விமரிசனம்

அ முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைமுறை சிக்கல்கள் – பாஸ்கர் லக்ஷ்மன்

பாஸ்கர் லக்ஷ்மன்

நான் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த புதிதில், கென் என்ற ஒரு மிக நல்ல மனிதருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடமிருந்து அமெரிக்க வாழ்க்கை முறைகள் குறித்து பல விஷயங்கள் கற்றறிந்தேன். அவருடைய தந்தை வழிவந்தவர்கள் இத்தாலியையும், தாய் வழிவந்தவர்கள்  போலந்தையும் சேர்ந்தவர்கள். அவருடைய பெற்றோர்களுக்கு ஓரளவு இத்தாலி மற்றும் போலந்துடன் தொடர்பு இருந்தது எனவும், தானும் தன் மகளும் முழுமையான அமெரிக்கர்கள் எனவும் சொன்னார். அதிகபட்சம் புலம்பெயர்ந்த மூன்றாம் தலைமுறையினர்கள் அமெரிக்க கலாசாரத்துடன் ஒன்றி வாழப் பழகிக்கொள்கிறார்கள்  இன வேற்றுமை உணர்வுச் சிக்கல்களைப் பற்றி விவாதித்தபோது “இன்று கடுமையானச் சட்டஙகள் உள்ளன. எல்லா இனத்தவரும் வெளித் தோற்றத்தில் ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மனதளவில் வித்தியாசப்படுத்துதல், பாரபட்சம் பாராட்டுதல், உயர்வு மனப்பான்மை மற்றும் தாழ்வு மனப்பான்மை மறைந்ததாகக் கூற முடியாது. விரைவில் மறையும் வாய்ப்பு குறைவுதான்” என்று கென் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாகத்தான் இருக்கிறது.

. அ.முத்துலிங்கத்தின் “அமெரிக்கக்காரி” படித்தவுடன் நினைவில் வந்தது கென்னுடன் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த உரையாடல்தான். புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர்கள் கடந்து செல்லும் அனைத்தையும் மதியின் வாழ்க்கையில் காண முடிகிறது. பிரச்சினைகளின் தொடக்கம் ஆங்கில மொழி உச்சரிப்பு மற்றும் ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு வார்த்தைகளின் பயன்பாடு. புலம்பெயரும் ஊரைப் பொறுத்து எதிரெதிர் துருவத்தில் அமையும் சீதோஷ்ண நிலைக்கு சரிசெய்து கொள்வதும் கடினமானது. சிறு வயதில் அறிந்தும் அறியாமலும் மனதில் ஆழப் பதிந்துவிட்ட சில எண்ணங்களை விடவும் முடியாமல் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவும் முடியாமல் ஒருவித குழப்பமான சூழலுடன்தான் முதல் சில துவக்க ஆண்டுகள் செல்லும். மேலும் புதிய கலாச்சாரத்தின் சில நல்ல கூறுகளைக் கடைபிடிப்பதிலும் மனச் சிக்கல்கள் தோன்றுவதைக் காண முடியும். இந்தியாவில் எப்படி கிரிக்கெட் குறித்து  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் விவாதிப்போமே அதே போன்று பேஸ்பால், பேஸ்கட்பால், அமெரிக்க ஃபுட்பால் பற்றிய விவாதங்கள் நடக்கும். முழுவதும் பங்கு பெற முடியாவிட்டாலும், விவாதத்தைப் புரிந்து கொள்ளவாவது  நாம் அந்த விளையாட்டுகளைக் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. என் மகன் பள்ளியில் படிக்கும்போது, காலை அவசரத்திலும் இணையத்தில் விளையாட்டு முடிவுகள், அது சம்பந்தமான கட்டுரைகள் படித்து விட்டுத் தான் கிளம்புவான். அவன் வயதொத்த மாணவர்களிடையேயான அழுத்தமே இதற்கு காரணம். இந்த விஷயத்தில் மதியின் அறியாமையை அ. முத்துலிங்கம் அழகாக சித்தரித்திருக்கிறார்.

அமெரிக்கக்காரியின் கதைக்களம் 90-களின் இறுதியில் அமெரிக்காவில் நடந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருபது ஆண்டுகளில் இன வேற்றுமைச் சிக்கல்கள் அதிகமாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது. என்னுடன் பணிபுரியும் சக அமெரிக்கர் பதினைந்து வயதான தன் பெண்ணிற்கு இன்னும் ஒர் ஆண் நண்பர் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டார். ஆனால் இலங்கையில் வளர்ந்த மதி பதினெழு ஆண்டுகள் தரை பார்த்து நடந்திருக்கிறாள். இந்த கலாச்சார வேறுபாட்டின் விளைவே, மதியால் தன் காதலர்களைத் தக்க வைத்துக் கொள்வதிலோ அல்லது காதலர்களைத் தேர்வு செய்வதிலோ வெற்றி காணாமல் இருந்ததற்கான காரணம் எனலாம். தன்னைத் தேடி வந்த மூன்று ஆண்களுக்கும் உறவின் ஆரம்பமாக இருந்தது, மதிக்கு உறவின் முடிவானது. இந்த நாட்டில் குழந்தைகளுடன் கூட தொடர்ந்து உரையாடவும், அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. தனி மனித சுதந்திரத்துக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே இங்கு மதிப்பளிக்கப்படுவதால், அவர்கள் சுதந்திரமாய் முடிவெடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், எதையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் மதி பெரியவர்களின் சொல்படியும், கட்டளைகளுக்கு அடிபணிந்தும் வாழ வேண்டும் என வளர்க்கப்பட்டவள். புலம் பெயர்ந்தவுடன் சொந்தமாக முடிவுகளை எடுத்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவதில் சங்கடங்களை எதிர் கொள்கிறாள். முதல் காதலன் தன் அறைக்கு அழைத்தவுடன், அவனுடன் உரையாடி அவனைப் புரிந்து கொள்ளவோ அல்லது தன் தரப்பை விளக்கவோ மதி முயலவில்லை. தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்திய மூன்றாவது காதலனுடனாவது இரண்டு மணி நேர கார் பயணத்தில் தன் மனநிலையை விளக்கியிருக்கலாம். இந்த உரையாடல்கள் மூலம் அமெரிக்க வாழ்வின் யதார்த்தாங்களை ஓரளவுக்காவது புரிந்து கொண்டிருக்கலாம்.

