விமரிசனம்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

ரா. கிரிதரன்

ஹனீஃப் குரேஷி எழுதிய The Buddha of Suburbia நாவலின் தொடக்கம் இது:

“My name is Karim Amir, and I am an Englishman born and bred, almost. I am often considered to be a funny kind of Englishman, a new breed as it were, having emerged from two old histories”

இரு கலாச்சார அடையாளங்கள் இணையும்போது ஒன்றை மற்றொன்று ஆதிக்கம் செய்யத் தொடங்கும் என்றாலும் முற்றிலும் புதுவிதமான அடையாளம் உருவாவதே அதன் இயல்பாக அமையும். மிகக் கச்சிதமாக அக்கருவைத் தொட்டுத் தொடங்கும் ஹனீஃப் குரேஷியின் நாவல் பிறந்த ஊரைக் கைவிட்டு புது நிலத்தில் வேரூன்ற நினைப்பவர்களைப் பற்றிய நல்லதொரு நாவலாக அமைந்திருந்தது.

அ.முத்துலிங்கம் எழுதிய ‘அமெரிக்கக்காரி‘ எனும் சிறுகதை இதே போன்ற – ஒரு ‘கிட்டத்தட்ட’ தனமையைப் பற்றிய கச்சிதமானத் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது.

“ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.”

ஆம், முழுக்க முழுக்க இந்த அமெரிக்கக்காரியின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதையில் வரும் இலங்கைப் பெண்ணும் ‘கிட்டத்தட்ட’ அமெரிக்கக்காரிதான் என்றாலும் அவள் தன்னை ஒரு புது இனம் என்பதைக் கண்டுகொள்ள நெடுகாலம் ஆகிறது. ஆங்கில புத்தகங்கள் படிக்கத் தொடங்கியதால், அதில் வரும் அமெரிக்க சாகச கதைகளை பள்ளியில் சொல்லிக் கொண்டிருப்பதால், பிறந்த நாடான இலங்கையில் சிறுவயது முதலே அமெரிக்கக்காரி என அழைக்கப்பட்டவள் அமெரிக்கா எனும் நாட்டைப் பற்றிய யதார்த்தத்தை சற்று வயதான பின்னரே தெரிந்துகொள்கிறாள். அவளைப் பொருத்தவரை நினைவு தெரியாத நாள் முதலே அமெரிக்கக்காரி எனும் அடையாளத்தை அவள் பெற்றுவிட்டாள். அது ஒரு அழியா மச்சமாக அவளோடே வளர்ந்தது. தான் ஒரு அமெரிக்கக்காரி என நம்பத் தொடங்கும் பத்து வயதில் அவளது தாய் அமெரிக்காவே போனாலும் அவள் இலங்கைக்காரி தான் எனப்போட்டு உடைத்ததில் மனம் நொந்துப்போகிறாள்.

அமெரிக்கக்காரி ஆவதற்கான அவளது முயற்சிகள் அவள் அமேரிக்கா வந்தபின்னும் தொடரத்தான் செய்கின்றன. வலிய வந்து பழகும் நண்பர்களிடமிருந்து அவள் இலங்கைக்காரி போல தலைகுனிந்து விலகுவதில்லை. பேசுகிறாள். காப்பி குடிக்கிறாள். வெளியே செல்கிறாள். அவர்கள் அவளை அடைய எடுக்கும் பிரயத்தனங்களுக்கு ஓர் எல்லை வரை வளைந்துகொடுக்கிறாள். இரவு வீட்டுக்கு அழைக்கும்போது அந்த உறவு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. அமெரிக்கக்காரி என்பதை மானசீகமான எல்லையாக்கி சோதித்துப்பார்ப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. பயமிருப்பதாகவும் தெரியவதில்லை. ஹனீஷ் குரேஷி எழுதுவது போல அவள் கிட்டத்தட்ட அமெரிக்கக்காரி மட்டுமல்ல, கிட்டத்தட்ட இலங்கைக்காரியும்தான்.

கல்லூரி நிகழ்ச்சியில் நாட்டியம் ஆடிக்காட்டும்போது கூடவே தந்திக்கருவி வாசித்த வியட்நாமிய மாணவன் நண்பனாகிறான். என்னை ஆச்சர்யப்படுத்து, எனும் கேள்வி மூலம் ஒரு இதமான நண்பனாகும் அவன் மதிக்கும் எல்லைக்கோடுகள் அவளுக்குப் பிடிக்கிறது. அவன் கண்ணியமாகக் கைபிடிக்கும் வேளையில் அவள் எல்லை மீறி முத்தமிடுகிறாள். செளஜன்யமான உறவு மலர்கிறது.

மாணவர் விடுதியை விடுத்து தனியறை எடுத்து இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகின்றனர். அவன் வேலைக்குப் போகத் தொடங்கியபோதும் அவள் முனைவர் பட்டத்துக்குத் தயார் செய்கிறாள். கடுமையான வேலை. வேலைக்கு இடையே ஒரு குழந்தை வேண்டுமென இருவரும் முயல்கின்றனர். மிக இயல்பாக ஆசிய நாட்டு மக்களின் மன இயல்பை கதாசிரியர் தொடர்கிறார். இனம் புரியாத இடத்தை நோக்கி அவர்களது உறவு செல்லவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத்தொடங்கிய சில காலத்தில் அவர்களிடையே ஏற்படும் இடைவெளி குறைந்து அவர்கள் மேலும் நெருங்க ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வழிமுறையைக் கைக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஆசியர்கள் குடும்ப வாழ்வின் அடுத்தகட்டத்தை தங்கள் பிள்ளைகள் மூலம் தொடங்குகின்றனர். தனிமனித வெளி என்பது பல்கிப் பெருகும் குடும்பச்சங்கிலி எனும் அமைப்பின் ஒரு அங்கம் மட்டுமே என்பதை உணர்கின்றனர். மேற்கத்திய சமூகம் குடும்ப அமைப்பை தனிமனித வெளியினுள் ஊடுருவலாகவும் இடையூறாகவும் பார்க்கிறது. சேர்ந்து வாழும் இருவருக்கு குறுக்கே வரும் ஒரு இடைவெட்டாக மதிப்பதினால் தனிமனித வெளிக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை மீறியது எதுவும் இல்லை என்றாகிறது. கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

வியட்நாமிய காதலனின் விந்து குறைபாடு பெரு வெடிப்பாக அவர்களது உறவைப் பிரிக்கவில்லை. அவர்களை மேலும் நெருங்கச் செய்கிறது. குழந்தைத் தரமுடியாதத் தன்னைவிட்டு விலகும் அவன் அளிக்கும் உரிமையை அன்பால் மறுக்கிறாள். வீடு கட்டச் சேர்த்திருக்கும் பணத்தைக்கொண்டு மகப்பேறு சிகிச்சை செய்யச் செல்கிறாள். இதைச் சொல்லும்போது அமெரிக்காவில் கிளிண்டன் – மோனிகா விவகாரத்தை அ. முத்துலிங்கம் சொல்கிறார். காலக்குறிப்பு போலத் தெரிந்தாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தை இலங்கைக்காரி-வியட்நாமிய காதலனின் தியாகத்தை ஒப்பிடும் தராசாகவே வாசகருக்குத் தோன்றும்படி எழுதியிருக்கிறார். சம்பந்தமில்லாத தகவல்களை எழுதி கதையை ரொப்புகிறார் எனும் குற்றச்சாட்டு பொய்க்கும் கணம் இது. ஒரு சிறுகதையாசிரியர் சகலவிதமான தகவல்களையும் விட்டுவிட்டு இந்த குறிப்பிட்ட நிகழ்வை ஏன் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார் என்பதை சேர்த்துப் பார்த்தால் கதை அடிநாதமாகப் பேசும் விஷயத்தை நாம் சென்றடையலாம்.

