கோவிற் சிகரங்களை’ என்று தீர்மானமில்லாமல் நின்று, ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லில் உடைந்து, ‘மது அருந்திக் கொண்டிருக்கிறேன்’ என்று முடியும்போது, கவிதை பெரும்பாலும் அர்த்தமில்லாமல் உடைக்கப்பட்ட கவிதை வரிகளாய் ஆகிறது. ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லால் ஆன வரிக்கு கவிதையில் அதற்குத் தேவையில்லாத அழுத்தம் கிடைக்கிறது.

அதன் பின் வரும், ‘கருமையும் அடர்த்தியும்/ கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே’ என்பதில் இரண்டு வரிகளுக்குமிடையில் எந்த இசைவும் இல்லை. ஆனால், இதில் கருமையும் அடர்த்தியும் என்ற சொற்கள் துல்லியமான வண்ணங்களை உணர்த்தி, சாயம் என்பதை எதிரொலிக்கும், ‘கலந்து சாயும் மழைத்தீற்றல்’ ஒரு ஓவியத்துக்குரிய நுட்பம் கொண்டிருக்கிறது. இங்கு ஓசையால் கவிதையாகாதபோதும் கற்பனையைக் கிளர்த்துவதால் கவித்துவம் கொள்கிறது. அடுத்து, ‘தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இயல்பாக இருக்க வேண்டிய வரிகள், ‘மழைத்தீற்றலினூடே/ தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ விடுதியின் சாளரத்தில்/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இருப்பதில் ஒரு துல்லியம் இருக்கிறது. மழைத்தீற்றல், தெருவின் இரைச்சல் எல்லாம் விடுதியின் சாளரப் பின்னணியில் இருக்கின்றன, இந்தத் தனிமையில் துணையாய் அவள் வந்து அமர்கிறாள்.

அதைத் தொடர்ந்து, ‘சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்’, ‘உதிர்க்கும் பறவைபோல்’, ‘நீவிக்கொள்கிறாள்’, என்ற மூன்று தனித்தனி வரிகள் ஒரு பெண்ணை நினைக்க வைப்பதில்லை, நம் முன் ஒரு பறவைதான் நிற்கிறது.

அதன் பின் வரும், ‘இந்தியனா என்கிறாள்/ எனக்குத் தெரியும்/ இதையும் இதற்கடுத்த/ எந்த இரு கேள்விகளையும்/ நான் எதிர்பார்க்கலாமென’ என்ற ஸ்டான்ஸாவோ, அதையடுத்து வரும், ‘ஆமோதிக்கும் புன்னகைக்குப் பிறகு/ பிரம்பனான் கோவில் வளாகம் பார்த்தேனா/ என்று வினவுகிறாள்/’ என்பதுவோ கவிதைக்குத் தேவையாகத் தெரியவில்லை.

இது எதுவும் இல்லாமல், ‘மழையின் ஓசை/ ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது’ என்று தொடர்ந்திருக்கலாம். இடையூடாய் வரும், ‘பதிலாக அவள் அருந்த/ என்ன வேண்டுமெனக் கேட்கிறேன்’ என்பதைத் தவிர்த்து மௌனத்தில் முடித்திருக்கலாம்:

இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்.

oOo

வாழ்க்கை என்று பார்த்தால் பெரும்பாலான பொழுது அர்த்தமில்லாமலும் முக்கியமில்லாமல் அலுப்பூட்டும் வேலைகளில் கழிந்து கொண்டிருக்கிறது, எதுவும் செய்யாமலும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டும் சும்மா இருக்கும் பொழுதுகளைப் பற்றி கதை கவிதைகள் எழுத முடியாது. அசாதாரண கணங்கள், அசாதாரண மனிதர்கள், அசாதாரண காட்சிகள், அசாதாரணச் செயல்களை நம்மாலும் விவரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவை மட்டும்தான் கவிதைத் தருணங்கள் என்ற நிலையைக் கடந்து வந்தாயிற்று. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அர்த்தமுள்ளதை, முக்கியமானதை, அழகானதைத் தேர்ந்தெடுக்கும் செயலாக கவிதை ஆகிறது- உலகும் மனமும் உறைநிலையிலிருந்து அசையும் ஒரு ஆற்றுகைத் தருணம் என்று சொல்லலாம்.