மதி புலம் பெயர இலங்கையின் உள் நாட்டுப் போரும் ஒரு காரணி. தன் தாயைத் தவிர வேறு உறவும் இல்லை. இலங்கையிலிருந்து அமெரிக்கா வந்து அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே நபர். இத்தனைச் சிக்கல்களிருந்தும் விடுபட்டு தெளிவு பெற மூன்று ஆண்டுகள் மதிக்குத் தேவைப்படுகிறது. மதிக்கு வியட்நாமைச்  சேர்ந்த லாங்ஹன் பிடித்ததற்கு காரணம், அவன் தன்னை படுக்கை அறைக்கு அழைக்காததா அல்லது தனிமையும், சிறிது முதிர்ச்சியும் கொடுத்த புரிதலா? வேறு காரணங்களும் இருக்கலாம். திருமணத்திற்கு பின்பான லாங்ஹன்னின் அன்பும், அரவணைப்பும் மதிக்குத் தன் இலட்சியத்தை அடைய உதவுகிறது.  நான்கு ஆண்டுகளாக குழந்தை பிறக்காததற்கு தான் மட்டுமே காரணம் என்பதால், தன்னைப் பிரிந்து செல்லலாம் என லாங்ஹன் சொல்வதை மதி நிராகரிப்பது கதையில் ஓர் அருமையான தருணம். பொதுவாக அமெரிக்கர்களிடையே திருமண பந்த்ததின் பிணைப்பு மிகவும் மெலிதானது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் என் எண்ணமும் இதையொட்டித் தான் இருந்தது. ஆனால் இருபந்தைத்து வருடத்திற்கு மேல் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக தொடரும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

தன்னால் முடியவில்லை என்றாலும் வியட்நாமியுடன் சேர்ந்து வாழும் இலங்கைக்காரியான தனக்கு ஆப்பிரிக்க இனத்தவரின் விந்தீடு மூலம் பிறக்கும் பெண் குழந்தை கலாச்சார சிக்கல்கள் எதிர்கொள்ளாமல் சுதந்திரமாக வாழும் என்பதே மதிக்கு பெரியளவில் நிம்மதியைக் கொடுக்கிறது.

இலக்கியம் பற்றிப் பேசும்போது நாம் பொதுமைப்படுத்திப் பேசுவது இயல்பு. ஆனால், மதி புலம்பெயர்ந்தவர்களின் மனநிலையை வெளிப்படுத்தினாலும் அவள் அவர்களின் பிரதிநிதியல்ல. இனத்தேசீயவாதம் காரணமாக போர் நிகழ்ந்த இலங்கைச் சூழலில் மதியின் தேர்வுகள் கவனிக்கத்தக்கவை. அவள் வியட்நாமியனைக் காதலித்து மணம் புரிந்து, ஆப்பிரிக்கரின் விந்தணுவை ஏற்று பிள்ளை பெற்றுக் கொள்கிறாள். எத்தனை தமிழர்கள் இப்படிச் செய்வார்கள்? தன் பின்னணியையும் தன் தாயகத்தையும் பார்த்து தன் பெண்ணைப் பார்க்கும்போது மதியின் மனநிலை என்னவாக இருக்கும்?

மதி அமெரிக்கக்காரியோ இல்லையோ, அவளை ஒரு தனித்துவம் கொண்ட மனுஷியாகப் படைத்திருப்பதில் அ. முத்துலிங்கம் வெற்றி பெறுகிறார். அதுவே இதை ஒரு உயர்ந்த படைப்பாகவும் ஆக்குகிறது.

oOo

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை

போகப் புத்தகம்

வெ. சுரேஷ்

   

கோவை தியாகு நூல் நிலையத்தில் நடக்கும் எங்கள் வழக்கமான வார இறுதிச் சந்திப்பின்போது, தமிழின் இன்றைய பிரபல எழுத்தாளர் குறித்த ஒரு பேச்சில் நண்பர் ஒன்று சொன்னார். அந்த எழுத்தாளர் தன் வாழ்க்கை அனுபவங்கள் என்று குறிப்பிடும் சம்பவங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், அவருக்கு குறைந்தபட்சம் இரு நூறு வயதாவது இருக்க வேண்டும் என்றார் அவர். நான் வேறொரு பிரபல எழுத்தாளரின் பெயரைச் சொல்லி அவருக்கும் இது பொருந்துமே, என்றேன். மற்ற நண்பர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால், பின்னர் அந்த அரட்டை மனநிலையிலிருந்து விடுபட்டு சற்றே நிதானமாக அதைப் பற்றி யோசித்துப் பார்த்தபோது, அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது புரிந்தது. வெவ்வேறு வாழ்க்கைகளை தன் வாழ்வாகக் காணச் செய்வதில்தான் எழுத்தாளன் வெற்றி பெறுகிறான். புனைவிலோ, அல்லது கட்டுரையிலோகூட இடம் பெறும் அனுபவங்கள் எல்லாமே எழுதியவனுக்குரியதாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லைதான். எழுத்தாளன் ஒரு அனுபவத்தை விவரிக்கும்போது, அங்கு நேரடி அனுபவம் பேசுகிறது, ஒரு வகையில் அந்த அனுபவம் அவனுடையதுதான் என்று வாசகனை நம்ப வைப்பதில்தான் புனைவுக்கலையின் வெற்றி இருக்கிறது (அந்த அனுபவங்களில் பிறர் ஏற்கும் பாத்திரங்கள் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து அதன் நம்பகத்தன்மை குறித்த கருத்து வேறுபாடு எழலாம்). யாருக்கோ, எங்கோ, எப்போதோ நிகழ்ந்ததை, தன்னுடையதாக மாற்றி, அதை வாசிக்கும் ஒருவரை, அவருடையதாக உணர வைப்பதே புனைவெழுத்தாளனின் வெற்றி..

முதலில் கேட்ட கேள்விதான் – இத்தனை அனுபவங்களை எழுதுகிறாரே, இதெல்லாம் உண்மையாக இருந்தால் இவருக்கு எத்தனை வயதிருக்கும்?- இப்போது போகன் சங்கர் எழுதி வெளிவந்திருக்கும், அல்லது அவர் முகநூல் மற்றும் தனது வலைத்தளத்தில் என்று முன்னரே எழுதியவற்றை தொகுத்து வெளிவந்திருக்கும், ‘போகப் புத்தகம்‘ நூலை வாசிக்கும்போது மனதில் தோன்றுகிறது. அதற்கான அதே பதிலையும் தொடர்ந்து சொல்லிக் கொள்ள வேண்டியதாகிறது – எழுத்தில் காணப்படும் ‘நான்’, எழுதியவனின் ‘நான்’ இரண்டும் வெவ்வேறு; இவற்றை ஒன்றாய்க் காணும் தோற்றப்பிழை, வாசிப்பின்பத்தை முன்னிட்டு வாசகன் எழுத்தாளனுக்கு அளிக்கும் குறைந்தபட்ச சலுகை.

பின்னர் வரும் கேள்விகள்- இது என்ன மாதிரியான நூல்? சிறுகதைத் தொகுப்பா? அல்லது அனுபவக் குறிப்புகளா? போகனே தன்னிடமும் அதற்கு விடை இல்லை, என்று முன்னுரையில் குறிப்பிட்டு விடுகிறார். புனைவம்சம் மேலோங்கியிருக்கும் அனுபவங்கள், அல்லது அச்சு அசல் அனுபவங்கள் போல் தோன்றும் புனைகதைகள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம், ஒரு வசதிக்காக.