கருவைச் சுமக்கும் காலம் முழுவதும் அவளது அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறாள். குழந்தை வளருகிறது, நீ செத்துப்போய்விடாதே என்பதுதான் ஒவ்வொரு கடிதத்தின் சாரமும். அதுவும் சாதாரணக் குழந்தையல்ல. அமெரிக்கக் குழந்தை என்பது கடிதத்தின் அடிநாதம். யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான்.

ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம், சிறுகதை

சருகுகள் – அமெரிக்கக்காரி சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

கோகுல் பிரசாத்

16 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிச் சிறுகதையான ‘அமெரிக்கக்காரி’யில் லான்ஹங் மதியிடம் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என சொல்லிக் கொண்டே இருக்கிறான். அ முத்துலிங்கத்தின் தலையாய நோக்கமும் வாசகரை ஆச்சரியப்படுத்துவது தான். இலகுவான மனநிலையில் பக்கங்களை அனாயசமாக புரட்டிக் கொண்டே செல்லலாம். மொழியைத் திருகித் திருகி எழுதுவதில்லை. சோதனை முயற்சி என்ற பெயரில் வாசகரை பரிசோதனை எலியாக்கி பலி கொடுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கதைகளை ஞாபக இடுக்குகளில் சுமந்தலைந்து கொண்டு திரிய வேண்டிய அவசியமேதும் ஏற்படப் போவதில்லை. வாசிக்க வாசிக்கவே கழன்று கொண்டு காணாமல் போய்விடும் அற்பக் கதைகள். வேண்டாத பொருளை தொலைத்து விட்டு அழிச்சட்டியம் பண்ணும் சமர்த்துப் பிள்ளைகளும் இருநூறு ஆண்டுகள் வாழப் போகிறவர்களும் கட்டுரை எழுதுவதாக ஒப்புக் கொண்டவர்களும் இரண்டாவது முறை வாசித்துக் கொள்வார்கள்.

இவை கட்டுரை, சிறுகதை, முன்னுரை, அனுபவம் போன்ற வகை மாதிரிகளுக்குள் அடங்க மறுக்கிற வரையறைகளுக்குள் விழுந்து விடாத அபாரமான தனித்துவம் கொண்டவை. ஒரே சமயத்தில் நாட்குறிப்பு போலவும் தகவல் களஞ்சியம் போலவும் எண்ணச் செய்யும் மாயாஜால விளையாட்டை நிகழ்த்தி முகமூடிகளை கழற்றி மாற்றி அணிந்து வாசகரை திக்குமுக்காட வைக்கின்றன. Genre லேபிள்களை மாற்றி மாற்றி ஓட்டினாலும் அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன். எட்ட நின்று வேடிக்கை பார்த்தவாறே சம்பவங்களை வெறுமனே சொல்லிச் செல்லும் இவரது பாணியில் போதாமைகள் பூதாகரமாகத் தென்படுகின்றன. ஓர் இலக்கிய ஆக்கத்திற்குத் தேவைப்படும் நுணுக்கமான அவதானிப்புகளும் நுட்பமான விவரணைகளும் இவற்றில் இல்லை. ஓர் அந்நிய நிலத்திற்குள் முதன்முறை அலையும் மனிதனைக் கூட அந்த மண்ணையும் மாந்தரையும் கூர்ந்து கவனிக்க ஆசிரியர் அனுமதிக்க மறுக்கிறார். நைரோபி வீதி ஆள் அரவமற்று இருந்தது என்கிறார். இப்படிச் ‘சொல்வதற்கு’ கதைக் களத்தை எமக்கு பரிச்சயமான மண்ணிலேயே அமைத்திருக்கலாம். அரவமற்று ‘எப்படி’ இருந்தது என்பது முக்கியமற்றதாக ஆகிவிடும் பொழுது நைரோபி என்பது ‘ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத களங்களில் நிகழும் கதைகள்’ எனப் பீற்றிக் கொள்வதற்கான அசட்டுக்காரணம் மட்டுமே என்றாகி விடுகிறது.

மனித உணர்வுகள் வெளிப்படுவதற்கான அடிப்படை முகாந்திரத்தை எத்தனை முறை துழாவித் துழாவி தேடினாலும் கண்டடைய முடிவதில்லை. கதை நிகழ்புலங்களும் மனித முகங்களும் மாறுகின்றன. ஆனால் எல்லோரும் நம் பொதுப்புத்தியில் சிறைப்பட்டிருக்கும் பிம்பங்களின் ‘மாதிரிகளாக’வே (Samples) இருக்கிறார்கள். ‘எருமை மாடு மேலே மழை பெய்ஞ்சா எனக்கென்ன’ மாதிரி உப்புச் சப்பில்லாமல் வாழ்வை கடக்கிறார்கள். ஏனெனில் அத்தனை நபர்களையும் கண்காணித்தபடி நமக்கு கதை சொல்வது கிட்டப் பார்வை குறைபாடு உடைய ஒரே ஆள். இந்தக் கதை சொல்லும் முறையில் இவரால் இவ்வளவு தான் இயலும் போல. முப்பரிணாமமோ பஞ்சபரிணாமமோ எதிர்பார்க்கவில்லை. தட்டையாக இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாகி விடுகிறது என்கிறேன். எல்லாப் பெண்களின் இடைப் பிரதேசம் கூட, எந்த நாட்டுப் பெண்களானாலும் சரி எந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களானாலும் சரி, மறைக்கப்படாமல் இருக்கிறது. இடைப் பகுதியின் நிறம் ஒருத்திக்கு பழுத்த பரு நிறத்திலும் இன்னொருத்திக்கு மண்புழு நிறத்திலும் இருப்பது மட்டும் ஆறுதல். அப்புறம் போனால் போகிறது என்று ஓரிரு இடங்களில் ஒன்றிரண்டு தடவைகள் கழுத்துப் பள்ளத்திற்கும் பன்றி இறைச்சியைப் போன்ற தொடைகளுக்கும் போய் வருகிறார். இந்தக் கதைகளை ‘முந்தி எழுதியது’ போலலல்லாத கதைகள் என முன்னுரையில் அ முத்துலிங்கம் குறிப்பிட்டாலும் ஒரே தொகுப்பிலேயே சில குறிப்பிட்ட விஷயங்கள் பல கதைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதை கவனிக்க மறந்து விட்டிருக்கிறார். நினைவூட்ட வேண்டியது எம் கடமை.