இந்தக் கவிதையில் எதுவெல்லாம் தேவையில்லை, கவிதைக்கு உரியவையாக இல்லை என்று நினைக்கிறோமோ, அதுவெல்லாம் banal என்று சொல்லக்கூடிய விஷயங்கள் (‘so lacking in originality as to be obvious and boring‘). இங்கு எதுவெல்லாம் கவித்துவ மொழியில் வெளிப்படுகிறதோ, அதுவெல்லாம் sublime என்று சொல்லக்கூடியவை (‘elevated or lofty in thought, language, etc‘).

உயர்ந்த கவிதை, உயர்ந்த கதை, உயர்ந்த இலக்கியம் என்று நாம் சொல்வது இந்த ”elevated or lofty‘ என்ற அர்த்தத்தில்தான். சராசரியிலிருந்து அந்த அளவுக்காவது மேலெழும்பி நிற்பதால்தான், அதன் உயரத்துக்கு ஏற்ப, ‘excellence‘, ‘grand‘, ‘outstanding‘ முதலிய வியப்புணர்வுக்கு sublime என்ற சொல் இடம் கொடுக்கிறது. இந்த அர்த்தத்தில் எல்லா கவிதைகளும் சப்லைமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நம் அனுபவ வாழ்வில் எதுவொன்று மிகச் சாதாரணமாக, செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதாக இருக்கிறதோ, அதிலிருந்து உயர்ந்த இலக்கியத்துக்கு உரிய விஷயங்களை கடைந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. அது சில சமயம் சாதாரண விஷயங்களை அசாதாரண வண்ணங்களில் காணச் செய்வதாக இருக்கிறது, சில சமயம் அசாதாரண கணங்கள் நம் சாதாரணத்துவத்தில் காணாமல் போகிய பின்னர் நினைவின் துணையோடு மீட்டெடுக்கப்படுவதாகவும் ஆகிறது.

தொடர்புடைய பதிவு-

ஆற்றுகை – சில குறிப்புகள்

நயாகரா

ஸ்ரீதர் நாராயணன்

Niagara

Niagara

தீரா விடாயுடன்
வாய்பிளந்து நிற்கும்
மலையிடுக்கில்
பொங்கி பிரவகிக்கிறது.

புளியேப்பக்காரர்கள்
துளிக்குறிப்புகளால்
நொடிக்கு எவ்வளவு நீர்
இடம்மாறுகிறதென
அளக்க முயல்கிறார்கள்

கிளிப்பிள்ளைகளின்
வாய்ச்சொற்களில்
அது எப்போதும்
மலைமகளின்
முகம் மறைக்கும் மணச்சீலை.

வெண்பனி நீர்த்துவாலை என்கிறார்,
வைரச் சொரிதல் என்கிறார்,
வானவில் வந்திறங்கும் நீர்மேடை என்கிறார்,
வண்ண ஒளிக்கற்றைகள் நடமிடும்
குதிரைக்குளம்பு என்கிறார்,

சொல் இல்லாதவன் என்னிடம்
புறங்கையில் உருண்டோடும்
சிறு திவலை,
அதன் பேரழகை
காட்டிச் செல்கிறது.

முகிலிடை மின்னல்

பானுமதி ந

lasara

அகம் கொண்ட தரிசனம் சொல்லில் கட்டுப்படாது. அது போடும் கோலத்தின் நுனியும், அடியும் பற்றி லாசராவின் ’தரிசனம்’ நடக்கிறது.

குங்குலியச் சுடர் போன்று’ குபுக், குபுக் ஸ்வரப் பந்துகள் குபீரிடுகின்றன, குவிகின்றன, குலைகின்றன, குழைகின்றன, குமைகின்றன. இந்த ராகமுமில்லை, அந்த ராகமுமில்லை, எந்த ராகமுமில்லை, ஆத்மாவின் ராகம் ஒரே ராகம், அவரவர் உடன் கொண்டு வரும் அவரவரின் சொந்த ராகம்.”

நம்பிக்கை இன்ன உருன்னு யார் கண்டது? நாமா நினைக்கிற உருவைத் தவிர அதுவா அவாவாளுக்குத் தக்கபடி சுயமா, தானா, தனியா எடுத்து அவாளே அறியாமல் அவாளைத் தாங்கற நிஜ உரு ஒண்ணு அதுக்கிருக்கே!” ‘தயா’வின் உரையாடல் இது. ”நம் துக்கம், தோல்வி, அழிவு இவைகளே நம் பக்க பலங்கள்”. இதுவும் சாதாரண வாக்கியம் இல்லை. பெண்ணைச் சூழ்ந்துள்ள இது அவளின் பலமும்கூட. அவள் வாழத் தேவையான வைராக்கியமும்கூட. ”இதென்ன அர்த்தம் பண்ணற அனர்த்தம்” (‘தோன்றுகிறதா?’)