எப்படியாயினும், அவரது சிறுகதைத் தொகுப்பான ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படும் அதே அனுபவத்தை, வெவ்வேறு அளவில், இந்த நூலும் தருகிறது என்பதில் ஐயமில்லை. இதில் மொத்தம் 106 கதைகள்/ குறிப்புகள் உள்ளன. அனைத்துமே அவருக்கும் நமக்கும் நன்கு அறிமுகமான கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையில், அதிகபட்சம் திருநெல்வேலி அல்லது மதுரை வரை நடைபெறும் கதைகள். அவற்றில் நிச்சயம் பாதிக்குப் பாதி, நம்முள் உடனடியாக ஒரு பாதிப்பை உண்டாக்குகின்றன.

இந்தக் கதைகளை தோராயமாக ஒரு நான்கு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம்- 1.காதல், காதல் தோல்வி, முறை மீறிய உறவுகளால் வரும் சிக்கல்கள். 2. யதார்த்த வாழ்வின் மிக அருகிலேயே அல்லது அதன் இணையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும், யதார்த்தத்தை மீறிய அமானுஷ்ய அனுபவங்களால் நிரம்பிய வாழ்க்கை; ஜோதிடம், ஆவிகள், மத நம்பிக்கைகளின் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை பற்றியது. 3. வாழ்வின் மிகக் கொடுமையான சூழலிலும் அடியோடு நைந்து கிடக்கும் நிலையிலும் எல்லா வகையிலும் கைவிடப்பட்டவர்களும்கூட, தங்களைப் போன்ற பிற மனிதர்கள் அல்லது தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்த கதைகள் 4. நோய்வாய்ப்பட்ட நிலை உருவாக்கக்கூடிய தீவிர மற்றும் நகைச்சுவை கலந்த அனுபவங்கள். இவைகூடவே காரணமே இன்றி அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய அபத்தங்கள் நிறைந்த நிகழ்வுகள். சில கதைகளை மேலே சொன்ன எல்லாம் கலந்தது என்றும் சொல்ல முடியும்.

இந்தக் கதைகளில் பெரும்பாலானவை நம்மைத் தொடுவதற்கும் நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பவை, போகனின் நடை, கூரிய அங்கதம், ஒரு கசந்த நகைச்சுவை உணர்வு (Wry Humour) பல சமயங்களில், ஜெயமோகனும் சுஜாதாவும் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க இயலவில்லை.

‘பொருட்காட்சி’, ‘அசல் ராஜா’, ‘குரூரம்’, ‘சந்திர பிரபை’, ‘அமரன்’, ‘நெருப்பு’, ‘அப்பாக்களின் நாட்கள்’, ‘நீல வெளிச்சம்’, ‘பண்டிகை’, போன்ற கதைகள் உருவாக்கும் பெரும் அழுத்தத்தை உடனடியாக சமனப்படுத்தும், ‘இலக்கியக் கூட்டம்’, ‘comically yours’, ‘ஒரு கர்நாடக இசையும் தமிழ் மனமும்’, ‘வசிய மை’, ‘ஆன்லைன் ஷாப்பிங்’, ‘இரண்டு டாக்டர்கள்‘, ஆகிய நகைச்சுவை கதைகள் என்று கலந்து கட்டி சுவாரசியமான ஒரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்தப் புத்தகம்.

தமிழ்ப் புத்தகங்களுக்கான பின்னட்டை blurbகள் பல சமயங்களில் புத்தகத்தை பற்றிய மிகை மதிப்பீடுகளாகவும், அதைவிட சிக்கலானவையாகவுமே அமைந்து வரும் இந்த காலகட்டத்தில், இந்த புத்தகத்தின் blurb மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளதை சொல்லியே ஆகவேண்டும்.

ஒரு முறை சுஜாதா தமிழ்வாணன் பற்றி எழுதும்போது ஒரே சமயத்தில் வள்ளலாராகவும் ப்ரூஸ் லீயாகவும் தோன்றியவர் என்று குறிப்பிட்டார். அது போல போகனைப் பற்றி அல்லது இந்த நூலில் வரும் “நான்” பற்றிச் சொன்னால், ஒரே சமயம் தேவதாஸ் ஆகவும் கோகுலத்துக் கிருஷ்ணாகவும் தோற்றம் அளிக்கிறார் எனலாம். அவ்வப்போது எம்ஜியார்கூட (மிகப் பெரும்பாலும் பெண்களே இவரை நாடுகிறார்கள். இவர் அவர்களை அல்ல). இவை, என்னடா ஒரேயடியாக அலட்டிக் கொள்கிறாரே என்று தோன்றாமலிருப்பதற்கு முக்கிய காரணம், போகனிடம் உள்ள சுய எள்ளல். என்றாலும், இந்த இரு எல்லைகளின் வசீகரம் அவரது இந்தக் கதைகளுக்கு அலுப்புத் தட்டாத ஒரு சுவாரசியத்தை அளிப்பது உண்மைதான்.

‘லைட் ரீடிங்’ என்று வகைமைப்படுத்தக்கூடிய இத்தொகுப்பில் போகன் கணிசமான இடங்களில் வெறும் சுவாரசியத்தைத் தாண்டி ஆழங்களைத் தொடவும் செய்கிறார்தான். ஆனால் பின்னது அதிகம் அமையும் படைப்புகளை நோக்கி அவர் முன்னேறுவதை முன்னது தடுத்து விடக்கூடாதே என்ற கவலை இந்தப் புத்தகத்தை முடிக்கும்போது தோன்றாமலில்லை.இதுகூட அவரது வெற்றிதான் என்று சொல்லலாமா?

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – உடன்பிறந்த அடையாளங்கள்- மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘, அமெரிக்காவில் குடியேறத் துடிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணின் கதை.

புலம்பெயர்தலை இரண்டு வகையாகப் பார்க்கலாம். முதல் வகை பணி நிமித்தமாக அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு. இரண்டாம் வகை உயிர் பிழைக்க வழி தேடி எந்த சுகங்களையும் கண்டிராது, உயிர் வாழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு. இந்தக் கதையை என்னால் அந்த இரண்டு கோணங்களிலும் பார்க்க முடிகிறது.

முதல் வகையின் புரிதல் முதலிலும் இரண்டாம் வகையின் புரிதல் இரண்டாவதுமாக.

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.

முதல் காதலன் ஒரு நாள் இரவு தன்னுடன் வந்து தங்கும்படி சொல்ல, அவள் மறுக்கிறாள். விலகிச் செல்கிறான். இரண்டாம் காதலனுக்கும் அதே காரணம் தேவைப்படுகிறது அவளைப் பிரிய. மூன்றாமானவனுக்கும் அதே நிலைதான். அதற்கான காரணத்தை ஆசிரியரே சொல்லிவிடுகிறார்.

இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள்

ஆனால் அவளுக்கோ தான் எப்படியாவது ஒரு அமெரிக்கக்காரியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆழ் மனதில் பதிந்து கிடக்கிறது. சிறுவயது முதல். தன் தாய் எத்தனை விளக்கம் கூறியும் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றம் அடைகிறாள்.

இடையே தான் ஒரு அமெரிக்கக்காரி இல்லை இலங்கைக்காரி என்று விரக்தியோடு சொன்னாலும் (நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான்), இறுதியில் உண்மையான அமெரிக்கக்காரி யார் என்பதை தன் வயிற்றிலிருக்கும் குழந்தை மூலம் அறிகிறாள், அது வியட்நாமிய ஆணும், இலங்கைப் பெண்ணும், ஆப்ரிக்க உயிரணுவுமாக இருந்தாலும்கூட. அந்த மகிழ்ச்சியில் தன் தாய்க்கு ஒரு கடிதமும் எழுதுகிறாள். “எனக்கு ஒரு அமெரிக்க குழந்தை பிறந்திருக்கிறது” என்று ஒற்றை வரியில், அது ஆணா பெண்ணா என்பதைக்கூடச் சொல்லாமல். அவளைப் பொறுத்தமட்டில் அது ஒரு அமெரிக்கக்காரி. அவ்வளவுதான். அதுதான் அவள் விரும்பியதும்.

பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.

கதை இறுதியில் ஆசிரியர் சொல்வது போலவே அந்தக் குழந்தை இருக்கும். ஏனென்றால் அது “அமெரிக்கக்காரி“. அதுதானே அவளுக்கும் வேண்டும்.

கலாச்சாரம் என்பது “jet lag” ஐ போல் சில நாட்களில் சரியாவதும், கைகடிகாரத்திலுள்ள முள்ளை மாற்றி வைப்பது போலவும், செல்லும் இடத்திலுள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடையை மாற்றிக் கொள்வது போலவும் அல்ல. அது நம் உடன் பிறந்தது. சாகும்வரை நம் அடையாளமாய் நம் உடன் வந்து கொண்டேதான் இருக்கும், sweetcandy என்றாலும், liftelevator ஆக்கினாலும். அவள் பிறப்பால் ஒரு இலங்கைக்காரி. இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் அவள் அவ்வாறே அறியப் படுவாள். அதை அவளால் அழிக்க முடியாது. அதுதான் சரியும் கூட.

ஊரில் நான் வெள்ளைக்காரத் துரையாக இருக்கலாம். ஆனால் இந்த பெல்ஜிய நாட்டில் நான் ஒரு இந்தியன். தமிழன். அது போலத்தான் அமெரிக்காவில் இருந்தாலும் அவள் இலங்கைக்காரிதான். நான் இங்கு வந்து ஜலதோசத்தின்போது மூக்கை உறிஞ்சுவதற்குப் பதில் சிந்தினாலும், தோழிகளைப் பார்க்கையில் கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்து வரவேற்றாலும், நண்பன் தோளில் கை போட்டு நடப்பதைத் தவிர்த்தாலும், பிறந்து ஒரு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையைத் தனி அறையில் படுக்க வைத்துவிட்டு மனைவியுடன் மற்றொரு அறையில் படுத்துறங்கினாலும், பள்ளி செல்லும் சிறுமி தன் உடன் பயிலும் சிறுவனிடம் நடு விரலை உயர்த்திக் காண்பிப்பதைக் கண்டும் காணாமல் சென்றாலும் நான் இந்தியன்தான். ஒருபோதும் பெல்ஜியன் ஆக முடியாது. அதுதானே எதார்த்தமும் கூட?

மதி மேற்கத்திய கலாச்சாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். மாற்றிக்கொள்ள முடிந்தும் ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது. அது அவள் வளர்ந்த விதம், வளர்ந்த சூழல் ஆக இருக்கலாம். ஆனால் தன்னுள் கனலாக எரிந்து கொண்டிருக்கும் “அமெரிக்கக்காரி” ஆசை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாறச் செய்கிறது. என்னதான் மாறினாலும் அவளால் “அந்த” மாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கலாச்சார மாற்றத்தை முதல் முறையாகக் கடந்து செல்லும் பெண் (தலைமுறை) என்பதால்.

அதற்காக அவளுக்குக் கிடைக்கும் பரிசு, முதல் மூன்று காதலர்களை இழக்கிறாள். இறுதியாக அவள் தேர்ந்தெடுப்பது ஒரு “வியட்நாமிய” ஆண். ஏன்? அவளே சொல்கிறாள். “ஏய் இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணம் முடித்தாய்?” என்று அவன் கேட்பதற்கு அவள் அளிக்கும் பதில் “பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.” ‘துரத்தப்பட்டவள் துரத்தப்பட்டவனை முடிப்பாள்’ என்றும் முடித்திருக்கலாம். அவளின் எண்ணம் சரியாகத்தான் இருக்கிறது. லான் ஹாங்குக்கும் அதே எண்ணம் இருந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

மூன்று வயது சிறுவனை கட்டி வைத்தாலே சிசுவதை என்று கைது செய்யும் நாடு அமெரிக்கா. ஆனால் எப்போதும் போர், உயிருக்கு உத்திரவாதமில்லை, உடன் பிறந்த சகோதரர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள், மிஞ்சி இருக்கும் அம்மாவின் உயிரும் ஒவ்வொரு முறை கடிதம் எழுதும் போதும் “செத்து விடாதே” என்று சொல்லும் அளவுக்குத்தான். இப்பேற்பட்ட சூழலில் அவள் மனமுடைந்து போகாமல் அமைதியான சூழலில் வாழ நினைக்கிறாள். தன் அம்மாவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள். அமெரிக்கக்காரியாக முயற்சி செய்கிறாள்.

இந்த “அமெரிக்கக்காரி” மோகம் மதிக்குத் தானாக வந்ததாகத் தோன்றவில்லை. அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தோன்றியதாக இருக்க வேண்டும், அம்மாவின் எண்ணமாக. தான் என்ன துன்பங்களை அனுபவித்தாலும் தன் மகளும் அவள் சந்ததியினரும் எங்காவது நல்ல சூழலில் அமைதியாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மூலமாக.