வாசகர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து இரசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலோ ஓ ஹென்றி திருப்பம் வைக்கிறேன் பேர்வழி என்றோ ‘அவள் இன்னும் 118 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’, ‘மேலும் 21 வருடங்கள் பிடித்தன’ என சில கதைகளை முடிக்கிறார். (லூசியா & உடனே திரும்ப வேண்டும்). தன்னுடைய கதைகளில் இடம்பெறும் பழங்காலத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 14 வயது தான் இருக்க வேண்டும் என தனக்குத் தானே விதித்துக் கொண்டிருப்பார் போல. (லூசியா & புகைக்கண்ணர்களின் தேசம்). ஒரு வயது கூடியிருந்தாலோ குறைந்தாலோ என்ன குறை ஏற்பட்டுவிடப் போகிறது எனப் புரியவில்லை. பின் ஏதோவொரு வருடத்தை குறிப்பிட்டு ‘அந்த ஆண்டில் இதே போல நடந்தது என நினைத்துக் கொண்டேன்’ என பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார். இரண்டும் வெவ்வேறு தனித்தனிக் கதைகள் என்றாலும் பதினாறாம் நூற்றாண்டில் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்ட ரோபர்ட் நொக்சிற்கும் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் கதையை வேறொரு நிலப்பகுதியில் விவரிக்கும் கதை சொல்லிக்கும் சொல்லி வைத்தாற் போல 1611ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட பைபிள் தான் கிடைக்கிறது. (லூசியா & பத்தாவது கட்டளை). ரோபர்ட்டிடம் இருந்து பல கைகள் மாறி பல நூற்றாண்டுகள் கடந்து இடையே ஏழு கதைகளை வேறு தாண்டி கதை சொல்லியிடம் அதே பைபிளை எவரோ எவருக்கோ எழுதிய கள்ளக்காதல் கடிதத்துடன் காலம் சேர்ப்பித்ததை வாசக இடைவெளிகள் எனக் கருதி நாம் நிரப்ப வேண்டுமா போன்ற குழப்பங்களுக்கு வாசகர்கள் தங்களை ஒப்புவித்துவிடக் கூடாது.

‘பரிமளத்திற்கு 33 வயதிருக்கும் என்பதை ஒருவரும் சொல்லவே முடியாது’ என எவரும் கணிக்க முடியாத பரிமளத்தின் வயதை துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் ஆசிரியரால் ‘பரிமளத்தின் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்’ எனத் தோராயமாகத் தான் குறிப்பிட முடிகிறது.(மன்மதன்) ‘விவரமான ஆள் தான்’ என நினைத்துக் கொண்டேன். (அ.மு.பாதிப்பு!) இதற்காவது ஆண்களின் சார்பாக ஒரு பொது மன்னிப்பை வழங்கி விடலாம். வேட்டை நாய் சிறுகதை சம்பந்தமே இல்லாமல் தொடங்கி இலக்கற்று திரிந்து மற்றுமொரு ‘நினைத்துக் கொண்டான்’ இல் முடிகிறது. இந்த ‘வேட்டை நாய்’ என்பது குறியீடாக இருக்கும் பட்சத்தில் விபரீதமான முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது. ஒரு கட்டிப்பிடி சம்பவத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றை தழுவி  எழுதப்பட்ட பத்தாவது கட்டளை எனும் கதை மாதிரி ஒன்று சுந்தர ராமசாமியின் ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ போல பசப்பலாகி விடுமோ என பயந்து கொண்டிருந்தேன். பயந்ததை விட மோசமாக பிசுபிசுத்து விட்டது. கதையின் இறுதித் திருகலில் வாசகருக்கு உண்டாக வேண்டிய நம்பகத்தன்மை குறித்து ஆசிரியர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ‘இதெல்லாம் தனக்கு நேரவில்லை’ என திசை மாற்றுவது வடுவூர் துரைசாமி காலத்து டெக்னிக் ஐயா.

கதைகள் நெடுக Gimmicks-களுக்கு பஞ்சமே இல்லை. தான் வாசிக்க நேர்ந்த அறிவியல் தகவல்களை மையமாக வைத்து அவற்றை சுற்றி கதை பண்ணிவிடுவது ராஜேஷ்குமாரின் வழக்கம். அ முத்துலிங்கமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாரே என அங்கலாய்ப்பாக இருக்கிறது. எலிஸபெத் மகாராணி பதவி ஏற்றது, எல்லைக்கோடுகளுக்கு இடையே நிலவும் நேர வித்தியாசம் போன்று தகவல் துணுக்குகளாக வாசித்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கக் கூடியவற்றை நம்பி பல கதைகளை சமைத்திருக்கிறார். அவற்றை அந்தக் கதைகளில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டால் எஞ்சுவது எதுவுமில்லை. ‘கொடிக்கயிற்றில் மறந்து போய்விட்ட கடைசி உடுப்பு போல’ என சிற்சில இடங்களில் திடுக்கிட வைக்கிறார். சில இடங்களில் மென்னகையும் கையளவு சொற்களிலேயே முழுமையாக திரண்டெழும் ஒரு சில கதாபாத்திரங்களின் சித்திரமும் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு போதுமானது அல்ல. அ முத்துலிங்கத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் போல ‘முன்பு எப்படியெல்லாம் நன்றாக எழுதியிருக்கிறார்’ என வாசகர்கள் நினைத்துப் பெருமூச்செறிய வேண்டியது தான்.

 

அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம்

வெளியீடு : காலச்சுவடு.

 

ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம்

தொடர்ந்து பதின்மூன்று வாரங்களாக ஆதவனின் சிறுகதைகள் சில குறித்து வெ. சுரேஷ் சிறு குறிப்புகள் எழுதி வந்தார். அந்தத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆதவனின் புகழ் பெற்ற சிறுகதைகள் சில, கூடுதல் கவனத்துக்குரிய சிறுகதைகள் சில என்ற இந்த அறிமுகங்கள், நகர்ப்புற மத்திய வர்க்கத்தினர் வாழ்வு குறித்த கதைகள் என்ற எல்லைக்குள் ஆதவனைக் குறுக்குவதைக் கேள்விக்குட்படுத்துகின்றன- களம் அவ்வாறிருந்தாலும் ஆதவன் பேச எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் பலவகைப்பட்டவை.