வேஷம் போடுவதும், போட்டுக்கறதும் நாமாத்தான் என்பதற்கு அத்தாட்சி மாதிரி, வேஷம், வேஷம் என்று கொண்டே ஒரு நாள்  வேஷம் கலைந்த பின்னும் வேஷம் மாறாமல் இருந்தால் அப்போ அது வேஷமா? நிஜமா? அப்பவும் அது வேஷந்தானா, இல்லை வேறு ஏதாவதா? எது நிஜம்?” நாம் அனைவரும் நாடக மேடை நடிகர்கள் என்பதால் வேஷம் கலைந்த பின்னும் நம் வேஷம் மாறுவதில்லை- ஆள் தான் மாறி நடிக்கிறோம். புனைவுகள் தொடர்கின்றன. தயாவின் தவிப்பான கேள்வி அவளது  தவத்தின் வேஷம் நிஜமாகிப் போகும் இடம் வேஷம் நிலைக்கிறதா இல்லையா?

இந்த வேஷ வினோதம் ‘நேரங்களில்’ அழகாகத் தொடர்கிறது. ”ஒரு ஒரு வேஷமும் ஒரு ஒரு நிழல். ஒவ்வொரு நிழலும் ஒரு ஒரு வர்ணம். அவை ஆடுவதும், பூசுவதும், வருவதும், மறைவதும் சில சமயங்கள் தெரிவதுகூட இல்லை.”

நெருப்பு உருகி ஒழுகுவது போல் சுருதியோடிழைந்து குரல் உள் வழிந்து நிரம்பி மற்ற ஓசைகளின் உணர்வை அப்புறப்படுத்தியதும், நிதானமாய், படிப்படியாய், வேகமாய், அகாரங்கள் மேலே கொக்கிகளை மாட்டி, குழந்தையைக் குளத்தில் முழுகக் கையைப் பிடித்து இழுப்பது போல், அவை அனைத்தும் அத்தனைக் கைகளாய் அவனைப் பற்றி தோட்டத்திலிருந்து வீட்டுள் இழுத்தன.” “தும்பியின் இறக்கையின் நயத்துடன் சன்னமான சல்லாக்கள் அவனைச் சுற்றிலும் மேலும் மோதி அலைந்து மிதந்தன.” “இமைகளுக்கிடையில் விழிகள் விதைகளாய் விழித்துக் கொண்டிருந்தன” காற்றில் வரும் சுருதி- இங்கே கதாநாயகனின் மன நிலைக்கேற்ப நெருப்பாக உருகி வழிகிறது. சூழ்நிலைக் கைதியாய் வாழும் மானுட அவலம் கொக்கிகளாக மாட்டி அவனை அங்கே நிலை நிறுத்துகிறது. விலக முடியாத தவிப்பு சல்லாக்களால் பிணைக்கிறது. இமை மூடியும் தூங்கா கண் பாவை அவருக்கு விழித்திருக்கும் விதை! கதையை மட்டும் சொல்லவில்லை அவர், கதையைகூட சொல்லத் தேவையில்லை, சொல் சுமக்கும் கனம் நம்மையே கதைமாந்தர் எனச் செய்துவிடுகிறது. தளையும், விடுதலையும் மானிட வரம் அல்லது சாபமோ? இரண்டுமே தேவையோ, தேவையெனில் எம்மட்டில், இல்லையெனில் எப்பொழுதிலிருந்து?

கேள்விகள்.. பதில் இருந்தும் பயப்படும், பயப்படுத்தும் கேள்விகள். ’மாயமான்’ சற்று தள்ளி நின்று பதில் சொல்கிறது. ”செயல் எனும் சிலந்திதான் என் கடவுள். செயலின் ஒடுக்கம்- புலனின் ஒடுக்கம், புலனின் ஒடுக்கம்- மனதின் ஒடுக்கம், மனதின் ஒடுக்கம்- உயிரின் அமைதி“.