இறுதியாக மதி பெண் குழந்தை பிறந்ததும் மிகுந்த சந்தோசத்தில் அம்மாவிடம் இவ்வாறு சொல்கிறாள், இவள் முழு அமெரிக்கக்காரி. உன்னையும் என்னையும் போல் குறுகிய வட்டத்திற்குள் போர் சூழலில் சிக்கித் தவிக்காமல், அமைதியான வாழ்க்கையை, உலக அறிவுடன், எதை எப்படி கையாள வேண்டும் என்ற அறிவோடு சுதந்திரமாக வாழ்வாள், என்று. இந்த “அமெரிக்கக்காரி” ஆசை என்பது மதியின் அம்மாவிடம் தோன்ற, மதி பாதி அமெரிக்கக்காரி ஆகிறாள். பின் இறுதியாக தன் மகளை முழு அமெரிக்கக்காரி ஆக்கி மகிழ்ச்சி கொள்கிறாள்.

oOO

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்- ஸ்ரீதர் நாராயணன்

ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள்

வெ. சுரேஷ்

orr-10085_interview_0000

கடந்த ஆறு ஆண்டுகளாக, அநேகமாக நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவையே எழுதி வந்திருந்த நிலையில் (சில பொது கட்டுரைகளும் உண்டு), திடீரென்று ஒருநாள், ஒரு ஆசிரியரை எடுத்துக் கொண்டு, பதிமூன்று வாரங்கள் அவர் எழுதிய ஒரு சிறுகதை குறித்து ஒவ்வொரு வாரமும் எழுத முடியுமா என்று கேட்டார் நண்பர் நட்பாஸ். அப்படி எழுதி பழக்கமில்லை என்பதால் முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. பிறகு, எழுதி விடலாம் என்று முடிவு செய்தபின் எந்த எழுத்தாளருடைய கதைகள் என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. உடனடியாக எனக்கு ஆதவனின் சிறுகதைகள்தான் என்று தோன்றிவிட்டது.

வேறு எந்த எழுத்தாளருடைய எழுத்துக்களைவிடவும், என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்ந்தவை ஆதவனின் எழுத்துக்கள்தான். என் சஞ்சலங்கள், சந்தேகங்கள், ஊகங்கள், கேள்விகள், முடிவுகள் அனைத்தையும் ஆதவனின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு அளவில் கொண்டிருந்தார்கள். தன்னைப் பற்றி ஆதவன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார்- “ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சென்று விட்டால் என்றால், யாரைத் திட்டுவது என்பதில் பலருக்கு சந்தேகமேயில்லை. ஆனால், எனக்கு அப்படியில்லை” .இந்த மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதே போல, அறிவுப்பூர்வமான விவாதங்களும் தர்க்கப்பூர்வமான பார்வைகளும் எந்த அளவுக்கு தன்னைக் கவர்கிறதோ அதே அளவுக்கு உணர்வுச் சுழிப்புகளும், எளிதில் வரையறுத்துவிட முடியாத நியாயங்கள் பற்றிய தடுமாற்றங்களும் தனக்கு உண்டு என்கிறார் ஆதவன். அது எனக்கும் அப்படித்தான்.

அடுத்த கவலை எந்தெந்தக் கதைகள் என்பது பற்றி. என்னிடமே ஆதவனின் 5 சிறுகதைத் தொகுப்புகள் இருந்தாலும், கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும், ஆர்.வெங்கடேஷ் அவர்கள் தொகுத்த ‘ஆதவன் சிறுகதைகள்,’ புத்தகத்திலிருந்தே கதைகளை தெரிவு செய்தேன், ஒரே புரட்டலில் அத்தனையையும் பார்க்கும் ஒரு சௌகரியத்துக்காக. மேலும், அதில் உள்ள ஆர். வெங்கடேஷ் அவர்களின் முன்னுரையும் முக்கியமான ஒன்று.

கதைகளைப் பொறுத்தவரை ஒரு பாதகமான விஷயம், ஆதவனின் கதைகளில் மிகச் சிலவற்றைத் தவிர பிற கதைகள் வலையேற்றப்படவில்லை என்பதுவே. அதனால் நான் தேர்ந்தெடுத்த கதைகளைப் புத்தகங்களன்றி வேறு எங்கும் படிக்க முடியாது என்பது ஒரு இழப்புதான். இருந்தாலும், இவற்றைப் படிப்பவர்கள், புத்தகங்களை வாங்க இது ஒரு கிரியா ஊக்கியாக இருக்கட்டுமே என்ற ஒரு நப்பாசையும் இருந்தது. ஆனால், கிழக்கு வெளியிட்டிருக்கும் தொகுப்பில் 60 கதைகள் இருந்தாலும், “இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பில் உள்ள கதைகள், விடுபட்டுள்ளன என்பதையும் இப்போதுதான் கண்டுபிடித்தேன் இதில் ஒரு முக்கியமான விடுபடல் , “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் ” கதை. ஆதவனின் சிறந்த கதைகளில் ஒன்று அது..

அவரது சிறுகதைகளில் மிகப் பிரபலமானவை என்றால் நானறிந்து, ‘முதலில் இரவு வரும்’, மற்றும் ‘ஓர் பழைய கிழவரும் புதிய உலகமும்’ தான். ஆகவே இந்த இரண்டு கதைகளை சேர்க்கவில்லை. எழுத்தாளர்களை பற்றியது என்பதால் முதல் கதையாக, புதுமைப்பித்தனின் துரோகம் சிறுகதையை தேர்ந்தெடுத்தேன். அதற்குப்பின் தானாகவே ஓரு வரிசை உருவாகி வந்துவிட்டது.

பொதுவாக ஆதவனின் எழுத்துக்களை நகர்ப்புற எழுத்து என்று வகைப்படுத்தல் தமிழக விமர்சகர்களிடம். உண்டு. இந்த ஒரு சொற்றொடர், அவரது விரிந்த படைப்புலகத்துக்கு நியாயம் செய்வதது அல்ல. அதிகமும் நகரத்து, பெருநகரத்து மனிதர்கள் குறித்தே எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், அதில் அவர் எடுத்துக் கொண்ட பிரச்னைகள் பலதரப்பட்டவை. 70களின் மிக முக்கிய பிரச்சனைகளான வேலையில்லாத் திண்டாட்டம், அடையாளச் சிக்கல்,தனி யார் நிறுவனங்களின் வளர்ச்சி அவ்வளவாக இல்லாத சோஷலிச யுகத்தின் உச்ச காலகட்டத்தின் அரசு வேலைகள் தரும் அலுப்பு, பெண்கள் குறித்த குறுகுறுப்பு, காதலின் ஆர்வம், காதல் திருமணத்தில் முடிவதின் நிறைவின்மை, மணவாழ்க்கையின் விரிசல்கள், பொதுவாகவே வாழ்வின் மீதான அதிருப்தி, நண்பர்களிடையேயான பரஸ்பர போட்டி பொறாமை, இன்னொருவரிடம் அனுசரித்துப் போக முடியாத குணங்கள், தனி மனிதன் தன் மிக நெருங்கிய மனிதர்களிடையேகூட வேடங்கள் புனைய வேண்டிய அவசியம் ஏற்படுத்தும் தருணங்கள், பெண்களின் பிரத்தியேகப் பிரச்சைனைகளை பரிவுடன் அணுகும் கதைகள், என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு அம்சத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு கதைகளாவது தேர்ந்தெடுக்கலாம்.