1. “லௌகீக வாழ்விலும் பெரும் வெற்றி பெறாத, வணிக இலக்கியத்தில் கிடைக்கும் பெரும்புகழும் அடைய முடியாத ஒரு படைப்பாளிக்கு மிஞ்சுவதுதான் என்ன? தான் தனித்துவமானவன் என்ற ஒரு ஆத்ம திருப்தியா? அல்லது, அந்த அகங்காரத்தின் நிறைவா? அந்த சுய அடையாளமும் சில சமயங்களில் அசைக்கப்படும்போது என்ன மிஞ்சுகிறது?”- புதுமைப்பித்தனின் துரோகம் 

2. “ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? ” – அகந்தை 

3. “எளிய மத்தியதர வர்க்க, வயதான பிராமணப் பெண்ணின் வாழ்க்கை பற்றியது என்று தோன்றினாலும், மனிதர்கள் தம் சக மனிதருக்குத் தரக்கூடிய மதிப்புமிக்க இடைவெளி குறித்தும், சக மனிதருக்கு நாம் அளிக்கக்கூடிய இடத்தையும் மதிப்பையும் நம் சுயத்தை இழக்காமல் கொடுக்க முடியுமா என்ற ஆழமான கேள்வியும் முன்வைப்பதே இந்தப் படைப்பு எனலாம்.” – சிரிப்பு 

4. “முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில் படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின் நிழல் இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது.” – அந்தி 

5. “மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.” – கார்த்திக் 

6. “தன்மை ஒருமையில் விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது.” – ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’

7. “80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு… வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர் கொண்ட ஒரு சிறுகதை” – இன்டர்வியூ

8. “அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார்.” – தில்லி அண்ணா

9. “தலைப்பு சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம்” – லேடி 

10. “கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.” – ஒரு அறையில் இரு நாற்காலிகள் 

11. “ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். ” – சின்ன ஜெயா 

12. “பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்க தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. அதே சமயம், மற்றொரு கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது” – கருப்பு அம்பா கதை 

13. “வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? .” – அகதிகள் 

சிறுகதைகளை கவனப்படுத்தும் வரிசையில் அடுத்த தொடர் விரைவில் துவங்குகிறது.

தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்“: தமிழ்ச் சிறுகதையின் இன்னுமொரு முகம்

 

ஜிஃப்ரி ஹாஸன்

தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் நீண்ட பட்டியலை நாம் புதுமைப்பித்தன், கி.ரா, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கோணங்கி, நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வண்ணதாசன் என ஒரு சுருக்கமான பட்டியலாகப் போட்டுக் கொண்டால் அதில் தமிழவனையும் ஒருவராகச் சேர்த்துக் கொள்வதா? அல்லது, இந்தப் பட்டியலை விடுத்து ஒரு புதிய பட்டியலைத் தமிழவனிலிலிருந்து தொடங்குவதா என்ற கேள்விதான் தமிழவனின் கதைகளை வாசிக்கும்போது எனக்குள் ஏற்பட்டது. அவரது கதைகளை வாசிக்கும்போது இதே கேள்வி உங்களுக்கும் எழுவதற்கு அதிக சாத்தியமுள்ளது.

தமிழ்ச் சூழலில் கவிதையை ஒட்டி நடந்த விவாதங்கள் அளவுக்கு சிறுகதை பற்றி பெரிதாக நடந்தேறவில்லை. மரபுக் கவிதை, நவீன கவிதை, பின்-நவீன கவிதை என்ற வகைப்படுத்தல்களும் அது தொடர்பான உரையாடல்களும் நமது இலக்கியவெளியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக கவிதை குறித்த புதிய பார்வைகளும், புதிய போக்குகளும் உருவாகின. தமிழ்க் கவிதைச் செயற்பாட்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் வளர்ச்சியையும் அவை ஏற்படுத்தின.

தமிழில் கவிதை அளவுக்கு ஒரு நீண்ட வரலாற்றை சிறுகதைகள் கொண்டிருக்கவில்லை. இலக்கிய காலப் பாகுபாட்டில் நவீனயுகம் எனப்படும் காலப்பகுதியிலேயே சிறுகதைகள் தோற்றம் பெற்றன. மரபுச் சிறுகதைகள் என எதுவும் கிடையாது. எனினும் நவீன கால தமிழ்ச் சிறுகதைகள் கடந்த சில ஆண்டுகளில் மேலைக் கோட்பாடுகளின் தாக்கத்துக்குட்பட்டு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு புதிய தளத்தில் சிறு அளவில் பயணத்தை தொடங்கி இருந்தன.

பின்னர், நவீனத்துவச் சிறுகதைகளில் காணப்பட்ட மையக் கருவொன்றைச் சுற்றியே கதையை நகர்த்துதல், உரையாடல்களில் கிளை மொழிப் பாவனை (ஒரு பிரதேச உரையாடல் மொழி இன்னொரு பிரதேச வாசகனுக்கு புரியாத போதிலும் அதையே கையாளுதல்), ஒரு கதைக்குள் ஒரு கதை மட்டும் காணப்படுதல், விவரணங்கள் குறைவாக இருத்தல் போன்ற பண்புகளிலிருந்து விடுபட்டு பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமானதாக தமிழ்ச் சிறுகதைகள் ஒரு புதிய பயணத்தை தொடங்கின.

பொதுவாக பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் மேலோட்டமானது போன்ற  தோற்றம் அளிக்கும் ஆழமான கதைகளாகும். வாசகர்களை கதையோடு பிணைக்கக்கூடிய மொழியைக் கொண்டவை. கிளைமொழி உரையாடல்களைத் தவிர்த்து ஒரு பொது மொழியில் உரையாடல்கள் கொண்டவை. அது கதையின் சுவாரஸ்யத்தை மேலும் மெருகூட்டுகின்றது. அவை நவீனச் சிறுகதைகளின் பிராந்திய உரையாடல் மொழிகளைத் தவிர்த்து வாசகனை கதைக்குள் உள்வாங்கும் நெகிழ்வுத் தன்மையான கதைகூறல் மொழியை கொண்டுள்ளன. ஒரு மைய சம்பவத்தையோ, மையக் கதாபாத்திரமொன்றையோ சுற்றி கதை இங்கு நகர்த்தப்படுவதில்லை.

மனித வாழ்வை, அதன் எல்லாப் பரிமாணங்களையும் ஒரு வித அங்கதத்துடன் சித்தரிக்கின்றன. இத்தகைய பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒரு சில நாவல்களும் உள்ளன. சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே. சில குறிப்புகள்”, சாருநிவேதிதாவின் ”ஸீரோ டிகிரி” போன்ற நாவல்களில் இந்த எழுத்துமுறை உள்ளது. ஏன் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’வோ, ‘ம்’ நாவலோ இந்த எழுத்துமுறைக்கு அவ்வளவு அந்நியமானதல்ல.