இருளில் கண்கள்  தொடர முடியா அந்த ஓசையின் வளைவுகளை, வளைவுகளின் நுட்ப அழகுகளை செவியால் எப்படிப் பளிச்சென்று பார்க்க முடிகிறது, பருக முடிகிறது! தம்பூரை மீட்டினாற் போன்ற உருகோசையில் நினைவு ஒன்றுபட்டு அந்தத் தேடலின் தவிப்பில் நெஞ்சு முங்கி முங்கி எழுகையில், தன் தன்மையே துலங்கித் தனிப் பரவசமடைந்தான். தானும் அத்துடன் அதன் தேடலோடிழைந்தான்.” காதுகள் இன்னிசையில், அதைவிட உயிர் நிரப்பும் ஓசையில் அவர் எழுத்தில் கண்களுமாகி விடுகின்றன.

தான் உண்டாக்கிய நெருப்பில் நான் திருப்பித்திருப்பி தன்னயே காய்ச்சிக் கொள்கிறது. நாம் இறக்கவில்லை. ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது எப்படியோ ஏனோ பிறந்துவிட்டது. பிறந்தபின் அதனால் இறக்க முடியவில்லை. இருந்து தான் ஆக வேண்டும்.”

தட்டில்லாது சுடர் ஒன்று அஞ்சலியில் அவளை வட்டமிட்டு அந்தரத்தில் நீந்திற்று. கம்மென்று அகில் மணம் புகையின்றிக் கமழ்ந்தது.” ”செயலளவில் ஒன்றும் நேர்ந்து விடவில்லை, எண்ணமும் செயலே என்பது தவிர. பூக்கள் மணப்பதற்காகப் பூக்கவில்லை. தம் இயல்பில் பூக்கின்றன, அதனால் மணக்கின்றன.” (ஏகா)

செவியின் நுட்பம் இவரை வியப்பிற்குள்ளாக்குவது வியப்பில்லை இசையின், ஒலியின், கூவல்களின், கேவல்களின், மெளனம் போடும் நிசப்த சப்தத்தின் உபாசகர் வேறு எப்படி இருப்பார்? ’சப்தவேதி’ சொல்கிறது- ”கற்பனை என்பது ஆபத்து. கட்செவி போன்று, அதிசன்னமான ஓசைகளைப் பெறும் செவியையும் படைத்து, பிறகு அவ்வோசைகளின் உள்ளர்த்தங்களைக் கண்டுபிடிக்க, அவ்வழியே கற்பனையும் ஓட்டிவிட்டால் அப்புறம் தசரதனின் சப்தவேதி சமாசாரம்தான்”. “இரவில்தான் சப்தங்களின் சக்தி வலுக்கிறது. ஒளி மங்கியதும் ஒலி ஓங்குகின்றது.” ”அவளுடைய தரிசனத்தின் இன்பமே, ஒரு சகிக்கவொண்ணா துன்பம்

மின்னல் வானத்தை வெட்டும் பொழுதெல்லாம், வானம் அடிபட்ட விலங்கு போல் அலறியது

ஜதியின் ஸ்வரம் நாம் அறிவோம். சிந்தனையின் ஸ்வரம்? ’ஆஹூதி’- “அம்மாவின் கூந்தல் முடிச்சில் தாழம்பூ மடல் தகதகவென கமகமக்கும் அல்லது கமகமவென தகதகக்குமா? கம கம தக தக சிந்தனையின் ஸ்வரம் எப்படி மணக்கிறது?

அதிநுட்பமாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றைச்சரம்தான் மின்னல் என ஒளி காட்டி கண்ணைப் பறிக்கிறது.

கண் திறந்தால் ஒளி. மூடினால் இருள். மூடியும் திறந்தும் உழன்றால் உயிர் என எனக்கு நானே பெயர் வைத்துக் கொண்டு  செயல் வகுத்த நிலை முந்திய கர்ப்ப வெளியில் நானற்று நிறைந்திருக்கிறேன். எத்தெய்வமும் அடியூன்றிய ஆகாச கோசம் நான்.”

லாசராவின் எழுத்துக்கள்- எண்ணங்கள் முற்றுமாக ஏறி, அதன் பின்னரும் வாசகர் தன் எண்ணத்தைக் கண்டடைய  வழி வகுக்கும் வசீகரம் சொல்லில் அடங்காது. தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும், காட்சிகளையும், பேச்சுக்களையும் தரிசனமாக்கும் வித்தைக்காரர். இதில், வாசகருக்கு கிட்டும் அனுபவம் அவரவர் வார்ப்பிற்கு ஏற்றபடி.

நன்றி – தி இந்து