இந்த தொடரில் நான் சேர்க்காத காதல், திருமணம், அதன் நிறைவு அல்லது நிறைவின்மை ஆகியவற்றைப்பற்றி பேசும் ஒரு சிறுகதை வரிசையினைக்கூட தனியே தர முடியும். அவை இப்படி அமையக் கூடும், “ சிவப்பாக உயரமாக மீசை வெச்சுக்காமல், நிழல்கள், கால் வலி, காதலொருவனைக் கைப்பிடித்தே, புகைச்சல்கள், நூறாவது இரவு, சினிமா முடிந்தபோது” என்று தொடங்கி தனியே எழுதலாம்., தவிர, ‘புறா, இந்த மரம் சாட்சியாக, நானும் இவர்களும்,அப்பர் பர்த், போன்ற இன்னும் சில கதைகள் குறித்தும்,எழுத ஆவலாகத்தான் இருந்தது.பிறிதொரு சமயம் பார்ப்போம்.

இந்தியா சோஷலிச சாம்ராஜ்யமாக இருந்த காலத்தின் உச்சத்தில் அன்றைய காலகட்டத்து இளைஞர்களின் அபிலாஷைகளை, தடுமாற்றங்களை, உளக் கொந்தளிப்புகளை உள்ளவாறே சித்தரித்த ஆதவன், பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட காலத்தின் மிக துவக்கத்திலேயே மறைந்துவிட்டார். திறந்த அமைப்பின் பொருளாதார தாராளமயமாக்கலும், உலகமயமாக்கமும், அது தந்திருக்கும் ஏராளமான வாய்ப்புகளும் சவால்களும், வித்தியாசங்கள் மழுங்கடிக்கப்பட்டு ஒற்றை தரப்படியாக்குதலும் கொண்ட இந்தக் காலகட்டத்து இளைஞர்களை ஆதவன், எந்த வகையில் தன் கலையில் கொண்டு வந்திருப்பார் என்ற ஆர்வமூட்டும் வினாவுக்கு நாம் விடை காணவே முடியாத வகையில், காலம் அவரைப் பறித்துக் கொண்டுவிட்டது.

இத்தொடரில் பேசப்பட்ட சிறுகதைகள்:

புதுமைப்பித்தனின் துரோகம் 

அகந்தை 

சிரிப்பு 

அந்தி 

கார்த்திக் 

‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’

இன்டர்வியூ

தில்லி அண்ணா

லேடி 

ஒரு அறையில் இரு நாற்காலிகள் 

சின்ன ஜெயா 

கருப்பு அம்பா கதை 

அகதிகள் 

oOo

ஒளிப்பட உதவி – Archive.org

மெய்ம்மை கடப்பு

பால்கோபால் பஞ்சாட்சரம்

சாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர் (மொழியாக்கம் – பீட்டர் பொங்கல்) தொடர்பாய் சில குறிப்புகள்:

wicker-house

Post truth= ‘மெய்ம்மை- பிந்தைய’ என்பது அத்தனை பொருத்தம் இல்லாத மொழிபெயர்ப்பு.

சில குறிப்புகள் கீழே:

போஸ்ட் மாடர்ன் = நவீனக் கடப்பு நிலை. நவீன காலத்தைக் கடந்த நிலை. இதன் முன்னோடி, உடனோடியாக, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம்= அமைப்பியல் (வாதக்) கடப்பு நிலை. (வாதம் என்ற சொல் அபரிமிதமாகப் பயன்படுத்தப்பட்டு ஒவ்வாமை உண்டாகி இருக்கிறதால் அதைத் தவிர்க்கலாம்.)

அமைப்புகளால் தனிமனிதர் செலுத்தப்படுகிறார், தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ என்ற கருத்தாக்கம் அமைப்பியலின் அடிப்படை. தனிமனிதச் செயலதிகாரம் என்பது கிருஸ்தவ இறையியலில் ஒரு பகுதி. சமூக உறுப்பு என்ற நிலைக்குத் தனிமனிதச் செயலூக்கம்/ திறன்/ அதிகாரம்/ விருப்பம் ஆகியன அடிபணிய வேண்டும் என்ற சர்ச்சிய நிர்ப்பந்தத்தைத்தான் மேற்கண்ட அமைப்பியல் வாதமெனும் ‘செகுலர்’ கருத்தாக்கம் திரும்பச் சொல்கிறது.

சர்ச், என்பதன் வேர்ச்சொல், ‘வலிமையானது, ஆற்றல் வாய்ந்தது,’ எனப் பொருள்படும் keue என்ற பதம். ஆற்றலுக்கும் வலிமைக்கும் அடிபணிவதை அற/ ஒழுக்கக் கட்டாயமாக முன்வைக்காமல், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்களே (மனிதரே) உருவாக்கிய அமைப்புகள் பூதாகாரமாக, செடுக்காக, மிக நுண்ணிய தளங்களிலும், பரிமாணங்களிலும் கூட ஊடுருவி மனித வாழ்வை ஆள்கின்றன, இனி மனிதருக்கு மீதம் இருப்பதெல்லாம் அடிபணிவது, எதிர்ப்பது, உடனோடியபடி தம் தேவைகளை நிறைவேற்றும் சகஜபாவம் கொள்வது போன்ற ஒரு சிலதான் என்கிறது அமைப்பியல்வாதம். கெல்லி எறிவது, மறு உருவாக்கம் செய்வது, மேலாதிக்கம் செய்து நாமே (தனிமனித ஊக்கமே) செலுத்துவது போன்றன எல்லாம் கனவுகள், நடக்க வாய்ப்பில்லை என்ற ஒரு அகங்கார நாச வாதம், அல்லது தொடர் நசிவையே முன்வைக்கும் வாதம் அமைப்பியல் வாதம். இதன் ஒரு சமகால எதிர்ப்பு மரபு இருப்பியல் வாதத்திலிருந்து வந்தது. இருப்பியல் வாதமும் அமைப்பியல் வாதமும் பின்னிப் பிணைந்த நாகங்கள்.

இதன் சில வடிவுகள் இந்திய தத்துவ மரபில் உண்டு. ஆனால் நிலைத்த ஆதிக்க, ஒற்றைப் பெரும் நிறுவனம் இல்லாத, பல்வகை மரபுகளுக்குரிய பாரதத்தில் இவை சர்ச்சிய அமைப்பு வாதமாக உருவெடுக்கவில்லை. மெய்நாட்டம் என்பது தனிமனித விடுதலையை இயற்கையின் பேராட்சியிலிருந்து விடுவிப்பதைப் பற்றிய விசாரங்களாக மட்டும் இருந்தது. தவிர இந்திய மரபுகள் தனி மனிதச் செய்கைகளின் விளைவான உறவுப் பின்னல்களுக்கும் விடை தேட முனைகின்றன. அவற்றைத் துறப்பது, எதிர்ப்பது, அழிப்பது போன்றவற்றோடு அவற்றில் முங்கியிருந்தபடி உலர்ந்த மனிதராவது எப்படி என்பதையும் இந்திய சிந்தனை மரபுகள் யோசித்திருக்கின்றன.