தமிழில் பின்-நவீன எழுத்துமுறைக்கு நெருக்கமான சிறுகதைகள் என்ற வகையில் தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்” தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால் நவீன சிறுகதை எழுத்தாளர்களோ, விமர்சகர்களோ இத்தகைய சிறுகதைகளை இலகுவில் அங்கீகரிப்பதில்லை. இலக்கியத்தரமுள்ள எந்தவொரு படைப்பும் நிராகரிக்கத்தக்கதல்ல. மாறாக அவை உரையாடப்படக் கூடியவையே. தேவையற்ற அச்சம் காரணமாக சில நவீன சிறுகதை எழுத்தாளர்களும், விமர்சகர்களும் தங்களிடமுள்ள அளவுகோளுக்குட்படும் கதைகளை மட்டுமே அங்கீகரிப்பதும் ஏனைய கதைகளை நிராகரித்தும் வருகின்றனர். இத்தகைய பின்-நவீனச் சிறுகதைகள் வாழ்க்கையை மேலோட்டமாகச் சித்தரிக்கின்ற மொழி விளையாட்டு என நிராகரிக்கின்றனர்.

ஆனால் இந்த நவீனத்துவப் பார்வையிலிருந்து சற்று விலகி இலக்கிய ஜனநாயக சிந்தனையின் அடிப்படையில் தமிழவனின் கதைகளை நாம் வாசிப்புச் செய்யும்போது அவரது கதைகளுக்கான இடத்தை வாசகன் கண்டுகொள்கிறான். படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களே தமிழ்ச் சிறுகதைகளின் மைய அம்சமாக கொண்டாடப்படும் ஒரு இலக்கிய காலத்தில்தான் நாம் இருக்கிறோம். தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்”  கதைத் தொகுதியிலுள்ள அநேக கதைகள் அவரது வாழ்வியல் அனுபவங்களைப் பேசுபவையாகவே இருக்கின்றன.

 கதைசொல்லிகள் தங்களது கதைகளில் அவர்களின் சொந்த அனுபவங்களை முதன்மைப்படுத்துவது நமது சிறுகதையின் மரபான பண்பாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் தமது சொந்த அனுபவங்களை தமிழவன் வெளிப்படுத்தும் முறையில் ஒரு பின்நவீனத் தன்மை வெளிப்படும் விதத்தை வாசகர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

மனித வாழ்வின் மீதான நுண்ணிய அதிகாரங்களையும், அவமதிப்புகளையும் அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் மன அதிர்வுகளையும் தமிழவன் தன் கதைகளில் பதிவு செய்கிறார். தமிழவன் கதைகளில் உலவும் மனிதர்கள் வாழ்வின் அநீதியை எதிர்கொண்டு மேலெழும் வேட்கையுடன் வருகின்றனர்.

நமது தமிழ்ச் சிறுகதைகளின் கதைநிகழ்களத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்று அர்த்தப்படுத்தும் முனைப்பு தமிழவனின் அநேகமான கதைகளுக்குள் கிட்டத்தட்ட ஒரு கோட்பாடாகவே வடிவம் கொண்டுள்ளது.

தமிழவனின் இந்தக் கதைத்தொகுதி தமிழின் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து ஒரு புரட்சிகரமான மீறலைச்செய்துகொண்டு தமிழ் எதார்த்தத்தை, தமிழ் வாழ்க்கையை புதியதொரு கோணத்தில் பேசுகின்றன. இத்தொகுப்பிலுள்ள அநேக கதைகள் தமிழ் வாழ்வை அதற்கு முற்றிலும் அந்நியமானதொரு சூழலில் வைத்து ஆனால் அதற்கு மிகவும் நெருக்கமான மனிதர்களைக் கொண்டு பேசுகின்றன.

சிலகதைகள் முதல் வாசிப்பில் தந்த அனுபவத்தை விட இன்னுமொரு வாசிப்பில் பிறிதொரு அனுபவத்தை தருகின்றன. ஆக, வாசகனுக்குள் ஒரு கதை ஏற்படுத்தும் அனுபவங்களின் ஒற்றைத் தன்மையை ஒரேயடியாக உடைத்தெறிகிறார் தமிழவன். எனினும் வாழ்வின் நுண்மையான அனுபவங்களை விடவும் பேரனுபவங்களையே அவர் பேசுகிறார். இதனால் வாழ்க்கையை கலைத்துவமாக சிருஷ்டித்துக் காட்டுவதற்கு பதிலாக தத்துவார்த்தமாக சிருஷ்டித்துக் காட்டுகின்றன தமிழவனின் கதைகள்.  

இத்தொகுப்பிலுள்ள கதைகள் சிறுகதைகளின் வழமையான அளவில் (சைஸ்) ஒரு புதிய மீறலைச் செய்கிறது. சிறுகதைகள் என்ற வகைப்பாட்டுக்குள் வரும் கதையின் அளவைவிட சற்று சிறியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. அண்மைக்காலமாக அவை Short Fiction என்றொரு வகையாகவும் பார்க்கப்படுகின்றன.

இத் தொகுப்பிலுள்ள கதைகள் கதைகூறும் முறையிலும் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து விலகிச் செல்கின்றன. தொடக்கம், உச்சம், முடிவு எனும் அரிஸ்டோட்டிலிய நியம முறைக் கதைகூறல் பண்பை தமிழவன் முற்றாகவே புறக்கணித்துள்ளார். இதனால் அவரது கதைகள்நன்கு கட்டமைக்கப்படாதகதைகளாக தமிழில் ஒரு புதிய போக்கை முன்னெடுத்துச் செல்லும் தன்மையுடன் மேற்கிளம்புகின்றன.   இங்கு கதைகள் உரையாடல்களற்று கதைசொல்லியின் விவரணங்களால் மட்டுமே புனைவாக்கம் பெறுகின்றன. மேலும் இக்கதைகள் ஒரு விதத்தில் முடிவடையாததாகத் தோன்றுவதோடு முடிவுகளை வாசகனே எடுத்துக்கொள்ளும் வாசக சுதந்திரத்தைக் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலுமே தமிழவன் காப்பாற்றி இருக்கிறார்

இக்கதைகளுக்குள் மையக் கதாபாத்திரம் என்று யாரும்/எதுவும்  இருப்பதில்லை. மையமான கதைச்சம்பவம் என்றும் எதுவும் இருப்பதில்லை.  இதனால் நவீனத்துவச் சிறுகதைகளுக்குப் பின்னரான ஒரு புதிய கதைப்போக்கின் ஆரம்பமாக தமிழவனின் கதைகள் தோற்றங் கொள்கின்றன. கதைக்குள் ஒரு மையக் கதாபாத்திரத்தை உருவாக்குவது அல்லது கதைசொல்லியே ஒரு மையக் கதாபாத்திரமாக மாறிவிடுவது என்பது கதைக்கு ஒருமுகத்தன்மையை வழங்கிவிடுகிறது. இங்கு மையக் கதாபாத்திரங்களற்ற பின்நவீன நிலைமையானது ஒரு கதையைகதைஎன ஒருமையில் அழைப்பதை விடகதைகள்என பன்மையில் அழைக்கவும் அணுகவும் தூண்டுகிறது. இப்படித்தான் தமிழவனின் இந்தத் தொகுப்புக்குள்ளிருக்கும் ஒரு கதைகதைகளாகவடிவங் கொள்கிறது.

உதாரணமாக, ‘மொழிபெயர்ப்பு நிறுவனம்” எனும் கதையில் மொழிபெயர்ப்புத் துறைப் பொறுப்பாளனா?, 17 வயதுச் சிறுவனா, அல்லது மொழிபெயர்ப்பு பணியகப் பணியாளர்களில் ஒருவரா யார் மையக் கதாபாத்திரம் என்ற கேள்விக்கு வாசகனால் இறுதிவரை விடை காண முடிவதே இல்லை.

“மூவரும் மௌனமானார்கள்” எனும் கதையிலும் இதே அனுபவத்தைத்தான் வாசகன் பெற்றுக் கொள்கிறான். அதனால் இந்த அனுபவம் வாசகனுக்கு தொடர்ச்சியாக தமிழவனின் கதைகளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மையக் கதாபாத்திரம் யார் என்ற கேள்விக்கு விடை இல்லாவிட்டாலும் கதை வாசக இரசனைக்கு மிக நெருக்கமானதாகவுள்ளது.

மொழிபெயர்ப்பு நிறுவனம்“ எனும் கதை டெல்லியை தலைமையகமாகக் கொண்டியங்கும் மொழிபெயர்ப்பு நிறுவனமொன்றுக்குள் தொழிற்படும் நுண்ணிய அதிகாரமானது மொழிபெயர்ப்பு எனும் துறையையே எப்படிச் சீரழித்துவிடுகிறது என்பதைப் பேசுகிறது.

தமிழவனின் சில கதைகள் உலக தளத்தை கதை நிகழ்களமாகக் கொண்டுள்ளன. நீ புரிந்து கொள்வாய் இறுதியாக எனும் கதை போலந்து இந்திய அனுபவங்களோடு விரியும் ஒரு கதையாகும். இரு வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையிலான உரையாடலாகவும் இந்தக் கதையை பார்க்கலாம். ஒரு திரைப்படம் போல் நகரும் இக்கதையில் அடிக்கடி காட்சிகளும் மனிதர்களும் மாறியபடி இருக்கின்றனர். கதை ஒரு மைய சம்பவத்தைச் சுற்றி மட்டுமே சுழல்வதில்லை. அதனால் வாசகன் வேறு திசைகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறான். இந்த அலைக்கழிப்பு வாசகனுக்கு ஒரேநேரத்தில் வெவ்வேறு அனுபவங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.   

இந்தியத் தமிழ்ச் சிறுகதைகளில் மேலோங்கிக்காணப்பட்ட தமிழ்க் கலாசார மரபென்பது இந்து காலாசார மரபாகத்தானிருந்தது. தமிழவனின் கதைகளில் அந்த மரபு மீறப்பட்டுள்ளது. அவரது கதைகளில் கிறிஸ்தவ கலாசாரமும் அதன் மொழிக்கூறுகளும் அதிக கவனிப்புக்குள்ளாகின்றன. தமிழவன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும் அது நேர்ந்திருக்கலாம்.

தமிழவன் கதைகளில் அழுத்தம் பெறும் கிறிஸ்தவக் கலாசாரப் பதிவுகள் அவரது கதைகளில் கவனிக்கத்தக்க ஒரு புதிய பண்பாக மேலெழுகின்றன. இதுவரை கால நமது அநேகமான தமிழ்ச்சிறுகதைகளில் தமிழர் பண்பாடு இந்து மதம் சார்ந்ததாகவும் மற்றும் இஸ்லாமியப் பண்பாடுமே அதிகமும் விபரிப்புக்குள்ளாகி வந்தன. தமிழ் பண்பாட்டின் கட்டடக்கூறான கோயில்கள் மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டின் கட்டடக்கூறான பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் பற்றிய வரலாறுகளையும், அவற்றின் தொன்மங்களையும், விபரணங்களையுமே நமது தமிழ்ச் சிறுகதைகளில் வாசித்து வந்திருக்கிறோம்.  

 தமிழவனின் இக்கதைத் தொகுப்பிலுள்ள கணேசன் மனைவி பறந்து போனாள் கதையில் கிறிஸ்தவ பண்பாட்டு நம்பிக்கையான பலிப்பூசை பற்றிய குறிப்புகளும், சர்ச் ஒன்றின் வரலாற்றுக் குறிப்புகளும் வருகின்றன. எனினும் அந்த சர்ச்சின் வரலாறு போர்த்துக்கீசர் காலம் வரையே செல்கிறது. இந்தியாவில் கிறிஸ்தவம் அந்தளவுக்கே பழைமைவாய்ந்ததாக இருக்கலாம்.

“மெழுகுதிரி எரிவதைப் பார்த்தேன்” ஏறத்தாழ 60 ஆண்டுகள் பழைமையான ஒரு கிறிஸ்தவக் குடும்பம் பற்றிய கதை. மின்சாரமற்று இருண்டு கிடந்த தெருக்களில், வீடுகளில், கடைகளில் வாழ நேரிட்ட மக்கள் பிரிவொன்றின் இருண்ட வாழ்வை மண்வாசனையற்ற ஒரு நேர்கோட்டு மொழியில் பதிவு செய்கிறார் தமிழவன். இப்படி தமிழில் அதிகம் எழுதப்படாத கிறிஸ்தவ வாழ்வை, கிறிஸ்தவப் பெயர்களைச் சூடிய கதாபாத்திரங்களை அதிகமதிகம் சிருஷ்டித்திருக்கிறார் தமிழவன்

தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே சுவாரஸ்யம் குன்றாமல் ஆயினும் வாசகனுக்கு புதிர் போட்டபடி இருக்கின்றன. வாசகன் புதிரை அவிழ்க்கும் தருணத்தில்தான் தமிழவனின் கதையுலகத்துக்குள் முழுமையாகப் பிரவேசிக்கும் பாதையை கண்டடைகிறான். பரபரப்பாக ஆரம்பித்து, பரபரப்பாக நகர்ந்து சென்று பரபரப்புடனேயே கதை முடியும் போது வாசகனையும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்வது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த பரபரப்புடன் மட்டும் நின்று விடும் வாசகனால் மேற்கொண்டு தமிழவனின் கதைகள் நிகழ்த்த விரும்பும் உரையாடல்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தொகுப்பிலுள்ள ”பூதாகரமான மனிதர்”  போலந்து நாட்டில் நிகழும் ஒரு கதை. பல்கலைக்கழக நூலகரான மார்தா மாக்கியோஸ்கியின் வீட்டில் இடம்பெறும் விருந்து நிகழ்வொன்றில் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் நூலகர் மார்தாவின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிகழும் உரையாடல் மூலம் கதை நகர்த்தப்படுகிறது. கதையின் தொடக்கத்திலேயே அது பல்கலாசாரங்களுக்கிடையிலான உரையாடலாக வடிவங்கொள்கிறது. இந்தியக் கலாசாரத்தின் தீண்டாமை எனும் சாதியத்துக்கெதிரான குரல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

“ஒரு மனிதர் இன்னொரு வகை மனிதரை தொடக்கூடாது என்றொரு விதி உள்ளது என்றனர்

என கதையில் வரும் ஒரு வரியே இந்தியப் பண்பாட்டின் நேர்மறையான இயல்பொன்றை மேலைத்தேய மனிதர்களோடு அல்லது கலாசாரத்தோடு பகிர்ந்துகொள்கிறது.