கோஷங்கள் போல அடிக்கடி முழங்கப்படும் யோக, ஞான, பக்தி, கர்ம இத்தியாதி மார்க்கங்கள் இந்த வகை யோசனைகளின் விளைவுகள்தான். எந்த நிலையில் என்ன மனப்பாங்குடன் என்ன அவசரத்துடன் இருந்தாலும் தனிமனிதனுக்கு விடுதலை கிட்டும் என்பதுதான் இந்திய மரபின் நல்ல செய்தி. அறம்/ ஒழுக்கம்/ நன்னயம்/ நற்சிந்தனை/ கருணை/ பேரன்பு என்ற சில தனிமனிதருக்குச் சாத்தியமான, ஆனால் அவர்தம் அதிகாரத்துக்கு மேற்பட்ட, காலம் காலமாகப் பெருகி ஓடும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட அவசிய இருப்பாக உள்ள, சில பொது மறைகளையாவது கவனித்து நடந்தால்தான் அது சாத்தியம் என்றும் உணர்த்துகின்றன.

இப்படி ஒரு சொல்லுக்கு,- அமைப்பியல் என்பதற்கு- நெடிய அர்த்தங்களின் ஆற்றுப்படல் உண்டு. அதைக் கவனிக்க தத்துவத்தைக் கவனித்தால் மட்டும் போதாது. வரலாறு, சமூக அமைப்பு, இறைமை நிறுவனங்கள், அரசமைப்பு போன்றனவற்றின் உடனிணைந்த இயக்கப் போக்குகள் பற்றியும் ஒரு சுதாரிப்பு தேவை. அதை எல்லாம் கடந்து விட அந்த அமைப்புகளை, அவற்றின் தர்க்க நியாயங்களை, நியாயப்படுத்தல்களை கேலிக்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்குவதில் துவங்கி, அலட்சியம் செய்வதில் தொடர்ந்து, அவற்றை நிர்வகிக்கும் மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்க மறுப்பதில் நீண்டு, வரலாறு என்பதையும் கடந்த கால சாதனைகள்/ சாதிப்புகள் எல்லாவற்றையும் வேரோடு (அ) கருவறுத்துக் கிடத்துவதன் மூலமும் நம்மால் விடுவிப்பைப் பெற முடியும் என்று பல தத்துவாளரும், இலக்கிய விமர்சகர்களும், வரலாற்றாளரும் நம்பினர். சாஸரின் எழுத்திலும் சர்ச்சுக்கு எதிரான இத்தகைய விமரிசனம் உண்டு, எங்கும் அதிகார அமைப்புகள் விவாதத்துக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும்போது இவ்வாறே எதிர்கொள்ளப்படுகின்றன.

தூல உலகின் அதிகாரம் வெறும் பொய்மைகளின் அடுக்கு, சீட்டுக்கட்டு மாளிகை, அதன் அடித்தளத்தையே தகர்க்க வெறும் கெக்கலிப்பே போதும் என்று கூட இருபதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்கள் சிலர் நினைத்தனர். அமைப்புகளின் நிர்வாகிகள் சிறிது காலம் அலங்க மலங்க விழித்து செயலற்று நின்றனர் என்பது உண்மை. ஆனால் வீழ்ந்தது என்னவோ இந்த நிர்வாகிகளும், அவர்களின் ஆணையகங்களும் இல்லை. மாறாக கருத்து வெற்றிடம் ஏற்பட்டு, முன்னேற்றம் என்ற சொல்லே கறை/ குறைப்பட்டுப் போனபின், பக்கவாட்டில் காத்திருந்த மிருக பலம் கொண்ட பழங்கதையாடல் எளிதே ஆணையகங்களைப் பிடித்து விட்டது.

இந்த முறை அந்த பழமை வாதம் முன்பு இருந்த அளவு நெறி/ ஒழுக்கம்/ அறம் ஆகிய கதையாடல்களைக் கூட அவசியமாகக் கருதவில்லை. ஆனால் அலட்சியபாவம் கொண்ட ஒவ்வொருவரிடமும் உள்ளுறைந்த நீண்ட காலக் குழு அடையாள மனோபாவத்தை தூண்டி, அதன் அழிப்பு எத்தகைய இழப்பு என்று சுட்டிக் காட்டி, அவர்களில் கணிசமானவரை ‘முன்னேற்றம்’ என்ற பொய்க்கனவிலிருந்து விடுவித்து, தம் இருப்பைக் காப்பது என்ற புது வேலை/ கடமையில் பிணைக்கப் பணித்து அதில் வெற்றி பெற்று விட்டது. அல்லது ஒவ்வொரு நாடாக வெற்றி பெற்று வருகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் எதிர்ப்பு இயக்கமாக ‘கட்டுடைப்பைச்’ செய்தவர்களும் இதே அடையாளத்தைத்தான் கிளர்த்தியிருந்தனர். இவர்களே உண்மையை அதிகாரத்தின் கருவி என்று கட்டுடைத்து அதன் நம்பகத்தன்மையைக் குலைத்திருந்தனர்.

ஆக, கடப்பு என்ற சொல் பொருளற்ற சொல்லாக்கம் இல்லை. பிந்தைய என்ற சொல்லை விட கடப்பு என்பது கூடுதலான செறிவு கொண்டது. பிந்தைய என்பதில் எனக்குத் தெரிந்து பொருளேதும் பெற முடியாது. இது வெறும் காலம் தாண்டி புதிதாக வந்த நிலை மட்டுமல்ல.

போஸ்ட்- ட்ரூத் என்பதை- உண்மையைக் கடந்த நிலை என்று கருதிப் பேசுவது நல்லது. தற்போது புழக்கத்தில் உள்ள ‘ட்ரூத்தர்’ என்ற சொல் அவநம்பிக்கையாளர்களைக் குறிப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவர்களால் எந்த உண்மையும் நிறுவப்படுவதில்லை, அதிகாரப்பூர்வ உண்மைகள் சதிவலைப்பின்னல்களாய் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். பின் அதே அதிகார துஷ்பிரயோகம், தீவினைகள், அநீதி ஆகியன வேறு வடிவில் தொடர்கின்றன.