போலந்தின் முந்தைய தலைமுறைக்கும்- புதிய தலைமுறைக்குமிடையிலான இடைவெளியின் நீளத்தை அளவிட்டுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை தமிழவன் இந்தக் கதைக்குள் வாசகனுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார். கதையில் போலந்தின் பழைய தலைமுறையின் குறியீடாக பூதாகரமான மனிதர் வருகிறார். ஓரிடத்தில் பூதாகரமான மனிதர் மௌனமாவது அந்த தலைமுறையின் சிந்தனைகள் நவீன தலைமுறையால் நிராகரிக்கப்பட்டதன் குறியீடாகும். இதன் மூலம் இந்தியப் பண்பாட்டில் இன்னும் தீண்டாமை ஒழியாமல் தலைமுறை தலைமுறையாய் தொடர்வதை மறைமுகமாக தாக்குகிறார். இதுவே இரண்டு கலாசாரங்களுக்கிடையிலான வேறுபாடாக தமிழவன் கருதுகிறார். ஆயினும் இந்தியப் பண்பாட்டில் தீண்டாமை இன்னும் எவ்வளவு தூரம் செல்லும் என்ற கோணத்தில் ஊகங்களைச் செய்வதற்கு வாசகனை கதை தூண்டுவதில்லை.

தொகுதியிலுள்ள கதைகளில் ஒரு தொடர்பறு எழுத்து முறையே பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தை மையப்படுத்தாமல் சிதறலாக ஒரு கதைக்குள் பல கதைகளை நகர்த்துவதற்கு இந்த முறையே மிகவும் அணுக்கமானது. இதனால் தமிழவனின் எந்தவொரு கதைக்கும் கதைச்சுருக்கம் சொல்வது கடினம். ஆனால் அந்தக் கதைகளுக்கான விரிவாக்கங்களைத் தேடி நிச்சயம் நம்மால் பயணிக்க முடியும்.

ஆதவனின் ‘அகதிகள்’

வெ. சுரேஷ்

அண்மையில் என் மகள்கள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு அவரது மருமகள் தனது மூன்று மாதக் குழந்தையுடன் சில நாட்கள் முன்தான் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தார். அவளது கணவர், வேறு ஊரில். மகள்களுக்கு வியப்போடு வருத்தமும், “இவங்க ஏம்ப்பா இங்க இந்த வீட்ல வந்து இருக்காங்க? எப்படி இங்க அவங்க ஹஸ்பண்ட்கூட இல்லாம இங்க இருக்க முடியும்? எங்களுக்கு அவங்களப் பாத்தா பாவமா இருக்குப்பா,” என்று புலம்பித் தீர்த்து விட்டார்கள். “உங்க அம்மாலேர்ந்து அநேக பெண்களுக்கும் இதுதாண்டா நம்ம நாட்டுல வாழ்க்கை,” என்று சொல்வதற்குள், “நானும் அப்படித்தான் இருந்தேன். நாளைக்கு உங்களுக்கும் அப்படித்தான்,” என்று மனைவி பளிச்சென்று கூறினார். உண்மைதானே?

ஆனால், மனைவி நம் வீட்டுக்கு வந்து வாழத்  துவங்கும்போது, இதை அவ்வளவாக நினைக்காத மனம், நாளை என் மகள்களுக்கும் அப்படித்தானே என்று எண்ணும்போது துணுக்குறத்தான் செய்கிறது. இதை அசை போட்டபடி இருந்தபோது, ஆதவனின் ‘அகதிகள்’ எனும் சிறுகதைக்குத் தாவியது மனது.

அதுவும் வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் உருவாக்கும்  மனநிலை பற்றிய கதைதான். இருவேறு பாரம்பரியங்கள், மரபுகள்   பின்னணிகள் கொண்டவர்களிடையேயான உறவுகள் பற்றிய கதை. இரு நண்பர்களுக்கிடையே அகதிகள் குறித்தான உரையாடலில் துவங்குகிறது, பிறகு வன்முறை, மனிதர்கள் திடீரென்று தம் சக மனிதர்களை பகைமையும் குரோதமும் கொண்டு பார்ப்பதையும், வெட்டிக் கொன்று விடுவதையும் குறித்துப் பேச்சு தொடர்கிறது. இந்த வேறுபாடுகள், இதனால் கிளர்ந்தெழும் துவேஷ உணர்வுகள் பற்றியும் பேச்சு வரும்போது, கதை சொல்லியின் நண்பர், தமிழரின் தொன்மையான நாகரிகம், மொழி முதலானவற்றின் மீதான, சிங்களரின் தாழ்வுணர்ச்சியும் பொறாமையுமே அவர்களின் துவேஷ உணர்வுக்கும் இலங்கைப்   பிரச்னைக்கும் மூல காரணமென்கிறார்.

விவாதத்தின் ஒரு கட்டத்தில் கதைசொல்லி, வேண்டிய அளவுக்கு குரோதமும் பகைமை உணர்வுகளும் நம் வீடுகளிலேயே உள்ளது என்று சொல்லி, அன்பல்ல, வெறுப்புதான் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. பொறாமை, துவேஷம் இதெல்லாம்தான் மனிதர்களுக்கு இயல்பாக வருகிறது, இதற்கு நீர் பெரிய விளக்கங்கள் தரத் தேவையில்லை, என்று சொல்லி  விவாதத்தை முடிக்கிறார். பின் வீடு திரும்பும் கதைசொல்லியின் மனதில் தொடரும் எண்ணவோட்டங்களே மீதி கதையாக விரிகிறது.

வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள, அதிகம் பேசாத மனிதர்களை, அச்சு மரபுக்கு உரியவர்கள் என்றும், வாசிப்பில்  அதிகம் நாட்டமில்லாத, ஆனால் பேசுவதிலும், சிந்தனையைவிட செயல் புரிவதில் அதிக நாட்டம் உள்ளவர்களை பேச்சு மரபைச் சார்ந்தவர்களென்றும், மக்கள் மரபு ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இக்கதைசொல்லியின் வீட்டில் உள்ள ஆண்கள் இருவரும் அச்சு மரபுக்காரர்களாக இருக்கிறார்கள், பெண்களில் கதைசொல்லியின் தாயார், நிச்சயமாக பேச்சு மரபுக்காரர்- பஜனை, கதாகாலட்சேபம் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் கொண்ட அவருக்கு பேசப் பிடித்திருக்கிறது. ஆனால், அவர் தன் வீட்டு ஆண்கள், இரு அச்சு மரபுக்காரர்களுக்கிடையில், எப்போதும் அந்நியமாய் உணர்பவர்.

இந்த நிலையில், கதைசொல்லியின் மனைவியாக வருபவர், எந்த மரபென்று எளிதாகப் பிரிக்க முடியாத இயல்புடையவர்- படிக்கப் பிடிக்கும், அதைவிட பேசப் பிடிக்கும். இந்த அச்சு மரபுக்காரர்களின் இறுக்கமும் முசுட்டுத்தனமும் நிறைந்த வீட்டில் மருமகளின் வருகை நிச்சயம் இன்னொரு பேச்சுமரபுக்காரரான அந்தத் தாய்க்கு பலம் சேர்த்திருக்க வேண்டும், அவரை மகிழ்ச்சியடைய வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அது அப்படி நிகழ்வதில்லை. தன்னிலிருந்து வேறுபட்டு இருப்பவரைக் கண்டு மட்டுமா வெறுப்பு முளை  விடுகிறது? தன் மருமகளின் கலகலப்பும் தன் இயல்பில் அவர்  உறுதியாக இருக்கும் நிலையும் இவரிடத்தில் அன்பை அல்ல, ஒரூ பாதுகாப்பின்மையையும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

வாய் திறவாமல் ‘பதவிசாக’ இருக்கும் பக்கத்து வீட்டு மருமகள்களே இப்போது அவரைக் கவர்கிறார்கள். இப்போது அவர் முன்பைவிட அதிகமாக கோவிலுக்குப் போகிறார். தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள, தனக்கு என்று ஒரு கௌரவம் தேடிக் கொள்ள, வாழ்நாளெல்லாம் அச்சு மரபைத் துரத்திக் கொண்டிருந்த அந்தத் தாய் அதற்கு பதில் தன்  மருமகளைப் போல்,  தன் இயல்பிலேயே ஸ்திரமாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறாள். தன்னிடம் உள்ள திறனில் நம்பிக்கையுடன் இருக்கும் மருமகளின் குணத்தைக்  காணும்போது எரிச்சலடைகிறாள். வேறெதையும் துரத்தாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும் ஒரு கோபம், எரிச்சல் வரத்தானே செய்கிறது? பல சமயங்களில் சாத்வீகமும் பொறுமையும்கூட பகைமை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? உணவு, உடை, உறையுள் என்ற இந்த மூன்று அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பால் உள்ள வேறுபாடுகள் அத்தனைக்கும் மனமே காரணமாகிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் தனி எனப் பிரிந்திருக்கும், தனக்குரிய வீட்டுக்கு வெளியே ஆதரவு தேடும், இந்த உலகமே ஒரு பெரும் அகதி முகாம் என்றும் சில சமயம் தோன்றாமலில்லை.

ஆதவன், பேச்சு மரபு, அச்சு மரபு என்று பேசுவது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்வதற்கு அல்ல. தளம் இலக்கியச் சிற்றிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கி. ராஜநாராயணன், எல்லா மொழிகளையும் ஒலிப்பான்கள் (phonetic script) கொண்டு எழுதும்போது அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது, என்கிறார். ஒலிகளுக்கு இடையே பிரிவினையில்லை என்பதால் ஒலிப்பான்களை பொது எழுத்துருக்களாக பரிந்துரைக்கவும் செய்கிறார். மொழியைச் செவிப்பதற்கும் கண் கொண்டு காண்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கி.ரா. மிக நுட்பமாக உணர்ந்திருக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும். பேச்சு மரபு, நேரடியானது, ஊடகமற்றது- unmediated என்று சொல்லப்படுகிறது. அச்சு மரபில் ஒலியின் தூல வடிவம் ஒரு ஊடகமாய் குறுக்கிடுகிறது. பேச்சு மரபைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத வகையில் அச்சு மரபில் உள்ளவர்களுக்கு மொழி ஒரு கருவியாகிறது. மனம் மொழியடுக்குகளின் வழி தன்னைத் தொகுத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதால் அச்சு மரபினரின் மனம் மொழியால் அமையும் கருத்துகளின் கருவி நிலையில் இயங்கவும் செய்கிறது. ‘அகதி’ கதையின் துயரம், பேச்சு மரபுக்கு உரியவளாக இருந்தாலும் கதைசொல்லியின் தாய், தன் மருமகள் அச்சு மரபுக்கு உரியவராய் இருப்பதாலேயே அவரிடமிருந்து விலகிப் போகிறார்.

சிறு வயதில் தான் கண்ட பாகிஸ்தானிய அகதிகளைப் பற்றிய நினைவுகளில் துவங்கும் சிறுகதை, பின்னர் ஈழத் தமிழ் அகதிகளின் நிலை குறித்த எண்ணங்கள் என்று சென்று இன்னும் நெருக்கமாக கதைசொல்லி தன் வீட்டில் உள்ள நிலையை அகதிகளின் நிலையுடன் ஒப்பிடுவதில் முடிகிறது. தனி மனித சக்திகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு துயரத்தின் முன் நாம் என்னதான் செய்ய முடியும்? புறச் சூழல் பற்றி கோபப்படலாம், கவலைப்படலாம், தீர்வுகளைத் தேடலாம். ஆனால் நாம் செய்யக்கூடியது என்னவோ, முதலில் நம்முடன் இருப்பவர்களின் துயரை உணர்வதுதான்.

I saw the first refugees…. But even then I did not suspect when I looked at these fugitives that I ought to perceive in their pale faces, as in a mirror, my own life and that we all,  we all would become victims of the lust for power of this one man“, என்று எழுதுகிறார் Stephen Zweig, நாஜிக்காலத்தின் துவக்க அகதிகளைத் தான் எதிர்கொண்டது குறித்து, பல ஆண்டுகள் கழித்து. ஆதவன் பேரழிவு என்று சொல்லத்தக்க துயரங்கள் இல்லாத சாதாரண மத்திய வர்க்க வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அவராலும், தில்லி அகதிகளைப் பார்க்கும்போது, ஈழத்தமிழர்களின் நிலையை நினைக்கும்போது, அவர்களின் வெளிறிய முகங்களில் ஒரு கண்ணாடி போல் நம் வாழ்வைப் பார்க்க முடிகிறது. புத்திசாலித்தனத்தையும் கடந்த இந்தப் புரிந்துணர்வுதான் ஆதவனைத் தனித்து காட்டுகிறது.