2. மெய்ம்மை என்பதோடு ட்ரூத் என்பதைப் போட்டுக் குழப்பலாமா என்பது என் இன்னொரு கேள்வி. மெய்ம்மை என்பதை நாம் தமிழ் மரபில் எப்படிப் பார்க்கிறோம் என்று யோசித்தல் நல்லது. உண்மை அனேகமாக புறத் தகவல்களின் நம்பகத் தன்மையையும், நம் சாதிப்புகளின் நம்பகத்தன்மையையும் சுட்டும். மெய்ம்மை என்பது நம் கொள்கையோடு, நம் ஒழுக்கத்தோடும், நம் செயல்பாட்டின் நம்பகத்தன்மையையும் சுட்டும். இவற்றில் உண்மை கருத்தளவில் நிற்பது அல்லது/ சிந்தனை அளவில் நிற்பது என்றும், மெய்ம்மை நடத்தையை (மார்க்கம்?) நம்புவது என்றும், இறுதியில் செயல்பாட்டை (கர்மம்?) நம்புவது என்றும் வைக்கலாம்.

இதில் எனக்கொன்றும் பிரமாதத் தெளிவு இல்லை. ஆனால் இரண்டு சொற்களும் ஒன்றே அல்ல என்று நம்புகிறேன்.

3. இப்படி ஒரு வாக்கியம் இருக்கிறது. “‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.” இதில் எங்கோ குறை இருக்கிறது. போஸ்ட் ட்ரூத் காலத்தில் புறத்திலிருந்து கிட்டும் வாதங்கள் அகத்தகவல்களை மீறுகின்றன என்று பொருள் கிட்டுகிறது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியைச் சோதித்தால் அதில் கிட்டும் வாக்கியம் இது: ‘Relating to or denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief‘. இங்கு ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பதை அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் என்று நீங்கள் ஆக்கியிருப்பது அத்தனை பொருத்தமானதல்ல. ஒப்ஜெக்ட் என்பது அகத்துக்கு அப்பாற்பட்ட புறநிலைப் பொருள். ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பன புறத்திலிருந்து நேரடியாகப் பெறக்கூடிய தகவல்கள், அதே நேரம் அவை வெறும் தகவல்கள் இல்லை, நிறுவப்படக் கூடிய, மாறாத நிலைப்பாடு கொண்ட தகவல்கள். உண்மை என்பதைச் சற்று மேல்நிலைச் சொல்லாகக் கொண்டால், நான் வருணித்த அளவோடு நிறுத்துவது பொருந்தும். அகராதி என்ன சொல்கிறது? புறநிலை கொடுக்கும் நம்பகமான தகவல்களை விட அகத்துறை நம்பிக்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் சுண்டல்களாக விடுக்கப்படும் எழுச்சித் தூண்டல்களே மிக்க தாக்கம் கொண்டு விடுகின்றன என்று சொல்கிறது.

பீட்டர் பொங்கலின் தமிழாக்கம் இதற்கு மாறாக, எதிராகச் சொல்கிறது.

உண்மையில் போஸ்ட் -ட்ரூத் அதாவது உண்மை கடந்த நிலை என்பது உண்மை உதாசீனப்படுத்தப்படுவது, அதுவே நம்பகத்தன்மை இழப்பது, உண்மையை நிலை நாட்ட வழக்கமாக இருக்கும் நிறுவனங்கள், அதிகார மையங்கள், ஆளுமைகள் போன்றாரெல்லாம் தம் செல்வாக்கிழந்து வீழ்ந்து போயிருக்க, பொய்யர்களும், சூதாடிகளும், கயவர்களும், நாடகமாடுவோரும் பரப்பும் எல்லாத் தூண்டல்களும் மிக்க உயிர்ப்பு பெற்று உலவும் நிலை. இந்தத் தூண்டல்கள் பற்பல தளங்களிலும், பல காலங்களிலும், கிட்டத் தட்ட எந்நேரமும் சாதாரணர்களைச் சென்று சேர்கையில் புறத்தகவலின் உண்மை நிறுவல் என்ற முயற்சி தன் செயலின் செடுக்காலேயே தோற்கடிக்கப்படுகிறது. யாரெல்லாம் அதிகாரத்தை நிலைகுலையச் செய்ய அதன் அடித்தளங்களையே சாய்ப்போம் என்று சாகசம் செய்ய நினைத்தார்களோ அவர்களெல்லாம் இன்று நிலைகுலைந்து நிற்கின்றனர். முழுப் பொய் என்பது பாலைவனச் சூரியனைப் போல இரக்கமற்ற எரிப்பைக் கொணர்வது.

4. ஜியாஃப்ரி சாஸர் இல்லை. ஜெஃப்ரி சாஸர் என்ற உச்சரிப்புதான் சரி.

தவிர துவக்கத்தில் சரியாக ஹௌஸ் ஆஃப் ஃபேம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசிப் பத்தியில் ‘புகழ் வீடு’ என்ற கதை என்று உள்ளது. தவிர இந்தக் கவிதையில் மூன்று வீடுகள் பேசப்படுவதாக விக்கி சொல்கிறது. இவற்றில் மூன்றாவதை ஏன் புரளி வீடு என்று பீட்டர் பொங்கல் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. அது பெரும் சப்தம் நிறைந்த வீடாக மட்டும்தான் வருணிக்கப்படுகிறது. அதில் ஓசை திடுமென நிற்கக் காரணம் மிக்க கனம்பொருந்திய மனிதர் ஒருவர் அங்கு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இதை இந்தக் கட்டுரை விட்டுவிட்டது. விக்கியில் ஓரிடத்தில் சில உரையாளர்கள் இந்த நபர் எலியாஹ் என்று கருதுவதாகத் தெரிகிறது. எலியாஹு பற்றித் தெரிய இங்கே பார்க்கலாம். (ஹீப்ரூ உச்சரிப்பு எலியாஹ்/ எலியாஹு என்று வருகிறது. இங்கிலிஷில் இலைஜா என்று பயன்படுத்துகிறார்கள்.)

அந்த ஓசையான வீடு சுள்ளிகளால் ஆனது என்பது ஏற்கத் தக்க விவரணை. ஆனால் அது விக்கர் என்ற தாவரத்தால் ஆனது. விக்கர் என்பதை நாணல், பிரம்புக் கொடி என்று பல தமிழகராதிகள் குறிக்கின்றன. குறிப்பாகத் தமிழ் லெக்ஸிகன் அப்படிக் குறிக்கிறது.

இந்த எலியாஹ் போன்ற நபர் வந்ததும் ஆரவாரம் அடங்குவது என்பதில் நாம் சிறிது கவனம் செலுத்தலாம். அதை எப்படி அறிந்து கொள்வது?

இன்னுமோர் விசித்திரம்.

விக்கியை மேற்கோள் காட்டுகிறேன்- ‘Chaucer remarks that “if the house had stood upon the Oise, I believe truly that it might easily have been heard it as far as Rome.” நாம் ஓசை என்கிறோம், சாஸர் பயன்படுத்தும் சொல் oise.  அது ஃப்ரெஞ்சு, டச்சு உச்சரிப்புகளும், இங்கிலிஷ் உச்சரிப்பும் கொண்ட சொல். இங்கிலிஷில் வாஸ் என்பதாக ஒலிக்கிறது.

oOo

ஒளிப்பட உதவி – House of Fame Intro, GWU Chaucer Class S2015, Youtube